'புலிகளை முற்றாக அழித்துவிட்டோம். பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம்' என்று தமிழர்களின் பிணங்களின் மேல் நின்று இன அழிப்பு அரசு 2009 மே 19 அன்று அறிவித்தபோது சக தமிழர்களில் ஒருவனாக நான் பேதலித்து விறைத்துப்போய் நின்ற போது Peace and war conflicts கற்கும் ஜப்பான் தோழி ஒருவர் குறிப்பிட்டார்.

சிறீலங்கா அரசின் வெற்றுக் கூச்சல் அது. எந்த ஒடுக்கப்பட்ட இனத்திற்கும் போராடும் இனத்திற்கும் இல்லாத பலம் உங்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் ஒரு சிறிய நீர்ப்பரப்பு பிரித்து வைத்திருக்கும் கூப்பிடு தூரத்தில் ஒரு தனித்த மாநிலமாக 7 கோடி தமிழர்களை கொண்ட ஒரு நிலப்பரப்பு இருக்கும்வரை உங்கள் போராட்டத்தை யாரும் தோற்கடிக்க முடியாது. இந்த புவியியல் அமைவு பிராந்திய பூகோள நலன்களை உங்களுக்கு என்றாவது ஒரு நாள் சார்பாக திருப்பும் வல்லமை கொண்டது. சனத்தொகையில் ஈழம் தமிழகம் சேர்ந்த நிலப்பரப்பை ஒப்பிடும்பொழுது சிங்களவர்கள் எந்த பெறுமதியும் அற்றவர்கள் ஆவார்கள். இது பிராந்திய அரசியலில் பலம் சார்ந்த முக்கியமான கூறு. என்றாவது ஒரு நாள் தமிழகம் உங்களது விடுதலையை சாத்தியப்படுத்தும் அரசியலை எழுதும். அதனால் கவலை கொள்ளாதீர்கள் என்றார்

ஈழத் தமிழர்ளாகிய நாம் நம்பிக்கை கொள்ளும் ஒரு அம்சம் இது. 2013 மாணவர் எழுச்சி இந்த நம்பிக்கையை மேலும் விதைத்தது. விளைவாக தமிழக சட்டசபையில் தனித்தமிழீழ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தொடர்ந்து தமிழகம் தனது சக்தியை உணர்ந்து செயற்பட்டதா என்ற கேள்விக்கு நம்பிக்கை தரும் பதில் இல்லை. இந்த பழியை முழுமையாக தமிழககத்தின் மீது திணித்து விட முடியாது. ஈழத்தமிழர்களாகிய நாம் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்ற உண்மையையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒரு அரசியல் - இராஜதந்திர அம்சம்.

மே 18க்கு பிறகு இதில் மேலும் கணிசமான இடம் தமிழகத்திற்கு போய் விட்டது மட்டுமல்ல, மீண்டும் எமது விடுதலைப் பேராட்டத்தின் பின்தளமாகவும் தமிழகம் மாறியிருக்கிறது.

எனவே தமிழக அளவில் போராட்ட அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இன அழிப்புக்கு நீதி வேண்டி நிற்கும் இனமாக பிராந்திய - பூகோள அரசியலை தமிழகத்தை மையமாக வைத்து நாம் ஒரு வரைபடத்தை வரைய தவறிவிட்டோம்.

குறிப்பாக ஐநா தொடர்பான விடயங்கள் அல்லது அதை கையாளல் என்பதில் நாம் ஒரு மோசமான தேக்கத்தைச் சந்தித்துவிட்டோம் என்பது இன்றளவும் மறுக்க முடியாத உண்மை.

2009 நடந்து முடிந்த இனஅழிப்பிற்கு பிறகான நமது தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடான ஒரு தெளிவற்ற - குழப்பகரமான - எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு மனநிலையின் வெளிப்பாடாக அமைந்த எமது மதிப்பீடுகளின் விளைவு இது.

ஆனாலும் 2013 இல் மாணவர்கள் ஒரு புரட்சியினூடாக அந்த மதிப்பீட்டை கேள்விக்குள்ளாக்கி ஒரு பாதையை திறந்து வைத்தார்கள். ஆனால் தமிழக அரசியல்வாதிகளும், அமைப்புகளும் அதை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தத் தவறிவிட்டார்கள்.

எனவே இது சரி செய்யப்பட வேண்டும்.

'ஐநாவை கையாளல்' என்பதன் கன பரிமாணத்தை அதன் உள்ளார்ந்த அர்த்தத்தில் நாம் சரியாகப் புரிந்து கொள்வதனூடாகவே நாம் இந்த தேக்கத்தை சரி செய்ய முடியும்.

எனவே கொஞ்சம் பின்னோக்கிப் போய் இதை புரிந்து கொள்ள முற்படுவோம்.

கடந்த ஏழு வருடங்களாக தமிழின அழிப்பின் முதன்மை குற்றவாளிகளாக ஐநாவை குறிப்பிட்டுப் பேசியும் எழுதியும் அதை ஒரு செயற்பொறிமுறையாக மாற்றவும் முயன்றும் வரும் ஒரு தரப்பின் பிரதிநிதியாக எனது கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.

