ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை:

gaindrababu 350தேசிய கல்வி வரைவு என்பதை கிட்டத்தட்ட 5 ஆண்டு காலமாக நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். 2015லிருந்தே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பள்ளிக் கல்வியிலேயே ஒரு 20 தலைப்புகள், உயர் கல்விக்கு ஒரு 13 தலைப்புகள் என்று தலைப்புகள் கொடுத்து, இந்த தலைப்புகளின் மீது  கருத்துக்களைச் சொல்லுங்கள் என்று மனித வளத்துறை வலைதளத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.

இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் இது சம்மந்தமாக கூட்டங்கள் நடத்தப்போகிறோம், அனைத்து உயர்கல்வி இடங்களிலும் கூட்டம் நடத்தப்போகிறோம், கிராமங்கள் அளவிற்கு எத்தனை கூட்டங்கள் நடத்தப் போகிறார்கள் என்று ஒரு கணக்கை போட்டு வைத்திருந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட பாதி அளவான இலக்கை கூட அதாவது 50 சதவீதத்தை கூட அவர்களால் அடைய முடியவில்லை. 

நாம் இதே கோயம்புத்தூரில், இதே அண்ணா மலை அரங்கத்தில் கூட்டம் போட்டிருக்கிறோம்; இன்னும் பல்வேறு கோயம்புத்தூர் பகுதிகளில் கூட்டம் போட்டிருக்கிறோம். அப்போது நாம் அந்த மக்களை பார்த்து கேட்டோம் ! தேசி கல்விக் கொள்கையைப் பற்றி கருத்து கேட்டார்களாமே நீங்களெல்லாம் கருத்து கூறினீர்களா? என்று கேட்டோம். அப்படி கருத்து கேட்டதே தெரியாது என்று தான் பெரும்பகுதி மக்கள் கூறினார்கள்.

கோவையில், கன்னியாகுமரியில் தமிழ்நாடு முழுக்கவே பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களிடம் அவர்களுக்கே தெரியாமல் எப்படி கருத்து கேட்டிருப்பார்கள்? ஆவணத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், ஆவணத்தில் எப்படி வரும்? மக்களுக்கே தெரியாமல் எப்படி கருத்து கேட்டிருக்க முடியும்? என்ற கேள்வியெல்லாம் எழுந்தது. அந்த கருத்துக்களையெல்லாம் தொகுத்து, அதை உள்வாங்கித்தான்  மறைந்த டி.எஸ்.  சுப்ரமணியம் தலைமையில் இருந்த குழு ஒரு அறிக்கையை தந்ததாகச் சொன்னார்கள். அந்த அறிக்கையை இந்திய அரசு பகிரங்கமாக வெளியிடவே இல்லை. அவரேகூட சொன்னார், நீங்கள் வெளியிடவில்லையென்றால் நானே வெளியிடுவேன் என்று சுப்பிரமணியன் கூட சொன்னார்.  அவர்கள் ஏன் அந்த அறிக்கையை வெளியிடவில்லை? ஏன் அவர்கள் அந்த அறிக்கையை விவாதத்திற்கு உட்பத்தவில்லை என்று புரிந்து கொள்ளமுடியவில்லை. 

அதற்குப்ப பிறகு அவர்கள் என்ன செய்தார்களென்றால் ஒரு 43 பக்கத்திலே தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான உள்ளீடுகள் என்று வெளியிட்டார்கள். (some inputs for national educational policy draft 2016) அது இன்னும் கூட ஆழசுனு வலைதளத்தில் ஆவணமாக  இருக்கிறது. அந்த 43 பக்கம் கொண்ட ஆவணம் வெளியிடப்பட்டவுடன் அது நம் மத்தியில் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியது. பல்வேறு சந்தேகங்களை நம் மத்தியில் ஏற்படுத்தியது. எனவே தமிழ்நாடு, இந்தியா முழுவதும் போராட்டம்  நடைபெற்றது. இவ்வாறான உள்ளீடுகள் இருக்க முடியாது இது வடிகட்டும் முறை என்று. எதிர்ப்புகள் வந்தன. அந்த போராட்டத்தினுடைய விளைவாக அவர்கள் என்ன சொன்னார்களென்றால்! வரைவு இன்னும் முழுமையடையவில்லை இன்னொரு  கமிட்டி அமைக்கவுள்ளோம், என்று கூறினார்கள். அந்த கமிட்டி தான் மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன் குழு! 

