periyar and sivaji 2இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந் திரமோ பெருவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே லக்ஷியமுடையவர் என்கின்ற நிலையை அடைய வேண்டியது மிகவும் முக்கியமானது என்ப தைப் பற்றி நாம் யாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றோம்.

இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தாரென்றும், ஒரே லக்ஷியமுடையவர்கள் என்றுமான பிறகுதான் அவர்கள் முன்னேறவும் விடுதலைப் பெற்று சுதந்திரமடையவும் முடிந்தது என்பதையறியலாம்.

ஆனால் நமது இந்தியாவைப் பற்றி பேசப் புறப்படுவோமேயானால் இது ஒரே சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே லக்ஷியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில் இந்தியாவானது பல மதங்களாய் பல ஜாதிகளாய் பிரிந்திருப்பதோடு பல உள்வகுப்புகளாகவும் பிரிந்திருப்பதல்லாமல் பாஷைகளிலும், உடை களிலும், நடை பாவனைகளிலும் பல பல மாறுதல்களைக் கொண்டிருக்கின்றது.

சாதாரணமாக மதம் என்பதைப் பொறுத்த வரையிலாவது அவை தனித் தனி மனிதனுடைய நம்பிக்கையையும் மன உணர்ச்சியையும் சேர்ந்தது என்பதாக ஒரு சமாதானம் சொல்லிக் கொள்ளலாம்.

ஆனாலும் பாஷைகளும் ஜாதிப் பிரிவுகளும் மக்கள் ஒருவருக்கொருவர் அன்னி யோன்னியம் பெற முடியாதபடி உயர்வு தாழ்வு கொடுமைகளுடன் எதற்காக இருக்க வேண்டும் என்பவற்றிற்கு என்ன சமாதானம் சொல்ல முடியும்.

பல பாஷைகள் மூலமும் மக்கள் பிரிவு படும்படியான பாஷை வேறுபாடு கள் ஏன் என்பதற்கும் இதுவரை யாரும் சமாதானம் சொல்லாததோடு ஒவ்வொரு ஜாதியாரும் தன் ஜாதி பெரிது, தன் ஜாதி பெரிது என்று சண்டையிடுவதும், ஒவ்வொரு பாஷையாரும் தன் பாஷை பெரிது, தன் பாஷை பெரிது என்று வாதிடுவாருமாக இருந்து கொண்டு அவைகளுக்கு பிரதானம் தேடும் முறையில் வேற்றுமையையும் துவேஷத்தையும் வளர்த்திக் கொண்டு இருக்க வேண்டியுமிருக்கின்றன.

இத்தியாதி வித்தியாசங்கள் எந்தக் காலத்திற்குத் தொலைவது? மக்கள் எந்த காலம் ஒன்றுபட்டு ஒரு சமூகமாகி ஒரு லக்ஷியம் கொள்ளுவது? என்பவைகளை நினைத்தால் மனம் ஒடிய வேண்டியிருக்கின்றதே தவிர நம்பிக்கைக்கு இடமில்லை என்றாலும் மக்கள் ஒன்றுபட்ட சாயலை அடைந்து பார்வையிலாவது அதாவது மனிதனுக்கு மனிதன் பார்த்தவுடனே ஒரு வேற்றுமை உணர்ச்சி தோன்றுவதற்கில்லாமல் செய்து விட்டால் பிறகு ஒவ்வொருவரும் தன் தன் மதம் ஜாதி வகுப்புப் பாஷை ஆகியவைகளைக் காட்டிய பின்பு ஒரு சமயம் வேற்றுமை உணர்ச்சி உண்டானாலும் அதை அது முதலில் பார்த்தவுடன் தோன்றிய ஒற்றுமையுணர்ச்சியின் பலத்தால் தலை தூக்காதிருக்கும்படி செய்யலாம்.

ஆதலால் ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பல விதமான வேற்றுமைகளை யொழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால் முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாயிருக்கும் உடையை ஒன்று படுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

உதாரணமாக மற்ற நாட்டினரான சைனாகாரரையோ, ஜப்பான்கார ரையோ இன்று எடுத்துக் கொண்டால் அந்த நாட்டாரில் அந்த நாட்டாருக் குள்ளாகவே ஒருவருக்கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாத சாயலையும், உடையையும் கொண்டிருப்பது யாவருமறியலாம்.

