periyarr 450இளங்குழந்தைகளின் கலியாணங்களைத் தடுப்பதற்காக நமது நாட்டில் வெகு காலமாகவே முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை பயன்படாதிருக்க எதிர் முயற்சிகளும் செய்யப்பட்டு காலம் கடத்திவரும் விஷயம் தமிழ் மக்கள் அறிந்ததாகும். ஆனால் சமீப காலத்தில் மற்ற மேல் நாடுகளின் முற்போக்கைப் பார்த்த சிலர் இப்போது இதுவிஷயமாய் தீவிர கிளர்ச்சி செய்ய ஆரம்பித்ததன் பலனாகவும், தேக தத்துவ சாஸ்திரத்தின் முறைப்படியும், வைத்திய சாஸ்திர முறைப்படியும், குழந்தை மணங்களினுடையவும், குழந்தைச் சேர்க்கைகளினுடையவும், குற்றங்களை மக்கள் அறியத் தொடங்கியதன் பயனாகவும், பாமர மக்களுக்குச் சற்று கல்வியும் உலக அறிவும் எட்டுவதற்கு இடமேற்பட்டதன் பலனாகவும், குழந்தைகள் விவாகத்தைத் தடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு குழந்தைகளின் சேர்க்கையையும் அதாவது சரியான பருவம் அடைவதற்கு முன் ஆண் பெண் சேர்க்கை கூடாது என்பதாகவும் கருத இடமேற்பட்டு, அவற்றைத் தடுக்க சட்டங்கள் செய்யவும் முற்பட்டு, சட்டசபைகளில் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

நமது அரசாங்கத்தார் என்பவர்கள் நம் நாட்டைப் பொறுத்தவரை நமது நாட்டுப் பார்ப்பனர்களைப் போலவே சுயநலக்காரரும் பொறுப்பற்றவர்களுமாய் இருக்க வேண்டியவர்களாய் விட்டதால் அவர்கள் இவ்விஷயத்தில் மனிதத் தன்மையுடன் நடந்து சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரும்படி செய்யாமல் பொறுப்பற்ற தன்மையில் இவ் விஷயங்களில் பொது ஜன அபிப்பிராயத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் போல வேடம் போட்டு இதற்காக ஒரு கமிட்டியை நியமித்து அக்கமிட்டியை பொதுஜனங்களை விசாரித்து அறிக்கைச் செய்யும்படி ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

அக்கமிட்டியும் மாதக் கணக்காக பல ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பொதுஜனங்கள் என்பவர்களை விசாரணை செய்து ஏகோபித்து ஒரு முடிவுக்கு வந்து கலியாணம் செய்ய பெண்களுக்கு 14 வயதாக வேண்டுமென்றும் உடல் சேர்க்கை வைத்துக் கொள்ள கலியாணமான பெண்களுக்கு 15 வயதாக வேண்டுமென்றும் கலியாணமாகாத பெண்கள் விஷயத்தில் உடல் சேர்க்கைக்கு 18 வயதாக வேண்டுமென்றும் அறிக்கைச் செய்திருக்கின்றார்கள்.

இவ்வறிக்கையில் உடல் சேர்க்கை விஷயமாய் செய்திருக்கும் வயது கிரமமானது கலியாணமான பெண்ணுக்கு ஒருவிதமாகவும், கலியாணமாகாத பெண்ணுக்கு ஒரு விதமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறிது விவாதத்திற் கிடமானதாயிருந்தாலும் கலியாண வயது 14 என்று குறிப்பிட்டிருப்பதும் அவ்வளவு போதுமானதா இல்லாததாய் இருந்தாலும், ஒரு அளவுக்கு நாம் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம்.