ஈழத்தில் நடத்தப்பட்டது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான அமைதிக்கெதிரான குற்றம். இதுவே இன அழிப்பாக மாறியது. இது ஐநாவின் பூரண அறிவுடன் நடத்தப்பட்டது.

எனவே ஐநா வை குற்றவாளியாக நாம் அடையாளப்படுத்துவது மட்டுமல்ல ஐநாவிற்கு சமாந்தரமாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்த வேண்டிய கடப்பாட்டில் நாம் உள்ளோம்.

ஏனென்றால் பொறுப்பற்ற விதத்தில் மனித விழுமியங்களுக்கு முரணாக மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிய ஒரு அமைப்பின் கட்டமைப்பு ரீதியான தோல்விக்குள் சிக்கி அழிவுற்ற ஒரு இனமாக மேற்படி பொறிமுறையை உருவாக்குவதுதான் சரியானதும் நீதியை நோக்கி நகர்வதுமாகும்.

ஐநா தமிழின அழிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறது என்று தெரிந்திருந்தும் தமிழ் அமைப்புகளோ தமிழ் அரசியல் தலைவர்களோ அதை கண்டிக்கவோ அதை அனைத்துலக மட்டத்தில் ஒரு விவாதமாகவோ கூட மாற்ற முன்வரவில்லை. இதன் விளைவுதான் ஏழு வருடங்களைக் கடந்தும் எமக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்றதென்பதை இங்கு அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஐநா விற்கு எதிரான சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதே நேரத்தில் ஐநாவிற்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டங்களையும் விரிவு படுத்தியிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல், கரன் பாக்கர், ரம்சி கிளார்க் என்று பல உலகறிந்த சட்ட அறிஞர்கள் தமிழ் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பிலேயே இருக்கிறார்கள். எனவே அமைப்புகள் இந்த பலத்தையும் அறிவையும் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் குழு கும்பல் மோதல்களுக்குள் நமது அமைப்புகள் சுருங்கிப்போன அவலம்தான் நடந்து முடிந்திருக்கிறது.

நடந்து முடிந்த விடயங்களை பேசுவதோ - பரஸ்பரம் குற்றங்களை வீசுவதோ ஆரோக்கியமான போக்கு இல்லை. ஆனாலும் நாம் ஏன் தேங்கிப் போய் இருக்கிறோம் என்பதை கண்டறியவும் - அதிலிருந்து மீளும் ஒரு பொறிமுறையை உருவாக்கவும் சிலவற்றை இங்கு பேச வேண்டியுள்ளது.

ஐ.நா.வை கையாளல்

இங்கு இரண்டு விடயங்களை நாம் முதன்மையாக பார்க்க வேண்டும்.

01.        ஐநா எங்களை எப்படி அணுகியது?

02.       ஐநா வை நாம் எப்படி  அணுகினோம்?

இதை 2009க்கு முன்பும் பின்பும் என்று நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

உலக வல்லரசுகளின் கைப்பாவை அமைப்பான ஐநா ஒரு போராடும் இனத்தை எப்படி கையாளும் என்பதில் போதிய அறிவிருந்தும் நாம் அந்த கோணத்தில் ஐநாவை அணுகவில்லை. அதீத நம்பிக்கைகளை வளர்த்து விட்டோம் அல்லது அதை விட வேறு தெரிவில்லாத நிலை என்று கூட இதை வரையறுத்துக் கொள்ளலாம்.

பிரச்சினை இங்கு அதுவல்ல. 2009க்கு பிறகு நீதி வேண்டி நிற்கும் ஒரு தரப்பாக நாம் எப்படி ஐநா வை அணுகினோம் என்பதுதான் இங்கு பிரச்சினையே!

ஐநாவை ஒரு குற்ற தரப்பாக நாம் அணுகத் தவறிவிட்டோம். ஐநாவை குற்றவாளியாக்குவ தனூடாகத்தான் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்ற கள யதார்த்தத்தை - நிலவரத்தை நாம் மறந்து விட்டோம் அல்லது அதன் சாத்தியம் குறித்த அச்சத்தால் அதை விரும்பியே மறக்க முயன்றோம் என்று கூட இந்த நிலையை வர்ணிக்கலாம்.

eelam 600ஐநா உண்மையிலேயே குற்றவாளிதானா?

இந்தக் குற்றச்சாட்டை முதன் முறையாக நாங்கள் முன்வைக்கவில்லை. இக் குற்றச்சாட்டு 2009 இனஅழிப்பு நேரத்தில் உலெகெங்கிலுமுள்ள பல மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் உட்பட பல மேற்குலக ஊடகங்களினாலும் பரவலாக முன்வைக்கபட்டது.

அவர்கள் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் மீதும் அதன் செயலாளர் நாயகத்தின் மீதும் தமது கண்டனத்தை இன்றுவரை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக “இன்னர்சிற்றிபிரஸ்' இதை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வன்னிப்படுகொலைகள் திடீரென்று நடந்த நிகழ்வுகள் அல்ல. சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என்பவற்றை முற்றாக வெளியேற்றிவிட்டு வெளி உலகத்துடனான தொடர்புகளை முற்றாகத் துண்டித்துவிட்டு பொருளாதார மருத்துவ தடைகளை போட்டுவிட்டு குறிப்பான ஆறு மாத காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட ஓன்றரை இலட்சம் உயிர்களை காவு கொண்டு ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது சிறீலங்கா பேரினவாத அரசு.

