தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை உதறித் தள்ளி ‘நீட்’டை திணித்தது மோடி ஆட்சி. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையிலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்தது ‘நீட்’ தேர்வு.

சி.பி.எஸ்.ஈ. என்ற மத்திய அரசு பாடத் திட்டத்தில் நடத்தப்படுவது இந்தத் தேர்வு, அந்தப் பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் 15 சதவீதம் பேர். அதுவும் பார்ப்பனர், பணக்காரர், உயர்சாதி, மேட்டுக்குடி வர்க்கத்தினர். 85 சதவீதம் நமது மாநில அரசு பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மாணவர்கள், நமது மாணவர்கள் ‘நீட்’ தேர்வு முறைக்கு பழக்கப்படா தவர்கள். எனவே ப்ளஸ் டூ தேர்வில் மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியவில்லை.

எங்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நாங்களே நடத்திக் கொள்ள வேண்டும். டெல்லி ஆட்சி திணிக்கும் நீட் தேர்வு வேண்டாம்; இதனால் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்து வரும் எங்கள் நாட்டு மாணவர்கள் இடங்களைப் பெற முடியவில்லை.

இப்போது நீட் தேர்வில் வெளிநாடுகளில் வாழும் பார்ப்பன உயர்ஜாதி மற்றும் தொழிலதிபர் வீட்டுப் பிள்ளைகள், வெளி நாட்டுக்காரர்களாக குடியுரிமைப் பெற்றுக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் இந்தியர்கள். (இவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள்) இந்தியாவிலேயே பிறக்காத வெளிநாட்டுக்காரர்கள் அனைவருமே நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிக்க வழி திறந்து விட்டார்கள். நீட் தேர்வை உலகத் தேர்வாக்கிவிட்டோம் என்கிறது, மோடி ஆட்சி! என்னடா கொடுமை!

அரியலூரிலிருந்து மருத்துவம் படிக்க வரும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வரும் மாணவர் களோடும், ஆடுதுறையிலிருந்து மருத்துவம் படிக்க வரும் நமது ஒடுக்கப்பட்ட சமுதாயத்துப் பெண், ஆஸ்திரேலியாவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கி நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களோடும் போட்டி யிட்டு தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்பது எந்த ஊர் நியாயம்?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இப்போது நீட் தேர்வை இரத்து செய்வோம் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ‘நீட்’ தேர்வை இரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளதோடு மாநில அரசுகளே அதற்கான தகுதி தேர்வுகளை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் உரிமை கோரிக்கையை பாதியளவு ஏற்றுக் கொண்டுவிட்டது காங்கிரஸ். உயர் கல்வி மட்டும் பொதுப் பட்டியலில் இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

‘நீட்’ தேர்வு உச்சநீதிமன்றம் வழியாக அமுல்படுத்தப்படுவதால் அதை மாற்றவே முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாகத் தாக்குகிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பிலிருந்து தமிழ் நாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி விதி விலக்குக் கோர நாடாளுமன்றங்களும் சட்டத் திருத்தங்களும் இருக்கின்றன என்பதை பா.ஜ.க. மறைக்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்கவே மறுக்கும் பா.ஜ.க. ஆட்சியோடு கூட்டணி வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க. ‘நீட்’டை இரத்து செய்வதாக தேர்தல் அறிக்கையில் கூறுவது கண்துடைப்பு தான்!

நீட் தேர்வில் நடந்த ஊழல்

2017 நவம்பரில் முதுகலை பட்டப்படிப்புக்காக நடந்த நீட் தேர்வுகளில் மோசடி நடந்துள்ளதாக தில்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரோமெட்ரிக் நிறுவனத்திடம் எந்தவொரு டெண்டரும் கோராமல் வழங்கியது தேசிய தேர்வாணையம் (National Board of Examinations). ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொண்ட புரோமெட்ரிக் நிறுவனம், அதை சி.எம்.எஸ் நிறுவனத்திற்கு வழங்கியது.

சி.எம்.எஸ் நிறுவனம் (மருத்துவ மற்றும் மருத்துவ சேவைக்கான மய்யம்) காண்டிராக்ட் அடிப்படையில் பல்வேறு உள்ளூர் நிறுவனங்களிட மிருந்து ஊழியர்களை நியமனம் செய்துள்ளது.

இந்நிலையில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

புரோமெட்ரிக் முறையில் எழுதப்படும் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு இணைய இணைப்பு இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதி பல்வேறு தேர்வு மையங்களில் மீறப்பட்டது.

கணினிகளில் ஆம்மி அட்மின் (Ammy admin) எனும் இரகசிய மென்பொருளை நிறுவி, அவற்றின் திரைகளை (Desktop Screen) வெளியிடங்களில் இருந்து இயக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட கணினியில் தேர்வெழுத இலஞ்சம் பெற்றுள்ளனர்.

இக்கணினிகளில் தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

நீட் தேர்வுகளுக்காக பயன்படுத்தப்பட்ட கணினிகளில் இரகசிய மென்பொருட்களை நிறுவி மோசடியில் ஈடுபட்டவர்கள், தேர்வு முடிந்த உடனேயே அவற்றில் உள்ள ஆதாரங்களை முற்றிலுமாக அழித்துள்ளனர்.

சில மையங்களில் நேரடியாகவே இணைய இணைப்பு கொண்ட கணினியில் தேர்வை எழுத அனுமதிப்பதற்கு இலஞ்சம் பெற்றுள்ளனர்.

இலஞ்சம் கொடுத்த மேட்டுக்குடி குலக் கொழுந்துகள், நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை இணையத்தில் தேடி எழுதியுள்ளனர். ஒரு சில மையங்களில் தேர்வு மைய நிர்வாகிகளே, கேள்விகளுக்கான விடைகளை துண்டுத் தாள்களில் எழுதி மாணவர்களிடம் கொடுத்துள்ளனர்.