தனி தாய்மாரது வாழ்க்கை பல கடினங்களைக் கொண்டது. தந்தை-கணவன் அற்ற இவர்களது வாழ்க்கை பணத்திற்கு அப்பால் பள்ளங்களைக் கொண்டது. எங்களது சமூகத்தில் தனித் தாய்மாரை பல சமயங்களில் பணம் காய்க்கும் மரமாக பார்ப்போர் அதிகம். ஏனெனில் சமூகக் கொடுப்பணவுகள் அதிகம். இதற்காகவே சேர்ந்து வாழும் குடும்பங்களும், பிரிந்து வாழ்வதாக காட்டிக் கொள்வது இன்று எமது சமூகத்தில் இயல்பு வாழ்வாக மாறிவிட்டது. பொதுவாக போரின் பின்னால் பல சமூக கொடூரங்களை இயல்பாக ஏற்றுக் கொண்டு விட்டோம். வங்கிக் கொள்ளைகள் போருக்காக என்ற சமாதானத்துடன் தொடங்கி, இன்று கிரடிட் காட், வங்கி அட்டைகள் கொள்ளை என்பனவற்றையும், எமது இயல்பு வாழ்விற்கான காரணிகளாக ஏற்றுக் கொண்டு விட்டோம்.

இவற்றிக்கான எதிர் நிலைகளை இது வரை நாம் வெளிப்படுத்தவில்லை. இதன் வெளிப்பாடு எமது அடுத்த சந்ததியையே சென்றடைகின்றது. அவர்கள் தான் இதன் பலாபலன்களை அனுபவிக்கின்றார்கள். வட அமெரிக்காவில் குற்றம் புரியும் இளைஞர்கள், இளைஞிகளில் குறிப்பிடத்தக்க விகிதத்தினர் தனித் தாய்மார்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்ற கருத்து நிலைக்கு சாதகமான சூழலே இன்றுள்ளது. இவ்வாறான இச்சூழலில் தனித்தாயால் வளர்க்கப்படும் இரு சிறுவர்களைப் பற்றிய சுவீடன் நாட்டுப் படமே “நாயைப் போல் எனது வாழ்க்கை”. 1987ல் வெளிவந்த இப்படம் உலக சினிமாவில் குறிப்பிடத்தக்க படம். இதனை சிறுவர்களுக்கான பிரச்சினையாக பார்க்காது ஓர் சீரிய பிரச்சினையாக இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இரயில் தனித்துப் பயணிக்கும் இக்மரின் கேள்விகள் எல்லாம் “சந்திர மண்டலத்திற்கு, தனித்து அனுப்பப்பட்ட நாயைப் பற்றியது. நாயின் அனுமதியின்றி போதிய உணவின்றி நாயை அனுப்பியுள்ளார்கள்”. இவன் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கின்றான்? அவனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன..

தந்தை வாழைப்பழ ஏற்றுமதி வியாபாரி. கப்பலில் வாழ்க்கை. இவர்களுடன் இல்லை. பிரிந்து சென்று விட்டார். தாய் இக்மரையும், அவனது அண்ணனையும் வளர்க்கின்றார். இயல்பான குறும்புகள். ஒரு தடவை தனது நண்பர்களுக்கு பிள்ளை உருவாக்கம் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருக்கும் அண்ணனின் பரிசோதனைக் கருவியாக, இக்மர் செயல்பட போத்தலை தனது ஆண் குறிக்குள் புகுத்தி போத்தலை வெளியே எடுக்க முடியாமல் திணற, தாயால் காப்பாற்றப்படுகின்றான். தாய்க்கும் இவனுக்குமான நெருக்கம் அதிகம். தாய்க்கு காசநோய் வந்துவிடுகின்றது. தாய்க்கு ஓய்வும் அமைதியும் அவசியம். தாய் தனது இரு பிள்ளைகளையும் திசைக்கு ஒன்றாக, இக்மரை தனது ஒரு சகோதரனிடமும், எரிக்கை மற்றொரு உறவினரிடமும் அனுப்புகின்றாள். இக்மரின் புது வாழ்வு ஆரம்பம் சிறப்பானது. புது உறவு, நம்பிக்கை உற்சாகம் தருகின்றது.

