யாருக்காவது மாரடைப்பு வந்து விட்டால், ‘ஆஞ்சியோ’ பண்ணிடலாம்; ஸ்டென்ட் வைத்து விடலாம் என்பார் மருத்துவர்.

‘ஸ்டென்ட்’ என்பது, மருத்துவத்தின் ஒரு கொடை என்றே கூற வேண்டும். மூளைக்குச் செல்லும் குருதி ஓட்டம் பாதிக்கப்பட்டு, பக்கவாதம் ஏற்படுவதைத் தடுக்கவும், இந்த ஸ்டென்ட் பயன்படுகிறது என்பதை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்து உள்ளனர்.

இந்தியாவில் பெரும்பாலும், இரத்த நாளங்களில் ஏற்படுகின்ற அடைப்பை நீக்க, ஸ்டென்ட் பயன்படுத்துகின்றனர். அதில் நோயாளிகளுக்கு நல்ல பயன் கிடைக்கின்றது. அதன்பின்பு தேவைப்பட்டால், புறவழி அறுவை (பைபாஸ்) செய்கின்றனர். பெரும்பாலானோருக்கு, ஸ்டென்ட் பொருத்திய பின்பு, மருந்து, மாத்திரைகளிலேயே சீராக்கி விட முடிகிறது.

ஸ்டென்ட் என்றால் என்ன?

இது ஒரு மிகச்சிறிய வலைக்குழாய். உடலில் எந்த பாகத்தில் குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டாலும், அங்கே குருதி ஓட்டத்தைச் சீராக்க இந்த வலைக்குழாய் உள்ளே செருகப்படுகிறது. இதற்காகத்தான் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படுகிறது. அதன் முக்கியக் கட்டம்தான் வலைக்குழாய் பொருத்துவது.

குருதி ஓட்டம் தடைப்படுவதைத் தடுப்பதற்கு மட்டும் அன்றி, குருதிக் குழாய்கள் பலவீனமாக இருந்து வெடிப்பதைத் தடுக்கவும், வலைக்குழாய் பயன்படுகிறது. உலோகம் ஒருவகை குழாய்கள் மூலம் இந்த வலைக்குழாய்கள் உருவாக்கப்படுகின்றன. சிலவகைக் குழாய்களில் மருந்து தடவப்பட்டு இருக்கும்.

(அண்மையில் ஒருவருக்கு இதய அறுவை செய்வது தொடர்பாக மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்தேன். மருந்து தடவிய குழாய்கள் விலை அதிகம்; எனவே, பிரதமர், முதல்வர் உதவி நிதி பெறப்பட்டுச் செய்யப்படும் இதய அறுவை சிகிச்சைகளில் மருந்து தடவாத சாதாரண வலைக்குழாய்களையே பொருத்துவோம் என்றார்கள்.)

இதயத்தில் குருதி ஓட்டம் சீராக இருக்க வேண்டும். அங்கிருந்துதான் மற்ற உறுப்புகளுக்கு குருதி செல்கிறது. குருதிக் குழாய்களில் கொழுப்பு சேர்வதால், அடைப்பு ஏற்படுகிறது. அதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதைத்தான், ஆஞ்சினோ என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதைத் தடுக்க, ஆஞ்சியோ பிளாஸ்டி செய்கிறார்கள். வலைக்குழாய் பொருத்தப்பட்டவுடன், குருதி நாளங்களில் உள்ள அடைப்பு நீக்கப்படுகிறது. வலைக்குழாய்களின் வழியாக, குருதி சீராகப் பாய்கிறது.

வலைக்குழாய்கள் இல்லாவிட்டால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு, மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. பக்கவாதத்தைத் தடுக்கும் வலது, இடது கழுத்தில் கரோடைட் என்ற ரத்தக்குழாய்கள் உள்ளன. இதயத்தில் இருந்து செலுத்தப்படும் குருதி, இந்த நாளங்களின் வழியாகத்தான் மூளைக்குச் செல்கிறது. இதிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கவும், ஆஞ்சியோ பிளாஸ்டி பயன்படுகிறது. வலைக்குழாய் பொருத்தியவுடன், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாதம் தவிர்க்கப்படுகிறது.

(தினத்தந்தி தினம் ஒரு தகவல்: ‘கீற்று’க்காகத் தட்டச்சு செய்து அனுப்பியவர் அருணகிரி)