ஈஷா யோகா மையத்தில் அத்துமீறல்கள் நடப்பது உண்மைதான் என அந்நிறுவனத்தில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி விலகி வந்த நிர்வாகி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். மதுரை திருப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்ற ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் ஞாயிறு அன்று ஈஷா யோகாமையம் குழந்தைகளின் சித்தரவதைக் கூடமாக செயல்படுவதாகவும், அதிலிருந்து தனது மகன்களை மீட்டு வந்து விட்டதாகவும், மற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு மதுரையில் இருந்து தனது பிள்ளைகளையும் அழைத்து வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் ஈஷா யோகா மையம் குறித்தும், அங்குள்ள சமஸ்கிருத குருகுல பள்ளிகளின் சிறப்புகள் குறித்தும் தொடர்ச்சியாக வந்த செய்திகள் எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. இதனையடுத்து எனது மூத்த மகனை ஐந்து இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை  ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012 ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம். இதனையடுத்து 2014இல் எனது இளைய மகனை ஏழு  இலட்ச ரூபாய் செலுத்தி அவனையும் சேர்த்தோம்.

இந்நிலையில் இரண்டு வருடத்திற்கு பிறகு ஈஷா யோகா மையத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் உங்கள் மகனின் நடவடிக்கை சரியில்லை அதிக கோபம் வருகிறது, படிப்பு ஏறவில்லை உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இதனையடுத்து கேஎம்சிஎச் மருத்துவ மனைக்கு கூட்டிச்சென்றபோது, குழந்தைகள் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் தரவேண்டும் என்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுத்த மனநல மருத்துவர் உடனடியாக உங்கள் பிள்ளைகளை ஈஷா மையத்தில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்றார். என்ன காரணம் என மருத்துவரிடம் கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார்.

இதனையடுத்து மதுரைக்கு சென்று இருவரையும் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டேன். சிறிது நாட்கள் கழித்தபின் அவர்களாகவே என்னிடம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சித்தரவதைகள் குறித்து தெரிவித்தனர். இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் இலட்சக்கணக்கில் பணமும் பறித்துக் கொண்டு மகன்களையும் கொடுமைப் படுத்திய செயலை ஏற்கமுடியவில்லை. இதனை யடுத்து நான் காவல்துறையில் உளவுப்பிரிவில் பணியாற்றி இருப்பதால் அந்த அனுபவத்தோடு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன். இதனையடுத்து ஈஷா யோகா மையத்தினர் என்னிடம் ஒன்பது இலட்சம் ரூபாயை தந்துவிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என கடிதம் பெற்று சமரசத்திற்கு வந்தனர்.

கடந்த பலமாதங்களாக எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த சம்பவம் எனது பிள்ளைகள் போல் மற்ற பிள்ளைகளும் பாதிக்கக் கூடாது என பலரிடம் சொல்லி வந்தேன். ஆனால் என்னுடைய பேச்சை யாரும் நம்பவில்லை. தற்போது கடந்த ஒருவாரமாக ஈஷா யோகாமையத்தின் முறை கேடுகள் வெளி வந்து கொண்டிருக்கிற செய்திகள் எனக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஆகவே, எனது குழந்தைகள் அனுபவித்த வேதனையும் பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த குழந்தைகளும் அப்படியான வேதனை அனுபவிக்கக்கூடாது என்கிற நிலையில் இருந்தே மதுரையில் இருந்து சொந்த செலவில் கோவைக்கு வந்துள்ளேன் என்றார்.

மேலும், குழந்தைகள் எவ்விதமான தண்டனைகள் அனுபவித்தனர் என்பது குறித்து கேட்டபோது, அதை எனது குழந்தைகளிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றார். அந்த சிறுவர்கள் கூறுகையில், அங்கு நடைபெறும் சிறுசிறு தப்புகளுக்குகூட சேவா என்கிற தண்டனை வழங்கப் படுகிறது. இதில் தண்டனை பெற்ற பிள்ளைகள், மற்ற பிள்ளைகள் என இரண்டாக பிரித்து வைக்கப்படு கிறார்கள். தண்டனை பெற்றவர்களுக்கு உப்பில்லாத உணவும், மற்ற பிள்ளைகளுக்கு பலகாரத்தோடு உணவும் பரிமாறப்படுகிறது. மேலும் சேவா தண்டனை பெற்றவர்கள், கழிவரை சுத்தம் செய்ய வைப்பதும், மாட்டுச்சாணி அள்ள வைப்பதும், மையத்தில் உள்ளவர்களின் துணிகளை துவைத்து தருவதும், வெளிநாட்டவர் தங்கியுள்ள அறைகளை சுத்தம் செய்ய வைப்பதும், இதுபோக தினந்தோறும், நூறு தோப்புக் கரணத்தில் இருந்து ஐநூறு தோப்புக் கரணம் வரை கட்டாயம் போட வேண்டும் என்பது போன்ற சித்தரவதைகள் கொடுக்கப்படுகிறது. எனக்கு மட்டுமல்லாமல் ஆறு வயது குழந்தைகளுக்குக் கூட இதுபோன்ற தண்டனை கொடுக்கப்படுகிறது என அச்சிறுவர்கள் தெரிவித்தனர்.