அதுபோலவே ஐரோப்பாக்காரருக்குள்ளும் மக்கள் சாயலையோ உடையையோ கொண்டு எந்தவித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடி யாது. இதனால் அத்தேச மக்களுக்கு தங்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டு ஒரு லக்ஷியத்திற்கு பாடுபட முடிகின்றது.

இந்த உண்மையையும், இரகசியத்தையும் கண்டுதான் வீரர் கமால் பாக்ஷா அவர்கள் எல்லோரும் ஒரே வித உடையணிந்து ஒரே சாயலாகவே இருக்க வேண்டுமென்று உத்தரவு போட்டதின் மூலம் துருக்கி நாடு சிறியதாக இருந்தாலும் அது தன்னையும் ஒரு வல்லரசென்று மதிக்கும் படி செய்து கொண்டது. இதைப் பின்பற்றியேதான் ஆப்கானிஸ்தானமும் முயற்சிக்கின்றது.

ஆகவே இந்த கொள்கையானது நமது இந்தியாவுக்கு உலகத்திலுள்ள மற்றெல்லா நாட்டைக் காட்டிலும் மிக்க அவசியமானது என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை என்றே கருதுகின்றோம்.

இத்தியாதி காரணங்கள் கொண்டு நமது நாட்டிற்கும் இப்போது வெகு அவசரமாக உடையும், சாயலும் மாற்றப்பட்டு ஒன்றுபோல் தோன்றும்படி செய்ய வேண்டியது அவசியமென்று கருதியே நாம் இதை எழுத முற்பட் டோம்.

இவ்வெண்ணம் நமக்கும், நமது நண்பர்களில் பலருக்கும் வெகு நாளாகவே இருந்து வந்தாலும் என்ன மாறுதல் செய்வது என்னும் விஷயத்தில் யோசனையாகவே இருந்து வந்ததால் தாமதப்பட்டு விட்டது.

அதோடு நாம் சொல்லுவது மற்றவர்களுக்கும் சம்மதப்படும் படியாய் இருக்க வேண்டுமே, உடனே பின்பற்ற வேண்டுமே என்கின்ற யோசனையும் இருந்து வந்தது.

சாயல், உடை, பழக்க உணர்ச்சி ஆகியவைகளில் மேல் நாட்டாரைப் போல் கட்டுப்படுகின்ற வழக்கமோ கவலையோ நம்மவர்களுக்கு சிறிதும் கிடையாதாதலினாலும் அவ்வித வித்தியாசங்களே இந்த நாட்டின் பெருமைக்கும், இயற்கை வனப்பிற்கும் அணிகலனாயிருப்பதாக மக்கள் கருதி வருவதாலும் இது இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாததாகக் கூட பலருக்குத் தோன்றினாலும் தோன்றலாம்.

மேல் நாட்டார் கட்டுப்பாட்டுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டு மானால் அவர்கள் உடை, முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள மாறுதலும் அதை ஒரே அடியாய் ஐரோப்பா, ஆஸ்ட்ரேலியா, அமெரிக்கா முதலிய கண்டங்கள் உடனே பின்பற்றுவதும் அது போலவே அப்பெண்கள் தலைமயிர் முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசமும் அதை எல்லா கண்டத்து வெள்ளைக்காரரும் பின்பற்றுவதும் பார்த்தாலே போதுமானதாகும்.

அவசியமென்றோ கட்டுப்பாடென்றோ அவர்களுக்குத் தோன்றிவிடு மானால் எந்த மாறுதலானாலும் அதை அரச ஆக்கினைப் போல் பாவித்து எல்லோரும் உடனே கீழ்படியும் வழக்கம் அவர்களுக்குள் உண்டு. கட்டுப் பாட்டிற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றை குறிப்பிடுகின்றோம்.

அதாவது ஐரோப்பாவில் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்து கொண்டதில் சில உயர் குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பப் பெண்கள் தாங்களும் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டாலும் ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மனைவியான மேரி ராணியார் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்ளாததால் சற்று அதிருப்தியுடன் கட்டுப்பாட்டிற்குப் பயப்பட வேண்டியவர்களாக இருந்தார்களாம்.

இதை அரச குடும்பத்தார் அறிந்ததும் இளவரசர் மனைவியாரான இளவரசி யை உடனே தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும்படி செய்தார்களாம். இப்போது அது பொது தேசாச்சாரமாய் விட்டது. ஆனால் நம்ம நாட்டிலோ எப்பேர்பட்ட மாருதலாயிருந்தாலும் அது எவ்வளவு சரியானதாயும், தேவையானதாயும், இருந்தாலும் பயனும் பொருளும் அற்ற பழய வழக்கம் என்னும் “பேயுக்கு” அதாவது மூட பயத்திற்கு அடிமையாகி உடனே அதை குற்றம் சொல்லவும் உள் எண்ணம் கற்பிக்கவும், எதிர் பிரசாரம் செய்ய வும் புறப்பட்டு விடுகிறார்கள்.

