உலகத்து மொழிகளிலெல்லாம் உயர்தனிச் செம்மொழியாய்த் திகழ்கின்ற மொழியே தமிழ். இலக்கியச் செழுமை, சொற்களில் வளமை, பிற மொழிகளுக்குத் தாய்மை, வழக்கில் பழமை, எப்போதும் விளங்குகின்ற எளிமை, புதியச் சூழலுக்கேற்ற புதுமை என பல்வேறு அடிப்படைக்கூறுகளை செம்மொழித் தகுதியாக, மொழியியல் அறிஞர்கள் வரையறை செய்கின்றனர். மொழியியலாளர்களால் வழங்கப்படும் சூத்திரத்திற்கு, முழுவதுமாய் உட்படுகின்ற, உலகின் ஒரே மொழியாகத் தமிழ் திகழ்கின்ற காரணத்தால்தான், அதனை உயர்தனிச் செம்மொழி என்று உரைக்கக் காண்கின்றோம். எல்லா உயிரையும் சமமாக மதித்து நடத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனை உலகில் வேறு எந்த மொழியிலும் காணக் கிடைக்கவில்லை. ஆனால், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் மொழியின் தொல் புலவன் வள்ளுவப் பேராசான் திருக்குறளின் வழியே இக்கருத்தை அழகாய் வெளிப்படுத்துகின்றார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒப்பற்ற உலகியல் தத்துவத்தை கணியன் பூங்குன்றனார் விளக்கிய காலத்தில், நனி நாகரிகம் கண்ட இனமென்று உலகில் வேறு ஒன்றில்லை. மொழிக்கென்று தொல்காப்பியன் மூலமாக, தமிழ், தனக்கென இலக்கணம் படைத்த கி.மு.1000இல், பிற இனங்களெல்லாம் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்திருக்கின்றன என்பதும் வரலாறு.

semmozhi_meeting_530

ஆனால்..?

மொழிப்பெருமை, இனப்பெருமை கொண்டு வாழ்ந்த தமிழினம் இன்றைக்கு நாதியற்று, தனக்கென்று அரசாள நாடற்று, எவரும் காறியுமிழும் கேடுற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழக நிலப்பரப்பிற்கு சற்றே அருகில், வெறும் பதினெட்டே மைல் கல் தொலைவில், ஈழத் திருநாட்டில் நம் தொப்புள் கொடி உறவுகளெல்லாம் சதைகள் பிய்ந்து, இரத்தம் பீறிட, உறுப்புகள் தொங்கி, நரம்புகள் வெட்டுண்டு, எலும்புகள் நொறுங்க உயிருடன் வாழ்வதற்கே சிங்களப் படையினரோடு போராடிக் கொண்டிருந்த போது, தமிழகத் தொலைக்காட்சிகளில் 'மானாட... மயிலாட...' பார்த்துக் கொண்டே, கோலாவும், பெப்சியும் பருகிக் கொண்டிருந்தோம். 'பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு' என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடலுக்குப் பொருளெங்கே போனது? போரை நிறுத்தச் சொல்லி வெறும் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை சாதனையாகப் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தமிழ் மண்ணில் தான், 'வடக்கிருந்து உயிர் துறத்தல்' என்ற உன்னதமான உயிர்த் தற்கொடையினை சங்க இலக்கியங்கள் மிகப் பெருமையோடு பாடியிருக்கின்றன. 1987இல் சொட்டுத் தண்ணீர் கூடப் பருகாமல், ஈழ மண்ணில் திலீபன் என்ற மாவீரன், இந்தியாவிடம் நீதி கேட்டுப் பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்விட்ட கதையோடு, நான்கு மணி நேர உண்ணாநோன்பையும் பொருத்திப் பார்த்துக் கொள்க!

