தமிழ்நாட்டில் கூட்டணிக்கு கட்சி கிடைக் காமல் தனித்து விடப்பட்டிருக்கிறது பாரதிய ஜனதா. இந்து மக்கள் கட்சி நடத்தும் அர்ஜுன் சம்பத் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. அவர் வேட்பாளர்களை தனியாக நிறுத்தப் போவதாகக் கூறுகிறார். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச். ராஜா என்ற பார்ப்பனர், மத்தியில் அதிகாரத்துக்கு வந்துவிட்ட இறுமாப்பில், தடித்த வார்த்தைகளைப் பேசி வந்தார். இந்தியாவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப்போல அவர் காட்டிய திமிர் இப்போது பேர் சொல்வதற்குக் கூட ஒரு ஆதரவு கட்சி இல்லாமல் அநாதையாக அலையவிட்டிருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சியை நடத்தும் சரத்குமாரும், பா.ஜ.க.வோடு கூட்டணி பேசி முடித்த பிறகு ‘அம்போ’ என்று கைவிட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு ஓடி விட்டார். வாசனின் த.மா.க.வுடன் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்றார். மாநில தலைவர் தமிழிசை, வாசனும் ‘டாட்டா’ காட்டி விட்டார்.

“எங்கள் ஆதரவின்றி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது” என்று அவ்வப்போது நகைச்சுவை விருந்தளித்து வருகிறார், மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன். முகத்தை அவ்வளவு கடுமையாக வைத்துக் கொண்டே இப்படி எல்லாம் ‘ஜோக்’ அடிக்கும் அவரது திறமையை பாராட்டத் தான் வேண்டும்.

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது.

கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம் எழுதுவதேகூட ஒரு மூடநம்பிக்கைதான்.

மூத்த குடிமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற பேராசிரியர் பி.சந்திரசேகர், இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டி அளித்திருக்கிறார். “இளநீர் உடலுக்கு ஆரோக்கியமானது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்பட்டு, இளநீர் முழுதும் தரையில் வீணடிக்கப்படுகிறது. இந்த இளநீரை ஏன் சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடாது? நாங்கள் தேங்காய் உடைப்பதையோ, சடங்குகளையோ எதிர்க்க வில்லை. கடும் குடிநீர் நெருக்கடி நிலவும்போது இந்த இளநீரை ஏன் வீணடிக்க வேண்டும்? கோயில் நிர்வாகிகளிடம் இதைத் தெரிவித்தோம். ‘இளநீரை சேமிப்பதற்கு பாத்திரங்கள் வேண்டும்’ என்றார்கள். அதை நாங்களே வாங்கித் தருகிறோம் என்று கூறினோம். ஆனால், அர்ச்சகர்களோ ‘பகவானுக்கு காணிக்கையாக்கப்பட்ட உணவை மனிதர்கள் சாப்பிடக் கூடாது’ என்கிறார்கள். அற நிலையத் துறை அதிகாரிகளும் இதே கருத்தையே கூறுகிறார்கள். இது குறித்து பொது நல வழக்கு தொடரப் போகிறோம்” என்கிறார் அந்த பேராசிரியர்.

பெரியார் இயக்கத்தினர் மட்டுமே செய்து வந்த தொண்டை இப்போது மூத்த குடிமக்களே சமுதாயப் பார்வையில் கையில் எடுத்திருப்பது நல்ல திருப்பம்.