பெரியார் தமிழினப் பகைவரா? - பகுதி 2

நீதிக் கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்கள் எவரும் அமைச்சராக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ம.பொ.சி.யின் ‘தமிழ்நாட்டில் பிற மொழியினர்’ என்ற நூலிலிருந்து மேற்கோள் கொடுத்துள்ளார் வழக்குரைஞர் பா.குப்பன் (பக்கம் -81). இது வழக்கமான குற்றச்சாட்டுதான். இதே மேற்கோளை பழ. நெடுமாறன் தனது ‘உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்துப் பாசிசமும்’ என்ற நூலிலும் கொடுத்துள்ளார். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 1919இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டப்படி நடைபெற்றது நீதிக் கட்சி ஆட்சி. அது இரட்டை ஆட்சி முறையாகும். நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர், 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். 1935 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டப்படி, இரட்டை ஆட்சி முறை நீங்கி விட்டது. முழுப் பொறுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கே இருந்தது.

panagal arasar1937 இல் அமைந்த இராஜாஜி ஆட்சியில் முதலமைச்சர் உட்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தனர். 10 அமைச்சர்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் அல்ல. 10 அமைச்சர்களில் முதலமைச்சர் இராஜாஜி, டி.பிரகாசம், டாக்டர் டி.எஸ்.எஸ்.இராஜன், வி.வி.கிரி ஆகிய 4 பார்ப்பனர்கள் அமைச்சர்களாக இருந்தார்கள். சபாநாயகரும் புலுசு சாம்பமூர்த்தி என்ற ஆந்திரப் பார்ப்பனரே. இது நியாயமா என்பதை ம.பொ.சி. அன்பர்கள்தான் கூற வேண்டும். இராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வி.ஐ.முனிசாமிப் பிள்ளை என்பவரை பொம்மையாக ஆட்சியில் அமர வைத்துக் கொண்டு ஆதிதிராவிடர்களுக்கு எதிராக பல காரியங்களை இராஜாஜி செய்தாரே, அது நியாயமா?

15.8.1938 அன்று எம்.சி.ராஜா ஆதிதிராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். “உடனே பிரதம மந்திரியார் எழுந்து தடுமாற்றத்துடன், தர்க்கதியற்ற விதமாய், ஒருவரும் நம்ப முடியாத வகையில் அம் மசோதாவை எதிர்த்துப் பேசியது மிக்க ஆச்சரியத்தை விளைவித்தது.... பிறகு முதலமைச்சர் உருக்கமாகப் பேசி இந்த மசோதவை நிறுத்தி வைக்கும்படி எம்.சி.ராஜாவிடம் சொன்னார். அதற்கு எம்.சி.ராஜா பதில் அளிக்கும்போது நான் அவரை (முதலமைச்சரை) நம்பினேன். ஆனால் இப்பொழுது அவர் கூறுவதைச் செவியுற்றுக் கேளுங்கள்! இம் மசோதாவை வாபாஸ் பெற்றுக் கொள்ளவும், சபையிலே இவ்விஷயம் விவாதிக்கப்படாமலிருக்கவும் வேண்டிய முயற்சிகளை இப்பொழுது செய்கிறார் இப்பிரதம மந்திரியார். இது அவருக்கே நியாயமாகத் தோன்றுகிறதா? நான் இவ்விஷயத்தில் பெரிதும் ஏமாற்றமடைந்தேன்” என்று சட்டசபையிலேயே பேசினார்.

முதலமைச்சர் இராஜாஜி 45 நிமிடங்கள் இம் மசோதாவை எதிர்த்துப் பேசி, காங்கிரஸ் கட்சியினர் யாரும் இதற்கு வாக்களிக்கக் கூடாது என்று கூறினார். வாக்கெடுப்பில் எம்.சி.ராஜாவின் ஆதி திராவிடர் கோயில் நுழைவு மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 130 வாக்குகளும் கிடைத்தன. (ஆதாரம்: ஆரிய ஆட்சி, பதிப்பாசிரியர் வாலாசா வல்லவன், பக் - 50 முதல் 56 வரை.) நீதிக் கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்றாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கவில்லை. ஆனால் இராஜாஜி ஆட்சியில் பொம்மையாக ஓர் அமைச்சரை உட்கார வைத்துக் கொண்டு அவரை அந்தச் சமூகத்துக்கு எதிராக வாக்களிக்க வைத்தார் இராஜாஜி. நீதிக்கட்சி ஆட்சியில் மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திடப்பட்டது. இதை வெறும் தெலுங்கர்கள் ஆதிக்கம் செலுத்திய ஆட்சி என்று புறந்தள்ளி விட முடியாது.