முதலாவதாக, கலியாணமான பெண்ணுக்கும் ஆகாத பெண்ணுக்கும் உடல் சேர்க்கை விஷயத்தில் வித்தியாசம் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் பார்ப்பனர்கள் அந்தக் கமிட்டி முன் சாட்சியம் கொடுத்ததில் அநேகர் தங்கள் சமூகப் பெண்கள் பக்குவமாய்விட்டால் பரிசுத்தமாய் இருக்க முடியாதென்றும், அவர்களுக்குக் கலவி உணர்ச்சி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகின்ற தென்றும் அவர்களைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விடுமென்றும் ஏதாவது சிறிதளவாவது பேர் கெட்டுவிட்டால் பிறகு அதன் வாழ்க்கை கஷ்டமாகி விடுமென்றும் சொல்லியிருப்பதால் அவர்களின் குறைகளைத் திருப்தி செய்ய வேண்டி கலியாணமாகாத பெண்களை 18 வயதுக்கு முன் யாராவது கூடினால் கூடின ஆண்களுக்குத் தண்டனை விதிப்பதற்காக இம்மாதிரி விதித்திருக்கின்றதாக நாம் கருதுகின்றோம்.

ஆனால் இம்மாதிரி நடவடிக்கைக்குக் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தண்டனை ஒன்றுமில்லை. தவிரவும், பெண்கள் மீது வேறு எவ்வித அபவாதமும் ஏற்படாமலிருக்கவும் இந்த விதி உபயோகப்படலாமென்று கருதியிருக்கக் கூடுமென்றும் நினைக்கின்றோம். தவிர 14-ல் கலியாணம் செய்து கொண்டு 15 வயது வரையில் அதாவது ஒரு வருடம் வரை காத்திருக்க முடியுமா? என்றும், ஏன் கலியாண வயதையே 15- ஆக தீர்மானித்திருக்கக் கூடாதென்றும் சிலர் கேட்கலாம். ஏகோபித்த அபிப்பிராயமாக இந்த அறிக்கை இருக்க வேண்டுமென்பதை உத்தேசித்து ஒரு கட்சியார் இதில் ஒரு வருடம் விட்டு கொடுத்திருக்கின்றார்கள் என்பதாகக் கருதுகின்றோம்.

அதாவது கலியாண வயதை பிரவிடையாவதற்கு முன்னாகவே கலியாணம் செய்யத்தக்கதாய் இருக்கும்படி செய்ய மெஜாரிட்டிகள் விரும்பியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அம்மாதிரி செய்துவிடும் பட்சத்தில் சேர்க்கை வயது இன்னும் குறைந்தாலுங் குறையும். ஆனால் தங்கள் முக்கிய கொள்கைக்கு விரோதமில்லாமல் ஒரு ஏகோபித்த அறிக்கை அனுப்ப இடங்கிடைத்தால் தனிக் குறிப்பெழுத வேண்டிய அவசியம் வேண்டியதில்லை என்பதை உத்தேசித்தே மெஜாரிட்டியாரும் இதற்குச் சம்மதித்திருக்கின்றார்கள் போல் காணப்படுகின்றது.

அதாவது நமக்கு முக்கியமானது கலியாண வயதேயொழிய சேர்க்கை வயதல்ல. ஏனெனில் 8 வயதிலும் 10 வயதிலும் கலியாணம் செய்து கொள்ள அனுமதித்து விட்டு ஒருவருக் கொருவர் சேரக் கூடாது என்று சட்டம் செய்து ஒருவரையொருவர் சேராமல் காவல் பார்த்துக் கொண்டிருப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பதும், சாத்தியப்படாதது என்பதும், இயற்கைக்கு விரோதமென்பதுமே நமது அபிப்பிராயம். ஆதலால் நமக்குக் கலியாண வயதே பிரதானம் என்கிறோம்.

அதில் கமிட்டியார் 14 வயது என்று தீர்மானித்தது ஒரு சமயம் சிலர் போதாது என்று கருதினாலும் நாம் அதுவே போதுமென்று சொல்லுவோம் ஏனெனில் கலியாண வயது 10 என்றாலும், 13 என்றாலும் ஒன்றேதான் என்பதுபோல் 14 என்றாலும் 18 என்றாலும் ஒன்று தான் என்பது நமதபிப்பிராயம். எனவே இங்குள்ள முக்கிய விஷயமென்ன வென்றால் பெண்கள் பிரவிடையாகும் முன்புதான் கலியாணம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மதத்திற்கு விரோதம், பாவம், நரகம் சம்பவிக்கும் என்கின்ற பூச்சாண்டிகள் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆதலால் இந்தக் கமிட்டி அறிக்கையில் மதச் சம்பந்தமான நிர்ப்பந்தமும் கட்டுப்பாடும் ஒழிக்கப்பட்டிருப்பது பெருத்த அனுகூலமாகும்.