ஈஷா யோகா மையத்தின் நிர்வாகிகளிடம் நீங்கள் இதுபோன்ற வேலை செய்திருக்கிறீர்களா? எனக் கேட்டதற்கு ‘மண் சோறு சாப்பிடு’ என நிர்ப்பந்தம் செய்தனர். இதுகுறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவில்லையா என கேட்டதற்கு, கடிதம் மூலமாக எந்த தகவலும் வீட்டுக்கு அனுப்ப முடியும், ஆனால் நாங்கள் இங்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்த எந்த கடிதமும் பெற்றோர் களுக்கு போய்ச் சேரவில்லை.  அனைத்து கடிதங்களும் தனிக்கை செய்தே அனுப்பப்படுகிறது என்பதை எங்கள் வீட்டிற்கு சென்றபிறகுதான் தெரியவந்தது. எங்கள் பெற்றோர்கள் வந்து அழைத்து செல்லவில்லை ஆகவே நாங்கள்தான் தவறு செய்கிறோமோ என்கிற பயத்திலும், இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கட்டி பெற்றோர்கள் சேர்த்துள்ளனர் அவர்களின் பணம் வீணாகிவிடக்கூடாது என்கிற அச்சத்திலேயே அங்கேயே தங்கி இருந்தோம் என்றனர்.

‘ஈஷா’ ஜக்கி வாசுதேவ் ‘கிரிமினல்’ பின்னணி

2011ஆம் ஆண்டு சேலம் அரசு கலைக் கல்லூரிக்கு ‘ஈஷா’ மய்யத்தின் ஜக்கி வாசுதேவ் உரையாற்ற அழைக்கப்பட்டதை எதிர்த்து சேலம் நகர பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட துண்டறிக்கை - ‘ஜக்கி வாசுதேவ்’ மோசடிகளை கிழித்துக் காட்டுகிறது. இந்த செய்திகள் ‘இலக்ஷ்மி நரசிம்மா’ என்ற மாத இதழில் (15.4.2011) வெளிவந்துள்ளது. இத் துண்டறிக்கை, “யோக்கியன் வருகிறான்... சொம்பெடுத்து உள்ளே வையுங்கள்!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

ஈஷா மய்யத்தில் தங்களுடைய இரண்டு மகள்கள் கட்டாயப்படுத்தப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு சன்யாசியக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை மய்யத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என்றும் கோவை வடவள்ளியைச் சார்ந்த பேராசிரியர் காமராஜ், கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் தந்துள்ளார்.  இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் என்பவர் , யார் என்பதை விளக்குகிறது இந்தத் துண்டறிக்கை.

“சேலம் அரசு கலைக் கல்லூரியில் வருகிற 30.9.2011 முதல் 2.10-2011 வரை ஈஷா யோகா என்கிற பெயரில் தியானலிங்கம் என்கிற மதப் பிரச்சாரம்  செய்ய ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ணமூர்த்தி’ என்கிற ‘ஜாவா வாசுதேவன்’ என்கிற ‘ஜக்கி வாசுதேவ்’ வருகிறார்.

இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந்துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ்புறத்தில் குதிரை வண்டி நிறுத்துமிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும், சில நாள்களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்துவிட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும்போது ஜிக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்...

கோவை மாநகரில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் கடந்த 13.2.2011 அன்று ஆனந்த அலை மகா சத்சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வர இருப்பதாகவும், இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும் ‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.பூபத கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாகக் கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:-

1.            உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?

2.            மேலும் யோகா மையத்திற்குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களிலும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது? உண்மையா?

3.            உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பதை எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்? இதுவும் உண்மையா?

4.            மேலும் 1970ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது...

ஜக்கியின் முகங்கள் மாறப்பட்டு கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்பட்டதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய - மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர்களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டையில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகையாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பிரஸ் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் காப்பியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல்லுபோல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல 2006ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்து வேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்ததுதான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களில் இருந்த 18 வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்னுடைய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?

“எந்த ஒரு அரசு வளாகத்திலும் மத பிரச்சாரம் செய்யக் கூடாது” என்று அரசு ஆணை உள்ள நிலையில் குற்ற பின்னணி உள்ள ஒரு மதவாதியை ஈசா யோகா என்கிற பெயரில் மதப் பிரச்சாரம் செய்ய அனுமதியளித்த அரசு கலைக் கல்லூரி முதல்வராவது இது குறித்து விளக்கம் அளிப்பாரா?”

- என அந்தத் துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

- பெரியார் திராவிடர் கழகம், சேலம் மாநகரம் 2011இல் வெளியிட்ட துண்டறிக்கை