16 வது நூற்றாண்டு வரை பின்னல் கையினாலே தான் நடைபெற்றது. 1589 ம் ஆண்டிற்குப் பிறகு தான் பின்னல் வகைகளைத் தயாரிக்கும் முதல் இயந்திரம் உருவானது.

 வில்லியம் லீ என்ற ஆங்கியேலர்தான் இதன் முன்னோடி. முதல் பின்னல் இயந்திரத்தைக் கண்டுபிடித்து பெருமை இவரையே சாரும். இந்தப் பின்னல் இயந்திரத்தை ஆரம்பம் முதலே எதிர்த்த கைப் பின்னல்காரர்களால், இந்த இயந்திரம் புழக்கத்தில் வருவதற்கும், பிரபலமடைவதற்கும் தாமதம் ஏற்பட்டது. மற்ற கண்டுபிடிப்பாளர்களைப் போலவே, இந்த பின்னல் இயந்திரத்தைக் கண்டுபிடித்து வில்லியம் லீ-க்கும் எந்த வித அனுகூலமும் கிடைக்கவில்லை. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜவுளித்தொழிலுக்கு அடுத்தபடியாக பின்னல் தொழில் தான் முக்கியத்துவம் பெறத் துவங்கியது. இதன் விளைவாக ஆடைகள், அங்கிகள், விளையாட்டு ஆடைகள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கியது. இது நவீன நாகரிகத்திற்காக மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. அதற்கும் மேலாக பின்னல் நுட்பம் நீளும் தன்மை, காற்று புகும் தன்மை. பின்னல் இயந்திரத்தின் வளர்ச்சி ஆகியவைகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.

 1853-ஆம்  ஆண்டு ஆங்கிலேய கண்டுபிடிப்பாளராக மாத்யூ டவுன்சென்ட் என்பவர். வாட்ச் ஊசியை கண்டுபிடித்ததன் பயனாக இயந்திரத் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்தது. இதையொட்டி முன்பிருந்த இயந்திரங்களை விட மிக எளிமையாக தொழில் நுட்பம் மிக்க இயந்திரங்கள் அனைவருக்கும் கிடைத்தன.

 மாத்யூ டவுன்சென்ட் டின் கண்டுபிடிப்பை பக்ஸ்டார்ப் என்ற பிரஞ்சுக்காரரும் லாம்ப் என்ற அமெரிக்கரும் பேடண்ட் செய்து வெளியிட்டு வியாபாரமாக்கினார்கள். 1867 ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடந்த அனைத்துலக கண்காட்சியில் பக்ஸ் டார்ப், லாம்ப் ஆகிய இருவரும் வெளியிட்ட இயந்திரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு ஹென்றி எட்வர்டு டிபைட் அண்டு சீ என்ற கம்பெனியின் நிறுவனர் பின்னல்  இயந்திரங்களின் பேடண்ட் உரிமம் பெற்று முதன்முறையாக ஐரோப்பாவில் பிளாட் பின்னலாடை இயந்திரங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

 அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் வில்லியம் காட்டன் என்பவர் பல்முறை என்ற மல்டி ஹெட் நவீன இயந்திரம் மூலம் செங்குத்தான ஊசியும், மற்றும் ஊசி பிணைப்பு தகடும் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். இதே நூற்றாண்டில் பீட்டர் ஸ்காட் தொழிற்சாலையில் முதன் முதலாக பெண்களுக்கான பின்னலாடைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

 ஆரம்பத்தில் இந்த பின்னலாடைத்தொழில் அயல்நாட்டிலிருந்து இந்தியாவில் அறிமுகமாகி முதன் முதலில் கொல்கத்தாவில் 1893 ஆம் ஆண்டு கிட்டர்பூர் என்ற இடத்தில் சிறிய அளவில் பின்னலாடை உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் இது விரிவடைந்து திருப்பூர், சென்னை, கான்பூர் போன்ற நகரங்களுக்கு பரவியது.

பனியன் தொழிலின் முதல்பெண்மணி

 திருப்பூரில் பனியன் தொழிலின் முன்னோடி செல்லம்மா என்பவர் தான். இன்று பெத்தசெட்டிபுரம் என்று அழைக்கப்படும் பெத்த செட்டியாரின் மருமகள் செல்லம்மா அவர்கள் பனியன் தொழிலில் ஆர்வம் கொண்டு பனியன் கம்பெனி துவங்க முன்வந்தார். பல தொழில் நுட்பங்களை ஆராய்ந்து செல்லம்மா நிட்டிங் என்ற பெயரில் கம்பெனியை நிறுவினார். அவ்வகையில் பனியன் தொழிலின் முன்னோடி செல்லம்மா  என்பவர்தான் திருப்பூரில் பனியன் தொழிலுக்கு பிள்ளையார் சுழி இட்ட பெண்மணி ஆவார்.

உதவிய நூல்கள்

1.நிட்மா, திருப்பூர்
2.திருப்பூர் மாநகரின் வசந்த வரலாறு-மக்கள் ஜனநாயக கட்சி வெளியீடு
3.மக்கள் தாரகை, மறைக்கப்பட்ட வரலாறும், மறுக்கப்படும் உண்மைகளும்-இரணியன், சென்னை

- வைகை அனிஷ்