1956இல் தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருந்தது. அப்போது தமிழார்வம் கொண்ட ஒரு நீதிபதி சிவில் வழக்கொன்றில் தமிழில் தீர்ப்பளித்தார். சென்னை உயர் நீதிமன்றம் தமிழில் தீர்ப்பு எழுதப்பட்ட ஒரே காரணத்துக்காக அத்தீர்ப்பை ரத்துசெய்தது. பின்னர், 1976இல் 4பி என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டு, கீழமை நீதிமன்றங்களிலும் தமிழ் ஆட்சிமொழியாகக் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ராஜஸ்தானி வழக்கறிஞர் ஒருவர் போட்ட வழக்கை, உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது (1995). அச்சட்டத்திலுள்ள விதிவிலக்கைப் பயன்படுத்தி, பல மாவட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டதன் விளைவாக தலைமை நீதிபதி சுவாமி, நீதிபதிகள் விரும்பும் மொழியில் தீர்ப்பை எழுதலாம் என்று சுற்றறிக்கை விடுத்தார். இதனால், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்புகளை ஆட்சிமொழியான தமிழில் எழுதுவது அநேகமாக நிறுத்தப்பட்டது. வக்கீல்களும் தாழ்வுமனப்பான்மையில் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே வாதாடலாயினர்.

இதைத்தான் 140 வருடங்களுக்கு முன்னால் மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார்: “சுய பாஷை பேசத் தெரியாமல் இருப்பதைப் போல இழிவான காரியம் வேறொன்றிருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம்முடைய சுய பாஷையில் பேசத் தெரியாதென்று சொன்னால் இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டார்களா?” (பிரதாப முதலியார் சரித்திரம் - 1879)

நீதிமன்ற ஆட்சிமொழியாகத் தமிழ் ஆக்கப்பட வேண்டுமென்று மதுரை வழக்கறிஞர் போட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது (2013). மறுபடியும் வழக்கறிஞர் ரத்தினம் போட்ட சீராய்வு மனுவை ஏற்றுக்கொண்டு, நீதிபதி ராமசுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது (2014). மூன்று வருடங்களுக்குப் பின் ஒரு தனிநபர் தொடுத்த மூன்றாந்தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்து, உச்ச நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது (2017). அதனால், வழக்கம்போல் தமிழகத்தில் கீழமை நீதிமன்ற ஆட்சிமொழிக்கான தடை தொடர்கிறது. இதைத் தலைமை நீதிபதி கோகாய் கவனிப்பாரா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 348 (2) பிரிவின் கீழ் மாநில ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அம்மாநில ஆட்சிமொழியை உயர் நீதிமன்றத்திலும் கூடுதல் ஆட்சிமொழியாகப் பயன்படுத்தலாம் என்ற பிரிவு உள்ளது. இதன்படி, இன்று ராஜஸ்தானிலும், உத்தர பிரதேசத்திலும் அந்தந்த மாநில மொழிகள் கூடுதல் ஆட்சிமொழியாக உயர் நீதிமன்றங்களில் பயன்பாட்டில் உள்ளன. 2006-ல் திமுக அமைச்சரவை இதன்படி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் ஆட்சிமொழியாகத் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டதற்கு, சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அமர்வு சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது.

அதை மத்திய அரசுக்கு அனுப்பியபோது, தற்போது நிலுவையிலுள்ள நிரந்தர ஆணைகளின்படி உச்ச நீதிமன்றத்தின் கருத்து கேட்கப்பட்டது. அன்றைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்ததனால், தமிழ் மொழி கூடுதல் ஆட்சிமொழியாகக்கூட ஆக்கப்படவில்லை. இதே கதிதான் வங்க மொழிக்கும் ஏற்பட்டது.

