பிரபகாரன் உயிருடன் இருக்கிறாரா என்ற கேள்விக்காண விடையை தரும் இந்த ஆய்வுக் கட்டுரை, நடந்து முடிந்துள்ள கடும் பின்னடைவிலிருந்து அடுத்தக் கட்டத்துக்கு போராட்டத்தை நகர்த்தும் செயல் உத்திகளையும் முன்வைக்கிறது. கொழும்பு வீரகேசரி நாளேட்டில் வெளிவந்த இக்கட்டுரையை அதன் முக்கியத்துவம் கருதி வெளியிடுகிறோம்.

விடுதலைப்புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கடந்த 18ஆம் தேதி தெரிவித்திருந்தது. அது மட்டுமல்லாது கடந்த 18ஆம் தேதியிலிருந்து தென்னிலங்கையில் பெரும்பான்மை மக்கள் பல வகையான வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

போரில் வெற்றி கண்டுவிட்டதாகக் கூறி மேற்கொள்ளப்படும் சில நடவடிக்கைகள் சிறுபான்மை தமிழ் இனத்தை மேலும் அந்நியப்படவே வைத்துள்ளன. பாரிய மோதல்கள் கடந்த 18ஆம் தேதி முடிவடைந்த பின்னர் தென்னிலங்கையில் இருந்து வெளிவந்த கருத்துக்களை உற்று நோக்கும் போது சில தகவல்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது. அதாவது நாலாம் கட்ட ஈழப்போரானது இலங்கை அரசினால் மட்டும் முன்னெடுக்கப்படவில்லை. அகில உலகத்தினதும் ஆதரவுகளுடன் தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தப் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா என்பன ஆயுதங்களை வழங்கியிருந்தன. ஜப்பான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், வியட்நாம், தமிழகத்தின் தற்போதைய ஆளும் கூட்டணி, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் என்பன நேரடியான ஆதரவுகளை வழங்க மேற்குலகம் உட்பட ஏனைய நாடுகள் மறைமுகமான ஆதரவுகளை வழங்கியிருந்தன.

அகில உலகத்தின் இந்த போர் முனைப்புக்களை விடுதலைப்புலிகளும் அறிந்திருந்தனர். 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் வான் தாக்குதலில் கொல்லப்பட்டபோது நாலாம் கட்ட ஈழப்போரில் இந்திய மத்திய அரசு கொண்டிருந்த தீவிரத்தை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அந்தநிலையில் தான் வவுனியா வான்படைத் தளத்தின் மீதான வான்புலிகளின் தாக்குதல் மூலம் இந்தியாவின் பின்புலத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருந்தனர். (அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் இரண்டு இந்தியப் பொறியாளர்கள்)

இந்திய பின்புலம் வெளிக்கொண்டுவரப்பட்ட பின்னர் விடுதலைப்புலிகளின் சமர்க்கள உத்திகளில் அதிக மாறுதல்களை அவதானிக்க முடிந்திருந்தது. அதாவது, விடுதலைப்புலிகள் தமது நிலங்களை தக்கவைப்பதற்கு அதிக சிரத்தை எடுக்கவில்லை. மறுவளமாக நிலங்கள் குறுகிய போதும் ராணுவத்துக்கு அதிக இழப்புக்களை ஏற்படுத்தும் தாக்குதல்களிலேயே அவர்கள் அதிக அக்கறை செலுத்தியிருந்தனர்.

இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து அனைத்துலகத்தினதும், ஐ.நா. சபையினதும் ஆதரவுகளுடன் நடத்திய இந்தப் போரை முறியடிப்பதற்கு விடுதலைப்புலிகள் தனியாக ஆயுதங்களை மட்டும் நம்பியிருக்கவில்லை. அதனை முறியடிப்பதற்கு தந்திரங்களும், இராஜதந்திர அணுகுமுறைகளும் பெருமளவில் கையாளப்பட்டுள்ளன.