பக்குவமானபின் கலியாணம் செய்வதாயிருந்தால் பெண் விஷயத்தில் யாரும் அவசரப்பட்டுக் கொண்டு கலியாணம் செய்து விடமாட்டார்கள். சௌகரியப்படி எதிர்ப்பார்ப்பார்கள். பெண்களும் தாராளமாய் படிக்கவும், உலகத்தைத் தெரிந்து கொள்ளவும் சந்தர்ப்ப மேற்படும். பிறகு தகப்பன் சொன்ன புருஷனைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்கின்ற நிர்ப்பந்தமுமிருக்காது.

தனக்கும் புருஷனைத் தேர்ந்தெடுக்கத்தக்க யோக்கியதை உண்டாய் விடும். பிறகு நாள் போகப் போக சுயம்வரமும் காதல் மணமும் ஏற்பட இடமேற்பட்டுவிடும். எனவே 14 வயதுக்கு மேற்பட்டுத்தான் கலியாணம் செய்யப்பட வேண்டுமென்று செய்த அறிக்கையைப் பெண்கள் விஷயத்தில் கவலையுள்ளவர்களும், சீர்திருத்தத்தில் கவலையுள்ளவர்களும் வரவேற்பார்கள் என்றே எண்ணுகின்றோம்.

தவிரவும், இந்த ஒரு விஷயத்தில் மத நிர்ப்பந்தம் நீங்கினால் மற்ற விஷயங்களிலும் மனித சமூகத்தின் இயற்கைக்கும் அறிவிற்கும் விரோதமான காரியங்களிலுமுள்ள மத நிர்ப்பந்தங்கள் விலகவும் சற்று அனுகூலமாயிருக்குமாதலால் அந்த அளவுக்கு நாம் இதை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கின்றோம். உடன்கட்டை ஏறும் விஷயமும் நீக்கப்பட்ட போது, அது மதக்கட்டுப் பாட்டிற்கு விரோதமென்றுதான் சொல்லிக் கொள்ளப்பட்டதானாலும் தைரியமாய் சட்டம் செய்த பிறகு முன் புருஷனுடன் கட்டையில் வைத்து எரிக்கப்பட வேண்டிய பெண்கள் இப்போது புருஷன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள அருகதையுடையவர்களாகச் செய்து கொண்டும் வாழுகின்றார்கள்.

அதுபோலவே இப்பொழுது இந்த அளவுக்குச் சட்டம் செய்துவிட்டால் நாளைக்கு உண்மையிலேயே 18 வயது வரையில் கூட கலியாணத்திற்கு காத்திருக்கும் நிலைமை தாராளமாய் ஏற்படும். அன்றியும் பெண்கள் பலர் தங்களுக்கு கலியாணமே வேண்டாம் என்றுகூட சொல்லிக் கொண்டு பெண் பிரமச்சாரிகளும், மடாதிபதிகளும், சந்நியாசிகளும், சுவாமிகளும் ஆகவும் கூடிய நிலைமை ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆகையால் இப்போது சீர்திருத்தக்காரர்கள் செய்ய வேண்டிய வேலை என்ன வென்றால் அறிக்கையைப் பற்றி குணதோஷம் பேசாமல் அவ்வறிக்கை அப்படியே இந்தியா சட்டசபையில் நிறைவேறும்படி செய்ய வேண்டியதே முக்கிய கடமையாகும்.