ஆதலால்தான் ஆயிரக் கணக்கான வருஷங்களாக இந்திய மக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு பிரிந்து துவேஷங் கொண்டு அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகவே ஆகி விட்டார்கள்.

ஆகவே இதை ஒரு வழியில் போக்க முயர்ச்சிக்க வேண்டுமென்று கருதியே பல மாறுதல்களுடன் உடை மாறுதல்களைப் பற்றி துணிந்து ஏதா வது தெரிவிக்கலாமா என்ற எண்ணம் கொண்டு இதனை எழுத முற்பட் டோம். இப்போது நமக்கு அதாவது இந்தியர்கள் என்பவர்களுக்குள் பல வித உடுப்பும் சாயலும் இருப்பதை பார்க்கின்றோம்.

பெண்களிலும் அப் படியே. சாதாரணமாக ஆண்களுக்கு இரண்டு பெரிய பெரிய வேஷ்ட்டி அவசியமாகின்றது. இதை தவிர ஒன்று அல்லது இரண்டு சட்டையும் அவசியமாகிறது. இது தவிர ஒரு துவாலும் அவசியமாகின்றது.

இது தவிர பலருக்கு தலை உருமால் அல்லது குல்லாயும் தேவையாகின்றது. அது போலவே பெண்களுக்கும் 16 முழப் புடவையும், ரவிக்கையும், பாடி என் னும் உள் சட்டையும், உள் ஆடை என்று ஒரு பாவாடையும் வேண்டியிருக்கிறது.

இவ்வளவு துணிகளும் உயர்ந்த தினுசில் வாங்கவேண்டுமானால் அதிகப் பணச் செலவுமாகின்றது. சாதாரணமாக ஒரு ஜதை உயர்ந்த தினு சானால் 100, 200, 300, 400 ரூ. கூட ஆகிவிடுகின்றது. இவ்வளவு செலவு செய்தும் வேற்றுமையையே காட்டுகின்றது.

சாதாரணமாக யாராயிருந்தாலும் இடுப்புக்கு 4 முளத்தில் ஒரு வேஷ்டியை கைலி போல அதாவது இரு தலவும் மூட்டியதாகவும், ஒரு முக்கால் கை குடுத்துணி ஒரு சட்டையும், சட்டப்பையில் அடங்கக் கூடிய ஒரு சிறு துவாலும் இருக்கும் படியாக இந்திய உடையை ஏன் மாற்றக் கூடாது என்பதே நமது யோசனை.

இந்தப்படிதான் இன்று மலையாள நாட்டில் மகமதியர்களும், கிறிஸ்தவர்களும் உடை அணிகிறார்கள். மற்ற இந்துக்களிலும் ஆண்களும் அநேகமாய் 100க்கு 90 பேர் இப்படித்தான் உடை அணிகிறார்கள்.

மற்றப்படி உடையில் செய்யும் மாறுதல் போலவே தலைமயிர் விஷயத்திலும் ஆண்கள் கிராப்பு செய்து கொண்டும் பெண்கள் வெள்ளைக்காரப் பெண்களைப் போல தலைமயிரை கீழ் காது அளவுக்குக் கத்தரித்துக் கொள்ளவும் செய்து விட்டால் அநேகமாக சாயலிலும் எல்லா மக்களுக்கும் சிறப்பாக ஆண் பெண்களுக்கும் ஒன்றுபட்ட காக்ஷி ஏற்பட்டுவிடும். வித்தியாச உணர்ச்சியும் தானாக மாறிவிடும்.

இப்போது பெண்களுக்குத் தலையில் மயிர் வளர்த்திருப்பதைப் போன்ற அசவுகரியமும், நேரக் கேடும், வீண் செலவும் போல வேறு எதிலுமில்லை என்றே சொல்லலாம். அதனால் அவர்கள் படும் கஷ்டம் நடுநிலையில் இருந்து பார்த்தால்தான் தெரியும்.