இங்கு குறிப்பான விடயம் என்னவெனில் சிறீலங்கா அரசின் படிப்படியான மேற்படி நடவடிக்கைகளை அவதானித்து ஒரு இனப்படுகொலை நிகழப்போகிறது என்பது பல தரப்பாலும் உணரப்பட்டு உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அதற்கு சிறீலங்கா அரசை இணங்கச்செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் ஐக்கிய நாடுகள் சபையிடம் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டது.

நாம் வீதியில் மாதக்கணக்காகக் கிடந்ததே அதற்கு சாட்சி. ஆனால் காத்திரமான எந்த நடவடிக்கையையும் ஐநா மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல இன்றுவரை இவ் இனப்படுகொலை தொடர்பாக ஒரு மௌனத்தையே கடைப்பிடித்து வருகிறது. இது ஐநாவின் சாசனத்திற்கும் தோற்றத்திற்குமே ஒருமுரணான விடயம்.

உலகப் போர்களின் விளைவாக நிகழ்ந்த அனர்த்தங்களினாலும் மனிதப் பேரழிவுகளினாலும் அதிர்ச்சியுற்ற அரசுகள் - அமைப்புகள் ஒன்று சேர்ந்து இனி இப்படியான மனிதப்பேரழிவுகள் நடைபெறக்கூடாது என்ற கொள்கையுடன் முன்னெச்சரிக்கையாக தோற்றுவித்த ஒரு உலக பொது அமைப்பு. இந்த நவீன யுகத்தில் ஒரு இனம் தனது சொந்த நிலத்தில் வைத்து அழித்தொழிக்கப்பட்டதை அனுமதித்ததும் அதனைத் தடுக்காததும் அந்த அமைப்பின் தோற்றத்தையும் இருப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

ஐ.நா சாசனத்தின்படி நாடுகள் என்ற உள் வெளி எல்லைகளுக்கு அப்பால் ஒரு இனத்தின் மொழி, அடையாளம், பண்பாடு, இறைமை என்பவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்களின் மீதான அழித்தொழிப்பே மனித உயிர்களாகக் காவு கொள்ளப்பட்டது. இது இந்த பூமிப்பந்தில் வாழும் ஒரு இனம் தொடர்பான ஐநாவின் சாசனத்திற்கு முரணானது.

இந்த அடிப்படையிலேயே “இன்னர்சிற்றிபிரஸ்” உட்பட பல ஊடகங்கள், மனிதநேய ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள் பான்கிமூன் மீது குற்றத்தை சுமத்துகிறார்கள்.

சர்வதேச கூட்டு அரச பயங்கரவாதத்தால்- சிறீலங்கா மட்டுமல்ல அழித்தொழிக்கப்பட்ட ஒரு இனத்தின் இரத்த சாட்சியங்கள் நாங்கள். ஐநாவின் சாசனத்திற்கெதிராக நாம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறோம். இதை நாம் உலகத்திற்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற எமது அரசியல் அவாவை வெல்வதன் பின்னணியில் அதன் அடிப்படையாக இனம், மொழி, பண்பாடு, நிலம் என்ற அடையாளங்கள் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் பேசப்படுகிற ஒரு விடயமாக இது இருக்கிறது. இந்த அடையாள அழிப்பே முள்ளிவாய்க்காலின் பின்னணயில் இருந்தது. எனவே எமக்கு பதில் சொல்லவேண்டியவர் பான்கிமூன்தான். அவர் தற்போது தனது பதவி காலத்தை முடித்துவிட்டார். ஆனாலும்; அவர் குற்றவாளி என்பதில் எனக்கு தெளிவு வேண்டும்.

நாம் பான்கிமூனை குற்றவாளியாக்கி போராடுவதனூடாக எமது போராட்டம் பன்மைப்படுத்தபடும். உலக கவனம் அதில் குவியும். விளைவாக இனப்படுகொலை குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நேரிடையான சூத்திரதாரிகளான சிங்கள இராணுவ, அரச தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் நாம் அந்த வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம்.

பெரும் போர் நடந்து முடிந்த தேசங்களில் ஐநாவின் அமைதிப்படை சென்று பணியாற்றுவதும் ஏதிலிகள் முகாம்களை ஐநா பொறுப்பெடுப்பதும் வழமை. ஆனால் சிறீலங்காவில் என்ன நடக்கிறது?

நாம் ஐநாவிற்கு எதிராக ஒரு வழக்கை பதிவு செய்யுமாறு தொடர்ந்து கேட்டு வந்தோம். ஐநா மீது வழக்கு தொடர முடியாது என்பதும் அதற்கு சட்ட விலக்கு இருக்கிறது என்பதும் எமக்கு தெரியாத தல்ல. ஆனாலும்; இந்த முயற்சி எமக்கு சில இராஜதந்திர வெற்றிகளை பெற்று தரும் என்ற கோணத்தில் சிந்திக்க நாம் வலியுறுத்தினோம்.