இவ்வறிக்கை சர்க்கார் முறையில் வெளியாவதற்கு முன்பே பார்ப்பனர்கள் இவ்வறிக்கைக்கு விரோதமாய் மதத்தின் பேராலும், வருணாசிரம தருமத்தின் பேராலும் எதிர்ப்பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சாதாரணமாக இந்த அறிக்கையின் கருத்து வெளியான இந்த 20, 25 நாள்களுக்குள்ளாக தமிழ் நாட்டிலும், ஆந்திர நாட்டிலும் தினம் ஒன்று இரண்டு இடங்களில் கூட்டம் போடப்பட்டதாக ஏற்பாடு செய்து அவ்வறிக்கையைச் சர்க்கார் ஒப்புக் கொள்ளப்படாதென்றும், சட்டசபை பிரதிநிதிகள் ஓட்டு கொடுக்கப்படாது என்றும் தீர்மானங்கள் செய்ததாக பேர் செய்து தீர்மானங்களைப் பத்திரிகைகளுக்கு அனுப்பி வருகின்றார்கள்.

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் ஒவ்வொரு சீர்திருத்தத்தின் போதும் இப்படியே கூச்சல் போடுவது வழக்கமானதால் நாம் இவற்றிற்குப் பயப்படாமல் தெரியப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் எதிர்க் கூட்டங்கள் போட்டு அறிக்கையை ஆதரித்து தீர்மானங்கள் செய்து தீர்மானங்களை சர்க்காருக்கும் சட்டசபை அங்கத்தினர்களுக்கும் தகவல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தேவஸ்தான சட்டத்தின் போதும் இந்தப் பார்ப்பனர்கள் இம்மாதிரிதான் கூச்சல் போட்டார்கள். ஆனாலும் சட்டம் நிறைவேறிவிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தினால் யாருக்கும் ஒருவித பலனும் இதுவரை ஏற்பட்டதாக சொல்வதற்கில்லாமலிருக்கின்றது. வீணாக கமிட்டிகளும் உத்தியோகங்களும் ஏற்பட்டதுதான் மீதியே ஒழிய மற்றபடி வீணாய் செலவாகும் பணம் ஒரு காசு கூட மீதியாவதற்கு இல்லாமலும், வேறு நல்ல வழியில் செலவிடுவதற்கு இல்லாமலும் இருப்பதுடன் முன் சாப்பிட்டவர்கள், சாப்பிட்டுக் கொண்டும், முன் கோயிலின்பேரால் இழிவுபடுத்தப்பட்டவர்களும், தாழ்ந்த சாதி ஆக்கப் பட்டவர்களும் அதே நிலையில் தான் இருந்து வருகின்றார்கள்.

ஓட்டு மூலமும் சட்டசபை மூலமும் நிர்வாகம் செய்யும் அரசாங்கம் நமது நிலைக்குச் சிறிதுகூட பொருத்தமற்றதென்றே சொல்ல வேண்டி இருக்கின்றது. இதுசமயம் நமக்கு கமால் பாட்சாவுடையது போன்ற ஒரு வீர எதேச்சை அரசாங்கமே வேண்டி இருக்கின்றது. ஏனெனில், மேல் பதவியிலும் முன்னிலையிலும் குறைவற்ற தன்மையிலும் இருக்கின்றவர்களே அநேகமாய் ஓட்டர்களாகவும் பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். இவர்களை ஆதாரமாகக் கொண்டே அரசாட்சி ஓட்டென்னும் தந்திரத்தாலும் பிரதிநிதித்துவம் என்னும் சூழ்ச்சியாலும் அரசாளப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலுள்ள ராஜ்யபாரத்தில் கஷ்டப்படுகின்ற ஓட்டுரிமை இல்லாத மக்களுக்கு நன்மை கிடைப்பதென்றால் சிறிதும் எதிர்பார்க்கக் கூடியதல்ல என்றாலும், ஒரு பெரிய ஆற்றைக் கடப்பது போன்ற இந்த அறிக்கையை ஒருவாறு சட்டமாக்கிக் கொண்டால் பின்னால் வேலை செய்பவர்களுக்குச் சற்று அனுகூல மேற்படுமாதலால் ஆங்காங்குள்ள மக்களைத் தயவு செய்து பொதுக் கூட்டம் கூட்டி விஷயங்களை விளக்கி அறிக்கையை ஆதரிப்பதாகத் தீர்மானங்களைச் செய்தனுப்பும்படியாக மறுபடியும் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 21.07.1929)