அவர்களது உடை, நகை, தலைமயிர், பெரிய சீலை ஆகியவைகளே பெண்களை பலவீனர்களாகவும், அவற்றின் பொருட்டு அடிமைகளாக ஆக்கி அவர்களை மெல்லியலார் பலமற்றவர்கள் என்று சொல்லும்படியும் ஆக்கிவிட்டது. தலைமயிரை ஒரு அழகாகப் பாவித்து உணர்ச்சி சரீரத்தில் ஊறிக் கிடப்பதால் இதைப் பற்றி நினைக்கும் போதும் சொல்லக் கேட்கும் போதும் மக்களைத் திடுக்கிடச் செய்வதாகத் தோன்றலாம்.

ஆனால் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அதன் உபத்திர வமும் கெடுதலும் தெரியவரும். இது போலவே நகை விஷயத்திலும் பல மாறுதல்கள் காணப்பட்டாலும் அவைகள் இந்த மாதிரி அதாவது உடை மாற்றமாகி விட்டால் தானாகவே மாறிவிடும். மலாய் நாட்டிலும், பர்மா நாட்டிலும், கண்டி நாட்டிலும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள், பவுத்தர் கள் உள்பட எல்லோரும் ஆண் பெண் அடங்கலும் இம்மாதிரி உடைதான் உடுத்துகிறார்கள்.

மற்றபடி ஆங்கில உடை உடுத்துவது பலருக்குப் பிடிக்கலாம். ஆனால் அது பெரிதும் குளிர்தேச உடையாதலாலும் உஷ்ண தேசத் திற்கு சவுகரியமில்லாததானதினாலும் அன்றியும் எல்லா மக்களாலும் சாத்தியப்படக் கூடியதல்லவானதாலும் அதை நாம் பொது மக்களுக்குள் புகுத்துவது சிரமமானதும் பொருத்தமற்றதுமாகும் என்று கருதுகின்றோம்.

மற்றபடி செல்வவான்களும் சவுகரியமுள்ளவர்களும் அணிவதில் நாம் ஆnக்ஷபிக்க வரவில்லை. ஏனெனில் அவ்வுடையின் காரணமாக இப்போது எவ்வித ஜாதி மத வகுப்பு வித்தியாசங்கள் ஏற்படுவதற்கில்லாமல் இருப்பது தான்.

நிற்க, வெறும் ஒரு கால் சட்டை அதாவது சாதாரண செராய் போட்டு குடுத்துணி மாத்திரம் போட்டுக் கொண்டால் என்ன ஆnக்ஷபம்? என்று சிலர் கேட்கக் கூடும். அந்த உடையும் ஏற்கக்கூடியதானாலும் அது எல்லோருக்கும் அவசரத்திற்கும் சாத்தியப்படாததாகி விடும் என்று பயப்படுகின் றோம். சிலருக்கு அது அசவுகரியமாகவும் இருக்கக்கூடும் என்றும் நினைக்கின்றோம்.

ஆனால் அந்தப்படி போட்டுக் கொள்வதை நாம் ஆnக்ஷபிக்க வரவில்லை. ஏனெனில் அதுவும் முன் சொன்னது போல ஜாதி மத வகுப்பு முதலிய பிரிவினைகளைக் காட்ட சாதனமாயில்லாதிருப்ப தால்தான்.

ஆகவே நாம் மேல் சொன்ன அதாவது 4 முளத்தில் ஓரம் இரண்டையும் சேர்த்து மூட்டி தைத்ததாக எந்த வர்ணம் உள்ள துணியாயிருந்தாலும் அதை இடுப்புக்கும், ஒரு முக்கால் கை சட்டையே மேலுக்கும் உடுக்கும் படியான மாதிரியை பொது உடையாக ஆக்கலாம் என்பது நமக்கு சரி யென்று தோன்றினதால் அதை இப்போது எழுதினோம்.

ஆனால் இதை அதாவது ஒரு மகாநாட்டில் வைத்துப் பேசிய பின்பே அமுலுக்குக் கொண்டு வர கருதி இருக்கிறோம். அதற்குள் அவசரப்பட்டு இஷ்டப்பட்டவர்கள் உடுத்திக் கொள்வதில் எவ்வித ஆnக்ஷபனையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி அடுத்தாப்போல் மக்களுக்கிடும் பெயர்கள் விஷயத்திலும் பலப் பிரிவுகளைக் கண்டு பிடித்து வேற்றுமை உணர்ச்சி கள் ஏற்பட இடமேற்படுகிறது. ஆகவே அவைகளையும் கவனித்து பெயரினால் ஒரு மனிதன் ஒரு மனிதனை பிரித்துக் காணாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

(குடி அரசு - தலையங்கம் - 09.11.1930)