சமூக மாற்ற இலட்சியம் கொண்ட ஒவ்வொருவரும் உள்ளவாங்க வேண்டிய சிந்தனைகளை இந்நூல் அலசுகிறது. தற்போது ‘21-ம் நூற்றாண்டில் சோசலிசம்’ என்று பேசுபவர்கள், மூன்று வகையினர்.

(1) சோவியத் பின்னைடைவை மனதில் கொண்டு லெனினியம் வரையறுத்துள்ள அரசு, கட்சி பற்றிய நிர்ணயிப்புக்களையும் கோட்பாடுகளையும் உதறித்தள்ளிவிட்டு, முதலாளித்துவத்திற்கு மாற்றான ஒரு சமூகத்தை அமைக்க விரும்புவோர். இது, ‘சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவம்’ அல்லது ‘‘மனிதநேய முதலாளித்துவத்தை’’ ஆதரிப்பதில் சென்று சரணாகதி அடைகிறது.

(2) உலகில் உள்ள அரசுகளின் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்கள், வேகமான மூலதன திரட்சி, சோசலிசத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள், தவறுகள் ஆகியன அனைத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு புதியவற்றை மட்டையடியாக மறுத்திடும் சோசலிசவாதிகள். இது, சோசலிச இயக்கங்கள் மக்களிடம் தனிமைப்பட்டு பலவீனப்படும் நிலையை உருவாக்குகிறது.

(3) முதலாளித்துவ அரசு அதிகாரத்தில் ஏற்பட்டுள்ள புதிய பலத்தை உணர்ந்து, தெரு, தேசம், உலகம் ஆகிய அனைத்து மட்டங்களிலும் உயிர்த்துடிப்பு மிக்க மக்கள் இயக்கங்களை பன்முக உத்திகள் மூலம் உருவாக்குவது; இதற்கு வழிகாட்டுகிற, மார்க்சிய-லெனினியத்தில் தேர்ந்த, ஒரு புரட்சிகர கட்சியை வளர்ப்பது; காலம் காலமாக குறுகிய தளத்தில் மட்டும் செயல்படுகிற நிலையை மாற்றி விரிவாக்கம் காண்பதற்கான படைப்பாற்றல் மிக்க முன்முயற்சிகளை இடைவிடாது மேற்கொள்வது; இத்தகையோர், மார்க்சிய லெனினிய கோட்பாடுகளை கைவிடமாட்டார்கள். மார்க்சியத்தை தொடர்ந்து மறுவாசிப்புக்கு உள்ளாக்குவார்கள்.

(1), (2) வகையினர், கம்யூனிச இலட்சியங்களை முன்னெடுத்துச்செல்ல பயன்படமாட்டார்கள். (3) வகையினரே, இன்றைய காலத்தின் தேவை. இந்த வகையிலான சமூக மாற்றப் போராளிகளின் தலைமுறை ஒன்றை உருவாக்க இந்நூலும், நூலாசிரியரின் இதர நூல்களும் பயன்படும். புதிய சிந்தனை வேண்டும் என்றால் என்ன? அனைத்தையும் இயக்கத்தில் காண்பதுதான். மாற்றம் நிகழும் நிகழ்ச்சிப்போக்கை அறிந்து, நடைமுறையை தீர்மானிப்பதுதான். ஏங்கெல்ஸே புதிய சிந்தனைக்கு ஆதரவு நல்கியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில், ‘‘சோசலிச சமுதாயம் என்று அழைக்கப்டும் சமூகமும் மாறாதது அல்ல. இதர சமூக அமைப்புக்கள் போன்றே அதுவும் இயக்கத்தில் உள்ளது; மாற்றத்திற்கு உட்பட்டது’’ என்று எழுதினார். தனது இறுதி நாட்களில் மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் பயன்படுத்தும் போக்கு குறித்து ஏங்கெல்ஸ் கவலை கொண்டிருந்தார்.

அன்றைய சோவியத் யூனியனில் நிகழ்ந்த நவம்பர் புரட்சிக்குப் பிறகு உலகில் ஏராளமான மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. “இன்று மூலதனம் உலகின் தொலைதூரப் பகுதிகளுக்கெல்லாம் செல்கிறது; ...ஏக காலத்தில் உலகளாவிய அளவில்... செயல்படும ஆற்றலுடையதாக இருக்கின்றது...நிதி உலகில்... பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்கள் சில நொடிகளில் இடம் மாறும்’’ என்றவாறு புதிய நிலைமைகளை ஆசிரியர் விளக்குகிறார்.