நீதிக்கட்சி ஆட்சியைத் தெலுங்கர்கள் ஆதிக்கம் மிகுந்த ஆட்சி என்று குறை சொல்லும் தமிழ்த் தேசியர்கள், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இராஜாஜி முதல்வராக இருந்தபோது 1937, 1952 ஆண்டுகளில் என்ன நிலைமை என்பதை மூடி மறைக்கின்றனர்.

1937 இல் இராஜாஜி முதல்வராக இருந்தபோது, அவர் உள்பட 10 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அதில் டி.பிரகாசம், வி.வி.கிரி, பெசவாட கோபால ரெட்டி ஆகிய மூவரும் ஆந்திராவைச் சேர்ந்த அமைச்சர்கள். ப.சுப்பராயன், வி.ஐ.முனிசாமிப் பிள்ளை, எஸ்.இராமநாதன், டி.எஸ்.எஸ்.இராஜன் என்கிற பார்ப்பனர் ஆக நால்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர்களாக இருந்தார்கள். மற்ற அமைச்சர்கள் கேரளாவையும், கன்னடப் பகுதியையும் சேர்ந்தவர்கள். சபாநாயகர் புலுசு சாம்பமூர்த்தி ஒரு ஆந்திரப் பார்ப்பனரே.

1952இல் இராஜாஜி அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்களாக இருந்தார்கள். அதில் என்.ரங்கா ரெட்டி, எம்.வி.கிருஷ்ணாராவ், என்.சங்கர ரெட்டி, பட்டாபி ராமராவ், டி.சஞ்சீவய்யா ஆகியோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஆர்.நங்கன்னகவுடா, ஏ.பி.ஏ.ஷட்டி கர்நாடகப் பகுதியைச் சேர்ந்தவர்கள். வெங்கடசாமி நாயுடு தமிழ்த் தேசியவாதிகள் பார்வையில் தெலுங்கர். குட்டி கிருஷ்ணன் நாயர் கேரளாவைச் சேர்ந்தவர். ப.சுப்பராயன், வி.சி.பழனிச்சாமி, எம்.ஏ.மாணிக்கவேலர் (உழைப்பாளர் கட்சியைக் கலைத்துவிட்டு வந்ததால் அமைச்சர் பதவி). சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோர் தமிழர்கள். 15 பேர் கொண்ட இராஜாஜி அமைச்சரவையில் 4 பேர் மட்டுமே தமிழர்கள். இதையெல்லாம் ம.பொ.சி. எழுதமாட்டார். ஏனெனில் ராஜாஜி அவருடைய குருநாதர். நீதிக் கட்சியைப் பற்றி குறை கூறும் தமிழ்த் தேசியவாதிகள் இனியேனும் உண்மையை உணர்வார்களா?

நீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்:

பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி, ஆதி திராவிடர் என்ற பெயரை எங்கள் சமூகத்திற்கு இட்டு அழைக்க வேண்டும் என்று எம்.சி.இராஜா 20.02.1922ல் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில் இனி இச்சமூகத்தினரை ஆதிதிராவிடர்கள் என்றே அனைத்து ஆவணங்களிலும் பதிய வேண்டும் என்று அரசாணை எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922இல் பிறக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

ஆதிதிராவிடர் பிள்ளைகளை பொதுப் பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. (G.O.No..87 கல்வி நாள் 6.1.1923)

அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்து செய்யப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. (G.O.NO. 88. கல்வி நாள் 16.1.1923.)

திருச்சி மாவட்ட நிர்வாகம் (Distric Bord) ஆதிதிராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்க வைத்து, படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. (G.O.NO. 2015 கல்வி நாள் 11.2.1924.)

தொடக்கப்பள்ளிகளுக்குக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கும்போதே ஆதி திராவிடப் பிள்ளைகள் அணுக முடியுமா? ஏனெனில் கோவில், அக்கிரகாரம் போன்ற இடங்களில் ஆதி திராவிடர் பிள்ளைகளை மற்ற சாதியினர் அனுமதிக்க மறுப்பார்கள் என்பதால், அதை ஆய்ந்து பார்த்து, ஆதி திராவிடர் பிள்ளைகள் வருவதற்குத் தடையில்லாத இடத்தில் பள்ளிக் கட்டிடங்களைக் கட்ட அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. (G.O.NO.2333 நாள் 27-11-1922)

இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கிப் படிக்க ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது (G.O.NO..2563 நாள் 24.10.1923.). இதைக் கட்டுவதற்கான பணம் முழுவதையும் ஆதி திராவிடர் தலைவர் எம்.சி.ராஜா அவர்களிடமே கொடுத்து கட்டுவித்தார்கள்.

