தலையங்கம்

நவ. 9, 2005 அன்று மாலை, கோச்செரில் ராமன் நாராயணன் முடிவெய்திவிட்டார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்த  முதல் ‘தலித்’, ‘நான் செயல்படுகிற குடியரசுத் தலைவர்’ என்று அறிவித்து, அதை செயலில் காட்டியவர். காஞ்சிபுரம் பார்ப்பன மடங்களின் துணை அலுவலகமாக குடியரசுத் தலைவர் அலுவலகத்தை மாற்றி வைத்திருந்த பார்ப்பனர்களும் பார்ப்பனியர்களுக்குமிடையே, சுயமரியாதைக்காரராக தலைநிமிர்ந்து நின்று, காஞ்சிபுரம் மடத்தின் பக்கமே ஏறெடுத்துப் பார்க்காத சிறந்த மனிதாபிமானி. சம்பிரதாயங்களைத் தகர்த்து வெகுமக்களோடு வரிசையில் நின்று தேர்தலில் வாக்களித்தவர்.

மாநில சட்டமன்றங்களை 356 பிரிவின் கீழ், கலைக்க மத்திய அமைச்சரவை இருமுறை பரிந்துரைத்தபோது, அதை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பியவர். அதிகாரிகள் தயாரித்து தரும் சடங்குத்தனமான உரைகளை அவர் நிகழ்த்துவது இல்லை. 2002 ஆம் ஆண்டு, அவர் நாட்டுக்கு வழங்கிய குடியரசுத் தலைவர் உரை - அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. சமூக ஜனநாயகத்துக்காக அவர் முழங்கினார். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்காக உருவாக்கப்பட்ட ‘போபால் பிரகடனத்தை’ தனது உரையில் பதிவு செய்து, உலக மயமாக்கல் கொள்கையால், பறிக்கப்பட்டு வரும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமைகளை அவர் துணிவுடன் சுட்டிக் காட்டினார்.

தலித் மக்களின் ‘அதிகாரத்துவத்தை’ வலியுறுத்தினார். பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் என்றார். கொச்சி விமான நிலையத்துக்கு ஆதிசங்கரர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த போதும், தலைநகர் டெல்லியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை அடிமாட்டு விலையில் தனியாருக்கு விற்பனை செய்ய பா.ஜ.க. ஆட்சி முயற்சித்த போதும் தடுத்து நிறுத்தினார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான பட்டியல் தம்மிடம் ஒப்புதலுக்கு வந்த போது, அதில் தலித் மற்றும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாததை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே திருப்பி அனுப்பினார். அவரது குடியரசுத் தலைவர் மாளிகையின் கதவு சாமான்ய மக்களுக்காக திறந்திருந்தது. ஆற்றல், அறிவு, திறமையால் உயர்ந்து நின்ற மா மனிதர். தீண்டப்படாத சமூகத்தின் தடைகளைத் தாண்டி, தனது அறிவுத் திறத்தால் உயர்ந்தவர். என்றும் நமது நெஞ்சில் நிறைந்து நிற்கும் அம்மானிதருக்கு, நமது வீரவணக்கத்தை உரித்தாக்குகிறோம்.

கே.ஆர்.நாராயணன் மறைந்தார்; கே.ஆர்.நாராயணன் வாழ்க!