ஈழப்போரின் இறுதி நாட்களில் மட்டும் ஏறக்குறைய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச் சொந்தங்கள் எந்தவித ஆதரவுமின்றி மண்ணோடு புதைந்து போயினர். வரலாற்றில் ஒரு போதும் மறைக்கவியலாத அந்தப் பேரவலத்தின் சோக நினைவுகள் இன்னமும் நம்மை விட்டு அகலாத நிலையில்தான், தமிழக முதல்வர் கருணாநிதி 'உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு' ஒன்றை கொங்குச் சீமையில் நடத்திக் காட்டியிருக்கிறார். வரவேற்பு வளைவுகளென்ன... அலங்கார ஊர்திகளென்ன... ஆர்ப்பாட்டமான அரங்குகளென்ன... கொங்குச் சீமை கோலாகலத்துடன் செம்மொழி மாநாட்டை கொண்டாடித் தீர்த்து விட்டது. தமிழக முதல்வர் கருணாநிதியும் தனது குடும்பத்தாருடன் சீரும் சிறப்புமாகக் கண்டு களித்திருக்கிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதியால் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழுக்கும், தமிழர்க்கும் என்ன செய்யப்போகிறது? இதனால் ஏற்படும் உலகளாவிய மாற்றங்கள் என்ன? அவற்றால் விளையும் தாக்கங்கள் எத்தகையதாய் இருக்கும்? என பல்வேறு கேள்விகள் நம்மைப் போட்டுக் குடைந்தாலும், அவற்றில் சிலவற்றிற்குக் விடை காண முற்பட்டபோது, மறுபடியும் கேள்விகளே வந்திறங்கின. அவற்றையும் இங்கு பகிர்ந்து கொள்வதே சிறப்பாக இருக்கும். உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தால் முடிவு செய்யப்படும் மாநாடு குறித்த அறிவிப்பு, தமிழக முதல்வர் கருணாநிதியால் ஏன் மேற்கொள்ளப்பட்டது? நெல்லை, குமரி போன்ற தமிழுக்குப் பெருமளவு தொண்டாற்றிய மாநகரங்கள் இருக்கும்போது, கோவை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அரசியல் பின்னணி யாது? 2011ஆம் ஆண்டில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்ற தமிழாராய்ச்சிக் கழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 2010ஆம் ஆண்டே நடத்த வேண்டிய அவசரம் என்ன? இதற்கு முன்னர் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அப்பொதெல்லாம் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் அக்கறை கொள்ளாமல், ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு கருணாநிதி இரண்டகம் இழைத்துவிட்டார் என்று உலகத் தமிழர்களெல்லாம் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், தற்போது நடத்தப்படும் மாநாடு எதை மறைக்க?

தமிழ் இனத்தின் மேம்பாடு மற்றும் தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் இத்தனை ஆடம்பரங்கள் எதற்கு? தமிழுக்குத் தொண்டாற்றிய பல்வேறு அறிஞர்களையும், வறுமையில் வாடும் அவர்தம் குடும்பங்களையும் கண்டு கொள்ளாது, குறைந்தபட்சம் அவர்களுக்கு அழைப்பிதழ் கூட வழங்காது செம்மொழி மாநாட்டில் புறக்கணிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதான் தமிழுக்கு ஆற்றுகின்ற தொண்டா? இப்படி எழுகின்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகள், இதனைப் படிக்கின்ற வாசகர்களின் உள்ளக் குமுறலில்தான் புதைந்து கிடக்கின்றன. 

