idaiyankudi church 500

கால்டுவெல்லின் நினைவிடம் என்பது அவர் கட்டிய தேவாலயமும், அதனையொட்டி அவர் வாழ்ந்திருந்த வீடும் சேர்ந்ததுதான். ஆலயத்தின் பின்புறத்தில் இருந்து பார்த்தால் அவர் வசித்த வீடு தெரிகிறது. இடையில் கால்டுவெல் நினைவு மேல்நிலைப்  பள்ளி இருக்கிறது.

கால்டுவெல் நீலகிரியிலிருந்து திருநெல்வேலி வரைக்குமான கால்நடைப் பயணத்தின்போது, செருப்பு அணியாமல் சென்றிருக்கிறார் என்பதை வாசித்திருக்கிறேன். அன்றைய தமிழக மக்களின் வாழ்நிலையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்காக அவ்வாறு செய்திருக்கிறார். சூடு தாங்காமல் கால்கள் வெந்து, புண்ணான போதும், தொடர்ந்து செருப்பு போடாமலே நடந்திருக்கிறார்.

தேவாலயத்தின் முன்பு வண்டியை நிறுத்தியதும், அந்தப் பகுதியின் வெப்பநிலையையும், கால்டுவெல் அங்கு எப்படி வாழ்ந்திருப்பார் என்பதையும் உணர்ந்து கொள்ள செருப்பை வண்டியிலேயே விட்டுவிட்டு, வெறுங்காலுடன் இறங்கினேன்.

மதியம் இரண்டு மணி. காலையிலிருந்து சூரியன் வறுத்தெடுத்ததில், தரைப்பகுதி சூடான தோசைக்கல்லாக மாறி இருந்தது. முதல் அடி வைத்ததும், சுர்ரென பாதம் சுட்டது. பத்து அடிகளைக் கூட கடக்க முடியவில்லை. ஒரே ஓட்டமாக வண்டிக்குள் ஓடி, செருப்புகளை அணிந்து கொண்டேன். கால்டுவெல் அவர்களால் எப்படி இந்தப் பகுதிக்குள் வாழ்ந்திருக்க முடியும்?

idaiyankudi church 501

(தேவாலயத்தின் உட்புறம்)

அதை சமூகவியல் அறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் பின்வருமாறு கூறுகிறார்:

“தமிழ்நாட்டிலேயே திருச்செந்தூருக்கும் கன்னியாகுமரிக்கும் இடையிலுள்ள கடற்கரைப் பகுதி மிகமிக வெப்பமான பகுதி. இந்த இடத்தை அவர் தேர்வு செய்ததற்கான காரணம் நமக்குப் புரியவில்லை. ஆனால் இன்றுகூட அந்த ஊரிலே நாம் ஒருநாள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெயிலும் செம்மணல் தேரியினுடைய சூடும் தாங்கமுடியாது. அந்த ஊரிலே இந்த ஐரோப்பியர் 53 ஆண்டுக்காலம் இருந்திருக்கிறார் என்பது என்னைப் பொறுத்த மட்டில் வியப்புக்குரிய ஒன்றாகவே உள்ளது. நான் அந்த ஊருக்குக் கால்டுவெல் நினைவுக் கருத்தரங்கிற்காக மூன்றுமுறை சென்றுள்ளேன். ஆண்டுதோறும் ஜூலையில் நடத்துகிறார்கள்.

கால்டுவெல் என்ற மிஷனரியை விட, கால்டுவெல் என்ற மொழியியலறிஞரை விட, கால்டுவெல் என்கிற அர்ப்பணிப்பு உணர்வுடைய சமூகச்சீர்திருத்தவாதியைத் (Deticated Social Reformist)தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால்டுவெல் வருகிறபோது, ஏன் இப்ப ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கூட அந்தப்பக்கம் பேருந்து வசதி கிடையாது. தேரிமணல், சாலைகளை காற்றிலே மூடிவிடும் என்பதனாலே பனைஓலைகளைப் போட்டு அதன்மீது ஜீப் ஓட்டுவார்கள். இதுதான் போக்குவரத்து வசதி. அப்படியென்றால் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே அந்த நிலம் எவ்வாறு இருந்திருக்கும்.