அனைத்துலக சமூகம் மீதான இராஜதந்திர அழுத்தங்களின் பெரும் பகுதியை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மேற்கொண்டிருந்தனர். தந்திரமான உத்திகளை விடுதலைப்புலிகள் களத்தில் பயன்படுத்திக் கொண்டனர். அதனூடாகத்தான் இந்த போரின் இறுதிக்கட்டம் பயணிக்கத் தொடங்கியது. ஆனால் விசுவமடுவை படையினர் கைப்பற்றும் வரையில் அதிகளவில் பொதுமக்களின் இழப்புகளின்றி நகர்ந்த இந்தப் போர் அதன் பின்னர் பெரும் மனிதப்பேரவலங்களை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கை அரசுக்கும், இந்திய அரக்கும், அனைத்துலகின் அழுத்தங்களுக்கும் எதிராக முப்பத்து மூன்று வருடங்கள் நடைபெற்ற போராட்டங்களில் தமிழ் மக்கள் எத்தகைய அவலங்களைச் சந்தித்திருந்தனர் என்பதை கடந்த ஐந்து மாதகாலப்பகுதியில் அனைத்துலக சமூகம் புரிந்து கொண்டது. ஆனாலும் போரைத் தூண்டியதில் அவர்கள் காண்பித்த அக்கறைகளை மனிதப்பேரவலத்தை நிறுத்துவதில் காண்பிக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மே 18ஆம் தேதி வரையிலும் 7500 தொடக்கம் 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், 20,000இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் ஐ.நாவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 20,000இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும், 50,000இற்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாகவும், 30,000 பேர் அங்கவீனமாகி இருப்பதாகவும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் போர் மோசமான மனிதப்பேரவலங்களுடன் ஓய்வுக்கு வந்ததே தவிர அதனை நிறுத்துவதற்கு யாரும் முன்வரவில்லை.

பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் இறுதியான மூன்று நாட்களும் முக்கியமானவை. சனிக்கிழமை (16) தொடக்கம் திங்கட்கிழமை (18) வரையிலும் பல சம்பவங்கள் மிகவும் குறுகிய நேரத்தில் நடைபெற்றிருந்தன. பெருமளவான மக்கள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான காயப்பட்ட மக்களையும், போராளிகளையும் பாதுகாப்பாக ஒரு மூன்றாம் தரப்பின் ஊடாக சரணடையவைக்கும் முயற்சிகளும் புலிகளால் அப்போது மேற்கொள்ளப்பட்டிருந்தன.

காயப்பட்ட போராளிகளை பாதுகாப்பாக நகர்த்தும் பொறுப்புகள் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா. நடேசனிடமும், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடமும், கட்டணைத் தளபதி கேணல் ரமேஸிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஏனைய போராளிகளும் பெருமளவான தளபதிகளும் 17ஆம் தேதி இரவு வரையிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்பு தாக்குதல்களில் வெளியேறிருந்தனர். ஆனால் இந்த அணுகுமுறைகளை அனைத்துலக சமூகமும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புகளும் புறந்தள்ளியிருந்தன. மேற்குலகம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்த போதும் இந்தியா அதனை தடுத்துவிட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதி, அமெரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம், இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக், ஐ.நாவின் செயலாளருக்கான முதன்மை அதிகாரி விஜய் நம்பியார், நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அனைத்துலகத்தின் மூத்த ஊடகவியலாளர்கள் போன்ற அனைவரிடமும் காயமடைந்த மக்களினதும், போராளிகளினும் பாதுகாப்புகளை உறுதிப்படுத்தும் உதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்திருந்தார் ஐ.நா. செயலளாருக்கான முதன்மை அதிகாரி விஜய் நம்பியார். அதாவது சரணடைபவர்களின் பாதுகாப்புகளை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என நம்பியார் தெரிவித்திருந்தார். அதற்கு பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த டைம்ஸ் இதழின் ஊடகவியலாளர் மேரி கொல்வின் என்பவரின் தகவல் சாட்சியாக உள்ளது. (அவரது கட்டுரை தனியே வெளியிடப்பட்டுள்ளது).

ஆனால் 18ஆம் தேதி அதிகாலை அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் போன்றோர் உட்பட சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் இது ஒரு திட்டமிட்ட படுகொலை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதற்கு ஆதரவான இந்தியாவும், ஐ.நாவும் செயற்பட்டுள்ளதும் ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் அனைத்துலகத்தின் ஆதரவுகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை.

