மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

Karunanidhiவணக்கம்.

"இலங்கைப் பிரச்னைக்காக இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்று சொன்ன உங்களைப் பாராட்டுகிறேன். எல்லோரையும் ஒன்றாகச் சொல்லிவிட்டு நீங்களே பிரிந்தது ஏன்?

இன்னும் உங்களுக்கு ஒரு ஓரத்தில் மனசாட்சி என்று ஒன்று சிறிதளவேணும் இருந்தால் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவங்கியிருக்கிறார்கள். அதை ஏன் துவங்கினார்கள்? ஈழத் தமிழர்க்காக உங்கள் தலைமையில் போராடுகிறோம், வாருங்கள் என்று வருந்தி வருந்தி அழைத்தார்கள். உடனே என்னை முன்னிறுத்திப் போராடச் சொல்லி என் ஆட்சியைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள் என்றீர்கள். சரி இவரை நம்பினால் ஈழத் தமிழனுக்கு விமோசனம் கிடைக்காது என்று நம்பித்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவக்கினார்கள்.

அதிலும் குறிப்பாக ஏன் அப்படித் துவக்கினார்கள். இதில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் திரள வேண்டும் என்பதுதான் அதன் முதன்மையான நோக்கம். அப்படியே துவக்கினாலும் போராட்டத்துக்கு உங்களை விட்டுவிடாமல் உங்களுக்கும் முறையான அழைப்பை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அனுப்பினார்கள். ஆனால் நீங்களோ என்னை அழைக்கவில்லை என்று முழுப்பொய் சொன்னீர்கள். பழ.நெடுமாறன் உங்களுக்கு அனுப்பிய அழைப்பைச் செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்துக்காட்டி உங்கள் பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்டினார்!

உடனே மருத்துவமனையிலிருந்த உங்களுக்கு இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை என்ற ஒன்றைத் துவக்கியதாக அறிவித்தீர்கள். இதன் மூலம் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்ற உங்கள் வாய்மொழியையே பொய்மொழியாக்கிவிட்டீர்கள். அழைத்தவர்களை விட்டுவிட்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுகிறீர்கள். என்ன அய்யா, இது நியாயம்? இதுவெல்லாம் உங்களின் கைவந்த கலை என்பது எனக்கு நன்கு தெரியும்.

மருத்துவமனையிலிருந்துகொண்டே குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சியாளர்களுக்கு உத்திரவு பிறப்பிக்கும் உங்களின் குடும்பப் பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், "அரசு கேபிள் நிறுவன" அதிகாரியான உமாசங்கரை பந்தாடும் உத்திரவு! பிழைக்கத் தெரியாத ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொணர்ந்தார்!

உங்களாட்சியில் சுமங்கலி வட இணைப்பு நிறுவனத்தின் கருங்காலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார்! ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு என் குடும்பத்தையே கடிக்க வந்தாயா? என்று ஒரு நேர்மையான முதுகெலும்புள்ள ஒரு அதிகாரியை தூக்கி வீசி எறிந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அவர்களே! இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை! ஈழத் தமிழரென்றாலும், அரசுக்கட்டிலானாலும் ஆஸ்பத்திரிக்கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் சிந்தனை உங்கள் குடும்பத்தைச் சுற்றியே என்பது எனக்குத் தெரியாதா? தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியாதா?

இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை அமைத்துள்ள உங்களுக்கு இன்னொன்றைச் சுட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஈழத் தமிழர்களுக்கு உங்களால் விடிவு ஏற்படப்போவதில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஏனென்றால் அன்பழகனார் இலங்கைப் பிரச்னையில் எங்களால் எதுவும் செய்ய இயலாது; தில்லியால் தான் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியும்; நாம் அவர்களுக்கு உணர்த்த மட்டும்தான் முடியும் என்று உங்கள் ஒட்டுமொத்த கையாலாகத் தனத்தை பேரவைக் கூட்டத்திலேயே சொல்லிவிட்ட பிறகு பேரவையின் இலட்சணத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொண்டேன்.

இலங்கைப் பிரச்னையில் நாடகமாடுவது யார்? என்று நீங்கள் ஜெயலலிதாவை நோக்கி விரல் நீட்டியிருக்கிறீர்கள்? உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் முதுகைப் பாருங்கள்.

இலங்கைத் தமிழர்களின் இன்னுயிர்காக்க தங்கள் இன்னுயிரை ஈகிவருவோர் மொழிப்போராட்டத்தை விட வலுவாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்துவருகிறது.
இந்திய அரசு திட்டவட்டமாக இப்போது கைவிரித்துவிட்டது? இனி என்ன செய்யப்போகிறீர்கள்?

இலங்கையரசு போரை நிறுத்தும் பேச்சே இல்லை என்று கொக்கரிக்கிறது

இன்னும் காங்கிரசை நம்பி நாடகமாடமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டுவிட்டது.

