pregnancy 350இந்தியாவில் புத்த மதம் தோன்றிய பிறகு தான் மருத்துவம் தோன்றியது. அதற்கு முன்பு நோய்களுக்கு மருத்துவம் என்பதே கிடையாது. எந்த நோயாக இருந்தாலும் பார்ப்பனர்களிடம் அழைத்துச்சென்று சாம, அதர்வண வேதங்களில் எழுதப்பட்டிருக்கும் பூஜை புனஸ்காரங்களைத்தான் நடத்துவார்கள். புத்தர் தான் நோய்களுக்கு ‘மருத்துவம்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டில் சித்தர்கள் அறிமுகப்படுத் தியிருப்பார்கள். புத்தரும், சித்தர்களும் தொடங்கிய மருத்துவம், நவீன மருத்துவத்திற்குப் பிறகு மருத்துவப் புரட்சியாகவே மாறிவிட்டது. இன்று மனிதனின் சராசரி வயதே உயர்ந்து விட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக, சில அமைப்புகள் புத்தர்காலத்துக்கு முன்பு நடந்த பார்ப்பன ஆயுர்வேதபூஜை முறையை ஒரு மாற்று மருத்துவமாக அறிமுகப்படுத்தின. ஆனந்த விகடன் போன்ற பார்ப்பன இதழ்கள் அதில் முக்கியப் பங்கு வகித்தன. நேரடியாக ஆயுர்வேதம் என்று பேசாமல், சுதேசி மருத்துவம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் என்பவை போன்ற பெயர்களால் பார்ப்பனமுறை முன்னெடுக்கப்பட்டது. உண்மையான சித்த மருத்துவத்திற்கோ, இயற்கை மற்றும் மாற்று மருத்துவங்களுக்கோ நாம் எதிரி அல்ல. நவீன மருத்துவமும் எதிரி அல்ல. எல்லா வகையான மருத்துவத்திலும் உள்ள நல்ல பண்புகளை உள்ளடக்கியது தான் நவீன மருத்துவம்.

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத்திணிப்பு, ஆரியப் பண்பாட்டுத் திணிப்பு, ஆரியக் குருகுலக் கல்வித் திணிப்பு என்ற வரிசையில் பார்ப்பன ஆயுர்வேத முறையையும் திணிக்கும் விதமாக, கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு ஒரு சட்டத்திருத்தத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 28, 29 (2018) ஆகிய நாட்களில் புதுடெல்லியில் இந்திய ஸ்டெம்செல்செசைட்டியின் 4 வது அகில உலக மாநாடு (SCSICON 2018) நடைபெற்றது. இந்த அமைப்பின் அகில இந்தியத் தலைவர் அலோக் சர்மா என்ற பார்ப்பனர் ஆவார். இந்த மாநாட்டில், “ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி மருத்துவம் செய்யலாம்; அதை மருந்தாகப் பயன்படுத்தலாம்” என்று எப்ரல் 4 ஆம் நாள் மத்திய அரசு கெஜட்டிலேயே அறிவித்துட்டது என்ற செய்தி வெளியிடப்பட்டது.

இந்தியாவில் நவீன மருத்துவத்தின்படி ஒரு மருந்தைக் கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர குறைந்தது 10 ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சியும், கண்காணிப்பும் அவசியமாக இருக்கிறது. அவற்றைக் கட்டுப்படுத்த Drugs and Cosmetics Rules,1945 என்ற சட்டமும் உள்ளது. அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, இந்த ஸ்டெம்செல் மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்திற்கு முன்பே 2017 டிசம்பரிலேயே சிவகங்கை டாக்டர் ஃபரூக் அப்துல்லா அவர்கள் இந்த ஸ்டெம்செல் மருந்து பற்றி விளக்கமாக எழுதியுள்ளதைப் பார்ப்போம்.

நஞ்சுக்கொடி (Placenta) என்பது என்ன?

பல கோடி விந்தணுவில் போட்டியில் முந்தும் ஒற்றை விந்தணு தாயின் கருமுட்டையுடன் இணைந்து ஒரு முட்டையாக உருமாறி தாயின் கர்ப்பபை எனும் கழனியில் விதையாக இடப்பட்டு முளைக்கும் அது தனது 40 வார கருப்பை பயணத்தை ஆரம்பிக்கும் . அந்த 40 வாரமும் அதற்கு தேவையான ஊட்டச்சத்து தாயிடம் இருந்து பெறுவது இந்த நஞ்சுக்கொடியின் மூலம் தான்.