அதாவது ஒரு இனம் ஏன் ஐநா வை குற்றவாளி என்கிறது? அதன் மீது வழக்கு தொடுக்க முனைகிறது? என்ற கோணத்தில் ஓர் விவாதத்தை உலக அளவில் எழுப்பி தமிழின அழிப்பிற்கான நீதியை நோக்கி நகரும் ஒரு முயற்சியே தவிர இந்த வழக்கு ஏற்றுக்கொள்ள பட மாட்டாது என்பது மட்டமல்ல அது நின்று பிடிக்காது என்பதும் எமக்கு தெரியும்.

நாம் ஐநா எமக்கு அநீதி இழைத்து விட்டது என்பதை கண்டடைந்த உடனேயே 2009 யூன் மாதமளவிலேயே ஐநா மீது - குறிப்பாக பான்கிமூன் மீது ஒரு வழக்கை பதிவு செய்ய முனைந்திருக்க வேண்டும். குழு கும்பல் மோதல்களும், தோல்வி தந்த உளவியல் பாதிப்புகளும், அரசியல் இராஜதந்திர விவேகமற்ற செயற்பாடுகளும் இதைத் தடுத்து மடைமாற்றி விட்டன.

அப்போதே ஒரு வழக்கை பதிவு செய்திருந்தால் எமது நீதிக்கான படிமுறைகள் வேறு ஒரு பரிமாணத்தை எட்டியிருக்கும். இப்படி தேங்கிப்போயிருக்க மாட்டோம்.

இலங்கையில் ஐநாவின் செயற்பாடுகள் கட்டமைப்பு ரீதியாகத் தோல்வியுற்றன என்ற வெளிப்படையான அறிவிப்புடன் இறுதி அறிக்கையும் ஐநாவிற்கான பரிந்துரைகளும் எப்போதோ வெளிவந்து விட்டன. அதற்கு முன்பாக ஐநா செயலர் பான்கிமூன் ஐநா வின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் கூட வெவ்வேறு தருணங்களில் இந்த தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொண்டி ருந்தார்கள்.

இந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை வைத்து நாம் என்னதான் செய்வது?

வரலாற்றில் முதல் தடவையாக கெயிட்டி மக்கள் ஐநா மீது 2 வருடங்களுக்கு முன்பு நியூயோர்க் நீதிமன்றில் ஒரு வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வாறான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து சட்டப்படியான விலக்கு பெறும் தகுதி இருப்பதாக ஐநா கூறுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்தாலும் அது சர்வதேச சட்டத்தின் மிக முக்கியமான மைல் கல்லாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது உண்மையில் தமிழர்கள் செய்திருக்க வேண்டிய சாதனையை கெயிட்டி மக்கள் தட்டி சென்று விட்டார்கள்.

எமது வழக்கும் இத்தகையதுதான். வழக்கு முடிவு முக்கியமல்ல. எமது இன அழிப்பில் ஐநா உடந்தையாக இருந்தது என்ற அனைத்துலக மட்டத்திலான எமது குற்றச்சாட்டுத்தான் முக்கியமானது. வழக்கில் தோல்வியுற்றாலும் இந்த வரலாற்று குற்றச்சாட்டு ஐநாவையும் மேற்குலகையும் எமக்கான நீதியை வழங்க உந்தும். தொடர்ந்து எம்மை இம்சிக்கும் அல்லது நீதியை மடைமாற்றும் வேலைகளை நாம் தடுக்க உதவும்.

ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல ஐநாவிற்கு எதிரான ஆயிரக்கணக்கான ஆதாரங்கள் எம்மிடையே குவிந்துள்ளன.

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு இன அழிப்புக்கு உடந்தையாக ஐநா இருந்தது என்பதை நிறுவி ஐநா செயலாளர் நாயகத்தை பதவிநீக்கம் செய்து தமது நீதியை பெற்றார்கள் என்ற வரலாற்றை எம்மால் படைத்திருக்க முடியும். ஆனால் இன்று ஏதோவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. வெறும் பார்வையாளர்கள் போல் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

2009 இல்தான் ஏமாற்றப்பட்டோம். ஆனால் தொடர்ந்தும் நமது அணுகுமுறைத் தவறினால் உள்ளக அளவில் ஐநாவிற்குள்: பல சதிகள் அரங்கேற நாமே வழி கோலிவிட்டோம்.

அதாவது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பும் அமைதிக்கெதிரான குற்றமுமாகும். 2002இன் சமாதான நடவடிக்கைகள் ஊடாக வேறுபட்ட காரணங்களுக்காகப் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வை அடைய முயன்று கொண்டிருந்த இலங்கைத் தீவின் மக்கள் அனைவருக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட அமைதிக்கெதிரான குற்றமாகவும் அது இருக்கிறது.

இலங்கையின் வன் கொடுமைகளை வரலாற்று நோக்கில் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச மனிதநேயச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றே பல வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஐநா வின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் இலங்கை இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அனைத்து உள்ளக அமைப்புகளும் தோல்வி கண்டுள்ளதாக கூறியுள்ளார். இதுவே போதும் நாம் ஐநாவை குற்றவாளி என்று அறிவிக்க..

ஆனால் பிற்பாடு இதையும் தாண்டி பான்கிமூன் சில உள்ளக சதிகளில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டுள்ளன. நம்பியார் தொடக்கம் சார்ள்ஸ் பெற்றி வரை பான்கிமூன் ஐநா விதிகளை மீறியிருக்கிறார். இதை நாம் சொல்லவில்லை இன்னர்சிற்றி பிரெஸ் விரிவாகவே பதிவு செய்திருக்கிறது.