இந்திய சூழலில் மக்கள் வாழ்வாதார அடித்தளமும் ஆட்டம் கண்டு வருகின்றது. ‘‘இன்று உலகமயமாக்கப் பட்டுக் கொண்டிருப்பது முதலாளித்துவச் சுரண்டல் அன்றி வேறில்லை என்பதை மறந்துவிடக்கூடாது’’ என்று குறிப்பிட்டு சுரண்டலும் தீவிரமான வடிவமெடுத் திருப்பதை விளக்குகிறார் ஆசிரியர்.

இந்நிலையில் உலக இடதுசாரி இயக்கங்கள் எத்தகு அμகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும்? இதில்தான் பல வித கருத்தோட்டங்கள் அறிவுத்தளத்தில் மோதி வருகின்றன.

சர்வதேசம், தேசம், உள்ளூர்மட்டம் :

ஒவ்வொரு நாட்டின் தலைமைபீடமாகச் செயல்படுவது அரசு இயந்திரம். சமீப ஆண்டுகளில், புதிய தாரளமயச் சூழலில் அரசுகளின் தன்மையில் பெருத்த மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை உள்வாங்குவது முதன்மையான கடமை.

அரசு அதிகாரம் எவ்வாறு மாறி வருகிறது என்பது முக்கியமான பிரச்சனை. உலகமயமாக்கல் சூழலில், உலகப்பன்னாட்டு மூலதனத்தின் அசுர வளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒவ்வொரு நாட்டின் தேசிய அரசு அதிகாரம் மங்கி விடுகின்றதா? தேசிய அரசுகள் பலவீனமடைந்து விட்டதா? உலக மூலதன சக்திகளின் அதிகாரம் மட்டுமே இன்று நிலைப்பெற்று விட்டதா? அப்படியானால் முதலாளித் துவத்தை வீழ்த்தும் போராட்டம், தேச எல்லைகளைத் தாண்டி, உலகந்தழுவிய இயக்கங்களால்தான் நடத்திட முடியுமா? தேசத்திற்குள் நடத்தப்படும் மக்கள் இயக்கங் களின் தாக்கம் என்ன?

இவற்றை விவாதிப்போர், இரு முகாம்களாக பிரிந்து விடுகின்றனர். ‘தேச எல்லைக்குட்பட்ட இயக்கங்கள் காலாவதியாகிவிட்டன. இனி சர்வதேச மட்டத்திலான இயக்கங்களே தேவை’ என்று கூறி, அதற்கு சான்றாக, சியாட்டில் போன்ற இடங்களில் நடைபெற்ற உலகமயமாக்கல் எதிர்ப்பு இயக்கங்களை பிரித்துக்காட்டு கின்றனர். மற்றொரு பிரிவினர், சர்வதேச அளவிலான முயற்சிகளை அலட்சியப்படுத்திவிட்டு, தேச அளவிலான இயக்கங்களுக்கே முன்னுரிமை என கருதுகின்றனர்.

நூலாசிரியர் இப்பிரச்சனையில் பொருத்தமான ஒரு முடிவுக்கு வருகின்றார். தேசிய அரசுகளின் முக்கியத்துவமும் அவற்றின் அதிகாரச் செல்வாக்கும் நீடிக்கின்றன. அதே நேரத்தில் இன்றைய உலகச்சூழலில் அவை அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

ஏழு நாடுகள் உள்ளடங்கிய குழு புதிய தாராளமயத்தை உலகம் முழுவதும் திணிப்பதில் அதிகாரமட்டத்திலுள்ள அவர்களது செல்வாக்கு வெளிப்படுகிறது. இதையட்டி பல ஏழை நாடுகள் இதனை எதிர்க்க முடியாமல் பலவீனமடைந்துள்ளதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் தேசந்தழுவிய மக்கள் போராட்டமும், அத்துடன் இணைந்த சர்வதேச அளவிலான போராட்டங்களும் இந்த ஏகாதிபத்திய உலகமயமாக்கலை தடுத்து நிறுத்த முனைகின்றன. எனவே, தேசமா? சர்வதேசமா? என்பதற்கு பதில் இரண்டு தளத்தில் இணைந்து நடக்கும் போராட்டங்களே இன்றைய காலத்தின் தேவை. நூல் முழுவதும் இந்த அμகுமுறை யோடு பிரச்சனைகளை அலசியுள்ளார் ஆசிரியர்.