1931க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras prsidency 1881 - 1931 பக்கம் 132)

ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1243. நாள் 5.7.1922)

ஆதி திராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922)

ஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிலையைப் பற்றிய விவரத்தை அரசுக்கு அளிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 859 நாள் 22.06.1923)

ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 1568 சட்டம் (கல்வி) நாள் 06.11.1923)

ஆதி திராவிட மாணவர்களுக்கு சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணை பிறக்கப்பட்டது. (அரசாணை எண் 205 கல்வி நாள் 11.02.1924)

மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. (அரசாணை எண் 866 (பொது) சுகாதாரம் நாள் 17.06.1922)

சிதம்பரத்தில், சாமி சகஜானந்தம் ஆதி திராவிடப் பிள்ளைகளுக்கென 1916இல் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆங்கில அரசிடம் நிலம் கேட்டார். அவர்கள் கொடுக்கவில்லை. அவர் திண்ணைப் பள்ளி மாதிரி நடத்தினார். பனகல் அரசர்தான் 50 ஏக்கர் நிலம் கொடுத்து, அதை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தி அங்கீகாரம் கொடுத்து, ஆண்டு தோறும் அரசின் நிதியுதவி கிடைக்கவும் வழி செய்தார்.

சென்னையில் எல்.சி.குருசாமி அருந்ததியர்களுக்கு 5 பள்ளிகளைத் தொடங்கினார். அதில் நான்கு இரவுநேரப் பள்ளிகள். ஒன்று பகல்நேரப் பள்ளி. பனகல் எல்.சி. குருசாமியை மேலாளராக இருக்க வைத்து அய்ந்து பள்ளிகளுக்கும் அரசின் நிதி உதவியை எல்.சி. குருசாமியிடமே கொடுத்து வந்தார்.

பனகல் அரசர் காலத்தில்தான் ஆதிதிராவிட மாணவர்கள் 3 பேருக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. அதேபோல் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்தன. மற்ற பல அரசுப் பணிகளிலும் ஆதிதிராவிடர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆதி திராவிடர்களின் நலனைக் காப்பதில் அவருக்கு நிகர் அவரே. இதுவும் பெரியாரை பனகல் பக்கம் இழுத்துச் சென்றதற்கு மற்றொரு காரணம் ஆகும்.

இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு நீதிக் கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்களுக்கு பஞ்சமி நிலத்தை வாரி வழங்கியது. நீதிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (ஆதாரம் T.G.Boag I.c.s என்ற சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras prsidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கிய பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதி திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் நிரப்பி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதி திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

justice party dalit

1921 இல் இருந்து 1928க்குள் ஆதி திராவிடர்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் 100% நியமனம் செய்யப்பட்டனர். (T.G. Boag ICS Madras prsidency 1881-1931 P No. 134)

இந்தியா முழுவதும் 1928இல் இருந்த தாழ்த்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாகாணம் வாரியாக:      

வ.எண் மாகாணம் உறுப்பினர் எண்ணிக்கை
1. சென்னை 10
2. பம்பாய் 2
3. வங்காளம் 1
4. அயக்கிய மாகாணம் 1
5. பஞ்சாப் -
6. பீகார் 2
7. மத்திய மாகாணம் 4
8. அஸ்ஸாம் -
9. பர்மா -

(சான்று - எம்.சி. ராஜா வாழ்க்கை வரலாறு எழுத்தும் பேச்சும், ஜெ. சிவசண்முகம் பிள்ளை பக். 35, 36)

இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்தான் ஆண்டனர். ஆனால் சென்னை மாகாணத்தில் மட்டும் தான் சட்டமன்றத்திற்கு தாழ்த்தப்பட்டவர்கள் 10 பேர் நியமிக்கப்பட்டனர். 1935 அரசியல் சட்டம் வரும்வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly. 1928இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜா தான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில் தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால் தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார்.

ஆதி திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டைமலை சீனிவாசன் 22.08.1924 இல் சென்னை சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு, சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள் போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gasate notification 08.04.1925 part IV) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு, தண்டோரா மூலம் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

1927 முதலே சுயமரியாதை இயக்கத்தினரும், நீதிக் கட்சியினரும் பல்வேறு கோயில்களில் ஆதி திராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று ஆதி திராவிடர்களின் உரிமைகளுக்காகப் போராடினர். (பார்க்க - கோவில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு - வாலாசா வல்லவன்)

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோருக்கும், மற்ற பார்ப்பனரல்லாதார்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது நீதிக் கட்சி ஆட்சிதான்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து நிறைவேற்றப்பட்ட முதல் அரசாணை எண் 613, நாள் 16.09.1921இல் வெளியிடப்பட்டது.