இப்போது நமக்கு என்ன தெரிய வருகிறது என்றால், தற்போது ஆழசுனு வலைதளத்தில் ஜூன் மாதம் 1ஆம் தேதி கஸ்தூரி ரங்கன் அவர்களுடைய அறிக்கை வருகிறது.  அந்த 484 பக்கம் கொண்ட அறிக்கையில் அவர் முதல் பக்கத்தில் கையெழுத்து போட்டுள்ளார். அறிக்கை முடிந்தது. அரசிடம் ஒப்படைப்பதற்கான கடிதம், அந்த கடிதத்தில் கையெழுத்து இட்ட நாள் டிசம்பர் 15, 2018. அப்போது டிசம்பர் 15, 2018இல் இந்த அறிக்கை தயாராகிவிட்டதென்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

தயாரான இந்த அறிக்கை, மே மாதம் 31 ஆம் தேதி வரைக்கும் ஏன் அரசு கைகளுக்கு வரவில்லை? அரசு பெறவில்லையா? அவர் கொடுக்கவில்லையா? இதற்கான விளக்கத்தை யாரும் சொல்லவில்லை. ஜூன் மாதம் 1 ம் தேதி ஆங்கிலத்திலும், இந்தியிலும் வெளியிட்டுவிட்டு தமிழ், குஜாராத்தி, மராத்தி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இந்த அறிக்கைக்கு கருத்து சொல்லுங்கள் என்று கூறுகிறார்கள். அந்த கருத்து சொல்வதற்கான கால அவகாசம் 30 நாள் என்றார்கள். (பிறகு காலம் நீடிக்கப்பட்டது) தமிழ்நாட்டைச் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு கையெழுத்து போட்டு மனு கொடுக்கிறார்கள்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினரையும் கூட  அழைத்துக்கொண்டு அவர் தனியாக ஒரு மனுவை கொடுக்கிறார். அந்த மனுவில், இந்த கல்வி கொள்கையில் ஏற்க முடியாதான அம்சங்கள் என்னென்ன இருக்கு, பாதிப்புகள் எவ்வளவு இருக்கிறது என்பதை குறிப்பிட்டு,  எனவே இந்திய மக்கள் இதை படித்துவிட்டு கூற வேண்டுமென்றால், இந்த 484 பக்கங்களையும் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து தர வேண்டும். மொழி பெயர்த்து கொடுப்பது மட்டுமல்ல, குறைந்தபட்ச ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டுமென்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் மனு கொடுத்துவிட்டு வருகிறார். அதற்கு முன், தொல் திருமாவளவன், இரவிக்குமார் அதற்கு முன் 42 பேர் பையெழுத்துப்போட்ட கடிதத்தையும் கொடுத்து விட்டு வருகிறார்கள்.

கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று. இந்த இரண்டு கடிதத்தின் போது நாடாளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு பின் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், ஜூலை மாதம் 31 ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு பின்பு சமீபத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறையில், 51 பக்கத்தில் ஒரு சுருங்கிய வடிவத்தை கொடுத்திருக்கிறார்கள். 484 பக்கத்தின் ‘சுருக்கம்’ (shorter form) என்று , கொடுத்திருக்கிறார்கள். இந்த சுறுக்கம்தான் 12 இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து, மனிதவள மேம்பாட்டுத்துறை வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