கால்டுவெல் குதிரை வண்டியிலும் குதிரையிலும்தான் பயணம் செய்திருக்கிறார். இடையன்குடி என்ற பெயரோடு வழங்கிய சின்னக் கிராமத்தினுடைய செம்மணல் தேரிக்காட்டின் தென்பகுதியை விலைக்கு வாங்கி, அதிலே ஒரு தேவாலயத்தைக் கட்டி, பக்கத்திலே தனக்கு ஒரு வீட்டைக் கட்டி தேவாலயத்தினுடைய வலதுபுறத்திலே தான் மதம் மாற்றிய அந்த எளிய நாடார் கிறிஸ்தவ மக்களுக்காகத் தெருக்களை, வீடுகளை அமைக்கிறார். அவ்வளவு நேர்த்தியாக, ஒழுங்காக இன்றளவும் அவை இருக்கின்றன.

caldwell family 445கால்டுவெல் காலத்திய இடையன்குடி எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டே தேவையில்லை. இன்றைக்கும் அந்த தேவாலயத்திற்கு நேர் எதிரே இருபது மீட்டர் தாண்டிச் சென்றால் அந்தப் பழைய இடையன்குடி கிராமம் உள்ளது. அதே பழைய ஓலைக்குடிசைகள்; பனைமடலால் ஆன வேலிகள்; அழுக்கு, வறுமை, வெள்ளாடு இவைகளோடு அப்படியே இருக்கிறது. கால்டுவெல் வருகிறபோதும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். கால்டுவெல் நாடார் மக்களிடம் வருகிறபோது பதனியை இறக்கி கருப்புக்கட்டி உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். அன்றைக்குத் தென்மாவட்டங்களிலேயே இடையன் குடிக்கு ஒரு ஆறு கிலோமீட்டருக்கு முன்னாலேயே உள்ள திசையன்விளை பெரிய கருப்பட்டிச் சந்தை. அதை நம்பித்தான் அந்த மக்களுடைய வாழ்வாதாரம் இருந்தது.

இன்றைக்கு அந்த மக்கள் கல்வி, சமூக விடுதலை, பாதுகாப்பான வீடு இவற்றோடு நான்காவது தலைமுறையைக் கழித்துக் கொண்டு கால்டுவெல்லைத் தங்களுடைய குலதெய்வமாக, சாஸ்தா என்று நாம் சொல்வதைப் போல கருதுகிறார்கள். ஏனென்றால் அவர் தந்த வாழ்க்கைதான் இதெல்லாம். ஒரு சுவையான செய்தி. திசையன்விளையைச் சேர்ந்த ஒரு பெரிய தொழிலதிபர் பாளையங்கோட்டையிலே இருக்கிறார், Bellpins முதலாளி செல்லத்துரை நாடார். அவர் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். சீர்திருத்த திருச்சபைக்காரர்கள் எல்லாம் ஒரு புதிய இடத்தை வாங்கி அதில் ஊரை நிர்மாணிப்பார்கள். அப்படி நிர்மாணிக்கிறபோது அதற்கு சமாதானபுரம், சுவிசேஷபுரம், கடாட்ஷபுரம், மெய்ஞ்ஞானபுரம் என்ற மதம் சார்ந்த ஒரு பெயரை இடுவார்கள். வேதாகமம் சார்ந்த பெயர்கள் அவை. ஆனால் கால்டுவெல் இடையன்குடி பெயரை ஏன் மாற்றவில்லை என்று கேட்டார். எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன் நான்.

அவர் சொன்னார். நான் கால்டுவெல் பிறந்த ஊருக்குப் போனேன். அவர் பிறந்த ஊரின் பெயர் Shepherdyard. அதாவது தமிழிலே சொல்வதானால் இடையன்குடி. இது தன்னுடைய ஊர்ப் பெயரை நினைவுபடுத்துகிற ஊர் என்பதாலே இந்த ஊர்ப் பெயரை மட்டும் கால்டுவெல் மாற்றவில்லை என்றார். எனக்கு ரொம்ப வியப்பாகவும் இருந்தது, நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இவர் தன்னுடைய ஊர்ப்பெயரைக்கொண்ட ஒரு ஊரை இங்கு தேர்ந்துகொண்டதாலோ என்னவோ அங்கு 53 ஆண்டுகள், இடையிலே ஒரேயொருமுறை மட்டும் இங்கிலாந்து சென்று வந்திருக்கிறார். தன்னுடைய மகளைக் கூட பக்கத்தில் நாகர்கோவிலிலே இருந்த இன்னொரு மிஷனரிக்குத்தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.

