1498 மே மாதம் 20ஆம் தேதி அந்த வெள்லிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கொழிக்கோடு வந்து சேர்ந்தான். இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத்துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனைத் திரவியங்களும் மிகுந்திருப்பதாய் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல் வழியே 1492 -ல் இந்தியாவிற்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த சம்பவத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது.

வாஸ்கோடகாமாவோடு கப்பலில் பயணம் செய்த குழுவில் ஒருவன் எழுதி வைத்த டயரிக்குறிப்பில் அந்தப் பயணத்தின் அதிர்ஷ்டம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பயணம் செய்த குழு தரை இறங்கி விடாரித்துவிட்டு படகில் கப்பலுக்குத் திரும்பியபோது கொண்டு விட வந்த கோழிக்கோட்டுக்காரன் “அதிஷ்டமான பயணம்! மகா அதிஷ்டமான பயணம்! வைரமும் வைடூரியமுமாய் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு தாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.: என போர்ச்சுக்கீசிய மொழியிலேயே பேசியது கண்டு பிரமிப்பு அடைந்து போனார்களாம்.

இந்த பயணம்தான் ஐரோப்பாவிலிருந்து போர்த்துகீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என இந்தியாவிற்கு வியாபாரம் செய்ய வழி அமைத்து கொடுத்தது. இங்கு ஆண்டு கொண்டிருந்த மன்னர்களிடம் மண்டியிட்டு மரியாதை செலுத்தி வியாபாரத்திற்கு அவர்கள் அனுமதி பெற்றுக் கொண்டனர். இந்திய மன்னர்கள் ராஜ்யங்களை பெருக்ச் சண்டையிட்டுக் கொண்டு இருந்தபோது ஐரோப்பியர்கள் மெல்லமெல்ல வியாபாரங்களைப் பெருக்கி இந்தியாவிலிருந்து செல்வங்களைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்கள்.

ஆரம்பத்தில் போர்த்துக்கீசியர்களே இந்திய வாணிபத்தில் பெரும்பங்கு வகித்தார்கள். கி.பி.1600-ல் பிரிட்டிஷ் மகாராணூ எலிசபெத் அனுமதியளித்தார். 1615-ல் மன்னன் ஜஹாங்கீர் அரசவைக்கு கம்பெனியின் ஆட்கள் வந்து சூரத்தில் பண்டசாலை நிறுவுவதற்கு அனுமதி கேட்டார்கள். அதன்பிறகு நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

கிழக்கிந்திய கம்பெனி நூறு சதவீதத்திற்கும் மேலாக லாபம் வைத்து வியாபாரம் செய்தன என்று ஜெம்ஸ் மில் ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு’ நூலில் எழுதியிருக்கிறார். இந்திய மன்னர்களுக்குள்ளே பகைமையை மேலும் வளர்த்து ஆயுதங்களையும் விற்றனர். அவற்றைப் பெறவிரும்பிய மன்னர்கள் அதிக சலுகை காட்டினர். சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மையங்களில் கம்பெனியின் வியாபாரம் விரிந்தது. போர்த்துக்கீசியர் செல்வாக்கு கோவா, டையூ, டாமனில் மட்டுமாய் சுருங்கிப்போனது. பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையில் பலத்த வியாபாரப் போட்டி. இது இந்திய அரசியலிலும் எதிரொலிக்க ஆரம்பித்தது. நொறுங்கிக் கொண்டிருந்த ராJயங்களில் அரசாண்ட மன்னர்கள் தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டுவதற்கு வேற்றுநாட்டவர்களைப் பயன்படுத்த, அந்த அன்னியர்கள் மன்னர்களை பயன்படுத்த ஒரே யுத்தங்களாய் இருந்தன. ஒரு நூறு ஆண்டுகள் இப்படியே கழிந்தன.