முதலில் நம்பியார். வெள்ளைக்கொடி விவகாரம் தொடக்கம் பல சதிகள் செய்தவர் இவர்தான்.

அடுத்து தமிழின அழிப்பை நடத்தி முடிக்க ஏதுவாக பான் கீ மூன் இந்திய கைக்கூலி நம்பியாரை களம் இறக்கியது போல் நடந்து முடிந்த இன அழிப்பை மறைக்க நோர்வே கைக்கூலி சார்ள்ஸ் பெற்றியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற அதிகாரி நியமனத்திற்கு பதிலாக நியமித்தவர் பான் கீ மூன்.

இவர் 4 மாதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கையை 9 மாதங்கள் கடந்தும் சமர்ப்பிக்காமல் மௌனம் சாதித்து வருவதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம் சுமத்திய பிற்பாடுதான் பல இழுத்தடிப்புகளின் பின் அது வெளிவந்தது. இந்த சார்ள்ஸ் பெற்றிதான் விதிகளுக்கு முரணாக ஐநா நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்டவர்.

அடுத்து இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹென்ஸ் ஒரு பக்கம் தெரிவித்த பின்பும் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைக்கும் பான் கீ மூன் உத்தரவிடவில்லை.

மாறாக இன அழிப்பு அரசின் இராணுவ அதிகாரிகள் ஐநா பதவிகளையும் தூதரக பதவிகளையும் அலங்கரித்தார்கள். வெள்ளைக்கொடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பாலித கோகன்ன தொடக்கம் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்த சவேந்திர சில்வா வரை இந்த பட்டியல் நீளமானது.

அடுத்து வன்னிப் போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஐநா நிபுணர் குழு அறிக்கையின்படி 40,000

அந்த அறிக்கையை தயார் செய்த மூவர் குழுவில் ஒருவரான ஜஸ்மின் சூக்கா அண்மையில் ஊடகவியலாளர் பிரான்சேஸ் கரிசனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லிய எண்ணிக்கை 75,000

ஆனால் அவர் ஏன் அதை நிபுணர் குழு அறிக்கையில் பதிவு செய்யவில்லை என்பதற்கு இன்று வரை பதிலில்லை. பாருங்கள் 35000 பேரை ஐநா தெரிந்தே விழுங்கிவிட்டது. ஆனால் வண பிதா ராஜப்பு ஜோசப்பு அடிகளார் போன்றவர்கள் சொல்லும் உண்மையான எண்ணிக்கை 1,46,679

இப்படி எண்ணற்ற திருகுதாளங்கள் தமிழினத்திற்கு எதிராக ஐநாவிற்குள்ளேயே நடந்தது - இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.

இதன் பின்பும் ஐநா வின் நிகழ்ச்சி நிரலின் பின் எப்படி நாம் இழுபட முடியும்? ஐநா வை இக்கட்டில்தள்ளி அதை நாம் வளைப்பதனூடாகவே நாம் ஒரு நீதிக்கான பாதையை தெரிவு செய்யலாமே ஒழிய எந்த நிபந்தனையுமின்றி ஐநாவின் பின் இழுபடுவதனூடாக எதையும் சாதிக்க முடியாது.

இவ்வளவு விமர்சனம் இருந்த போதிலும் ஐநாவுடன் உடன்படும் புள்ளிகளையும் நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.

தமிழின அழிப்பில் ஐ.நா ஒரு பங்காளி என்ற பொழுதும் தமிழ்த்தேச விடுதலைக்கான அங்கீகாரத்தில் ஐ.நா வின் இடம் மறுக்க முடியாத ஒரு பாத்திரமாகிறது. புலிகளின் மே 18 செய்தி என்பதே ஐ.நா வை சுற்றி வைக்கப்பட்ட - வரையப்பட்ட பொறி(முறை)கள்தான். எனவே நாம் வளைத்தும், சுற்றியும் ஊடறுத்தும் ஓட வேண்டிய பாதை ஐ.நாவை மையமாகக் கொண்டது தான் என்பது வெளிப்படை.

ஐ.நா வுடன் உடன்பட்டும், உடன்படாமலும் அதாவது ஐ.நா வின் இனஅழிப்பு பங்களிப்பை அம்பலப்படுத்துவது தொடக்கம், இனஅழிப்பில் ஐ.நா வை குற்றவாளியாக்குவது வரை எதிர்த்தும் ஐ.நா வின் தலையீட்டை மிக தந்திரமாக எதிர்கொண்டு, அதனோடு ஒத்தோடுவது வரை இதன் உள்ளடக்கத்தை பலவாறாக விபரிக்கலாம்.

ஆனால் மே 18 க்கு பிறகு அரசியல் செய்ய புகுந்த யாருமே இதைக் கவனத்தில் கொள்ளவில்லை அல்லது இந்த உண்மையின் ஒரு பகுதியை மட்டும் நம்ப விரும்பினார்கள். அல்லது தாம் தெரிந்தே உருவாக்கிய - தம்மை இயக்கும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் ஊடாக இந்த உண்மையை மழுங்கடிக்க முனைந்தார்கள்.