தாயைப் பார்ப்பதற்கு திரும்புகின்றனர் சகோதரர்கள். தாயுடன் இருந்த ஒரு சில நாட்களிலேயே தாய்க்கு நோய் முற்றிவிடுகின்றது. வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றாள். தாயை வைத்தியசாலையில் பார்க்கும் இக்மர் கிறிஸமசுக்கு என்ன வேண்டும் எனக் கேட்கின்றான். அவனுக்கு தாய் மரணத்தை நோக்கி செல்வது தெரியாது. மீண்டும் சகோதரர்கள் பிரிந்து செல்கின்றனர். இப்பொழுது இக்மருக்கு புதிய பிரச்சினைனகள். இகமர் தங்கியிருந்த மாமாவின் வீடு, மாமாவின் தொழிற்சாலைக்கு சொந்தமானது. அங்கு வேறு தொழிற்சாலை விருந்தினர்கள் தங்கியிருக்கின்றனர். பகலில் மாமாவுடனும், இரவில் மாமியின் தாய் தங்கியிருக்கும் சிறு வீட்டிற்குமாக அழைகின்றான். மாமா தங்கியிருந்த வீட்டு பின் புறத்தில் நாய்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட வீடு ஒன்றுள்ளது. இப்பொழுது இக்மரின் புது வீடாக அது மாறிவிட்டது. ஒரு நாயைப் போல் அவனது வாழ்வும் அந்தரத்தில் தொங்குகின்றது. எதுவும் நிரந்தரமற்று அலைகின்றான்.

தாயின் இறப்புச் செய்தி அவனை உலுக்கிவிடுகின்றது. இப்பொழுது முதன் முறையாக தாயின் இழப்பின் கொடூரத்தை உணர்கின்றான். தாயுடன் கழித்த காலங்களை நினைத்துப் பார்க்கின்றான். அவனது நினைவுகளில் வெளிப்படுவது, “தாயை தான் கொடுமைப்படுத்திவிட்டேனோ” என்பது. நினைவுகள் பசுமைக்குப் பதிலாக கேள்விகளையே எழுப்புகின்றன. எனது வாழ்வு எப்படிப்பட்டது.? சந்திரமண்டலத்திற்கு செல்லும் நாயுடன் ஒப்பிட்டு சமாதானம் காண்கின்றான். இப் படத்தின் கதை 1950களை மையமாகக் கொண்டது. 57ல் சோவியத் யூனியன் லைக்கா என்ற நாயை ஸ்புடினிக் என்ற விண்கலத்தில் அனுப்பியது.

படம் இக்மரின் வாழ்வு ஓர் நிரந்தரமற்ற வாழ்க்கையுடன், அவனது வயதில் ஏற்படும் பருவ மாற்றங்களுக்கான தேடலையும், அது ஜரோப்பிய சூழலில் பெரியோரால் மாசுபடுத்தப்பட்ட பிம்பங்களாக இச்சிறுவர்களை சென்றடவதையும் பதிவு செய்துள்ளது. மிக முக்கியமான விடயம் படமாக்கப்பட்ட முறை பார்வையாளர்களையோ இப் படத்தை பார்க்கும் சிறுவர்களையோ பரவசப்படுத்தவோ, உணர்வுகளை தூண்டும் விதத்திலோ படமாக்காப்டவில்லை. இது தளத்திலும், இந்திய தளத்திலும் இருந்து மாறுபட்டுள்ளது. தேவையற்ற குளோசப் காட்சிகள் இல்லை. பாத்திரங்களுக்கும், சூழலுக்குமான இடைவெளி மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்ட்டுள்ளது. இது காட்சிகள் மீதான பார்வையாளார்களுக்கான நெருக்கத்தை அதிகரித்துள்ளது.

இக்மரின் தாய் புத்தகங்களுக்குள் தனது நோயை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். நீண்ட வாசிப்பு அனுபவம் கொண்டவர். நோயின் உச்சத்தில் தாயின் புத்தகங்களை தட்டும் இக்மருக்கு கிடைப்பதெல்லாம் தூசியே. மற்றொரு காட்சியில் தாயின் கட்டிலில், தாய் புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்பார். இக்மர் கட்டிலில் குத்துக் கரணம் அடித்துக் கொண்டிருப்பார். இயல்பான காட்சிப் படிமங்கள். இக்மரின் உளவியலையும், தாயின் அக உளைச்சலையும் அழகாக பதிவுசெய்துள்ளது. படம் 50 களில் உள்ள சுவீடன் புற நகர்ஊடாக பயணிக்கின்றது. உதைபந்தாட்ட வீரர்கள், தொழிற்சாலை, நிர்வாண மொடல்கள், குளிரில் நீந்துபவர்கள் என்ற மத்திய வர்க்க சமூகத்திற் ஊடாக இக்மரை காவிச் செல்கின்றது. இங்கு தான் இக்மர், தான் ஓர் அனாதையாக்கப்பட்டவன் என்பதை தெரிந்து கொள்கின்றான். அதனை உணர்கின்றான். அதே சமூகத்தில் தான் மரணத்தின் விளைவுகளையும், செக்சின் பரிமாணங்களையும் கற்றுக் கொள்கின்றான். லைலா நாயுடன் தன்னை ஒப்பிட்டு அமைதி காணும் இக்மர், நாய்க்கும், தனக்குமான சுதந்திரம் ஒன்று தான் என்பதன கண்டு கொள்கின்றான். சிறுவர்களிடம் அவர்களது விருப்பு வெறுப்புக்களை நாம் கேட்பதில்லை.