இரண்டாவது வகுப்புரிமை ஆணை எண் 652, நாள் 15.08.1922இல் பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையின்படி வகுப்புரிமை அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படுவதை ஆறு மாதத்திற்கு ஒருமுறை உறுதி செய்யும்படி துறைத் தலைவர்கள், உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோருக்கு ஆணை இடப்பட்டது.

1921 - 22இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும் பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை நடைமுறைப்படுத்தா வண்ணம் இடையூறு செய்து வந்தனர்.

1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஓர் ஆணையம் உருவாக்கப்பட்டது. ‘Staff Selection board’ என்று அதற்குப் பெயர். அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது. 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் வெளியிடப்பட்டு வந்தது. பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதி திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935இல் துணைக் கண்காணிப்பாளர் வரை ஆதி திராவிடர் பதவி உயர்வு பெற்றனர். 1927 இல் தான் ஆதி திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். (‘Staff Slection board’ அறிக்கை பக் 120.) அந்த காலகட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களை காவல் துறையில் காவலர்களாகக் கூட சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி.ராஜா 1928இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி.ராஜா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும், ஜெ.சிவசண்முகம் பிள்ளை பக். 42)

 ‘Staff Slection board’இல் 7.2.1925 சி.நடேச முதலியார் கொண்டு வந்த சட்டமன்றத் தீர்மானத்தின்படி கீழ்க்கண்டவாறு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் பார்ப்பனரல்லாதாரிலும், ஆதி திராவிடர்களிலும் அரசு வேலைக்குச் செல்ல முடிந்தது.

                                1. பார்ப்பனரல்லாத இந்துக்கள்  -              40

                                2. பார்ப்பனர்கள்        -              20

                                3. முகமதியர்கள்    -              20

                                4. ஆங்கிலோ இந்தியர், இந்தியக்             கிறித்துவர் -                10

                                5. ஆதி திராவிடர்கள்           -              10

(ஆதாரம்: சென்னை சட்ட மன்ற விவாதக் குறிப்பு நாள் 27 - 8- 1927 பக்கம் 469)

1930இல் இராமநாதபுரம் மாவட்ட கழகத் தலைவராக இருந்த ஊ.அ.பூ. சௌந்தரபாண்டியன் பேருந்து முதலாளிகளுக்கு ஓர் உத்தரவை அனுப்பினர். பேருந்துகளில் ஆதி திராவிடர்களை ஏற்ற மறுத்தால், பேருந்து உரிமங்கள் இரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்டார். அந்த மாவட்டத்தில் அக்காலத்தில் சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் பேருந்தை நடத்தி வந்தார். அவர் பேருந்துப் பயணச் சீட்டுகளிலேயே ஆதி திராவிடர்கள் பேருந்தில் ஏற்றிக் கொள்ளப்பட மாட்டார்கள் என்று அச்சடித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில் எதிர்க் கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன் 2.11.32 அன்று ஆதி திராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றைக் கொண்டு வந்தார். அந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பே பெரியார் அதை ஆதரித்து, குடி அரசில் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் நீதிக் கட்சியினரையும் அம்மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார். “ஜஸ்டிஸ் கட்சியினரோ, சமூகச் சீர்திருத்தக் கொள்கையையே அடிப்படை நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் பல ஆண்டுகளாக எல்லா வகுப்பினருக்கும் ஆலயங்களில் சம உரிமை இருக்க வேண்டும் என்னும் விஷயத்தை ஆதரித்து வருபவர்கள். ஆகையால் அவர்கள், தமது எதிர்கட்சித் தலைவர்களால் கொண்டு வரப்படும் மசோதா என்ற அற்பமான காரணத்தை மாத்திரம் கருதி, இந்த நல்ல மசோதாவை எதிர்க்க மாட்டார்கள் என்றே நாம் நிச்சயமாக நம்புகிறோம். ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியினர் திரு சுப்பராயன் அவர்களுடைய கட்சிக்கும் தமது கட்சிக்குமுள்ள அரசியல் அபிப்பிராயங்களை முன்னிட்டும், எதிர்க்கட்சியினர் எந்த நல்ல மசோதாவைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்பதே எமது கடமை என்னும் அரசியல் வஞ்சம் தீர்க்கும் கொள்கையை முன்னிட்டும், இம்மசோதாவை ஆதரிக்காமல் நடுநிலைமை வகித்தாலும் அல்லது எதிர்த்தாலும், அது மிகவும் வெறுக்கத்தக்க செய்கையாகுமென்றே நாம் கூறி எச்சரிக்கிறோம்.” (குடிஅரசு 30.10.1932)

நீதிக் கட்சியின் சார்பில் டாக்டர் நடேச முதலியார் ஆதரித்துப் பேசினார், இரட்டைமலை சீனிவாசன், என்.சிவராஜ் ஆகியோர் பேசிய பின்பு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. ஆதரித்து 56 பேர் வாக்களித்தனர்; 19 பேர் நடுநிலையாக இருந்தனர். எதிர்ப்பே இன்றி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. ஆனால் பார்ப்பனர்கள் ஆளுநரிடம் தங்களுக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி இம்மசோதாவைச் சட்டமாக்காமல் தடுத்து நிறுத்திவிட்டனர்.