ஒரு மொழியின் இருத்தல் என்பது, அந்த மொழியைப் பேசும் மக்களின் பொதுப்புழக்கத்தைத்தான் முழுவதுமாய் நம்பியிருக்கிறது. மக்களின் அன்றாட பழக்க வழக்கங்களிலும், நடை, உடை, பாவனைகளிலும், பேச்சு வழக்குகளிலும் தாய்மொழிக்கேயுரிய கூறுகள் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்பட வேண்டும். மொழி உணர்வுவயப்பட்ட மக்கள் இருந்தாலும், பொதுத் தளம் என்று வரும்போது, தங்களின் தாய்மொழிக்கு கொடுக்கின்ற முதன்மையில் தான் அந்த மொழியின் வாழ்வும், தாழ்வும் இருக்க முடியும் என்பது மொழி வல்லுநர்களின் வரையறை. ஆனால் தமிழ் மண்ணில் அப்படியொரு நிலை இருக்கிறதா என்பதை மனச்சான்றோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தொடக்க நிலையில் கல்வி பயில்கின்ற தமிழ்க் குழந்தைகள், தங்களின் பெற்றோரை அம்மா, அப்பா என்று அழகு தமிழில் அழைத்துவிட்டாலே மிகவும் வியப்பிற்குரிய விசயமாய் மாறிவிட்டது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தை ஆங்கிலத்தில் பேச, எழுத, படிக்க வேண்டும் என்பதில் வெறி கொண்டு அலைகின்ற போக்கு இன்றைய தமிழகத்தின் இயல்பான நிலை. தொலைபேசி எண்களை தமிழில் விளக்கமாய்ச் சொன்னாலும் ஏறாத மண்டைகளில், அவ்வெண்களையே ஆங்கிலத்தில் சொல்லும்போது விரைவில் மூளைக்குள் பதியம் போட்டுக் கொள்கின்ற கூத்தை என்னவென்பது? ஒரு காலத்தில் மணிப்பிரவாள நடை என்றும், பண்டிதத் தமிழ் என்றும் கூறி வடமொழியை முன்னிறுத்தி தமிழ்மொழியை அழித்தொழிப்புச் செய்யும் பணிகள் நடைபெற்றபோது, தமிழறிஞர் மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழ்ச்சான்றோர் பெருமக்கள் தோன்றி தனித்தமிழின் அருமையை மக்களுக்கு உணர்த்தினர். இதனால்தான் 'அபேட்சகர்' வேட்பாளரானார், 'அக்கிராசனார்' தலைவரானார், 'இராஷ்டிரபதி' குடியரசுத்தலைவரானார். இவையெல்லாம் தனித்தமிழ் இயக்கத்தின் தன்னலமற்ற பரப்புரையால் விளைந்த நன்மைகள். ஆனால், தூக்கியெறியப்பட்ட வடமொழியின் இடத்தில் இன்று ஆங்கிலம் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இயல்பான வழக்கிலிருந்த பேருந்து 'பஸ்'ஆகவும், நேரம் 'டைம்'ஆகவும், வணக்கம் 'குட்மார்னிங்'ஆகவும், போய் வருகிறேன் 'டாட்டா, பை.. பை..'ஆகவும், ஆசிரியர் 'டீச்சர், சார்'ஆகவும் 'முன்னேற்றம்' கண்டுள்ளது. வடமொழிக்கலப்பு, தேசியக் கட்சிகளின் அல்லது மதவாத அமைப்புகளின் 'கொடை'யென்றால், ஆங்கிலக்கலப்பு, தமிழின் பெயரால் ஆட்சியமைத்த திராவிட இயக்கங்களின் 'திருப்பணி'யால் விளைந்ததாகும்.

ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது வேறு; தாய்த்தமிழோடு பிற மொழியைக் கலந்து பேசுதல் என்பது வேறு. இவ்விரண்டு எதிர்நிலையையும் ஒன்றாய்ப்போட்டுக் குழப்பி, பிறமொழிக் கலப்பிற்கு எதிராய்ப் பேசுவோரை 'மொழிவெறியன்', 'தமிழ்த்தீவிரவாதி' என்று பகடி பேசுகின்ற நிலையும் இன்றைய தமிழகத்தின் இயல்பான போக்காய் உள்ளது. ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிகின்றதோ, அத்தனை மனிதனுக்கு நிகரானவன் என்பது நிச்சயமான உண்மை. ஆனால், தமிழ்மொழியில் உரையாடும்போது, அந்த மொழியில் உரையாடுவதுதானே இயற்கை. கன்னடராகட்டும், தெலுங்கராகட்டும், மலையாளிகளாகட்டும், இந்தி மொழி பேசுகின்றவர்களாகட்டும் இவர்களில் எந்த இனத்தாரும் தங்கள் மொழியோடு ஆங்கிலத்தைக் கலந்து பேசுகிறார்களா அல்லது ஆங்கிலத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களா? சிந்தித்துப் பாருங்கள்! தமிழன் மட்டும் ஏன் இவ்வாறு மாறிப்போனான்? நம்மைச் சுற்றியுள்ள சூழல், ஊடகங்களின் நிலைப்பாடு, ஆட்சியாளர்களின் போக்கு. இவையே இந்த இழிநிலைக்கு முதன்மைக் காரணம்.

