கேள்வி : என் வயது 29. ஆறு மாதங்களுக்கு முன்பு கன்னத்தில் அடிபட்டது. இரண்டு நாட்களாக காதில் வித்தியாசமான உணர்வு தோன்றவே, ஈ.என்.டி.(ENT) மருத்துவரிடம் சென்று காட்டினேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து, ‘இரண்டு காதுகளிலும் துளை உள்ளது. அடிபட்ட காது சவ்வு கிழிந்து, சீழ் பிடித்து, மூளைக்குச் சீழ் சென்றுவிட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையெனில், நீங்கள் மென்டல் ஆகிவிடுவீர்கள். உயிரே போகும் அபாயம் உள்ளது’ என்று கூறினார். நான் மீண்டும் வேறு டாகடரிடம் போனேன். அவர், ‘காதுகளில் துளை உள்ளதும் சவ்வு கிழிந்துள்ளதும் உண்மை. ஆனால், எந்த அபாயமும் கண்டிப்பாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். காதில் வலியிருந்தால் மாத்திரை சாப்பிடுங்கள்’ என்றார். எனக்கு இந்த ஆறு மாதத்தில் எந்த வலியும் இல்லை. ஆனால், அடிப்பட்ட காதின் அருகில் யாராவது மெதுவாக பேசினால் கூட அலறுவது போல் கேட்கிறது. காதில் அடிக்கடி அரிப்பு ஏற்படுகிறது. சில்லென்ற தண்ணீர் குடித்தால் கூட, காதிலும் தொண்டையிலும் அரிக்கிறது. ‘இன்னும் 10 வருடங்களில் கேட்கும் தன்மை இழக்கும் வாய்ப்பு உள்ளது’ என்கிறார்கள். நான் வாரம் இருமுறை தலைக்குக் குளிக்கலாமா? காது அரிப்புக்கு என்ன செய்யவேண்டும்.? இதற்கு அறுவைசிகிச்சை தான் தீர்வா?

பதில்: காதுத் துளைகளில் இரண்டு வகை உண்டு. பெரும்பாலான துளைகள் ஆபத்து இல்லாதவை. சில ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. மூளைக்குப் பரவும் அபாயம் இதில் உண்டு. எந்த வகையான காதுத் துவாரம் என்று நீங்கள் கூறியிருந்தால் சரியான சிகிச்சை முறையைக் கூறியிருக்க முடியும். ஆனால் பயப்படத் தேவையில்லை. சரி செய்ய முடியாத நோய் என்று இப்போது எதுவுமே இல்லை. உங்கள் பிரச்சனைக்குத் திறமை வாய்ந்த நவீன அறுவை சிகிச்சை முறைகள் உண்டு. முற்றிலும் குணப்படுத்தலாம். உங்களுக்குக் குளிர்ந்த நீர், குளிர்பானம் ஒவ்வாமை இருந்தால், அவற்றை உபயோகிக்கக் வேண்டாம். காதில் பஞ்சை அடைத்துக்கொண்டு குளிக்கவும். எந்த சொட்டு மருந்தும் விடவேண்டாம். காதை அவ்வப்போது பஞ்சினால் நீங்களே சுத்தப்படுத்தலாம். சாதாரண அரசு மருத்துவமனைகளிலேயே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

(நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்)