தஞ்சை ஜில்லாவின் இரண்டாவது சுயமரியாதை மகாநாடு, சென்ற 18, 19-6-32 சனி, ஞாயிறுகளில் மன்னார்குடியில் நடைபெற்றது. அம்மகா நாட்டு டன் தொண்டர் மகாநாடும் நடைபெற்றது. தஞ்சை ஜில்லாவின் முதலாவது மகாநாடு சென்ற ஆண்டில் தரங்கம்பாடியில் நடைபெற்றபின் சென்ற ஆண்டி லேயே நன்னிலம் தாலூக்கா மகாநாடு நன்னிலத்திலும் நாகப்பட்டிணம் தாலூக்கா மகாநாடு நாகப்பட்டிணத்திலும், சென்னை மாகாணச் சுய மரியாதைத் தொண்டர் மகாநாடு திருவாரூரிலும் நடை பெற்றன. இன்னும் பல பொதுக்கூட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு தஞ்சை ஜில்லா வில் பல சுயமரியாதை மகாநாடுகளும், அடிக்கடி பல ஊர்களில் பல பொதுக் கூட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கிணற்றுத் தவளைகளாக இருந்து கொண்டிருக்கும் நமது வைதீக எதிரிகளில் பலர் தஞ்சை ஜில்லாவில் சுயமரியாதை இயக்கம் ஆதரவற்று மாண்டு போய் விட்டதென்று கனவு கண்டு கொண்டும், அக்கனவை உண்மையென்று அறியாமையால் நம்பிப் புரளி பண்ணிக் கொண்டும் இருந்தனர். இத்தகைய அறிவற்றோர்க்கு மன்னார்குடி மகாநாடு நல்ல புத்தி கற்பித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

periyar and gt naiduதஞ்சை ஜில்லாவில் சிறந்த வைதீகக் கோட்டையாக இருப்பது மன்னார்குடியேயாகும். அனேகமாக நமது மாகாணத்திலேயே மன்னார் குடியைப் போல பார்ப்பனர்கள் நிறைந்த இடமும் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லலாம். இதுவும் அல்லாமல் தற்சமயம் காங்கிரஸ் பெயரால் ஏதாவது கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றவர்கள் சிலராவது இருக்கின்றார்கள் என்று சொல்லக்கூடிய இடம் தஞ்சாவூர் ஜில்லாவில் ஒன்று இருக் கின்றது என்று யாரேனும் சொல்லுவார்களேயானால் அது மன்னார்குடியே யாகும். ‘தஞ்சாவூர் ஜில்லாவில் காங்கிரஸ் கிளர்ச்சி பலமாக இருக்கின்றது’ என்று சொல்லப்பட்டு வந்த காலத்தில் அவ்வாறு சொல்லுவதற்குக் காரணமாக இருந்தது மன்னார்குடியே யாகும். இத்தகைய வைதீகமும், பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் நிறைந்த ஒரு ஊரில் நமது மகாநாடு நடைபெறுவ தென்றால் அது ஒன்றே நமது இயக்கம் எவ்வாறு பரவி வருகிறது என்பதற்குத் தகுந்த உதாரணமாகும். மன்னார்குடியில் நமது மகாநாடு நடைபெற்றதைக் கொண்டு இனி எந்த வைதீகமானாலும் சரி, வேதங்களானாலும் சரி, குருமார்களானாலும் சரி, மதஸ்தர்களானாலும் சரி, இயக்கங்களானாலும் சரி, பிரசாரங்களானாலும் சரி, நமது இயக்கத்தை ஒழித்து விட முடியாது. இவ் வியக்கத்தின் தத்துவமாகிய சமதர்ம வெள்ளம், மதங்கள், புரோகிதம், சாதிகள், சாத்திரங்கள், உயர்வு தாழ்வுகள், சுய நலங்கள், மூட நம்பிக்கைகள், குருட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகிய அணைகளையெல்லாம் அடியோடு பெயர்த்துக் கொண்டு எல்லா மக்களையும் இழுத்துக் கொண்டு பகுத்தறிவுச் சுதந்தர கடலில் போய்ச் சேருவதில் எள்ளளவும் ஐயமில்லையென்று அறியலாம்.

மன்னார்குடி மகாநாடு மற்றொரு வகையில் குறிப்பிடத் தகுந்த ஒரு பெருமையுடைய மகாநாடாக விளங்கினது போற்றத் தக்கதாகும். இதுவரை யிலும் நடைபெற்ற மகாநாடுகளிலெல்லாம் பெண்கள் மகாநாட்டைத் தவிர சுயமரியாதை மகாநாடுகளில் ஆண்களே தலைமை வகித்து வந்தார்கள். ஆனால் மன்னார்குடி மகாநாட்டிலோ, நமது இயக்கத்தின் உண்மைத் தோழர் களில் ஒருவராகிய திருமதி. குஞ்சிதம் அவர்கள் பி. ஏ., எல். டி., தலைமை வகித்தது நமது இயக்கம் எவ்வாறு பெண்களின் சமத்துவத்திற்கு உண்மை யோடு உழைத்து வருகிறது என்பதைக் காட்டுவதற்கு ஒரு உதாரணமாகும்.