இப்பொழுது அங்கு கால்டுவெல் தனக்காகக் கட்டிய வீடு இருக்கிறது. வீட்டிலே வேறெந்த நினைவுச் சின்னமும் இல்லை. கால்டுவெல் பயன்படுத்திய அந்த கோர்ட்ஸ்டாண்டு மட்டும் தான் உள்ளது. தேவாலயத்திலிருந்து அந்த வீட்டிற்கு நடந்து செல்ல நூறு அடிதான். இந்த நூறு அடியையும் அந்த மணலிலே வெயிலிலே நம்மால் நடந்து செல்ல இயலாது.

இந்த தேவாலயம் அவ்வளவு நேர்த்தியாக எண்ணி எண்ணி கட்டப்பட்டது. அந்த கோபுரமணியினுடைய ஓசை தனியாக இருக்கும். அது கால்டுவெல்லுடைய தம்பி ஐரோப்பாவிலிருந்து வாங்கி அனுப்பியது என்று சொல்கிறார்கள். இந்த கோபுர மணிக்குச் செல்லும் படிக்கட்டுகள் கூட கலை நேர்த்தியுடன் செய்யப்பட்டிருக்கின்றன. கால்டுவெல்லுடைய விருப்பப்படி, கொடைக்கானலிலே கால்டுவெல் இறந்தாலும் மூன்று நாட்களாக அந்த உடலைப் பாதுகாத்து மலையிலிருந்து டோலி கட்டிக் கீழே கொண்டுவந்து - அன்றைக்கு அதானே சாத்தியம் - அங்கிருந்து ரயிலிலே மதுரை கொண்டுவந்து, அப்படியே திருநெல்வேலி கொண்டுவந்து, அங்கிருந்து பீட்டன் அல்லது சாரட் என்று சொல்லக்கூடிய குதிரை வண்டியிலே பாளையங் கோட்டை தேவாலயத்தில் வைத்து பூசைசெய்து, இடையன் குடிக்குக் கொண்டு சென்று அந்த தேவாலயத்திலே அடக்கம் செய்திருக்கிறார்கள். அவர் மனைவியும் அங்கேதான் அடக்கம் செய்யப்பட்டார். ரொம்ப பெரிய வியப்பு இதுதான்.”

ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் சொகுசாக வாழ்க்கையைக் கழித்த பல ஆங்கிலேயர்களுக்கு மத்தியில், கால்டுவெல் தேர்ந்தெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கை முறை வணக்கத்திற்கு உரியது.

idaiyankudi churchமதம் மாற்றும் நோக்கத்தோடு மட்டுமே அப்பகுதி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளை கால்டுவெல் செய்து கொடுத்தார் என்றுகூட சிலர் சொல்லலாம். கிறிஸ்தவ மிஷினரிகளை ஏகாதிபத்தியத்தின் கைப்பாவைகள் என்றும், பிரெட், பால் கொடுத்து மதம் மாற்றினார்கள் என்றும் பலர் குற்றம் சாட்டுவது உண்டு. கல்வி கொடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விடுவார்கள் என்று கல்வியை மறுத்த பார்ப்பனிய – முதலாளித்துவ சுரண்டலுக்கும், கல்வி, வேலைவாய்ப்பு கொடுத்து தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கி விட்ட கிறிஸ்தவ – ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது! இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவம் ஆற்றிய அளப்பரிய பணிகளை, ஏகாதிபத்தியம் என்ற ஒற்றைச் சொல் கொண்டு அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

***

இந்துக் கோவில்களில் மதிய நேரங்களில் நடை சாத்திவிடுவார்கள். வேலைகளில் மும்முரமாக இருக்கும் மதிய நேரங்களில் யாரும் கோவிலுக்குச் செல்வதில்லை என்பதாலும், உழைத்து(!), களைத்துப் போகும் பார்ப்பன பூசாரிகளின் ஓய்விற்காகவும் நடை சாத்திவிடுவார்கள். கிறித்துவ தேவாலயங்களில் நடை சாத்தும் பழக்கம் இல்லை என்றாலும், மேற்சொன்ன காரணங்கள் அங்கேயும் பொருந்துகிறது போலும். நாங்கள் போன நேரத்தில் (மதியம் இரண்டு மணிக்கு மேல்), பொதுமக்களும் இல்லை; பாதிரியாரும் இல்லை. நாங்கள் யாரைக் காணச் சென்றோமோ, அந்த கால்டுவெல், எலீசா அம்மையாரோடு நாங்கள் தனித்து விடப்பட்டோம்.