ஆக, குழந்தை வயிற்றுக்குள் இருக்கும் இந்த நாற்பது வாரமும் நஞ்சுக்கொடியின் தேவை மிக மிக இன்றியைமயாதது. இந்த நஞ்சுக்கொடியானது குழந்தைக்கு ஊட்டம் அளித்து தானும் அளவில் வளர்ந்து 36 முதல் 40 வாரங்களில் முதிர்ச்சி அடைகிறது. இப்படி முதிர்ச்சி அடைவதைக் கொண்டே உள்ளே உள்ள குழந்தையின் வாரத்தைக் கணிக்க முடியும். 40 வார இறுதியில் ஒரு நன்னாளின் நற்பொழுதில் குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தையுடன் இந்த நஞ்சுக்கொடியுடன் கூடிய நஞ்சுப்பையும் வெளியேறுகிறது.

நவீன மருத்துவத்திலும் சரி இதற்கு முன்பு வீட்டில் பார்க்கப்பட்டு வந்த பிரசவ முறையிலும் சரி நஞ்சுக்கொடி குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு நஞ்சுப்பை அப்புறப்படுத்தப்படும். நவீன மருத்துவத்தில் , குழந்தை பிறந்தவுடன் மூன்று முதல் ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு நஞ்சுக்கொடி சுத்தமான கத்திரிகோலால் நறுக்கப்பட்டு குழந்தை தனியாக பிரிக்கப்படுகிறது. நஞ்சுக்கொடியை நறுக்கும் முன் குழந்தையை நோக்கி அந்தக் கொடி பிதுக்கப்படும். தாயிடம் இருந்து கிடைக்கும் அந்த 10 முதல் 15 மில்லி ரத்தமும் குழந்தைக்குக் கிடைப்பதற்காக இந்த ஏற்பாடு.

பிறகு தாய்க்கு கர்ப்பைபையின் மேல் மெதுவாக தடவிக்கொடுக்கப்படும். நஞ்சுப்பை மெதுவாகக் கர்ப்பைபையை விட்டுப் பிரிந்து வெளியே வரும் அந்த நஞ்சுப்பை முழுமையாக வந்துவிட்டதா? என்று நோக்கப்படும். மீண்டும் ஒரு முறை கர்ப்பபையினுள் வேறு நஞ்சுப்பையின் துண்டுகள் ஒட்டிக்கொண்டிருக்கனவா என்று பார்க்கப்படும்.

இந்த நஞ்சுப்பையை என்ன செய்கிறோம்?

மருத்துவமனைகளின் பின்னே நன்றாக ஆழமாக குழி தோண்டி புதைக்கிறோம் . இதை Deep burial  என்கிறோம். சிலர் கூறுவதை போல, ஒரு கோடிக்கெல்லாம் இந்த நஞ்சுக்கொடி விற்பனை ஆவதில்லை. சிரிப்பு தான் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தற்போது மருத்துவமனைகளில் 2016 இன் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி நாங்கள் கழிவுகளை வெளியேற்ற பணத்தை கொடுத்து தான் செய்கிறோம்.

சிலர் இதற்கு ஒரு கோடி கொடுக்கிறார்கள். அமெரிக்காக்காரன் கொடுக்கிறான் என்று கதை அளந்துவிடுபவர்கள். தயவு செய்து தங்கள் கதைகளை அட்லியிடம் கூறினால் அவரது அடுத்த படத்தில் அதை புகுத்தி பல புரட்சிகள் செய்வார்.

நஞ்சுக்கொடி என்பது வெளியேறிவிட்டால் அதனால் ஒரு பயனும் கிடையாது. நீங்கள் கதையில் குற்றவாளியாக உள்ளே இழுக்கும் அமெரிக்காவின் மருத்துவக் கழகமே ஸ்டெம் செல்லை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறிவிட்டது.

ஸ்டெம் செல் பாதுகாப்பு

அதற்கு வருடம் 20,000 எல்லாமே புருடா மற்றும் தேவையற்ற ஆணிக்களே.  ஸ்டெம் செல்லைப் பாதுகாத்து வரும் பல பெற்றோர்களுக்கும் எனது ஆழ்ந்த வாழ்த்துகள். அது போக அடுத்த கப்சா யாதெனில், இந்த ஸ்டெம் செல் இருந்தால் உலகத்தில் குழந்தைக்கு எந்த நோயும் வராது என்று காரண்டி கொடுப்பது கேன்சர் வராது என்று சத்தியம் சொல்வதெல்லாம் தரமான காமெடி

தொப்புள் கொடியை சரியான நேரத்தில் வெளியே எடுக்காமல் விட்டால் என்ன ஆகும்?

