கள்ளச் சாமியார், கற்பழிப்புச் சாமியார், சுருட்டுச் சாமியார், திடீர் சாமியார் போன்ற சாமியார்களின் வரிசையில் வைக்கமுடியாது இந்த சாமியார்களை. இந்த சாமியார்களுக்கு பயங்கரமான பயங்கரவாத பின்னணி உண்டு.

rssஇந்து மதவெறி காவிக்கூட்டத்தின் தோல் உரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகானிலும் குஜராத் மாநிலம் மொடாசாவிலும் செப் 29 அன்று முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நடத்தி, ஆறு உயிர்களை குடித்து, கோரத்தாண்டவமாடிய வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஷக் கொடுக்குகளின் தலைவர்களான சாமியார்களும், இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவியி லிருக்கும் ராணுவ வீரர்களும், முன்னாள் ராணுவ வீரர்கள் சிலரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த சில மதவெறியர்களையும் கைது செய்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றது மகாராஷ்டிர காவல்துறை. தீவிரவாதிகளிடமிருந்தும் பயங்கரவாதிகளிடமிருந்தும் நம்மையெல்லாம் காப்பார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்ற இந்திய ராணுவத்தில்தான் இப்படிப்பட்ட மதவெறி காவி ஆடுகளை உருவாக்கி வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்சும் அதன் அரசியல் பிரிவான பாஜகவும்.

நாட்டில் எங்கெல்லாம் குண்டு வெடிக் கிறதோ அதற்கெல்லாம் இஸ்லாமியர்கள் மட்டுமே ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் சித்தரித்து, முஸ்லீம்கள் அனைவருமே தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி வந்தன. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்று மதசார்பற்ற கட்சிகளெல்லாம் கூறியபோது ஏற்காத இவர்கள் இன்று, இந்துக்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் தீவிரவாதிகள் எல்லாம் இந்துக்கள் அல்ல என்றும் முன்னுக்குப் பின் முரணாக உளறிகொண்டிருக்கின்றனர் பாஜக தலைவர்கள்.

மாலேகானிலும் மொடாசாவிலும் குண்டு வெடிப்பிற்கு திட்டம் தீட்டியது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அமைப்புகளின் ரத்தம் சொட்டச்சொட்ட தொங்கிக்கொண்டிருக்கின்ற நாக்குகளில் ஒன்றான ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவரான பெண்சாமியார் சத்வீ பிரக்யாக்சிங் தாகூரும் தாயானந்த் பாண்டே என்ற சாமியாரும்தான். இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்பட வைக்க மூளையாகவும் வெடி பொருட்கள் சப்ளை செய்த வரும் இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பதவியிலிருக்கும் ஸ்ரீகாந்த் புரோகித் என்ற அதிகாரியும், முக்கிய பதவிகளிலிருந்து ஓய்வுபெற்ற சில ராணுவ உயரதிகாரிகளும் தானென விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனது குண்டு வெடிப்பில் வெறும் 6 பேர்தான் செத்தார்களா என்று விரக்தியால் கேட்டராம் சாமியாரிணி, சாமியின் கருணையைப் பாருங்கள்!

வெளிச்சத்திற்கு வந்தது இந்த இரண்டு குண்டு வெடிப்புகள்தான். ஆனால், புரோகித்திடம் நடத்திய விசாரணையில் கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சில குண்டுவெடிப்புகளிலும், சம்ஜவுதா எக்ஸ்பிரசில் நிகழ்ந்த ஆர்.டி.எக்ஸ் வகையிலான குண்டுவெடிப்பிலும், அஜ்மீர் குண்டுவெடிப்பிலும், நவி மும்பை, தானே ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளிலும்,இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பல குண்டுவெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். பாஜக வகையிலான சாமியார்களுக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக புரோகித் ஒத்துக்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யோகி ஆதித்யநாத் என்ற பாஜக எம்பிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, கடந்த பாஜக ஆட்சியின் போது ராணுவ முகாம்களிலும் ஆசிரமங்களிலும் இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட 500 பேருக்கு, வெடிகுண்டு தயாரிக்கவும் வெடிக்கச் செய்யவும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்திருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார் புரோகித். ஆர்.எஸ்.எஸ்சின் தலைமையிடமான நாக்பூரில் கர்னல் ஜெயசிந்தாலே என்ற ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நடத்திவந்த ராணுவ பயிற்சிப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆயிரம் பேருக்கு அந்த பயிற்சிப் பள்ளியில் ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்களுள் ஒருவர் தான் இந்த புரோகித். மற்றவர்களெல்லாம் எங்கே?

ஏற்கனவே, குஜராத் மாநிலத்தில் காவல்துறை காவிக்கூட்டமாக மாறி எப்படி முஸ்லீம் மக்கள் மீதான வன்முறையை தானே முன்னின்று நடத்தியதோ அதேபோல, ராணுவத்திலும் மதவெறியை புகுத்தி காவிமயமாக்கப்படுமானால் சிறுபான்மையின மக்களையும், ஆர்.எஸ்.எஸ்.சின் வர்ணாசிரமத்தின் கீழ் வராத அடித்தட்டு மக்களையும் இவர்கள் வாழ விடுவார்களா?