ஆதி திராவிடர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஏராளமான தொகை கடன் உதவியாக அளிக்கப்பட்டது. 31.10.1931இல் சட்டமன்றத்தில் ரங்கநாத முதலியார் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஆதி திராவிடர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் எவ்வளவு கடனாகத் தரப்பட்டது, அதில் எவ்வளவு தொகை திரும்பப் பெறப்பட்டது என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு அரசு தெரிவித்த பதில் வருமாறு: 

dalit loan 1

dalit loan 2

(ஆதாரம் - சென்னை சட்டமேலவை விவாதக் குறிப்புகள், தொகுதி LVIII, பக். 268)

அனைவருக்கும் கட்டாயக் கல்விச் சட்டம் G.O.NO.376 சட்டம் (கல்வி) நாள் 9.3.1923 தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தனர். நீதிக் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கல்வித்துறையில் உயர்கல்விக்கே அதிகமாக செலவழித்து வந்தனர். இதனால் பெரிதும் பயனடைந்தவர்கள் பார்ப்பனர்களே. அதை மாற்றி, தொடக்க கல்விக்கு பெருமளவு நிதி செலவழிக்க வேண்டுமென நீதிக்கட்சியின் மாநாடுகளில் வலியுறுத்தப்பட்டது. அதனை ஆட்சிக்கு வந்தவுடன் செயல் முறையிலும் நடைமுறைப்படுத்தினர். தொடக்கக் கல்விக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளித்து வந்த மானியம் விவரம்:                                                                             

ஆண்டு   தொகை
1920 - 21 - 34, 79, 134
1921 - 22 - 30, 37, 641
1922 - 23 - 41, 72, 787
1923 - 24 - 44, 51, 359
1924 - 25 - 49, 43, 065
1925 - 26 - 55, 37, 396

(ஆதாரம் - சட்டமன்ற விவாத குறிப்புகள், பக்.407, நாள் 27.8.1927.)

அந்தக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள்தான் தொடக்கக் கல்வியை - பள்ளிகளை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

28.7.1929 இல் K.V.A சாமி என்பவர் சட்டமன்றத்தில் 1921 முதல் 1928 வரை புதிதாகத் தொடங்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள் எத்தனை என்று கேள்வி கேட்டார். அரசு தரப்பில் 19,095 பள்ளிகள் என்று பதில் அளிக்கப்பட்டது.

1925 - 26 இல் அரசு ஊழியர் வகுப்புவாரி விவரம் சென்னை அரசின் நிர்வாக ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரம்:

caste income

ஆதாரம்: 1925 - 26 ஆம் சென்னை மாகாண அரசின் ஆண்டறிக்கையின் பக்க எண் 201

caste income 1

 (1.04.1935 இல் வெளியிடப்பட்ட அரசு ஆண்டறிக்கை பக் 207)

இந்த இரண்டு புள்ளிவிவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆதி திராவிடர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதார் அரசு வேலைகளில் சற்று அதிகரித்திருப்பதைக் காணலாம்.

முத்தையா முதலியார் பிறப்பித்த உத்தரவில் வகுப்புவாரி சுழற்சி முறை 1928இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

muthiah table

இந்த பனிரெண்டு இடங்களும் சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட்டன.

                                1. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                2. முகமதியர்கள்

                                3. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                4. ஆங்கிலோ இந்தியர்கள், இந்திய கிறித்தவர்கள்

                                5. பார்ப்பனர்கள்

                                6. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                7. ஆதி திராவிடர்கள்

                                8. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                9. முகமதியர்கள்