பிரசவத்தின் போது மூன்று நிலைகள் இருக்கின்றன.

  1. கர்ப்பப்பை வாய் திறக்க ஆரம்பித்தலில் இருந்து பனிக்குடம் உடையும் வரை.
  2. பனிக்குடம் உடைவதில் இருந்து குழந்தை பிறத்தல் வரை .
  3. குழந்தை பிறந்ததில் இருந்து நஞ்சுப்பையை வெளியேற்றும் வரை.

இதில் தாய் மரணங்கள் அதிகமாக நிகழ்வது மூன்றாம் நிலையில் தான். பிரசவத்திற்குப் பின்பான இரத்தப்போக்கு (Post partum haemorrhage ) நிகழ்வது, நஞ்சுக் கொடி கர்ப்பப்பையிலேயே தங்கிவிடுவது (Retained placenta) போன்ற காரணங்களினால் உதிரப்போக்கு அதிகமாகிறது

சரியான முறையில் பிரசவத்தின் மூன்றாவது நிலையைக் கவனிப்பதற்குப் பெயர் AMTSL ( ACTIVE MANAGEMENT OF THIRD STAGE OF LABOUR ) நஞ்சுக்கொடி வெளியேறியவுடன் அதில் இருக்கும் இரத்தம் மணிநேரங்கள் செல்ல செல்ல கெட்டுப்போய் விடும். அது குழந்தைக்குள் செல்லுமாயின் குழந்தைக்கு நோய்த்தொற்று (SEPSIS) ஏற்படும். இந்த நோய்த்தொற்று குழந்தையின் இறப்புக்குக் காரணமாய் அமைந்து விடும்.

ஆகவே, குழந்தை பிறந்த பின் நஞ்சுக்கொடியை விட்டு வைப்பதால் குழந்தையின் உயிருக்குக் கேடு தான் விளையுமே தவிர நன்மை விளையாது. இந்த ஸ்டெம் செல், அமெரிக்கா, இலுமினாட்டி, ஒரு கோடி விலை இவையெல்லாம் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை

நாங்கள் எங்கள் குழந்தையின் ஸ்டெம் செல்லை ஸ்டோர் செய்து வைத்துள்ளோம். அது தேவையற்றதா?

உண்மையில்.. உங்கள் குழந்தைக்கு பின்னாளில் மரபு வழி நோய்கள் ஏதேனும் வரின்…

உதாரணம்... டைப் ஒன்று டயாபடிஸ் என்று பத்து வயதில் கண்டுபிடிக்கப்பட்டால், அதைக் குணப்படுத்த ஸ்டெம் செல்கள் உதவும் என்ற எண்ணத்தில் இந்த ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆனால் உண்மையாக, உங்கள் குழந்தைக்கு எந்த மரபணு பிரச்சனையால் டைப் 1 டயாபடிஸ் வந்ததோ, அதே மரபணு குறைபாடு அதன் நஞ்சுக்கொடியின் ஸ்டெம் செல்லிலும் இருக்கத்தானே செய்யும்? ஆகவே, உங்கள் குழந்தையின் டைப் ஒன்று டயாபடிஸை குணப்படுத்த உங்கள் குழந்தையின் ஸ்டெம் செல் பயன்படாது.

உங்கள் குழந்தையுடன் ஒத்துப்போகும். ஆனால், டைப் ஒன்று டயாபடிஸ் இல்லாத ஒரு குழந்தையின் ஸ்டெம்செல் தான் உதவும் ஆக, அப்போதும் அந்த ஸ்டெம் செல்லை பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் . ஸ்டெம் செல்களை எல்லாம் எடுத்து வங்கி போல ஸ்டோர் செய்து வைத்தால் அவரவருக்கு தேவையான ஸ்டெம் செல்லை பணம் கொடுத்து பெற முடியும்.

சரி இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி எந்த அளவில் இருக்கிறது?

அது மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. நிலவில் பட்டா போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தால் அதையும் வாங்க இங்கு ஆள் உண்டு.  அதை சிலர் பல பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய வரலாறும் உண்டு. இங்கு ஒரே விசயம் தான்  ஒருவரின் பேராசையை தூண்டினால் போதும்  எளிதாக அவரை நம் வசமாக்கலாம்.

ஆம்..உங்களின் பிள்ளைக்கு வாழ்நாள் முழுவதும் எந்த நோயும் வராது .. கேன்சர் வராது.. சரி செய்து விடலாம்... என்று கூறினால்.. இருக்கவே இருக்கிறார்கள் பணம் வைத்துக்கொண்டு செலவு செய்ய வழி தெரியாமல் ஒரு சாரார்.... சரி இந்த ஸ்டெம் செல்லை பத்திரமாக வைத்திருக்க வருடம் இத்தனை ஆயிரம் செலவு செய்கிறீர்கள்.. ஓகே..