80களில் வெளிவந்த பாலுமகேந்திராவின் “அழியாத கோலங்கள்” என்ற படமும் பரதனின் ரதிநிர்வேதம் படமும் சிறுவர்களின் செக்ஸ் தேடலை பதிவு செய்துள்ளது இப்படத்தை பார்த்த பின்னர் பாலுவின் படத்தை மீண்டும் விடியோவில் பார்த்த பொழுது. பாலு செக்சினால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்கள் பார்வையாளர்களிடம் தோன்றவேண்டும் என்ற நோக்கத்துடனேயே காட்சிகளை பதிவு செய்துள்ளார். இதனை ஓர் வியாபாரயுக்தியாகவே பார்க்கக்கூடியதாகவுள்ளது. பாலுவிடம் சமூக நோக்கம் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அது வெளிப்படுத்தப்படவில்லை.

இக்மருக்கு தனது மாமாவின் தொழிற்சாலையில் வேலை பார்க்கும், அதேசமயம் பகுதி நேர நிர்வாண மொடலின் நட்புக்கிடைக்கின்றது. அப்பெண்மணி மொடலாக வேலை செய்யும் இடத்திற்கும் செல்கின்றான். அவன் தள்ளியே வைக்கப்பட்டுள்ளான். ஓர் மனித உந்தலில் கூரையுடாக பார்க்க முற்படுகின்றான். கீழே விழுந்து காயங்களுக்குள்ளாகின்றான். மொடலின் உடல் காட்டப்பட்டவில்லை. வெகு தூரத்தில் இருந்து அவளது வெளிப்பிம்மம் ஓர் மெழுகுச் சிலையின் வெளிக் கோடுகள் போலவே காட்டப்படுகின்றன. இவ்வாறான காட்சிகளை தமிழ்த்திரைப்படமோ, Hollywood எடுத்திருந்தால் வேறுவிதமான விளைவுகளை நுகர்வோர் மீது ஏற்படுத்தியிருப்பார்கள்.

படத்தில் இறுதி வரை அவர்களது தந்தை காட்டப்படவில்லை. இப்படத்தின் மூல நூலில் தந்தை பற்றிய குறிப்புக்கள் இறுதியில் உள்ளன. ஆனால் இயக்குனர் நூலின் தழுவலாகவே இதனை பதிவு செய்துள்ளார். தந்தைகள், ஆண்களுக்கும் குடும்பத்துக்குமான உறவுகள் மீதான விமர்சனமாகவே தான் இதனை கருதுவதாக இயக்குனர் ஓர் பேட்டியில் தெரிவித்துள்ளார். இன்றைய குடும்பத்தில் ஆண்கள் ஓர் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றனர். ஆண்கள் குடும்பத்தை ஓர் சமூக அந்தஸ்துக்குரிய பொருளாகவும், பாலியல் தேவைக்குரிய பொருளாகவுமே கொள்கின்றனர். இது ஜமேக்காவில் இருந்து யாழ்ப்பாணம் வரை வேறுபடவில்லை.

படத்தின் இறுதியில் இக்மர் “Why did you not want me, Mama?” எனக் கேட்டு தலையணையுள் முகம் புதைத்து அழுகின்றான். இது மிகவும் பயங்கரமான கேள்வி. இக்மரின் அகத் தேடலில் மரணம் பற்றிய கருத்துக்களுடன், இயக்குனரும் இந்த கேள்வியை எமது அகத்திலும் தேடவைக்கின்றார். விடை இலகுவானது எனினும், அது எழுப்பியுள்ள பாதிப்புக்கள் அதிகம். இதனால் தான் இப்படம் இதுவரை வெளிவந்த சிறுவர் பற்றிய படங்களில் மிக முக்கியமானது என விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்படத்துக்காக இயக்குனர் Lasse Hallstrom க்கு ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது. Anton Glanzelius இக்மராக சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் மூல நூல் Mitt Liv Som Hund - My Life as a Dog இதனை எழுதியிருப்பவர் Reidar Jonsson.

ஒரு குழந்தைப் பருவத்தின் கொடுமையான நினைவுகளின் இயல்பான பதிவு இது.

- ரத்தன்