484 பக்கம் கொண்ட முக்கிய ஆவணத்தில் இருக்கக்கூடிய செய்திக்கும், இந்த 51 பக்கத்தில் உள்ள செய்தியையும் கவனித்தோமென்றால் சில முக்கியமான இடங்களில் சில வேறுபாடுகள் தெரிகிறது. குறிப்பாக தாய்மொழிதான் தொடக்கக் கல்வியில் கற்பித்தல் மொழியாக இருக்குமென்று 51 பக்க சுருக்கத்தில் கூறியிருக்கிறார்கள். இது தான் நமது கோரிக்கை இது வந்தால் மிகப்பெரிய மகிழ்ச்சி. ஆனால், 484 பக்க அறிக்கையில் என்ன கூறுகிறார்கள் என்றால்? வாய்ப்பு கிடைக்கும்போது என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். தொடக்கக் கல்வியில் கூட இருக்குமென்பதை அவர்களால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இப்போது நான் 51 பக்கம் சுருக்கத்தை நம்புவதா? அல்லது 484 பக்க அறிக்கையை நம்புவதா?

பிரதான அறிக்கையில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், சமஸ்கிருதம் இந்தியாவில் உள்ள இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணி செய்திருக்கிறது. இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டிற்கு அது அளப்பரிய பணி செய்திருக்கிறது. எனவே சமஸ்கிருதத்தை தொடக்க கல்வியிலிருந்து உயர் கல்வி வரைக்கும் நன்றாக கற்று கொடுப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த 51 பக்க சுருக்கத்தில்  ஒரு பக்கத்தில் கூட சமஸ்கிருதம் என்ற வார்த்தையே வரவில்லை. இப்போ நான் 51 பக்கத்தை வைத்து கருத்து சொல்வதா? இல்லை 484 பக்கத்தை வைத்து கருத்து சொல்வதா? 

அதே போல் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி பற்றிய முக்கிய அம்சங்கள் மட்டும் சுருக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பாதிப்பு எப்படி இருக்கும்? பாதிப்பை நான் முழுதாக புரிந்து கொண்டால் தானே பதில் சொல்ல முடியும்.  நான் மேம்போக்காக புரிந்து கொண்டு எப்படி பதில் சொல்ல முடியும். அனைவரும் கேட்கக் கூடிய கேள்வி என்னவென்றால் புதியதாக ஒன்று வரும் போது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று? புதியதாக வரவேண்டுமென்றால் அது என்னவென்பது தான்.

இந்திய நாட்டு மக்களின் கோரிக்கை என்ன? கட்டணமில்லா கல்வி கொடு என்பது தான் நாட்டு மக்களின் கோரிக்கை. அது இன்றைய கோரிக்கையா? மகாத்மா ஜோதிராவ் புலே, சாவித்திரி பாய் புலே: சூத்திரர்களுக்கும், ஆதி சூத்திரர்களுக்கும் அதிலும் குறிப்பாக பெண்களும் எந்த சமூகத்தில் பிறந்திருந்தாலும், காலம் காலமாக இந்தியாவிலே  கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. ஹன்டர் ஆணையம் முன்பு 1882இல் மகாத்மா ஜோதிராவ் பூலே தனது கோரிக்கையை வைக்கிறார். அப்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு சமமான கல்வியை அரசு கொடுக்காமல் வேறு யார் கொடுப்பது என்று தனது கோரிக்கையை முன் வைக்கிறார். ஜோதிராவ் பூலே சமர்பித்த அந்த ஆவணத்தை படிக்காமல் இந்திய நாட்டினுடைய கல்வி  வரலாற்றை நாம் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியாது.

யாருக்கு கல்வி வேண்டும்? யாருக்கு கல்வி மறுக்கப்பட்டது? அப்படி கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வி தர வேண்டும் என்றால் அந்த பொருப்பை யார் ஏற்க வேண்டும்? சென்னை அடையாறில் ஆல்காட் பள்ளி என்று இன்றும் இருக்கிறது. அயோத்திதாசரின் வாழ்க்கை வரலாற்றை படிக்காமல் கல்வியைப் பற்றி நீங்கள் பேச முடியாது. அயோத்திதாசர் கர்னல் ஆல்காட் உடன் சேர்ந்து உருவாக்கியது தான் ஆல்காட் பள்ளி. ஏன் அப்படியொரு பள்ளியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது?  திருவனந்தபுர சமஸ்தானத்திலே ஒடுக்கப்பட்ட மக்களுடைய கல்விக்காக அய்யன்காளி நடத்திய போராட்ட மிருக்கிறதே! அய்யன்காளி நடத்திய போராட்டத்தை படிக்காமல் நாம் கல்வி வரலாற்றை பேச முடியாது.