                                10. பார்ப்பனரல்லாத இந்துக்கள்

                                11. ஆங்கிலே இந்தியர்கள், இந்தியக் கிறித்தவர்கள்

                                12. பார்ப்பனர்கள்

இந்த வரிசை அடிப்படையில் தான் பதவிகள் நிரப்பப்பட்டன. ஆதி திராவிடர்களில் படித்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால் தான் அவர்களுக்குக் குறைந்த அளவு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் உயர்கல்வியில் பார்ப்பனர் ஆதிக்கத்தைக் குறைக்க முயற்சி செய்தது. ‘கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவை’ கலை அறிவியல் கல்லூரி, பொறியியல், மருத்துவம், வேளாண்மை, சட்டம் உட்பட அனைத்துக் கல்லூரிகளிலும் ஏற்படுத்தியது. அந்தக் குழுவில் கல்லூரியின் முதல்வர், நீதிக் கட்சியைச் சார்ந்த துறைரீதியான அறிவு பெற்ற அறிஞர் ஒருவர், அந்தத் துறையின் இயக்குநர் (அ) செயலாளர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 50% இடங்களுக்கு மேல் பார்ப்பன மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று அக்குழுவிற்கு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. (அரசு ஆணை எண் 536, கல்வி நாள் 20.05.1922)

1922 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் அக் கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவில் டாக்டர் நடேச முதலியார் இடம் பெற்றிருந்தார். மொத்த இடங்கள் 242. பார்ப்பன மாணவர்கள் 167 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். 50% அடிப்படையில் 121 பார்ப்பன மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மீதம் 46 பார்ப்பன மாணவர்களை சேர்க்க மறுத்தனர் (Madras Mail, 21.07.1922). கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பார்ப்பன மாணவர்களுக்கு இடமில்லை என்று சேர்க்க மறுத்த சமூகப் புரட்சி நீதிக் கட்சி ஆட்சியில் தான் நடைபெற்றது.

7.12.21இல் சி. நடேச முதலியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை வகுப்பு அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

18.9.22இல் எஸ்.சீனிவாச அய்யங்கார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையை வகுப்பு அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் என்றார். இவர்கள் இருவர் கேள்விக்கும் அவரவர்கள் கேட்ட தேதியிலேயே சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இரண்டையும் இணைத்துக் கொடுத்துள்ளேன்.

medical college

மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையில் 1921க்கும் 1922க்கும் இடைப்பட்ட ஓராண்டுக் காலத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். 1921 இல் 58 ஆக இருந்த பார்ப்பன மாணவர் எண்ணிக்கை 1922 இல் 33 ஆகக் குறைந்தது. 1921 இல் 15 ஆக இருந்த பார்ப்பனரல்லாத மாணவர் எண்ணிக்கை 36 உயர்ந்துள்ளதைக் (இரண்டு மடங்கு) காணலாம். இது கல்லூரி மாணவர் சேர்க்கைக் குழுவால் ஏற்பட்ட நன்மையாகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தங்கள் ஆட்சியில் பணிபுரிய உயர் கல்வி படித்த இந்தியர்களை உருவாக்குவதற்காக 1857இல் சென்னை, மும்பை, கல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. அவை இந்தியப் பல்கலைக் கழகச் சட்டத்தின் படி இயங்கி வந்தன.

1920 இல் நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 1921 முதலே வகுப்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை முதலானவற்றுக்கு சென்னை பல்கலைக் கழகம் இணங்க மறுத்து வந்தது. எனவே நீதிக் கட்சி அரசு 1923இல் சென்னை பல்கலைக் கழகச் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி மாகாண அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக் கழகத்தைக் கொண்டு வந்தது. சட்டப்படி கல்வி அமைச்சர் துணை வேந்தருக்கும் மேலாக இணை வேந்தராக்கப்பட்டார்.

பல்கலைக் கழக செனட் அவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்தினார். நீதிக் கட்சியினர் பலர் நடேச முதலியார் உட்பட செனட் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அதன் பிறகு தான் அதில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது.

உயர்கல்வியில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாகப் படிக்காமல், தமிழ் உள்ளிட்ட எந்த மொழியிலும் பட்டம் வாங்க முடியாத நிலை இருந்தது. 1924 இல் கல்வி அமைச்சராக இருந்த பரசுராம பாத்ரோவ் சட்டமன்றத்திலேயே இது திராவிட அரசு, இந்த அரசின் பணம் திராவிட மொழிகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என்று அறிவித்ததோடு நில்லாமல் அரசாணையும் பிறப்பித்தார் (அரசாணை எண் 2123 சட்டம், (கல்வி) நாள் 08.12.1925). அதன் பிறகு தான் 1925 இல் சென்னை பல்கலைக் கழக செனட் கூட்டத்தில் சமஸ்கிருதம் படிக்காமலேயே தமிழைப் படித்து புலவர் பட்டம் பெறலாம் என்ற நிலை உருவாயிற்று. 1926 முதல் தமிழை மட்டுமே படித்து, தமிழ் பண்டிட் பிற்காலத்தில் புலவர் படிப்பு படிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. 1927 முதல் சமஸ்கிருதம் படிக்காமல் பி.லிட் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

தமிழ் மொழிக்கே சமஸ்கிருதத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது நீதிக் கட்சி ஆட்சி தான்.