'மெல்லத் தமிழினிச் சாகும்!' என்று பாரதியும், 'தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ்தான் இல்லை' என்று புரட்சிக்கவிஞரும் மனம் நொந்து பாடிய நிலை இன்றைக்கும் தொடர்கிறது. அதனால் தான் வணிக நிறுவனங்கள், அங்காடிகளின் பெயர்ப்பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் அரசே வலியுறுத்துகின்ற நிலை. 'உலகமொழிகளுக்கெல்லாம் முதன்மையானது, பல்வேறு இலக்கியங்கள் எனது தாய்மொழியில் நிறைந்து கிடக்கின்றன, நான் பெருமை மிக்க தமிழினத்தில் பிறந்தவன்' என்ற இறுமாப்பும், செருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருந்திருக்குமானால் அல்லது நம்மை ஆண்ட அரசுகள் அப்படியொரு இன உணர்வுடன் தமிழர்களை ஒன்றுபடுத்தியிருக்குமானால் இப்படியெல்லாம் பேசுகின்ற, எழுதுகின்ற அவலநிலை தோன்றியிருக்குமா?

'ஆள் இறங்குது' என்று பயணிகளை பேருந்திலிருந்து, நிறுத்தங்களில் இறக்கிய நடத்துநர், இப்போது 'ஹோல்ட் ஆன்' என்று பொருள் புரியாமல் இயந்திரத்தனமாய் கூச்சலிடுவது, யாருடைய பொறுப்பற்றத்தனம்? அரசு தனது எல்லைக்குட்பட்ட அதிகாரத் தளங்களில் கூட, தமிழ்மொழியை வளர்ப்பதற்கான முயற்சியை பெருமளவு முன்னெடுக்கவில்லையே. இந்திய ஆட்சிப்பணியின் பொருட்டு கர்நாடகத்தில் பணி செய்ய வரும் பிற மொழி பேசுவோர், அடுத்த ஆறு மாதங்களுக்குள் கன்னடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அந்த மாநில அரசு சட்டமியற்றியுள்ளது. மொழிக்குக் கேடென்றால், ஒட்டு மொத்த கர்நாடகமும் பொங்கி எழுகிறது. ஆனால் தமிழகத்தில், தமிழுக்கு கேடு நேரிடுகிறதே என்று எவரேனும் குரலுயர்த்தினால், அவர் தேச இறையாண்மைக்கு எதிராய்ப் பேசினார் என்று சிறையிலடைக்கும் நிலையே உள்ளது. மராட்டியத்திலும், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில், தங்களின் பேருந்துகளுக்குக் கூட அந்தந்த மாநில மொழிக்குரிய எண்ணையே பயன்படுத்த வேண்டும் என்று அதன் அரசுகள், சட்டமியற்றி மொழியுணர்வுடன் செயல் புரிகின்றன. சிலவேளைகளில் மருந்து கசக்கும் என்றாலும் குழந்தையின் நலன் தானே முக்கியம். அப்படியொரு சிந்தனை தமிழக அரசுக்கு மட்டும் இல்லாமல் போனதேன்?