தேசம், சர்வதேசம் என்பது மட்டுமல்லாது, இவற்றோடு இணைய வேண்டிய மற்றொரு முக்கியமான தளம் ஒன்று உள்ளது. அதுதான், உள்ளூர் மட்டம் சார்ந்து மக்களைத் திரட்டும் முயற்சிகள். நூலில் இத்தகு முயற்சிகள் வெகுவாக முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகின்றன.

எடுக்கப்பட்ட ஒவ்வொரு சமூகக்குழுவும் தங்களது பிரச்சனைக்களுக்காகப் போராடுகின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் அரசின் மீதான அதிருப்திகள் எழுகின்றன. குடியிருப்பு, தொழிற்சாலை, கல்விக்கூடங்கள் என அவரவர் சார்ந்த தளங்களில் வாழ்வாதார உரிமைகளுக் கான போராட்டங்கள் எழுகின்றன. ஒரு புரட்சிகர கட்சியின் கிளை அமைப்பு இத்தகு பல்வேறு குழுக்களை ஒருங்கிணைக்கும் சங்கமம் ஆக செயல்பட வேண்டும். இந்த கருத்தாக்கம் இலத்தீன் அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள இடதுசாரிகளுக்கும் பொருந்தும். போராடுகிற சமூக குழுக்களிடம் மார்க்சிய தத்துவக் கல்வி அளிக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்துவது அவசியம் என ஆசிரியர் வலியுறுத்துகிறார். அன்றாட உரையாடல்களும், ஜனநாயக உணர்வோடு அமையும் விவாதங்களும் தேவை என ஆசிரியர் கூறுகிறார்.

தகுந்த வாய்ப்பு கிட்டும் போது உள்ளாட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் பல நாடுகளின் உள்ளாட்சி அரசுகளின் அனுபவங்களை விளக்கி, இந்த முயற்சியில் விளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவிலும் இடதுசாரி கட்சிகள் உள்ளாட்சி மன்றங்களில் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிரியரின் கருத்துக்கள் ஆழமாக உள்வாங்க வேண்டியன. உள்ளாட்சி மன்றச் செயல்பாட்டின் மூலம் மக்களை இடதுசாரி அரசியல் சிந்தனைக்கு பககுவப்படுத்தும் கலையில் தேர்ச்சி பெற வேண்டியுள்ளது. இதையட்டிய சிந்தனையைத் தூண்ட இந்நூல் பயன்படும்.

தேர்தல்களும் இடதுசாரி மேலாண்மையும் :

இதே போன்றே, தேர்தல்களில் இடதுசாரிகள் பங்கேற்கும் நடைமுறை பற்றியும் ஆசிரியர் அலசுகிறார். தேர்தல் பிரச்சாரமும் தேர்தல் செயல்பாடுகளும் ‘‘அடிப்படையில் (மக்களுக்கு) கற்பிக்கும், அறிவூட்டும் கண்ணோட்டத்துடன்’’ செயல்பட வேண்டு மென்பதையும், ‘‘மக்களின் உணர்வையும் மக்கள் இயக்கத்தையும் பலப்படுத்துவதற்கு’’ தேர்தல் பணிகளை பயன்படுத்தவும் வலியுறுத்துகிறார். இவ்வாறு செய்தால், ‘‘தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்காது போனாலும், பிரச்சாரத்திற்கு செலவழிக்கப்பட்ட நேரமும், முயற்சியும் வீணாகிப்போகாது’’ என்கிறார் அவர்.

பெரும்பான்மையான மக்கள் முதலாளித்துவக் கட்சிகளின் செலவாக்கில் உள்ளபோது, அவர்களை வர்க்க உணர்வு பெற்றவர்களாக முற்போக்கு சிந்தனைக்குக் கொண்டு வருவது எப்படி? அவர்கள் இருக்கும் அமைப்புக்களோடு இடதுசாரி அமைப்புகள் எப்படி  உறவு கொள்ள வேண்டும்? இது போன்ற பிரச்சனைகள் இலததீன் அமெரிக்காவில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் இடதுசாரிகள் எதிர் கொள்ளும் முக்கியப் பிரச்சனைகள்.