எந்த வழிபாட்டுத் தலத்திலும் நுழைவாயில் நடுவில் இருக்கும். ஆனால், இடையன்குடியில் கால்டுவெல் அதை ஓரமாக வைத்துள்ளார். காரணம் என்னவென்றால், தேவாலயம் முச்சந்தியில் அமைந்துள்ளது. கிராமங்களில் நடக்கும் நாட்டார் தெய்வ திருவிழாக்களில் மேளதாளத்துடன் வரும் சாமி ஊர்வலம், சிலுவைக்கு நேரெதிரே அமையும் என்பதால், கால்டுவெல் வாசலை ஓரத்திற்கு மாற்றினார் என்று சொல்கிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்பம் சாப்பிட்டு வெறுத்துப் போன இயேசு, கிடா வெட்டுக்கு ஆசைப்பட்டு தேவாலயத்தை விட்டு இறங்கி விடலாம் என்ற அச்சம் கால்டுவெல்லுக்கு இருந்திருக்கலாம் போல!

வழிபாட்டுத் தலங்களில் – அது இந்து, முஸ்லிம், கிறித்துவ மத இடங்களாக இருந்தாலும் - நான் எப்போதும் ரசிப்பது, அதன் உயரமான மேற்கூரை. 22 வயது வரை நான் வசித்த ஓட்டு வீட்டின் உயரம் வெறும் 7.5 அடிதான். 6 அடி உயரமுள்ள நான், சற்று அண்ணாந்து பார்த்தாலே, ஓடு இடிப்பது போல் தோன்றும். அதுவும் ஒரு பகுதியில் மின்விசிறி மாட்டியிருப்பார்கள். சோம்பல் முறிப்பதற்காக கையை உயர்த்தினால்கூட, மின்விசிறியில் அடிபடும். மச்சு வீட்டிற்குள் நுழைந்தால், தலைக்கும் கூரைக்கும் இடையே அரை அடி வித்தியாசம் கூட இருக்காது. அதனால் உயரமான மேற்கூரை உள்ள எந்தவொரு இடத்தைப் பார்த்தாலும், அந்த பிரமாண்ட அழகு என்னை வசீகரித்துவிடும்.

பீஜப்பூர் கோல்கும்பாஸ் மசூதியைப் பார்த்தபோது, நான் அடைந்த பிரமிப்பையும், ஆனந்தத்தையும் அவ்வளவு எளிதில் விவரித்து விட முடியாது. அவ்வளவு உயரமாக, பரந்த மேற்கூரை உடைய கட்டடம் அது. கால்டுவெல் கட்டிய தேவாலயம் அந்தளவிற்கு உயரம் இல்லை என்றாலும், 66 அடி உயர கோபுரத்துடன் கூடிய, அண்ணாந்து ஆச்சரியப்பட வைக்கும் உயரம் உடையதுதான்.

கோதிக் கட்டடக் கலை முறையில் அதாவது இந்தோ – கிரேக்க முறையில் இந்த தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பை இராபர்ட் டெய்லர் என்பவர் இங்கிலாந்தில் இருந்து அனுப்பி இருக்கிறார். தேவாலயத்தின் உட்புற வடிவமைப்பு – அதாவது திருப்பீடம், கதவுகள், ஜன்னல்கள், வளைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, இராபர்ட் கால்டுவெல் களிமண் மாதிரி செய்து கொடுத்து இருக்கிறார். அந்த மாதிரிகளைப் பார்த்து, வேலையாட்கள் தேவாலய உட்புறத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். தேவாலயத்தில் பொருத்துவதற்கு நான்கு மணிகளை கால்டுவெல்லின் சகோதரர் ஜேம்ஸ், இலண்டனில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறார். இந்த மணிகளில் இருந்து எழும்பும் ஓசை மிகவும் இனிமையாக இருக்கும் என்றும், தெற்காசியாவில் இருக்கும் சிறந்த மணிகளில் இவையும் ஒன்றாகும் என்றும் தேவாலயத்தின் முகப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாங்கள் சென்றிருந்தது பிற்பகல் நேரமாக இருந்ததால், அந்த மணி ஓசையைக் கேட்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை.