இந்த மதவெறிக்கூட்டத்தின் குண்டு வெடிப்புகளையும் திட்டமிடலையும் நோக்கும்போது இந்தியாவில் நடைபெற்ற மற்ற குண்டுவெடிப்புகளில் முஸ்லீம்கள் மீது பழியை போட்டு, அவர்களில் சிலரைத் தூக்கி சிறையில்போட்டு முடித்த வழக்குகளை மீண்டும் நேர்மையாக மறுவிசாரணை செய்தால் இன்னும் எத்தனை குண்டுவெடிப்புகளில், எத்தனை சாமியார்கள் சிக்குவார்கள் என்பது தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும், மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைக்க எப்போதுமே அலாதி ஆர்வம் கொண்டவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்-வி.எச்.பி.-பாஜக என்பதை சில உதாரணங்களில் பார்க்கலாம்.

காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்று இஸ்லாமியரின் பெயரை பச்சைக் குத்தி, சகோதரர்களாக வாழ்ந்துவந்த மக்களிடையே பகைமையூட்டி அவர்களின் ரத்தத்தில் நீராட முயற்சித்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் தனது ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும் பேருந்து நிலையத்திலும் குண்டுவைத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டு, அருகிலேயே இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் தலைக்குல்லாவை போட்டு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே மோதலை உருவாக்கி குளிர்காய நினைத்து செயல்பட்டது தான் இந்த ஆர்.எஸ்.எஸ்.

கேரள மாநிலம் கண்ணூரில் வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருந்த திலீபன், பிரதீபன் என்ற இரு ஆர்.எஸ்.எஸ். காரர்கள், அவர்கள் தயாரித்த குண்டுகளாலேயே பலியாகினர். அந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வெடிக்காத குண்டுகள் கோயில் குளங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தயாரித்த குண்டுகளையெல்லாம் கேரளாவில் வெடிக்கச் செய்து எதிர்கட்சியினரையும் மக்களை கொல்ல திட்டமிட்டதுதான் இந்த மதவெறி ஆர்.எஸ்.எஸ்.

வெடிகுண்டுகளால் மட்டுமல்ல தீவிரவாதமா என்ன- குஜராத் மாநிலத்தில் மோடி தலைமையிலான மதவெறி அமைப்புகள் கத்தியாலும், சூலாயுதத்தாலும், ஈட்டிகளாலும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்களையும் இன்னபிற சிறுபான்மையினரையும் கொன்று குவித்ததுதான் இந்த ஆர்.எஸ்.எஸ்.-வி.எச்.பி.-பாஜக.

மதவெறிச் சாமியார்கள் வைக்கின்ற வெடிகுண்டென்றால் பூமழையும், இஸ்லாமியரிலுள்ள சில தீவிரவாதிகள் வைக்கின்ற வெடிகுண்டென்றால் நெருப்புமழையும் பொழிவது போல் பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். ஆக, முஸ்லீம் தீவிரவாதிகளானாலும் இந்துத்துவ தீவிரவாதிகளானாலும் இவர்கள் வைக்கின்ற வெடிகுண்டுகளில் சாவதென்னவோ அப்பாவி பொதுமக்களும், பிறந்த காரணத்தைக்கூட அறியாத குழந்தைகளும்தான். சிறுபான்மை தீவிரவாதமும் பெரும்பான்மை தீவிரவாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கின்றன.

சாமியார்கள் கைது செய்யப்பட்டதன் துவக்கத்தில் எங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை, ஆதாரமிருந்தால் காட்டுங்கள் என்று கூறிய பாஜக, பெண்சாமியாருடன் அமர்ந்துக்கொண்டு இப்போதைய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆதாரமாக வெளியிட்டவுடன் திருடனுக்கு தேள் கொட்டியது போல் கதறமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது பாஜக.

சாமிகளும் சாமியார்களும் பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகாக, அமைதியின் சொரூபமாக காட்சியளிக்கலாம். ஆனால், அவர்களின் சிலரது மூளைகளில் மனிதச் சதைகளைப் பிய்த்து உண்டு கொண்டிருக்கும்போது தொண்டை விக்கினால் ரத்தத்தை எடுத்துக் குடிக்கும் அகோர எண்ணமுடைய மதவெறியர்கள் என்பதை இந்த குண்டுவெடிப்புகளின் கோர நிகழ்வுகள் எடுத்துக்காட்டியிருக்கின்றன.

தீவிரவாதத்திற்கு துணைபோனதற்காக முகமது அப்சலை தூக்கிலிட்டே ஆகவேண்டும் என்று குதித்துக்கொண்டிருக்கின்ற பாஜக இந்த சாமியார்களை என்ன செய்வதென்று கூறுவார்களா? பாஜக என்பது ஒரு ஜனநாயக கட்டமைப்பிற்குள் இயங்கும் அரசியல் கட்சியல்ல, பயங்கரவாதத்தின் ஒரு அரசியல் முகம். எனவே பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்படவேண்டியவர்களே!

இஸ்லாமிய மக்களின் நலனுக்காக நாங்கள் தீவிரவாத பாதையை தேர்ந்தெடுக்கிறோம் என்று நியாயம் கற்பிக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளும், அவர்களை பழிவாங்க நாங்கள் தீவிரவாத செயல் செய்தால் என்ன என்று பதில் கூறும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. பாஜக வகையறாக்களும் நிச்சயம் தீவிரவாதிகளே!

-
இரா.சரவணன்

Pin It