sothuparai

தேனி மாவட்டம் இயற்கையிலேயே பசுமையும், அணைகளும், ஆறுகளும், ஏரிகளும் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில் வைகை அணை, மஞ்சளார் அணை, சோத்துப்பாறை அணை, பச்சிலைநாச்சியம்மன் அணை உள்ளிட்ட பல அணைகளும், சுருளி அருவி, கும்பக்கரை அருவி, மேகமலை அருவி, எலிவால் அருவி என பல அருவிகளும் உள்ளன‌. இம்மாவட்டத்தின் மற்றுமொரு சிறப்பு தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய சந்தை தேனி சந்தை ஆகும். இதுபோல தமிழகத்தின் இரண்டாவது உயரமான அணை சோத்துப்பாறை அணையாகும்.

சோத்துப்பாறை பெயர் வரக் காரணம்

பண்டைய காலத்தில் சோத்துப்பாறையில் மழை பொழியாவிட்டால் 12 கலம் நெல்லைக் குத்தி அனைவருக்கும் பொதுவாக அன்னதானம் வழங்குவார்களாம். பிரார்த்தனைக்குப் பிறகு வாழை இலை போடாமலேயே பாறையைக் கழுவி உணவு படைப்பார்களாம். பாயாசம் சாப்பிட்டவுடன் மழை கொட்டுமாம். இப்படியொரு மூடநம்பிக்கையின் காரணமாகவே சோத்துப்பாறை எனப் பெயர் வந்தது.

பேரீஜம் ஏரி

மேற்கு மலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பழனிமலைத்தொடரில் அமைந்துள்ளது பேரீஜம் ஏரி. இந்த ஏரிதான் சோத்துப்பாறை அணைக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேற்குமலைத் தொடர்ச்சியில் இருந்து 2090 மீட்டர் அடி உயரத்தில் பழநிமலையில் உற்பத்தியாகி, கிழக்குச் சரிவின் வழியாக சுமார் 28 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்து ஆறாக வருகிறது. அந்த ஆற்றிற்கு வராகநதி என்று பெயர் வைத்துள்ளனர்.

sothuparai

கி.பி.1891 ஆம் ஆண்டு சுகாதாரப் பொறியாளராக பணியாற்றிய ஜோன்ஸ் என்பவரால் பெரியகுளம் நகருக்குத் தேவையான குடிநீர்திட்டம் ஒன்றை ரூ.1,25,000 மதிப்பீட்டில் தயார் செய்து மதராஸ் கவர்மெண்டிற்கு அனுப்பினார். கி.பி.1895 ஆம் ஆண்டு மேற்குமலைத் தொடர்ச்சியில் அமைந்துள்ள பேரீஜம் ஏரியிலிருந்து தண்ணீரை பெரியகுளத்திற்கு கொண்டு வருவதற்கு அன்றைய ஜமீன்தார் திவான் பகதூர் வெங்கிட்ட ராமபத்ர நாயுடு நடவடிக்கை மேற்கொண்டார். சுமார் 65 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து குழாய்த்தொட்டி என்ற இடத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது

சோத்துப்பாறை அணை

இரண்டு உயர்ந்த மலைகளுகளுக்கிடையே வருகின்ற ஆற்றை மறித்து அணைக்கட்டும் திட்டம் உருவானது. சோத்துப்பாறை அணைத்திட்டத்திற்குத் தேவையான நிலங்கள் 1982 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. கையகப்படுத்துவதில் 14.55 ஹெக்டேர் நிலம் வனப்பகுதியாக இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டு ஆரம்ப கால கட்டுமானப் பணிகள் 1985 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இரண்டுமலைகளுக்கு இடையே அணைக்கட்டுமானம் பணி துவங்கி 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதன் பின்னர் 15.11.2001 ஆம் ஆண்டு மாலை 6.40 மணிக்கு முதன்முதலாக‌ அணை நிரம்பியது. 21.11.2001 ஆண்டு தேனி மாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த் முன்னிலையில் அணை திறக்கப்பட்டது.

அணையின் பின்புறம் காட்டுமாடுகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீரை அருந்தும். இதனைப் பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். சோத்துப்பாறை அணையின் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். இவை தவிர அணையில் வழிந்தோடி வரும் நீரில் குளித்து மகிழலாம். மேலும் அணையிலிருந்து பார்த்தால் பெரியகுளம் நகரைக் காணலாம். கண்ணுக்கு எட்டிய வரை மாந்தோப்புகள் அதிகமாக இருக்கும். அணைக்கு மேலே டைகர் பால்ஸ் என்ற அருவி உள்ளது. அணையில் பல பூங்காக்கள் உள்ளன‌. குடும்பத்துடன் சென்றால் கட்டணமில்லாமல் கண்டு களிக்கலாம்.

அணையின் நீரியல் விபரங்கள்

sothuparai

அணையின் மொத்த நீளம் 345 மீட்டர் ஆகும். நீர்வரத்தின் பரப்பு 38.40 சதுரகிலோ மீட்டர் ஆகும். நீர்வரத்தின் முழுக்கொள்ளவு 100 மில்லியன் கன அடி. அணையின் அதிகபட்ச உயரம் 57 மீட்டர் ஆகும். அணையின் மேல்மட்ட அகலம் 7.32 மீட்டர் ஆகும். இந்த அணையினால் நன்செய் பாசனப்பரப்பு 1825 ஏக்கர், புன்செய் பாசனப்பரப்பு 1040 ஏக்கர் ஆகும். இதனால் தென்கரை, தாமரைக்குளம் உள்ளிட்ட கிராமங்கள் பயனடைகின்றன‌. இவை தவிர சோத்துப்பாறை கூட்டுக்குடிநீர் திட்டதின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தியாகின்ற‌து.

எப்படிச் செல்வது?

பெரியகுளத்திலிருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் வழியில் அரசமரத்தில் பனைமரம் வளர்ந்துள்ள அதிசயமான இடம் உள்ளது. பெரும்பாலும் அரச மரத்தில் ஆலவிதைகள் இருக்கும். ஆனால் அரசமரத்தில் இரண்டு பனைமரங்கள் வளர்ந்துள்ளதைக் காணலாம். பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ.தூரம் உள்ளது. பெரியகுளத்திலிருந்து அரசுப்பேருந்து உள்ளது. பெரியகுளத்திலிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

- வைகை அனிஷ்