சட்டசபை தேர்தல் காலாவதியை சர்க்கார் ஒத்திப் போட்டு விட்டதி னால் காங்கிரசுக்காரர்கள் தங்களது சுயமரியாதையையும் அதிருப்தியையும் காட்டுவதற்கு அறிகுறியாய் இனிமேல் கூடப்படப் போகும் சட்டசபை மீட்டிங்குகளுக்கு மறு தேர்தல் வரை யாரும் போகக் கூடாது என்று எல்லா இந்திய காங்கிரசு கமிட்டியார் திரு.காந்தியவர்கள் யோசனைபடி தீர்மானம் செய்து எல்லா மாகாணங்களுக்கும் சார்வு செய்தாய் விட்டது. அதை எல்லோரும் ஒப்புக் கொண்டதாகவும் பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டது. ஆனால், சென்னை மாகாண தமிழ் நாட்டு காங்கிரஸ்காரர்களான பார்ப்பனர்கள் அக்கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட முடியாதென்றும் தாங்கள் எல்லா இந்திய காங்கிரஸ் கட்டளையை மீறி சட்டசபைக்குப் போகப் போவதாகவும் இரகசியமாய் தீர்மானித்து இருக்கின்றார்கள். காங்கிரஸ் சட்டசபைக்கு போகும்படி கட்டளை இட்டால் வெகு பக்தியாய் அக்கட்டளையை நிறைவேற்றுவார்கள். வேண்டாமென்றால் கட்டுப்பாட்டை மீறுவார்கள். நமது பார்ப்பனர்களின் காங்கிரஸ் பக்தி நமது ஆஞ்சநேய ஆழ்வாருக்குக் கூட கிடையாதென்றே சொல்லலாம்.
(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929)
***
வட இந்தியாவிலும் “நாஸ்திகம்”
இந்தியாவில் ஆங்கில அரசாட்சியை ஒழித்துவிட்டு ருஷிய தேச ஆட்சி முறையை நிறுவச் சதியாலோசனை செய்ததாக 31 பேர்கள் மீது கொண்டு வரப்பட்ட வழக்கு மீரத்தில் விசாரணையிலிருக்கிறது. இம்மாதம் 12ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது பப்ளிக் பிராஸிகியூட்டர் “போல்ஷ்விக்காரர்கள் (எதிரிகள்) கடவுள் நம்பிக்கையை ஒழிப்பவர்கள். இவர்கள் கிறிஸ்தவக் கடவுள், மகமதியக் கடவுள், பௌத்தக் கடவுள் ஆகிய கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையெல்லாம் ஒழித்துவிட்டு இறுதியில் இந்து மதக் கடவுள்கள் மீதுள்ள நம்பிக்கையையும் தங்கள் ஆட்சிமுறைக் காலத்தில் அழிப்பது நிச்சயம். இவர்கள் கொள்கைப்படி உலகத்திலுள்ள எல்லா மதங்களும் அழிந்துபட வேண்டும். இதற்கென இவர்கள் சர்வ மதங்களிலுமுள்ள குருக்களைக் கொன்று கோயில்களை இடித்துத் தகர்க்கும் திட்டத்தையே உழைப்புத் திட்டமாகக் கொண்டுள்ளவர்கள். கடவுளுக்கு எதிர்ப்பிரசாரம் புரியும் திட்டத்தைப் படைத்தவர்கள்......... இக் கொள்கைக்காரர்கள் தங்கள் மனோபாவங்களை வாழ்க்கையில் அநுசரித்து அதற்கேற்ற வேலைத் திட்டங்களையும் செய்து வருகிறார்கள். இதற்கென இப்படித்தான் செய்தல் வேண்டும், லட்சியங்கள் இவைகள்தான் என்றும் இவர்கள் வரையறுத்துள்ளனர்” என்று எடுத்துக் காட்டினார்.
அப்போது எதிரிகளின் வக்கீல் எதிரிகள் மீது தப்பெண்ணம் கற்பிப்பதற்காக இந்த விஷயங்களைப் புகுத்திப் பிரசாரம் செய்யப்படுகின்றது என்று கூறினார். வழக்கின் தத்துவம் எவ்விதமாயினும் உலகமெங்கும் கடவுள் மத சம்பந்தமான இத்தகைய உணர்ச்சி பரவியிருக்கிற தென்பதற்கும் அதிகமாகப் பேசப்படுகிறது என்பதற்குமே இதை எடுத்துக் காட்டினோம்.
(குடி அரசு - செய்தி விளக்கக் குறிப்பு - 16.06.1929)