இதற்கு அவர்கள் கூறிய காரணம், மாநிலத் தலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவதனாலும், சில நீதிபதிகளை மற்ற மாநிலங்களில் ஊர் மாற்றம் செய்வதனாலும் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று கருத்து தெரிவித்தது. பின்னர், தலைமை நீதிபதியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதாசிவம் பதவி உயர்வு பெற்ற பிறகும் அதே நிலைமைதான் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது. வழக்காடிகளின் நலனைப் பற்றி மொழியாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்படும் என்று கூறும் தலைமை நீதிபதி கோகாய் இப்பிரச்சினை பற்றிக் கவனம் செலுத்துவாரா?

இப்போது ஏற்பாடு எப்படி இருக்கிறது என்றால், மாவட்ட நீதிபதிகள் வரை நியமிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை மட்டுமே சேர்ந்தது. ஆனால், இப்போது ‘அகில இந்திய நீதிமன்றச் சேவை’ என்று ஒன்றை ஏற்படுத்தப்போவதாக மத்திய சட்ட அமைச்சர் கூறிவருகிறார். ‘ஒரே தேசம், ஒரே மொழி’ என்ற அடிப்படையில், ‘ஒரே தேசம், ஒரே சேவை’ என்று உருவாக்கப்படுவது ஏற்புடையதல்ல. மொழிவாரி மாநிலங்களை அமைத்த பிறகு, அந்தந்த மாநில மொழிகளே அங்கு ஆட்சிமொழிகளாக மாறிவிட்ட பிறகு, நீதிமன்றங்கள் மட்டும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவது ஏற்புடையதல்ல.

இத்தகைய முயற்சிகள் மாநில மொழிகள் வளர்வதைத் தடுப்பதோடு, பல்வேறு சமூகங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் உருவாகிவருவதைத் தடுத்து, ஆங்கிலப் புலமை உள்ளவர்களே சட்ட நிபுணர்களாக ஆக முடியும் என்ற பிம்பத்தைத் தொடர்ந்து வளர்க்கும். மேலும், மாநிலங்களின் சுயாட்சியைப் பறிக்கும் செயலாகும்.

உயர் நீதிமன்றம் ஒன்றில், ஒரு ஆண்டில் 10,000 வழக்குகள் தொடுக்கப்படுகின்றன என்றால், அதில் 1,000 வழக்குகள் மட்டுமே அந்நீதிமன்றத்திலேயே உள்மேல்முறையீடு செய்யப்படும். அதில் 100 வழக்குகள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அதாவது, 10,000-ல் 100 வழக்குகள் மட்டுமே உச்ச நீதிமன்ற நுழைவு வாயிலைத் தொடும். அதிலும் விசேஷ அனுமதி பெற்று மேல்முறையீடுகளாக விசாரிக்கக்கூடிய வழக்குகள் 10 மட்டுமே இருக்கும்.

இந்த வழக்கீட்டு முறையில் கீழமை நீதிமன்றங்களையும், உயர் நீதிமன்றங்களையும் ஜனநாயகப்படுத்தும் விதமாக அம்மாநிலங்களின் ஆட்சிமொழியே நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாகச் செயல்பட வைப்பதே வழியாகும். அதை விட்டுவிட்டு, முகப்பூச்சு அலங்காரம் செய்யும் வேலைகள் நடப்பதும், அந்த முகப்பூச்சும் சில மொழிகளுக்கு மட்டுமே கிடைப்பதும் தவிர்க்கப்படுவது நல்லது.

(முன்னாள் நீதிபதி கே.சந்துரு எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)

குறிப்பு : மாநில நீதிமன்றங்களில் மாநில மொழிகளையும் கூடுதலாகப் பயன்படுத்த விரும்பும் மாநில ஆட்சிகள், அதற்கான சட்டத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினாலே போதும் என்கிறது, அரசியல் சட்டத்தின் 348(2)ஆவது பிரிவு. 2006இல் தி.மு.க. ஆட்சி இந்தச் சட்டத்தை நிறைவேற்றியபோது குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் அன்றைய நடுவண் ஆட்சி உச்சநீதிமன்றத்தின் கருத்து கேட்டு அனுப்பியதாலேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாகாத நிலை தொடருகிறது.