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி, மதுரையிலுள்ள வழக்குரைஞர்கள் ஆறு பேர் பன்னிரெண்டு நாட்களுக்கும் மேலாக உண்ணாநோன்பிருந்தனர். கோரிக்கையிலுள்ள நியாயத்தைக் கூட, உணர மறுத்த தமிழக அரசு, ஒரு நள்ளிரவில் வழக்குரைஞர்கள் அனைவரையும் குற்றவாளிகளைப் போன்று கைது செய்தது. பல ஆண்டுகளாக தமிழக வழக்குரைஞர்களால் எழுப்பப்பட்டு வரும் இக்கோரிக்கை இந்திய ஒன்றிய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தை ஆண்ட கட்சிகள் இதற்கொரு நிலையான தீர்வைக் காண முனைப்புக் காட்டவில்லை. அதுமட்டுமல்ல, தமிழ்மொழி கொஞ்சம் கூடத் தெரியாமல் முனைவர் பட்டம் வரை தனது படிப்பை மேற்கொள்ளும் மோசமான கல்வி முறை, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இருக்கிறது. இந்நிலையை மாற்றுவதற்குரிய முயற்சியை அண்மையில்தான் தமிழக அரசு தொடங்கியிருக்கிறது.

மொழி மற்றும் இன உணர்வை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இப்போதும் கல்வியில் தமிழ் புறக்கணிக்கப்படும் நிலையுள்ளதை யார்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டிலுள்ள கோவில்களில் 'இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்' என்ற நிலைக்குத்தான் உயர்ந்துள்ளதே தவிர, வழிபாட்டிலும் தமிழுக்குரிய இடம் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. நீதிமன்றம், கல்விக்கூடம், கோவில்களில் தமிழ் மொழியின் நிலை தாழ்ந்த நிலையில் இருக்கும்போதுதான் தமிழக அரசு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, உலகத் தரம் வாய்ந்த நூலகம் என்ற ஒரு சில தீர்மானங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும்படியாக செம்மொழி மாநாடு பெரிதும் கவனம் பெறவில்லை. மானிய விலையில் சோறு என்பதைத்தான் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு மார்தட்டி, பீற்றிக் கொண்டது. மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரத்தில் பாலம் அமைக்கவும், தமிழின் வளர்ச்சிக்காகவும் தலா ரூ.100 கோடியை ஒதுக்கி தமிழக முதல்வர், பாலம் கட்டுவதையும், தமிழ்மொழி வளர்ச்சியையும் ஒரே அளவுகோலில் நிறுத்திப் பார்த்திருக்கிறார். செம்மொழி தமிழுக்குப் புகழ் மகுடம் ஏற்றியாயிற்று; உலகத் தமிழறிஞர்களெல்லாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளும் வழங்கியாயிற்று; மாநாடும் பல்வேறு விதமான ஆரவாரங்களோடு முடிந்தாயிற்று.

வழக்கம்போல் 'மைனாரிட்டி', 'மெஜாரிட்டி', 'அத்தாரிட்டி' என்று தமிழக முதல்வரின் அறிக்கை வாயிலாகவும், 'சஸ்பெண்ட்', 'பார்லிமெண்ட்', 'அசெம்பிளி' என்று தமிழ் ஏடுகளும், 'வியூவர்ஸ்', 'ஐ லைக்', 'தேங்க்யூ' 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' என்று மின்னணு ஊடகங்களும், 'மேரேஜ்', 'காலேஜ்', 'டீன் ஏஜ்', 'ஆண்ட்டி', 'அங்கிள்', 'டாட்டர்', 'சன்', 'பிரதர்', 'சிஸ்டர்' என்று பொதுத்தளத்திலும் தமிழ்மொழி மேலும், மேலும் 'வளரத்' தொடங்கியிருக்கிறது. 'என் தாய்மொழி நாளை அழிந்துவிடும் என்றால் இன்றைக்கே நான் செத்துப்போவேன்' 'ஆவார்' என்ற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கவிஞர் ரசூல் கம்சத்தேவ் சொன்ன வரலாற்றுச் சிறப்பு மிக்க வரிகள் இவை. தமிழைக் காப்பாற்றும் வழியிருக்கிறது; வகையிருக்கிறது; பலமிருக்கிறது. ஆனால், தாய்த் தமிழக மக்களுக்கோ இப்போதும் மனமில்லை. ஆகையால், தமிழர்களே... வாருங்கள்! நாம் ஒவ்வொருவரும் இன்றிலிருந்து சாகத் தொடங்குவோம்!

- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It