தேவாலயத்தின் உள்ளேதான் கால்டுவெல், எலீசா அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இருவரைப் பற்றிய சிறுவிளக்கக் குறிப்புகளும் அங்கு இடம் பெற்றிருக்கின்றன. எலீசா அம்மையாரைப்  பற்றிய குறிப்பில் ‘இந்தப் பீடஸ்தானத்தின் அடியில் மகாகனம் கால்ட்வெல் பிஷப் அவர்களுக்குச் சமீபமாய் அவர்கள் பத்தினியாகிய எலைசா அம்மாளவர்களின் சரீரம் இளைப்பாறுகிறது’ என்றும், அவரது தந்தையாரின் பெயர் ‘சார்லஸ் மால்ட் ஐயர்’ என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஹேமாவிடம் அதை சுட்டிக் காட்டி, “கிறித்துவ மதத்திற்கு மாறிய மக்கள், இந்து மதத்தில் இருந்து சாதியை மட்டுமல்லாது, பெண்களுக்கு மட்டுமேயான ‘கற்பு’ நெறியையும் சேர்த்தே எடுத்துப் போயிருக்கிறார்கள். ஐரோப்பியராக இருந்ததால் ஐயராக்கி விட்டார்கள். கறுப்பினத்தவராக இருந்திருந்தால் பறையராகவோ, பள்ளராகவோ ஆக்கி இருப்பார்கள்” என்றேன்.

caldwell statue 450“ஹேமா! கால்டுவெல் மீது நான் இவ்வளவு நேசம் கொண்டிருப்பதற்கு அவரது சமுதாயப் பணிகளோடு, அவரது ஆய்வுப் பணிகளும் மிக முக்கிய காரணம் ஆகும். சூத்திரர்கள் என்றும், அவர்ணர்கள் என்றும் நம்மை ஒதுக்கிய ஆரிய மதம் தான் தங்களது மதம் என்று நம்பும் நிலையில்தான் தமிழ் மக்கள் இப்போதும் இருக்கின்றனர். தங்களுக்கென தனிக் கலாச்சாரம் கிடையாது; ஆரியக் கலாச்சாரத்தின் சாதி அடுக்குமுறையில் அழுந்தப்பட்டு, தங்களுக்கு கீழே ஒரு சாதி இருக்கிறது என்ற அற்ப மகிழ்ச்சியில் வாழும் நிலையில் தான் பன்னெடுங்காலமாக தமிழர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். தமிழ் மொழியை விட சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என்ற கருத்தும் திணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ‘இந்த இழிவான ஆரியக் கலாச்சாரம் உன்னுடையது அல்ல; உனக்கென்று ஒரு தனித்த திராவிடக் கலாச்சாரம் உள்ளது; யாரையும் ஆண்டான், அடிமை என்று பிரித்துப்  பார்க்காத, மக்களில் உயர்வு, தாழ்வு புகுத்தாத பெருமைக்குரிய வரலாறு உடையவர்கள் நீங்கள்; தமிழ் மொழியும், அதன் தொன்மையும் உலகின் எந்தவொரு மொழிக்கும் பிந்தையது இல்லை; தமிழில் இருந்து திரிந்து, பிறந்தவையே தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு ஆகியன; ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடக் கலாச்சாரம் வேறு’ என்று பேசுவதுதான் திராவிட அரசியல். உன் மதம், உன் கடவுள், உன் மொழி எனக்கு வேண்டாம் என்று நாம் கலகக் குரல் எழுப்புவதற்கான வலுவான கருத்தியல் ஆயுதங்களாக தனது ஆய்வு முடிவுகளைத் தந்தவர் இராபர்ட் கால்டுவெல் அவர்கள். ஆனால், அவரை ஐயர் என்றும், அவரது மாமனாரை ‘சார்லஸ் மால்ட் ஐயர்’ என்றும் அழைக்கும் இழிநிலையில்தான் நாம் இன்னும் உள்ளோம்.” என்று வேதனையுடன் கூறினேன்.