இத்தகைய புரிதல் உள்ள நாம் தான் ஐ.நா வுடன் ஒத்தோட வேண்டிய புள்ளிகளையும் அடையாளம் கண்டு அதனோடு இசைந்து பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நமது அமைப்புக்கள் அதைக்கூட பயன்படுத்திக்கொண்டார்களா என்றால் அதுதான் இல்லை.

இனஅழிப்புக்கு துணைநின்ற மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை தெளிவான அரசியல் புரிதல் உள்ள யாராலுமே ஏற்க முடியாது. இனஅழிப்பை படிப்படியாக போர்க்குற்றமாகச் சுருக்கி அதையும் காலப் போக்கில் மனித உரிமை மீறல் பிரச்சினையாக்கி முன்மொழியப்படும் தீர்மானத்தை இனஅழிப்பை எதிர்கொண்ட - தொடர்ந்து எதிர்கொண்டுள்ள ஒரு இனம் எப்படி ஏற்க முடியும்?

மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில்தான் 'போர்க்கால நெறி பிறழ்வுகள்'

என்று இனப்படுகொலையை சுருக்கியிருந்தார்கள். ஆனால் நடந்தது உண்மையில் மனித குலத்திற்கு எதிரான - அமைதிக்கெதிரான குற்றம். இதன் விளைவாக நடந்தது இன அழிப்பு. இங்கு எல்லோருமே குற்றவாளிகள்தான

எனவே தான் பல தளங்களில் இந்த தீர்மானத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனாலும் நமக்கு இதை விடுத்தால் வேறு தெரிவில்லை என்ற தெளிவான புரிதலுடன் தான் தீர்மானத்தை முடிந்தவரை வலிமையானதாக மாற்ற எம்மைப்போன்ற பலர் நமது எதிர்ப்பை பதிவு செய்தோம்.

ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த சில கட்சிகள், அமைப்புகள் இதை எதிர்ப்பதிலே குறியாக இருந்தார்களே ஒழிய இதன் அடுத்த பக்கத்தை பார்க்கவில்லை.

ஏனென்றால் ஐநா தீர்மானமோ அதன் விளைவான விசாரணைக் குழுவோ எமக்கு விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை என்பது பகுதியளவு உண்மைதான். ஆனால் இந்த தொடர் பிரச்சாரங்களின் விளைவாக மக்கள் ஐ.நா விசாரணைக் குழுவுக்கு தமது இனஅழிப்பு சாட்சியங்களை வழங்காமல் பின் வாங்கியது தான் பெரும் வரலாற்றுத் தவறாக மாறியிருக்கிறது.

இந்த சாட்சியங்களை பதிவு செய்வதென்பது ஐ.நா எமக்கு நீதியை தூக்கித் தந்து விடும் என்பதற்காக அல்ல. தமிழின அழிப்பில் ஐ.நா வும் ஒரு தரப்பு என்ற புரிதல் எமக்கு நிறையவே உண்டு என்பதை நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஆனாலும் எமது வாக்கு மூலங்களை நாம் அனுப்ப வேண்டிய கடமை எமக்கிருக்கிறது. நடந்த இனஅழிப்பை அம்பலப்படுத்தவும் அதை ஒருங்கிணைத்து ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழ் ஆவணப்படுத்தவும் என்பது தொடக்கம். எமது நீதிக்கான ஒரு சிறிய புள்ளியாவது இதன் மூலம் உருவாக்கப்படலாம் என்பது வரை ஆயிரம் காரணங்களை அடுக்கலாம்.

குறிப்பாக புலிகளை குற்றவாளிகளாக்கி எமக்கான நீதியை குழி தோண்டி புதைக்க இருக்கும் அனைத்துலக - பிராந்திய சதியை முறியடிக்க வேண்டியாவது நாம் இதை அனுப்பியிருக்க வேண்டும்.

குறிப்பாக தமிழகத்திலிருந்து ஏராளமான வாக்கு மூலங்களை பதிவு செய்வதினூடாக மேற்குலக நலன்களை மையப்படுத்திய ஐ.நா நகர்வுகளுக்கு எதிராகவும், பிராந்திய வல்லரசான இந்தியாவையும் தமிழர் தரப்பு ஒரு இக்கட்டினுள் தள்ளி தமிழர் போராட்டத்தை வேறு ஒரு பரிமாணத்திற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

இதன் வழி தமிழர் தரப்பு ஒரு பேரம் பேசும் வல்லமையாக உருவெடுக்கலாம். ஆனால் நடந்தது என்ன? ஐ.நா வை எதிர்க்க வேண்டிய தெளிவை பெற்ற தமிழக போராட்ட குழுக்கள் சில ஐ.நா வோடு ஒத்தோட வேண்டிய புரிதலை வளர்க்காததால் வந்த சிக்கலா? அல்லது திட்டமிட்டு நடைமுறை படுத்தப்பட்ட சதியின் ஒரு பகுதியா ? என்பதை காலம் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனென்றால் தமிழின அழிப்புக்கு துணை நின்ற இந்தியா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும்போதும் அதை நீர்த்துபோக செய்து வருகிறது. எனவே நாம் நீதியை வென்றெடுக்க இந்தியாவிற்கு கடிவாளம் இட வேண்டியது முக்கியமானது. ஆனால் இன்றளவும் அது எமக்கு சர்தியப்படவேயில்லை.

