உலகின் பழமையான நாகரிகமான மெசபடோமியாவில் தான் பேரிச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க, ரோமானிய, பாலசுதீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம்பெற்றுள்ளது பேரிச்சம் பழம். கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது.

பேரிச்சம்பழத்தின் மருத்துவ குணப் பெருமைகள் :

இரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரிச்சை. பேரிச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்

தினமும் இரண்டு பேரிச்சம்பழத்துடன் ஒரு குவளை பால் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியடையும்

ஏதாவது காயத்தால் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

பேரிச்சம்பழச் சாறு பருகுவது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

பேரிச்சம்பழத்தை அரைத்து ஒரு குவளை பாலில் கலந்து சாப்பிட்டு வர எலும்புகள் வலுப்பெறும். உடல்வலிமை கூடும்.

தினமும் இரவில் 3 பேரிச்சம்பழம் சாப்பிட்டு, வெந்நீர் அருந்தினால், மலச்சிக்கல் ஏற்படுத்தும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரிச்சம்பழத்தைப் பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆகச் செய்து சாப்பிட்டால் வாதம், பித்தம், முட்டி வீக்கம் போன்றவை குணமாகும்.

பேரிச்சம் கொட்டையையும் வறுத்துப் பொடி செய்து காபி போல் பால், சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக்கடுப்பாய் அவதியுற நேரலாம். அவர்களுக்குப் பேரிச்சம்பழத்தைக் குழைய வேகவைத்து, வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை கொடுத்தால் பேதி நிற்கும்.