காலம்தாழ்ந்தாலும், நீங்கள் இந்த நெருக்கடியான நேரத்திலாவது ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு இது மிகச் சரியான நேரம், முதல்வர் அவர்களே!

சரி விஷயத்துக்கு வருகிறேன். ஈழத் தமிழர்கள் என்றால்தான் தில்லியைக் கைகாட்டுகிறீர்கள்; ஈழத்திலிருந்து உங்களையே நம்பி வந்த இலங்கைத் தமிழர்களை அகதிகள் முகாமில் நீங்கள் எப்படி வைத்திருக்கிறீர்கள்?

தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலை மிகக்கொடுமையானதாக இருக்கிறது. அகதிகளாய் இங்குவந்து, ஏன் வந்தோம் என்ற ஆறாத் துயரில் ஆழ்ந்திருப்போர் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வில்லை?

தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி ஈழத் தமிழர்களை மனித நேயத்தோடு அணுக மறுக்கிறது? ஏன்? குற்றுயிரும் குலையுயிருமாய் இங்கு வந்து, அந்தக் குண்டுகளுக்கே இரையாகியிருக்கலாமோ என்று எண்ணுகிற சூழலை உங்கள் அரசும், மத்திய அரசும் ஏற்படுத்தியுள்ளது வேதனை தரும் ஒன்று; நெஞ்சுள்ளோர் பதறிப்போவார். ஈழத் தமிழருக்கு இராசபக்சே எமன் என்றால் இங்கிருப்போருக்கு நீங்கள் சார்ந்த அரசும்,நடுவணரசும் கொடுந்தீங்கிழைக்கிறது.

இந்திய அரசு அகதிகளைக்கூட ஒரே மாதிரி நடத்த முன்வராமல் ஈழ அகதிக்கு ஒரு நீதியும், திபெத்திய அகதிக்கு ஒரு நீதியும் செய்யும் கொடுமையும் நீங்கள் அறிந்தே நடக்கிறதா? தெரிந்தும் தெரியாததுபோல இதிலும் நடுவணரசுக்கு துணைபோகிறீர்களா?

திபெத்திய அகதி முகாம் எப்படி இயங்குகிறது? ஈழத் தமிழர் அகதிகள் முகாம் எப்படி இயங்குகிறது? அவர்களுக்கு என்னவெல்லாம் இந்திய அரசு சலுகைகளைச் செய்கிறது? திபெத்திய முகாம் உள்ள கர்நாடகாவில் கர்நாடக அரசு செய்யும் உதவிகள் என்ன? ஈழத் தமிழர் முகாம்கள் உள்ள தமிழகத்தில் தமிழக அரசு செய்யும் உதவிகள் என்ன? இத்தனைக்கும் கர்நாடகத்திற்கும் திபெத்தியருக்கும் எந்த ஒட்டுறவும் கூட்டுறவும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்கள், தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பந்தம் உள்ளவர்கள் ஈழத் தமிழருக்காக ஈழத் தமிழர் நல உரிமைப்பேரவை வடிப்பது கண்ணீரா? நீலிக்கண்ணீரா? என்பதை இந்த மடலின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்!

இந்தியாவில் திபெத்திய அகதிகள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிடுகிறேன். ஒட்டும் உறவும் இல்லாத கர்நாடக அரசு செய்து தந்திருக்கும் ஏற்பாடுகளையும் ஓய்வாக மருத்துவமனையின் மலர்படுக்கையிலிருந்தவாறே வசதியாகச் சாய்ந்து கொண்டு படித்துப்பாருங்கள்.
கர்நாடகாவிலுள்ள திபெத்திய அகதிகள் முகாமில் 5,232 அகதிகள் உள்ளனர்.

தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்). தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு 5 மருத்துவர்கள், 15 செவிலியர்களுடன் தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை; அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறைகள்.

ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் 1 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டுள்ளது.

தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.

பின் 11, 12 வகுப்பு பயில அரசே அனைத்து செலவுகளையும் ஏற்று சிம்லா அனுப்பி வைக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க அரசு செலவுடன் முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர அகதிகள் என்ற முத்திரையுடன், கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்.
மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது. 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள். நான்கு வகையான வங்கிகள் சிண்டிகேட் வங்கி,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,கூட்டுறவு வங்கி,வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer வசதிகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்;
சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.

அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress
மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.
அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி
அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.
வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.
கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
திபெத்திய அகதிகள்முகாம் படங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இதை படித்துவிட்டு படங்களைப் பார்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உங்கள் தலைமையில் இயங்கும் அரசு எப்படி வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்த்துப் புளகாங்கிதம் அடையப் போகிறீர்களா? வெட்கித் தலைகுனியப்போகிறீர்களா?