ஆனால் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வாதங்களை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருந்து. அதற்கு ஏதுவாக இலங்கை மீதான சிறப்பு விவாதம் ஒன்றை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு ஜெனிவாவில் கூடியிருந்தது. ஆனால் அதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அனைத்துலக சமூகம் மீது தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த சிறு நம்பிக்கையும் சிதறடிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஆதரவாகவும், மேற்குலகத்திற்கு எதிராகவும் ஆசிய நாடுகள் பல ஒருங்கிணைந்து குரல் கொடுத்தமை மேற்குலகத்தின் இந்திய கடல் பிராந்தியத்தின் மீதான கொள்கைகளுக்கு விழுந்த சாட்டை அடியாகும். அதாவது தமிழ் மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட போரானது தமிழ் மக்களை விட மேற்குலகத்திற்கே அதிக தோல்வியைக் கொடுத்துள்ளது என்பது தான் தற்போதைய நிலையின் சுருக்கமான முடிவு.

இதனிடையே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக ஒன்றுக்கு பின் ஒன்றாக முரண்பட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17ஆம் தேதி வீர மரணத்தை தழுவிக்கொண்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு தகவல் வழங்கியுள்ளார். ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக புலனாய்வுப் பிரிவின் தலைவர் அறிவழகன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இரண்டு அறிக்கைகளிலும் பல இராஜதந்திர நகர்வுகளின் தாக்கங்கள் உள்ளன.

இவ்விருவரும் விடுதலைப்புலிகளின் அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள். அறிவழகன் விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவின் இரண்டாம் நிலை தளபதிகளில் ஒருவர். பத்மநாதன் கடந்த ஜனவரி மாதம் அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவர். எனவே எந்த தகவல் சரியானது எது தவறானது என்பது தொடர்பான குழப்பங்கள் எழுவது நியாயமே. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஒரு தெளிவான சிந்தனையும், அரசியல் முதிர்ச்சியும் தேவை. விடுதலைப்புலிகளின் தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவிலான இராஜதந்திர நகர்வுகள் பொதிந்துள்ளன. அதன் பின்னால் ஓர் அனைத்துலக வலைப்பின்னலை விடுவிக்கும் நடவடிக்கைகளும் உள்ளன.

அவர்கள் உலகிற்கு ஒரு தகவலை சொல்ல முற்பட்டுள்ளனர், அதே சமயம் தமிழ் மக்களுக்கும் அதனூடாக பிறிதொரு தகவலை கூறமுற்பட்டுள்ளனர். பல அழுத்தங்களும் அதன் மூலம் தேவையான பல அனுகூலங்களும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன என்பதே இந்த இரு தகவல்களினதும் பொருள்.

இந்த இரு தகவல்களையும் உள்வாங்கிக்கொண்டு அரசியல் நகர்வுகளின் வேகத்தை விரைவுபடுத்த வேண்டிய பாரிய கடமை ஒன்று தமிழ் மக்களுக்குள்ளது என்பது மட்டுமே உண்மை. ஒரு விடுதலைப்போரில் சில தகவல்கள் நடைபெற்ற சம்பவங்களால் தோற்றுவிக்கப்படுபவை. ஆனால் சில தகவல்கள் ஒரு சம்பவத்தை உருவாக்குவதற்காக தோற்றுவிக்கப்படுபவை.

வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற தகவல்கள் வெளிவருவது இது முதல் தடவையல்ல. 1989களில் இந்திய இராணுவம் அவர் இறந்துவிட்டதாக தகவல்களை பரப்பியிருந்ததுடன் ஆதாரங்களையும் முன்வைத்திருந்தது. ஆனால் 1990களில் தான் அவர் மீண்டும் மக்கள் முன் தோன்றினார். அதனைப் போலவே 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் புலிகளின் தலைவர் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இலங்கைக் கடற்படையினர் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தை தேடும் பணியையும் முடுக்கிவிட்டிருந்தனர். ஆனால் பிரபாகரன் மீண்டும் வெளிவந்தார்.

நான்காம் கட்ட ஈழப்போரை பொறுத்த வரையில் அதன் இறுதிக் கட்டம் கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி கிளிநொச்சி நகரம் படையினரால் கைப்பற்றப்பட்டதிலிருந்து ஆரம்பமாகியிருந்தது. ஆனால் அதன் நகர்வுப் பாதை புரியாத புதிராகவே பலருக்கும் தோன்றியது.