2013 மாணவர் பேராட்டத்தின் போதே நாம் ஒரு பொறிமுறையை வரையறுத்து தமிழக மாணவர்களிடம் கொண்டுசேர்த்தோம்.

தமிழக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தொடர்ந்து பரவிக்கொண்டிருந்த நேரம் அது. தமிழக சட்டசபை தீர்மானம் என்பது மாணவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த உச்சபட்ச வெற்றி. ஆனால் இனி என்ன செய்வது என்ற குழப்ப்த்தால் நாம் அந்த வெற்றியை தக்க வைக்க தவறிவிட்டோம். இனியாவது சுதாரித்து கொண்டு மீண்டும் ஒரு மாணவர் பேராட்ட குழுவை அமைத்து அதை முழு இந்தியாவிற்கும் விரிவுபடுத்த வேண்டும்.

அதாவது இந்திய மட்டத்தில் அனைத்து மாநில மாணவர்களிடமும் போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இந்திய வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு இந்திய மக்கள் முதல் அதை உணர வேண்டும்.

ஒரு தலைமை குழுவை உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும் என குழுவை பிரித்து அவர்கள் அந்தந்த மாநிலங்களிலுள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரி களுக்கு சென்று நடந்த - நடந்து கொண்டிருக்கிற இன அழிப்பு குறித்து விளக்கி 'ஐநாவின் பாரகட்சம் தொடக்கம் இந்திய தலையீடு வரை' புரிய வைக்க வேண்டும்.

சனல் 4 இன் ஆவணப்படங்களுடன் டப்ளின் தீர்ப்பாயத்தின் நகல், மற்றும் ஐநா நிபுணர்கள் குழு அறிக்கை தொடங்கி இன்று வரையான கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு ஆவணங்கள் வரை காண்பித்து வேற்று மாநில மாணவர்களின் ஆதரவை பெற வேண்டும்.

அவர்களை பிற்பாடு அந்தந்த மாநில மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் விளக்குமாறு கோர வேண்டும்.

நாம் ஒன்றை கவனமாக விளங்கி கொள்ள வேண்டும். இந்திய அரசோ, இந்திய மக்களோ நமக்கு எதிரி அல்ல . எமது எதிரி இந்திய வெளியுறவுக் கொள்கைதான். அது தனிப்பட்ட சிலரின் கைகளுக்குள் சிக்கி சின்னாபின்னமாவதை இந்திய மக்களுக்கு உணர்த்த வேண்டும். இந்திய அளவில் மக்களினதும் மாணவர்களினதும் மாற்றம் இந்திய வெளியுறவுக்கொள்கை மாற்றமாக வெளிப்படும். இதுவே நமது அடுத்த இலக்காக இருக்க வேண்டும்.

இன மொழி வேறுபாடுகளுக்கப்பால் அழிவையும் துயரத்தையும் கண்டு கலங்குவதும் தோழமை கொள்வதும்தான் மனித மனம். இந்திய மக்களுக்கு தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்ட கதையை சொல்ல வேண்டும். அதில் இந்திய அரசின் பங்கிருந்ததை தெளிவு படுத்த வேண்டும். எனவே தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனதும் கடமை என்று வலியுறுத்துவதனூடாகவே தமிழகம் சார்ந்த எமது அடுத்த கட்ட போராட்டத்தின் வடிவம் ஒழுங்கமைக்கப்படும்.

அவர்கள் நிச்சயம் நம்மோடு இணைந்து கொள்வார்கள்.

போர்க்குற்றங்களை இனஅழிப்பை விளக்குவதுடன் இந்திய நலனுடன் ஒத்துப்போகும் தமிழீழம் எனும் தேசத்தின் பிராந்திய முக்கியத்துவத்தை, இந்து சமுத்திரத்தில் இந்தியாவிற்கு தமிழீழக் கடல் அரண் தரும் பிராந்திய பாதுகாப்பை, இன்ன பிற முக்கியத்துவங்களை விளக்க வேண்டும்..

இந்திய மக்களை மாற்றுவதனூடாகவே இந்திய வெளியுறவுக்கொள்கையை மாற்றலாம் என்பதை தயவு செய்து மறந்து விடாதீர்கள்.

இந்திய அளவிலான மனித உரிமை அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய அளவிலுள்ள ஒவ்வொரு கல்விக்கூடங்களுக்கும் செல்லுங்கள் - பேசுங்கள் -விவாதியுங்கள்.

இதுவே ஒரு கட்டத்தில் ஐநா வை கையாளும் நமது தந்திரத்தில் சமகாலத்தில் இந்தியாவையும் கையாளும் ஒரு தந்திரமாக வடிவமாற்றம் பெறும்.