ஹேமா அப்போது ஒன்றைக் குறிப்பிட்டாள். “இருபது ஐந்து வயதிற்குப் பின்னரான எனது எட்டாண்டு வாழ்க்கை மிகவும் கொடுமையானது. தனிமையும், எதிர்காலம் குறித்த அச்சமும் நிறைந்த காலமது. என் வாழ்க்கையில் மட்டும் ஏன் சந்தோஷம் இல்லாமல் போனது? எனது துயரத்திற்கு வடிகாலாக பைபிளின் வரிகள் இருந்தன. ‘வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்’ என்ற வரிகள் எனக்காகவே எழுதப்பட்டது போலிருந்தது. மகிழ்ச்சியே இல்லாத வாழ்வைத் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால், ஏதாவது  ஒரு நம்பிக்கையும், ஆறுதலும் வேண்டுமல்லவா? அதை கிறித்துவம் எனக்குக் கொடுத்தது. எனது துயரங்களைக் கேட்ட பாஸ்டர், ஒரு ஞாயிற்றுக் கிழமை கூட்டுப் பிரார்த்தனையின்போது, ‘இன்று சகோதரி ஹேமாவின் துயரமான வாழ்வில் சந்தோஷம் பொங்கவும், அவர் விரும்பும் நல்வாழ்வு அவருக்குக் கிட்டவும் கர்த்தரிடம் நாம் எல்லோரும் மன்றாடி, பிரார்த்தனை செய்வோம்’ என்று எனக்காக எல்லோரையும் பிரார்த்திர்க்கச் செய்வார். நமது துயரத்தில் பங்கு கொள்ளவும், ஆறுதல் சொல்லவும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற எண்ணமே, என்னைத் தொடர்ந்து கிறித்துவத்தில் ஈடுபடுத்தியது.

கிறித்துவக் கூட்டங்களுக்குப் போவதற்கு வீட்டில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்தாலும், எனக்கு ஒரு மனமாற்றம் கிடைக்கட்டும் என்று கருதி விட்டுவிட்டார்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ‘ஏன் திட்டங்குளம் சர்ச்சுக்குப் போக வேண்டும்? வேறு சர்ச்சுக்குப் போகக்கூடாதா?” என்று கேட்டார்கள். காரணம், திட்டங்குளம் சர்ச் பள்ளர் சாதி மக்களுக்கானது. பாஸ்டரிடம் சொன்னபோது, அவர் கூறினார், “பள்ளர்களுக்கானது என்பதால்தான், இந்த சர்ச் சரியான கட்டடம் கூட இல்லாமல் சிறிய கூடாரத்தில் இருக்கிறது. கோவில்பட்டி சர்ச்சுக்கு கிடைக்கும் நிதியுதவி, திட்டங்குளத்திற்குக் கிடைப்பதில்லை. கிறித்துவத்தில் சாதி இல்லை என்றாலும், கிறித்துவத்திற்கு மாறிய மக்களிடம் சாதி இன்னமும் இருக்கிறது’ என்றார்.

திட்டங்குளத்திற்குப் போய்விட்டு, ஒரு நாள் திரும்பும்போது எனது ஸ்கூட்டர் பழுதாகி நின்றுவிட்டது. அந்த வழியாக வந்த, எனது அண்ணனின் நண்பர், “ஹேமா! இங்க ஏன் நிற்கிறே? இது பள்ளப் பயலுகள் இருக்கிற ஏரியா…! இங்க எல்லாம் தனியா வரக்கூடாது” என்று அவரது காரில் என்னை ஏற்றி, வீட்டில் விட்டுவிட்டுச் சென்றார். அதோடு, என்னை திட்டங்குளத்திற்கு எல்லாம் அனுப்ப வேண்டாம் என்று வீட்டில் சொல்லி விட்டுப் போனார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர், ‘நம்ம சாதிப் பொண்ணுகளை எல்லாம் பள்ள சாதிப் பையன்கள் கூட்டிக்கிட்டு போயிறாங்க…’ என்று சொல்லி, சாதி ஆட்களை எல்லாம் திரட்டி, அதற்கு எதிராக என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொடுத்தவர். அவரது கேள்வியும் என்னவென்றால், ‘ஏன் கோவில்பட்டியிலேயே சர்ச் இருக்கும்போது, திட்டங்குளத்திற்குப் போக வேண்டும்?’ என்பதுதான்.