ஒரு வரலாற்றுப் பார்வை இல்லாமல் ஒரு அறிவியல் அனுகுமுறை சாத்தியமாகாது. அறிவியல் அனுகுமுறைக்கு வரலாற்றுப் பார்வை வேண்டும். ஆனல், இந்த 200 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் சமமான கற்றல் வாய்ப்பு வேண்டும் என்று நடந்த வரலாற்றுகளைப் பற்றி இந்த ஆவணம் எந்த பதிவையும் செய்யவே இல்லை. 484 பக்கம் கொண்ட இந்த ஆவணம் எதையும் செய்யவே இல்லை. 

காந்தியடிகள் வார்தாவிலே நடந்த மாநாட்டியே என்ன முன்வைத்தார்கள்?  அப்போது கல்வியை பற்றி பேசும் போது தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் என்ன கோரிக்கையை வைத்தார்கள் என்று தெரிய வேண்டாமா?  பிரிட்டிஷ்காரர்கள் 23 வயதில் பகத்சிங்கை தூக்கிலிடுகிறார்கள்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடபட்டபோது, ஏன் அந்த தண்டனையை ஏற்றார்கள்? எங்களுடைய தண்டனை இந்திய நாட்டின் மக்களுடைய மனசாட்சியாக இருக்கும் குறிப்பாக இளைஞர்களுடைய மனசாட்சியை உலுக்கும், இந்திய நாட்டினுடைய விடுதலையின் வேள்வியிலே அவர்கள் பங்கேற்பார்கள். அந்த மகத்தான போராட்டம் இந்திய நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தரும். விடுதலை இந்தியாவிலே ஒரு மாணவன் கல்வி கிடைக்கவில்லை என்று ஏங்கிக் கோண்டிருக்க மாட்டான், ஒரு குழந்தை உணவு, பால் இல்லையென்று ஏங்கிக்கொண்டிருக்காது, படித்த இளைஞன் வேலை இல்லையென்று திண்டாட மாட்டான்.

இது மூன்றும் இல்லாத இந்தியா தானே பகத்சிங்கின் கனவு! 70 ஆண்டுகாலம் கழித்து நீங்கள் கொடுக்கக்கூடிய கல்விக் கொள்கையினால், விடுதலை போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் கனவு நனவாகிறா என்று தானே நான் பார்ப்பேன் அது நினைவாகிறா? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகிற போது, 14 வயதுக்குட்பட்ட அத்துனை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வியைக் கொடுப்பது அரசின் கடமை, பெறுவது குடிமக்களின் உரிமை என்று சொல்லப்பட்டது. ஆனால் அவ்வாறு கொடுக்க முடியாது. இந்தியாவினுடைய பொருளாதாரம் அனுமதிக்கவில்லை என்று கூறினீர்கள். எப்போது 1949இல் நவம்பர் 26 இந்திய அரசமைப்புச் சட்டம் எழுதி முடிக்கும் தருவாயில் அப்படி கூறினீர்கள். 

அரசினுடைய பொருளாதாரம் வளருமே யானால், மேம்படுமேயானால், அரசினுடைய பொருளாதாரம் மேம்படவில்லை அதற்காக  கல்வியை அடிப்படை உரிமையாக்க முடியாது என்று கூறினீர்கள். அப்போது தரலாம் என்றீர்கள். இப்போது 2019. இப்போதும் பொருளாதாரம் மேம்படவில்லையா? பொருளாதாரம் மேம்படும் போது கட்டாய இலவசக் கல்வியை அனைவருக்கும் வழங்குவோம் என்று கூறியவர்கள், இப்போது இந்த கல்வித் திட்ட அறிக்கையில் ஏன் அது பற்றி ஏதும் கூறவில்லை?

தொடரும்