இங்கிலாந்தில் I.C.S. படித்துவிட்டு, தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்களுக்குத் தமிழறிவு இருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ் லெக்சிகன் தொகுக்கும் பணிக்கு 1906ல் பணம் ஒதுக்கியது ஆங்கில அரசு. பணம் செலவானாதே தவிர ஒரு வேலையும் நடக்கவில்லை. 1921க்குப் பிறகு பனகல் அரசர் திட்டமிட்டு, பணம் ஒதுக்கி 1922இல் தமிழ் லெக்சின் முதல் தொகுதி வெளிவந்தது. நீதிக் கட்சி ஆட்சி முடிவதற்குள் 1936 இல் தமிழ் லெக்சின் ஏழாம் தொகுதி வெளியிடப்பட்டது. அவர்கள் தெலுங்கு மொழிக்கு இப்படி ஒரு லெக்சிகன் உருவாக்கிக் கொள்ளவில்லை. தமிழ் மொழிக்கு மட்டும் தான் செய்தார்கள்.

நீதிக் கட்சி தொடங்கிய காலத்தில் அரசியலில் காங்கிரசின் பேரால் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கவர்னர் கவுன்சிலுக்கும், கவர்னர் ஜெனரல் கவுன்சிலுக்கும் பெரும்பாலும் பார்ப்பனர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தேர்தல் நடைபெற்றால் பார்ப்பனர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். பார்ப்பனரல்லாதார்கள் முன்னேறுவது கடினம் என்று கருதிய நீதிக் கட்சியினர் அதன் செயல் தலைவர் டாக்டர் டி.எம்.நாயரை இரண்டு முறை இலண்டனுக்கு அனுப்பி, பார்ப்பனரல்லாதாருக்கு தேர்தலில் நிற்க தனித்தொகுதியைப் பெற்றனர்.

Non-Brahmin Reserved Seat என்ற பெயரில் தான் முதல் அரசாணை வெளிவந்தது (MRO Public (Retorms) G.O.335 A May 25 - 1920). பார்ப்பனரல்லாதார் என்ற பெயர் இருக்கக் கூடாது என்று கூறி, பார்ப்பனர்கள் ஆங்கிலேயே அரசிடம் கோரிக்கை வைத்து ஒரே மாதத்தில் ‘முகமதியர் அல்லாத தொகுதி’ என்று பெயர் மாற்றம் செய்து விட்டனர். முகமதியர்களுக்கு மிண்டோ மார்லி சீர்திருத்தப்படி 1909 முதலே அரசு வேலைகளில் 25% இட ஒதுக்கீடு, அதே அடிப்படையில் தேர்தல்களில் ரிசர்வ் தொகுதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

நீதிக் கட்சியை சார்ந்த கிருஷ்ணன் நாயர் 4.7.1921 இல் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். 44 பேர் ஆதரித்தனர்; 13 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதை உடனடியாகச் சட்டமாக்க ஆளுநர் மறுத்தார். 1926 முதல் தான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. அதனால் தான் 1927 இல் முத்துலட்சுமி ரெட்டி சட்டசபைக்கு நியமனம் செய்யப்பட்டார். அவை துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவை முன்மொழிந்தார். அவர் நீதிக் கட்சியினரை நம்பாமல் சர். சி.பி. ராமசாமி அய்யரிடம் கொடுத்து மசோதாவை தயார் செய்திருந்தார். 1.12.1929 இல் அது சட்டமன்றத்தில் நிறைவேறி சட்டமானது. ஆனால் 18 வயது நிரம்பிய பெண்கள் தாமாக விரும்பினால் தேவதாசியாக ஆகலாம் என்று அந்தச் சட்டத்தில் ஓர் ஓட்டை இருந்தது.

9.10.1947இல் ஓமந்தூரார் ஆட்சியில் அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன், தேவதாசியாக மாறும்படி வற்புறுத்துவோருக்கு 500 ரூபாய் அபராதம், ஆறுமாதம் சிறை என்று தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்து அந்த முறையை முற்றிலுமாக ஒழித்தார்.

பெண்கள் முன்னேற்றத்திற்காக சுயமரியாதை இயக்கமும், நீதிக் கட்சியும் ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். பெண்கள் கல்விக்காக, பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கினர். இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் எந்த அளவில் இருக்கிறது என்பதை ஆராய்வதற்காக ‘அண்டர்’ தலைமையில் 1928 இல் ஒரு குழுவை இந்தியா முழுவதும் அனுப்பியது அன்றைய இந்திய அரசு. அக்குழுவின் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் பெண்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததைப் பாராட்டியுள்ளது.