கருத்தியல் தளத்தில் மேலாண்மை பெற இடதுசாரிகள் முயற்சிக்க வேண்டும் என்பதையும், கருத்தியல் தளம் அல்லாத வழிகளில் மேலாதிக்கம் செலுத்த விழையும்போது ஏற்படும் மோசமான விளைவுகளையும் அவர் விளக்குகிறார். இதர கட்சிகள், அமைப்புக்களோடு பிரச்சனைகள் அடிப்படையில் கூட்டு சேரும்போது, தங்களது சித்தாந்தங்களை இதர புதிய மக்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்புக்கள் அறியப்பட்டு, அவற்றை இடதுசாரிகள் பயன்படுத்த வேண்டும்.

சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து இடதுசாரிகளின் அμகுமுறை எப்படி இருக்க வேண்டுமென்று ஆசிரியர் மார்த்தா விளக்குகிறரர். ‘சீர்திருத்தத்தை புறக்கணிக்கக் கூடாது; அதே நேரத்தில் புரட்சியையும் புறக்கணிக்கக்கூடாது’ என்ற ரோசா லக்சம்பர்க் சிந்தனை சார்ந்து மார்த்தாவின் விளக்கம் சரியாகவே அமைந்துள்ளது.

ஆனால், சீர்திருத்தம் பேசியவர்கள் முதலாளித்துவத்திடம் சரணாகதி அடைவது, இடதுசாரிகள் கோரிய சீர்திருத்த நடவடிக்கைகள் ஆளும் முதலாளித்துவ வர்க்கங்கள் தங்களது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள உதவுகிற நிகழ்வுகளாக மாறுவது போன்றவை பற்றி ஆழமாக விவாதிக்கப் படவில்லை.

இவை கடந்த காலத்தில் நிகழ்ந்ததால் ‘சோசலிசம்’ என்ற கருத்தையே தவிர்த்து, ‘‘கம்யூனிசம்’’ ‘‘கம்யூனிஸ்ட் நோக்கு’’ (நீஷீனீனீuஸீவீst லீஹ்ஜீஷீtலீமீsவீs) என்ற கருத்தாக்கப் பதங்களை ஆலென் பதேயூ, ஸ்லாவாஜ் சிசேக் போன்ற மார்க்சிய சிந்தனையாளர்கள் பயன்படுத்துகின்றனர். சிசேக், ஒருபடி மேலேசென்று, இவ்வளவு நெருக்கடிக்குப் பிறகும் முதலாளித்துவத்தை பாதுகாப்பது சோசலிசம்தான் என்று வாதிடுகிறார். எனவே, ‘சீர்திருத்தம்’ ‘மக்கள் நல அரசு’ ‘நலத்திட்டங்கள்’ என்பவை குறித்த அμகுமுறையில் எச்சரிக்கை தேவைப்படுகிறது.

ஆசிரியர் மார்த்தா கையாளும் சில பிரச்சனைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், நூலில் அவர் விளக்கும் கருத்துக்கள் விரிந்த பரப்பு கொண்டவை. இவற்றை வாசிப்பது அவசியம். அத்துடன், விவாதிப்பதும் அவசியமே. ஆனால் இத்துடன் நின்றுவிட்டால், எவ்வித பலனும் ஏற்படாது. நடைமுறையில் இவற்றை உரசிப்பார்க்க வேண்டும். மக்களைத் திரட்டும் பணியே, சிறந்த ஆசான்.

இடதுசாரிகளுக்குள் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வது, புதிய பார்வைகளுக்கும் புதிய நடைமுறைகளுக்கும் வழிவகுக்கும். ஆனால் அது மார்க்சியமும், லெனினியமும் வரையறுத்த தடத்தில் இருந்தால்தான், பலன் கிட்டும். அத்தகு கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்திட வழிகாட்டும் சிறந்த கையேடு இது. இந்தக் கருத்துப்பரிமாற்றத்திற்கான வரையறை, முக்கிய கருப்பொருள்கள் அனைத்தும் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் இந்நூலைப் படித்த போது, புதிய சிந்தனையை உள்வாங்கிய மலர்ச்சி ஏற்பட்டது. அதே வகையான உணர்வு, அசோகன் முத்துசாமியின் மொழிபெயர்ப்பை வாசிக்கும்போதும் ஏற்படுகிறது. அனைத்து இடதுசாரி போராளிகளும் தங்களது பாதையை செப்பனிட இந்நூல் துணைபுரியும். 

இடதுசாரிகளும் புதிய உலகமும்

மார்த்தா ஹர்னேக்கர்

தமிழில்: அசோகன் முத்துசாமி

பக்:200 | ரூ.110

Pin It