1987 செப்டெம்பர் 15ஆம் நாள் இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சொட்டு நீரும் அருந்தாமல் பட்டினிப் போராட்டம் தொடங்கிய நாள்.
அந்த ஐந்து கோரிக்கைகள்:
- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
- புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு எனப்படும் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
- இந்திய அமைதிப்படையிப்ன் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பெற்ற ஆய்தங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள இராணுவக் காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
- இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் முன்னெடுத்த அறப்போர் தொடங்கிய நாளில் அந்த ஈகச் சுடரை நினைவிலேந்துவோம்!
- மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்! என்ற அறைகூவலை மெய்ப்படச் செய்யச் சூளுரைப்போம்!
திலீபன் இப்போதும் பசியோடுதான் இருக்கிறான்!
திலீபனிற்குத்
தீபம் ஏற்றுவோரே
பார்த்திபனின்
பாதம் தொழுவோரே
ஈகச் சிகரத்திற்கு
மாலை தொடுப்போரே
அதிசய வள்ளலுக்காய்
கசிகின்ற நெஞ்சோரே
மனதிலேற்றுங்கள்
எங்கள் பார்த்திபன்
இப்போதும்
பசியோடுதான் இருக்கிறான்
சிறுகச் சிறுகச் சேர்த்து
நிமிரக் கட்டிய மனையும்
உயிரைப் பிரியும் பொழுதில்
தந்தை
உயிலாய்த் தந்த வளவும்
இன்பம்
பெருகப் பெருக நாங்கள்
ஓடித்திரிந்த தெருவும்
உள்ளம்
உருக உருகக் கண்ணீர்
விட்டுப்பிரிந்த ஊரும்
திரும்பக் கிடைக்கும்
காலம் வரைக்கும்
எங்கள்
பார்த்திபன்
பசியோடுதான் இருப்பான்.
நாளும் பொழுதும்
கண்ணைக் கரைத்து
நாளை வருவார்
நாளை வருவார்
என்றே தங்கள்
இதயம் வதைத்து
கொலைஞர் பிடித்த
உறவை நினைத்துக்
கதறும் மனங்கள்
இருக்கும் வரைக்கும்
எங்கள்
பார்த்திபன்
பசியோடுதான் இருப்பான்.
சதியும் வெறியும்
ஒன்றாய்க் கலந்து
கருணை கனிமை
எதுவும் மறந்து
எங்கோ பிறந்து
மனிதம் துறந்து
எங்கள் மண்ணில்
மரணம் விதைத்து
துயரச் சுமையுள்
எம்மைத் திணிக்கும்
கொடுமைப் படைகள்
எரியும் வரைக்கும்
எங்கள்
பார்த்திபன்
பசியோடுதான் இருப்பான்.
உயிரை உடலை
உறவைத் துறந்து
உணர்வு முழுதும்
தமிழைக் கலந்து
விடியும் காலைக்
கதிராய் விரிந்து
தமிழர் தேசக்
கனவை வரித்து
மண்ணின் மானம்
பெரிதாய் மதித்து
மண்ணுள் உறங்கும்
மாந்தர் கேட்கும்
விடுதலை வந்து
சேரும் வரைக்கும்
எங்கள்
பார்த்திபன்
பசியோடுதான் இருப்பான்.
ஆகவே
பசித்த வயிற்றோடு
பாடையேறிய
எங்கள்
பார்த்திபன் கனவுகள்
மேடையேறி முழங்கவல்ல
தீபமேற்றி வணங்கவல்ல
களத்திலேறிப் பகைமுடிக்க
நெருப்பிலேறிக்
கொடிபிடிக்க
தீர்வெடுங்கள்
திலீபனிற்குத் தேவையான
உணவை
உங்களால்தான்
சமைக்க முடியும்.
- ஆபேல்