குழந்தைக்குப் பிரச்சனை என்று பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டால் உடனே இந்த ஸ்டெம் செல்லை எடுத்து உடலில் ஏற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது எதற்கு சமம் தெரியுமா? நிலவில் இடம் வாங்கி வீடு கட்ட ரெடியாகுவதற்கு சமம்....

அறிவியல் வளரும் ஆனால் அதை வைத்து பணம் சம்பாதிக்கும் கூட்டமும் சேர்ந்தே வளரும். நமது பாட்டன்கள் தொப்புள் கொடியை தாயத்தாக கட்டியது எதற்கு? அவர்களுக்கு ஸ்டெம்செல் தெரபி பற்றி அப்போதே தெரிந்து.. இது போன்று செய்தார்களா? முதலில் அனைவரும் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்

நம்மை விட நம் முன்னோர் உழைப்பாளிகளாகவும் ஐந்து புலன்களையும் நுட்பமாக பயன்படுத்து வதிலும் சிறந்து விளங்கியிருக்கலாம். ஸ்டெம்செல்கள் இருப்பதை அறிந்தெல்லாம் அவர்கள் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை. காரணம், அப்போது நுண்ணோக்கி கிடையாது. நமது உடல் செல்களினால் தான் ஆனது என்று கூறிய இராபர்ட் ஹூக் கடந்த பதினேழாம் நூற்றாண்டில் தான் பிறந்தார்.

ஸ்டெம் செல் தெரபி தற்போது இருபது ஆண்டுகளாக தான் வளர்ந்து வருகிறது. பிரபலமாகி வருகிறது. மேலும் ஸ்டெம்செல்களைக் குறிப்பிட்ட உறைகுளிரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தாயத்தில் வைத்துப் பின்னாடி பயனும் இல்லை. எதையாவது தாயத்தாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று நரி முடி, பித்தளையில் எழுதிப் போட்டுக்கொள்வது, குழந்தையின் தொப்புள்கொடி என்று போட்டுக்கொண்டிருந்தார்கள்

அவர்கள் தாயத்துப் போட்டதின் முக்கிய நோக்கம், பயத்தை போக்கும் ப்லாசிபோவாக அந்தத் தாயத்து உதவியது. அவ்வளவே..அதற்கு மீறி முக்கியத்துவம் அதற்கு தேவையில்லை. நம் முன்னோர் வழக்கப்படி நரபலி கொடுக்கும் பழக்கமும் தான் வழக்கில் இருந்தது. அதற்கும் அறிவியல் காரணம் ஏதும் காண முடியுமா? அனைத்துமே அக்காலத்தில் அவர்களுக்கு தெரியாதவற்றின் அறியாதவற்றின் மீது கொண்டிருந்த மூடநம்பிக்கையின் வெளிப்பாடு அவ்வளவே.

கீதா ஜோட்வாணி, பொதுத் துணை இயக்குநர், ஐ.சி.எம்.ஆர்.

பல தனியார் தொப்புள்கொடி இரத்தச் சேமிப்பு வங்கிகள், ‘பிரசவம் முடிந்ததும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைத்தால், பின்னாளில் அந்தக் குழந்தைக்குப் புற்றுநோய் அல்லது தடுப்பாற்றல் தொடர்பான பரம்பரை நோய்கள் ஏற்படுமானால் அதைத் தொப்புள்கொடி இரத்தம் மூலம் சரிப்படுத்தலாம்’ என்று விளம்பரம் செய்கின்றன. இதை நம்பி பொருளாதார வசதிபடைத்தவர்கள் பலரும் பல லட்சங்கள் செலவழித் துத் தொப்புள்கொடி இரத்தத்தைச் சேமிக்க முன்வருகின்றனர். ஆனால், இந்த விளம்பரங்களை நம்புவதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் இதுவரை இல்லை. இந்தியாவில் இவ்வாறு சேமிக்கப்பட்ட தொப்புள்கொடி இரத்தத்தைப் பரிசோதனை முயற்சியாக, அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிச் சோதித்தபோது, அந்த இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உயிரோடு இல்லை எனப் பதில் வந்தது என்று கீதா ஜோட்வாணி அவர்கள் தமிழ் இந்து இதழில் தெரிவித்துள்ளார்.

 சான்றுகள் - தமிழ் இந்து நாளிதழ் 09.07.18,  Economic times 29.04.18