ஒவ்வொரு ஆண்டும், மருத்துவமனைகளில் ஏற்படும் சுகாதரக் குறைவுகளால், பல லட்சம் நோயாளிகள் நோய்க் தொற்றுக்கு உள்ளாகி நோய்ச்சிக்கல் அதிகமாகி விடுகிறது என்கிறார் டாக்டர் பெனெட்டலா அலெகிரான்சி, உலக சுகாதார நிறுவன கன்சல்டன்ட். பண்பாட்டுத் தடைகளும், மதங்கள் விதிக்கும் தடைகளும், ஆல்கஹாலைப் பயன்படுத்துவதைத் தடுப்பதால், ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது. இதனால், உலகில் 25 சதவிகிதத்திற்கும் குறைவான டாக்டர்களே, ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதித்தும் கைகளை கிருமி நாசினிகள் கொண்டு கழுவுகின்றனர் என்கிறார், ஏதென்சில் உள்ள அட்டிகோன் பல்கலைக் கழக கெலன் கியமரல்லு. 

அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவமனைகளில் நோய்த்தொற்றுக்களுக்கு ஆளாகி 90 ஆயிரம் பேர் உயிரை இழக்கிறார்கள். தவிர மேலும் 20 லட்சம் பேர் நோய்த்தொற்றுகளால் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ் என்ற பாக்டீரியா தான் மெதிசில்லின் என்ற ஆன்டி பயாட்டிக்கையும் எதிர்த்து நின்று, அசுத்தமான கைகளிலிருந்து நோய்களைப் பரப்பக் காரணமாக அமைகின்றது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த பாக்டீரியா உலகம் முழுவதும் பரவி வந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பின்னணியில், உலக சுகாதர நிறுவனம் உலகளாவிய இயக்கம் ஒன்றைத் தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் டாக்டர்கள் நோயாளிகளைப் பரிசோதித்த பின்பு கைகளைக் கிருமி நாசினிகள் கொண்டு கழுவ வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. தவிர, மலம் கழித்த பின் கை கால்களைக் கழுவும் ஒவ்வொரு வேளையிலும் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். ஒவ்வொரு வேளையும் சாப்பிடப் போகும் முன்பும் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.