103 முகாம்களில் ஏழத்தாழ 75,000க்கும் மேல் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். தினமும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டும் இருக்கின்றனர். அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள். 90% வீடுகளில் மின்சாரமே இல்லை. பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்றுப் போய் பார்த்துக் கொள்ளலாம்.

பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம். பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட வானமே கூரையாய் குளியலறை.

அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம்தானே. அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கின்ற அவலங்களும் அரங்கேறுவது சாதாரணமானது.

மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்ப்பது அவர்கள் அறியாமை இல்லையா, முதல்வர் அவர்களே!?

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாகச் சொல்கிறது. (மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ள பெருமையான விதயத்தையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது. உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியை தாராளமாக வழங்கியிருக்கிறீர்கள். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும் முதல்வர் அவர்களே! ஈழத் தமிழர்கள் உயர் படிப்பு படித்து என்ன செய்யப்போகிறார்கள்? என்கிறீர்களா முதல்வர் அவர்களே!

குடியிருக்கவே ஏனோதானோவென்று இடம் கொடுத்த உங்கள் ஆட்சியில் கர்நாடக மாநிலம்போல விவசாய நிலம் கேட்பது சரியில்லை, இல்லீங்களா முதல்வர் அவர்களே!?

நாட்டுப் பிரச்சனைகள் பேசினாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் அதையும்கூட முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும், என்ற அதிபயங்கர நிபந்தனையல்லவா விதித்திருக்கிறீர்கள், முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி அளித்திருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே, இதற்கே உங்களுக்க் நன்றி சொல்ல வேண்டும், முதல்வர் அவர்களே.

ஏனென்றால் மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய சாதாரணமாக அனுமதிப்பதில்லை.
கடுமையான நிபந்தனையுடன் வேலைதான் பார்க்கப்போறியா புலிகளுக்கு ஏதேனும் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு போகிறாயா? என்ற நடுவணரசுக்கு விசுவாசமான கேள்விகணைகளுக்கப்பால் அல்லவா அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. இந்தப் பணத்தை அகதிகள் வாங்குவதற்கும் உங்கள் அதிகாரிகள் கொடுப்பதற்கும், அடாடா அதுவும் மேன்மை தங்கிய தங்கள் ஆட்சியில் எனக்கே எழுதக் கூச்சமாக இருக்கிறது முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வும் என்று நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கொடுமை இருக்கிறதே முதல்வர் அவர்களே அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றிப் பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கொடுமை இருக்கிறதே, சிங்கள இராணுவமாய் உங்கள் அதிகார வர்க்கம் அதட்டி,அடக்கி நடத்தும் போக்கு இருக்கிறதே, சிங்களரெல்லாம் எம்மாத்திரம்?

தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சித்திரவதைச் சிறைக்கூடம். நடுவணரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், தங்கள் அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை எங்கு போய்ச் சொல்வது?

திபெத்திய அகதிகளைப் போல் ஈழத்தமிழர்களைப் பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையைப் பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாதத்தினை தமிழினத் தலைவரான நீங்களே தராதபட்சத்தில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற
தங்கள் பம்மாத்து பாவ்லாக்கள் எல்லாம் யாரை ஏமாற்ற? யாரைத் திருப்திப்படுத்த முதல்வர் அவர்களே!

இந்தியாவை/ தமிழகத்தைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் உங்கள் அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிற சூழலை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று பெத்தபேராக வைத்துக்கொண்டால் போதுமா? என்பதைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே!

அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு நீங்களும் துணைபோய்க்கொண்டு நடுவணரசோடு சேர்ந்துகொண்டு ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் இங்கு அகதிகளாய் வந்துள்ள தமிழர்கள் கண்களுக்கும் சுண்ணாம்பு தீட்டுகிறீர்களே, இது நியாயமா?

இராமதாசுக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தேன் என்று தேய்ந்துபோன இசைத்தட்டாக திரும்பத் திரும்பச் சொல்வதை விடுங்கள்; அப்போதும் கூட "இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சொல்லி உங்களின் காங்கிரசு பக்தியை எடுதியம்பியிருக்கிறீர்கள். கடைசிகாலத்தில் அரசு அஹ்டிகாரிகளுக்கு துரோகம், ஈழத்தமிழர்களுக்குத் துரோகம், ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த நம் சகோதரத் தமிழர்களுக்கு துரோகம் என்று நீங்கள் பட்டியலை நீட்டிக்கொண்டே போவது உங்கள் பாவ மூட்டையின் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை மட்டும் மீண்டும்மீண்டும் நினைவு படுத்துகிறேன் முதல்வர் அவர்களே!

"சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்கா ரடீ - கிளியே
செம்மை மறந்தா ரடீ...."

பாரதிகூட உங்களையே நினைத்து இதை பாடியிருப்பானோ என்று தோன்றுகிறது.

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It