மன்னார்குடி மகாநாட்டில் பலதிறப்பட்ட அரசியல் அபிப்பிராய முடையவர்களும் பலதுறையிலிருந்து கொண்டு சமூகச் சீர்திருத்தம் புரிந்து வருபவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தகுந்த மற்றொரு விசேஷமாகும். இதனால் வேறு வேறு துறையிலிருப்பவர்களும் கூட சுயமரியாதை இயக்கத்தின் தத்துவங்களை மறுக்க முடியாதவர்களாக அதன் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும்படியான நிலைமை நமது இயக்கம் உண்டாக்கி விட்டதென்ற உண்மையை யார் மறுக்க முடியும்?

நமது இயக்கத்தின் உண்மைத் தத்துவங்களை தெரிந்து கொள்ள முடியாத அறிவற்றவர்களும், நமது இயக்கக் கொள்கைகள் எங்கும் பரவி விடுமானால் தங்களின் தனிமதிப்புக்கும் சுயநலத்திற்கும் இடமில்லாமல் போய்விடுமே என்ற பயமும் சுயநலமும் உடையவர்களும் ‘காந்தி’ ‘காங் கிரஸ்’ ‘சுயராஜ்யம்’ என்ற பெயர்களைச் சொல்லி தலைவர் பட்டமும் தேசாபிமானப் பட்டமும் பதவிகளும் அடைய விரும்பும் போலிகளும், தற்சமயம் நமது இயக்கத்தைப் பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள்; இக்கூட்டத்தார்கள் தாம், நம்மை ‘தேசத்துரோகிகள்’ என்றும், ‘நாஸ்திகர்கள்’ என்றும் வகுப்புத் துவேஷிகள்’ என்றும் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் கூற்று சுயநலமுடையதும் யோக்கியப்பொருப்பு இல்லாததும் ஆனது என்பதை மகாநாட்டின் தலைவர் திருமதி. குஞ்சிதம் அவர்கள் தமது முன்னுரையில்

“காங்கிரஸ்காரர்கள் அடிக்கடி ‘அன்னிய ஆட்சி’ என்றும், ‘அன்னியத் துணி’ என்றும் ‘அன்னிய பாஷை’ என்றும் சொல்லி நமது மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆங்கிலேயர்கள் அன்னியர்கள் என்றால் பார்ப்பனர்கள் (ஆரியர்கள்) யார்? என்று கேட்கிறேன். ‘இங்கிலீஷ்’ அன்னிய பாஷை என்றால் சமஸ்கிருதம் எந்தப் பாட்டன் வீட்டுப் பாஷை? என்று கேட்கிறேன். ஆகையால் அவர்கள் சொல்லுகிறபடி பார்த்தாலும், 400 வருஷத்திற்கு முந்தி வந்த அன்னிய பாஷையை ஒழிப்பதற்கு முன் 2000 வருஷங்களுக்கு முந்தி வந்த “அன்னியராகிய பார்ப்பனர்களின் ஆட்சியை ஒழிக்க வேண்டியது இன்னும் அவசிய மல்லவா? அது போலவே 400 வருஷத்திற்கு முந்தி வந்த அன்னிய பாஷையை ஒழிப்பதற்கு முன் 2000 வருஷமாக நமது சமூகத்தில் ‘பராசரஸ்மிருதி’ ‘மநுதர்மம்’ முதலிய கொடூரச் சட்டங்களைச் செய்த அன்னிய பாஷையாகிய ‘சமஸ்கிருத பாஷை’யை அடியோடு அழிக்க வேண்டாமா? என்று கேட்கிறேன். ஆகையால் இந்த பசுப்பு வார்த்தை களிலெல்லாம் மயங்கிவிடாமல் நிதானப் புத்தியோடு ஆவேசங் கொள்ளாமல்; எந்தக்காரியத்தையும் யோசித்துச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருப்பதிலிருந்து அறியலாம்.

மன்னார்குடியில் நமது மகாநாட்டை நடத்தவொட்டாமல் செய்ய வைதீகர்களும், அவர்களுக்கு ஆதரவாயுள்ள பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் எவ்வளவோ முயற்சி செய்தும் பலிக்காமல் மகாநாடு மிகவும் வெற்றியோடு முடிவு பெற்றது பாராட்டத்தக்கதாகும். பெரிய மனிதர்களின் ஆதரவின்மையையும், வைதீகர்களின் விஷமப் பிரசாரத்தையும், அதிகாரிகளின் அக்கிரமங்களையும் சிறிதும் பொருட்படுத்தாமல் மகாநாட்டை வெற்றியுடன் நடத்துவதற்குக் காரணமாக இருந்தவர்கள் மன்னார்குடியிலுள்ள நமது இயக்க வாலிப வீரர்களே என்பது குறிப்பிடத்தகுந்ததாகும். ஆகவே எத்தகைய கஷ்ட நஷ்டங்களையும் லட்சியம் பண்ணாமல் மகா நாட்டை வெற்றியோடு நடத்திய நிர்வாகிகளையும் மகாநாட்டின் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டவர்களையும் பாராட்டுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 26.06.1932)