புலிகள் விட்டுச்சென்ற சான்றுகள்

மேலும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இருப்பிடங்கள் தொடர்பான தெளிவான சான்றுகள் பலவற்றை விடுதலைப்புலிகளின் தமது தளங்களில் விட்டும் சென்றிருந்தனர். அதாவது கடந்த பிப்ரவரி மாதம் விசுவமடு பகுதியை படையினர் கைப்பற்றிய போது நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த இல்லம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் பயன்படுத்தும் மேற்சட்டையையும், சில மருந்துப் பொருட்களையும், கோல்ட் கொமாண்டோ ரக துப்பாக்கியையும் விட்டு சென்றிருந்தனர்.

அதன் பின்னர் ஆனந்தபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பல சிறப்பான ஆவணங்களை விட்டு சென்றிருந்தனர். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் அவரின் குடும்ப புகைப்படங்களும் வேறு சில பொருட்களும் தவறவிடப்பட்டிருந்தன. இந்த சம்பவங்கள் மூலம் இராணுவமும் இலங்கை அரசாங்கமும் ஒரு முடிவுக்கு வந்திருந்தன. அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது முற்றுகைக்குள் இருப்பதாக அவர்கள் கருதினர்.

எனவே அவர்களின் முழுப் படைப்பலமும், கவனமும் அங்கு செறிவாகியிருந்தது. கடற்படையின் முழு வளங்களும், வான்படையின் வேவு அணிகளின் முழுப்பலமும் அங்குதான் மையம் கொண்டிருந்தன. உண்மையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருப்பின் அவர் தொடர்பான தகவல்களை யாரும் அவரைத்தேடி வருவோரின் கண்ணில் படுமாறு பின்னால் விட்டு சென்றிருப்பாரா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. 122மி.மீ பீரங்கிகளை எடுத்து செல்பவர்களுக்கு ஒரு கோல் கொமோண்டோ துப்பாக்கியை கொண்டு செல்வது கடினமானது அல்ல.

இராணுவம் வீட்டின் கொல்லைப்புறத்திற்குள் நுழைந்தபோதுதான் புலிகளின் தலைவர் தப்பியோடியிருப்பார் என்ற வாதங்களும் பலவீனமானவை. எனவே சில சம்பவங்கள் அங்கு தோற்றுவிக்கப்பட்டுள்ளன என்பது உண்மை. அதற்கான காரணங்கள் என்ன?

18ஆம் தேதி காலை இலங்கை நேரம் 8.00 மணியளவில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து ஒரு மூன்றாம் நிலை பொறுப்பாளரினதும், போராளியினதும் குரல்கள் அனைத்துலகத்தை எட்டியிருந்தன. அவர்களின் குரல்களில் இருந்து அவர்கள் மரணத்தின் இறுதி மணித்துளிகளை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர் என்பது தெளிவாகியது. இந்த உரையாடலில் பங்குபற்றியவர்களால் புலிகளுக்கு சில நூறு மீற்றர் தொலைவில் இராணுவத்தின் வெடியோசைகளை தொலைபேசியூடாக கேட்க முடிந்தது.

எந்த வினாடியும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படலாம் என்ற நிலை, அவர்களின் உறவுகளை பற்றி கேட்கவில்லை, எமது உறவுகளைப் பற்றி கேட்கவில்லை, மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்றபோதும் இறுதியாக எஞ்சியிருந்த ஒரு சில வினாடிகளில் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தான். தலைவர் எங்கே?

பதில் தெளிவானது. தலைவர் பாதுகாப்பாக உள்ளார். நீங்கள் உங்கள் பணியைத் தொடருங்கள் என்பதுதான் அது.

இன்று உலகெங்கும் ஒருங்கி ணைந்து ஒரு குரலாக ஒலிக்கும் தமிழ் தேசியத்தின் “ஆன்மாவை’’ தமிழ் மக்கள் அணையவிடமாட்டார்கள், அதன் அழுத்தம் உலகின் நகர்வுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததையும் நாம் புறந்தள்ள முடியாது.