ஆனால்,  நான் தேடிய ஆறுதல் திட்டங்குளத்தில் கிடைத்ததால், நான் வேறு எந்த சர்ச்சுக்கும் போகவில்லை. திட்டங்குளத்திற்குப் போய் வந்த அந்த நான்கு ஆண்டுகளில், பள்ளர் சாதி மக்களிடம் இருந்து எனக்கு எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை” என்று கூறினாள்.

“அவர்கள் ஏன் பிரச்சினை செய்யப் போகிறார்கள், ஹேமா? இவர்கள் அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் என்று 26, 27 வயது வரைக்கும் பெண்களை வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, பழியை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போடுவது என்ன நியாயம்?”

***

நாங்கள் இருந்த அந்த அரைமணி நேரத்தில் ஒருவர்கூட தேவாலயத்திற்கு வரவில்லை. தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் நிதானமாக சுற்றிப் பார்த்தோம். பின்பு அங்கிருந்து கால்டுவெல் வசித்த வீட்டை நோக்கி நடந்தோம். ஓட்டு வீடுதான் என்றாலும் விசாலமான வீடாக இருந்தது. முகப்பில் கால்டுவெல் அவர்களின் மார்பளவு வெண்கலச் சிலை இருந்தது. 17-02-2011ம் தேதி, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் இந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, இதுவரை நன்றாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் ‘அம்மா’ காதுக்கு போகாமல் இருக்க வேண்டும். போனால், கால்டுவெல் இல்லத்தை ‘இடையன்குடி மகப்பேறு மருத்துவமனை’யாக மாற்றினாலும் மாற்றி விடுவார்.

caldwell house 445

(கால்டுவெல் வாழ்ந்த வீட்டின் பின்புறம்)

கால்டுவெல் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரிய புகைப்படங்கள், தேவையான குறிப்புகளுடன் வீடு முழுக்க வைக்கப்பட்டு இருக்கின்றன. கால்டுவெல் காலத்து இடையன்குடியையும், தற்போதைய இடையன்குடியையும் ஒப்பிட்டுக் காணும்படியான புகைப்படங்கள், அவரது கைப்பட எழுதிய கடிதம், அவர் பயன்படுத்திய முத்திரை, அவருடன் இருந்த உபதேசிமார்களின் புகைப்படங்கள் ஆகியனவும் இருந்தது. அதோடு அவர் பயன்படுத்திய மேல் அங்கி ஒன்றும் கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கால்டுவெல் பெயரில் ஆய்வு நூலகம் ஒன்றும் அந்த இல்லத்தில் இயங்கி வருகிறது. வீட்டின் பின்புறம் அழகான தோட்டம் ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கால்டுவெல் என்று இணையத்தில் தேடினால், ஓரிரு புகைப்படங்கள் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், இந்த நினைவு இல்லத்தில் பல அரிய புகைப்படங்கள் இருக்கின்றன. எனது கேமிராவில் அவற்றை பிரதி எடுக்க முயன்றபோது, போதிய வெளிச்சம் இல்லாததால், சரியாக வரவில்லை. இத்தகு புகைப்படங்களை scan செய்து, தேவைப்படுவோர் ‘copy’ எடுத்துக் கொள்ளும்படியான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா போகிறோம் என்று குழந்தைகளை ஊட்டி, கொடைக்கானல் என்று கூட்டிப் போகத்தான் பெற்றோர்கள் விரும்புகின்றனர். சமூகத்திற்குப் பயன் தரும்படி வாழ்ந்து, மறைந்துவிட்டுப் போன மூத்தோர்களின் இல்லங்களுக்கு நமது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களது வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து, மறைந்த இடங்களில் வைத்துச் சொல்லும்போது அது நிச்சயம் அடுத்த தலைமுறையினரின் மனங்களில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்த முறை இந்தப் பக்கமாக வரும்போது எங்களது மகளை இங்கு அழைத்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் இடையன்குடியை விட்டுக் கிளம்பினோம். தென்னிந்தியாவின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான மணப்பாடு நோக்கி எங்கள் வண்டி ஓடத் தொடங்கியது.

- கீற்று நந்தன்