அடுத்து ஐநா மனித உரிமை பேரவையின் நகர்வுகளில் நான் முக்கியமாக கருதும் ஒரு விடயம் இது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் அறிக்கையின் பரிந்துரைகளில் எமக்கு பெரும்பாலும் உடன்பாடில்லாத போதிலும் அது எமது நீதிக்கான பாதைகள் சிலவற்றை திறந்துவிடப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

அவரது பரிந்துரைகளை பயங்கரவாத அரசுகள் சேர்ந்து ஒரு தீர்மானமாகக் கொண்டுவந்து 'உள்ளக விசாரணை' யில் முடித்துள்ளபோதும் அவரது அறிக்கை எம்மளவில் முக்கியமானது என்பதை நாம் எமக்கேயான முரண்பாடுகளையும் சேர்த்து ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

தமிழர் தரப்பு இதைக் கையாள்வதைப் பொருத்தே அதன் பெறுமதியை உறுதிப்படுத்துவதுடன் எமது நீதிக்கான பாதையும் வகுக்கப்படும்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பாக நின்றுகொண்டு இனஅழிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம், போர்க்குற்றம் குறித்து எத்தகைய ஆதாரங்களை முன்வைத்தாலும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப்பு ஒன்றினூடாக அதை ஏற்றுக்கொண்டு பரிந்துரைக்கப்படுவதனூடாகவே அது உலக கவனத்தை குவிக்கும், - நம்பத்தகுந்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில் இறுதிப்போரில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் நடந்ததாக ஐநா மனித உரிமை பேரவை சுட்டிக்காட்டியிருப்பது ஒரு தகுந்த ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று உலக அளவில் ஒரு உரையாடல் தொடங்கிவிட்டது.

forever victims 450தமிழர் தரப்பு அதன் மீதான கவனத்தை குவிக்காததும் அதை ஒரு திறந்த உரையாடலாக மாற்றாததும் கவலையளிக்கிறது.

குறிப்பாக தமிழக அளவில் ஒரு பெரும் விவாதமாக இது மாறியிருக்க வேண்டும்.

குறிப்பாக இறுதிப்போரில் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறிப்பாக பாலியல் வல்லுறுவு குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை பல மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அனைத்துலக ஊடகங்கள் ஆய்வுக்குட்படுத்த தொடங்கிவிட்டன.

இது ஐநா மனித உரிமை பேரவை அறிக்கையினூடாக கிடைத்த பெரு வெற்றியென்றே கருத வேண்டும்.

இந்த பாலியல் வல்லுறுவுக்குற்றங்கள் இனஅழிப்பு நோக்கில் நடத்தப்பட்டவை என்பதை நாம் நிருப்பிப்போமாயின் சிங்கள அரசு இனஅழிப்பு குற்றவாளியாக அம்பலப்படும்.

அதை நாம் மேற்படி அறிவுசார் சமூகத்துடன் இணைந்து நிறுவ உழைக்க வேண்டும்.

அண்மையில் " Washington Post" இல் பேராசிரியர்கள் Nimmi Gowrinathan மற்றும் Kate Cronin-Furman சேர்ந்து மிக முக்கியமான கட்டுரை ஒன்றை இந்த பாலியல் வல்லுறவுக் குற்றங்களை முன்வைத்து எழுதியிருக்கிறார்கள்.

இவர்கள் இதற்கு முன்பாக

" The Forever Victims? Tamil Women in Post-War Sri Lanka" என்ற ஒரு ஆய்வையையம் செய்து வெளியிட்டுள்ளார்கள். இதுவும் மிக முக்கியமானது.

ஐநா நிபுணர்குழுவில் பங்களிப்பு செய்த யஸ்மின் சுக்கா தொடக்கம் பல பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வரை பலர் தற்போது அனைத்துலகப் பரப்பில் இந்த பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் தொடர்பாக எழுத பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

அமெரிக்கா எப்படி திட்டமிட்டு தமிழின அழிப்பை மறைக்க முற்படுகிறதோ அதற்கு எதிர்வினையாக இன்று அமெரிக்க அறிவுப் பின்புலத்திலும் -அமெரிக்க ஊடகங்களிலும் தமிழின அழிப்பு ஒரு பேசுபொருளாக மாற ஐநா மனித உரிமை பேரவை அறிக்கை வழி சமைத்திருக்கிறது.

இதெல்லாம் நாம் ஐநா வை அதை தாங்கும் - மேற்குலக பிராந்திய அரசுகளை எப்படி அணுக வேண்டும் என்ற மைய கருத்துக்களே ஒழிய.. தீர்வல்ல - முடிவுமல்ல.

இவயெல்லாவற்றையும் விட ஐநாவிற்கு எதிராக மக்கள் போராட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் போராட்டம்தான் எமது போராட்டத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தும்.

எமக்கு தாயகம் மட்டுமல்ல புலம் முழுக்க பரந்துள்ள தமிழர்களும் குறிப்பாக தமிழகமும் மிகப்பெரிய பலம். ஐநாவை குறிவைத்து இந்த 3 தளங்களிலும் போராட்டத்தை விரிவுபடுத்தினால் ஐநா வை நாம் வளைக்க முடியும்..

இதன் வழி நீதிக்கான பாதையை கண்டடைய முடியும்.

இதன் முதல் அடியாக வரும் மார்ச் ஐநா மனித உரிமை அவையின் அமர்வை நாம் எமக்கானதாக மாற்றி இனஅழிப்பு அரசிற்கான காலக்கெடு வழங்குவதை முறியடித்து ஒரு அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்றிற்கான நகர்வுகளை தொடக்கி வைப்போம்.