பெண்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு வரை கட்டணமில்லாமல் இலவசக் கல்வி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாக்கவும் பாடுபட்டது நீதிக்கட்சி ஆட்சி. இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாகாணத்திலும் அன்று இல்லை என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இந்துமத பரிபாலன போர்டு:

தென்னகத்தில் ஆட்சிபுரிந்த அரசர்கள் பெரிய பெரிய கோவில்களைக் கட்டி அவற்றிற்கு ஏராளமான சொத்துக்களையும் வைத்துச் சென்றனர். இவற்றைப் பார்ப்பனர்கள் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். இந்தப் பார்ப்பனக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த பனகல் முயன்றார். இந்துமத பரிபாலனைச் சட்ட மசோதா 18.12.1922இல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். கோவில்களின் வருமானத்தை அரசு ஊழியர்களைக் கொண்டு பராமரித்தல், உபரிநிதியை கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்குப் பயன்படுத்துதல் முதலானவை இச்சட்டத்தின் நோக்கமாகும். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, சுமார் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 1923 நவம்பரில் இது சட்டமாக்கப்பட்டது. இதை நடைமுறைப் படுத்துவதற்குள் 1923 நவம்பர் மாதத்தில் முதல் அமைச்சரவையின் பதவிக் காலம் முடிவுற்றது.

இரண்டாவது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் 19.11.1923இல் பனகல் அரசரே முதல்வராகப் பொறுப்பேற்றார். இம்முறை ஒரு தமிழர் சிவஞானம் பிள்ளை அமைச்சராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்துமத பரிபாலனைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவண்ணம் பார்ப்பனர்கள் சதி செய்து, ஆளுநரும் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.

பனகல் அரசர் சளைக்கவில்லை. எப்படியாவது இதை நிறைவேற்றியே தீருவது என்று முடிவுசெய்து, மீண்டும் ஒரு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்முறை சத்தியமூர்த்தி அய்யர் சென்னை பல்கலைக்கழக பட்டதாரித் தொகுதி மூலமாக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் இதை எதிர்த்து ஓயாமல் சட்டமன்றத்தில் பேசினார்; திட்டினார். 475 திருத்தங்களை அவர் ஒருவர் மட்டுமே கொண்டு வந்தார். மொத்தம் 800 சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. திருப்பதி கோவிலுக்கு மட்டும் விலக்கு அளித்தால் ரூ. 5 இலட்சம் கையூட்டு தருவதாக பனகலிடம் பேசிப் பார்த்தனர். எதற்கும் பனகல் மசியவில்லை. 1925 நவம்பரில் வெற்றிகரமாக சட்டமாக்கி நடைமுறைப்படுத்தினார். பனகல் அரசுமீது மடாதிபதிகளும், கோவில் நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதனால் காங்கிரசில் இருந்த பெரியாருக்கு, பனகல் அரசர் மீது நேசம் ஏற்பட்டது. காங்கிரசை விட்டு பெரியார் வெளியேறிய காலகட்டமும் அதுதான்.

பனகல் அரசர் காலத்தில்தான் 1924இல் சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் சமஸ்தான அரசுக்கும் இடையே காவிரி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பயனாக மேட்டூர் அணை கட்டத் திட்டம் உருவாக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று 1924 முதல் 1933க்குள் 10 ஆண்டுகளில் ரூ.5,91,38,000 செலவில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு 3,10,000 ஏக்கர் பாசன வசதி பெற்று, தமிழகம் பஞ்சமில்லாமல் இருக்க வழிவகை செய்தார்.

 ஆதிதிராவிடர்களின் நலனுக்காகச் செயல்பட்ட நீதிக் கட்சியை, தலித்துக்கள் ‘மேல்சாதியினருக்கான கட்சி’ என்று கூறுவதும், சமஸ்கிருதப் பார்ப்பன மேலாண்மைக்கு எதிராகப் போராடி தமிழ் மொழிக்கு சமஸ்கிருதத்திலிருந்து விடுதலை பெற்றுத் தந்த நீதிக் கட்சியை ‘தெலுங்கர்கள் கட்சி’ என்று தமிழ்த் தேசியர்கள் கூறுவதும், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட நீதிக் கட்சியைப் பொதுவுடைமைவாதிகள் ‘நிலக்கிழாரிய கட்சி’ என்று கூறுவதும் ஏற்கத்தக்கதல்ல. ஆயிரம் ஆண்டுகளாக சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மற்ற சாதிமக்களோடு இரண்டறக் கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே நீதிக் கட்சி ஆட்சி தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

- வாலாசா வல்லவன்