“தத்துவ வாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்துக்கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே விடயம்.”

- கார்ல் மார்க்ஸ்,

ஃபாயர்பாக் பற்றிய 11ஆம் ஆய்வுரை

நான் சிறுவனாக இருந்தபொழுதே, பெரியவ னாக வளர்ந்ததும் ஒரு விஞ்ஞானியாகவும் ஒரு இடதுசாரியாகவும்தான் மாறுவேன் என்று நம்பி யிருந்தேன். எனது சமூக செயற்பாடுகளையும் எனது துறைசார் பாண்டித்தியத்தையும் எவ்வாறு இணைப்பது என்பதைக் காட்டிலும் அதை பிரித்துப் பார்ப்பது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும்.

நான் படிப்பதற்கு கற்றுக்கொள்ளும் முன்பே, எனது பாட்டி,மோசமான ஆயராக கருதப்பட்ட பிரவுனின் “சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான அறிவியல் மற்றும் வரலாறு” என்ற புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். எனது தாத்தா, குறைந்தபட்சம் ஒவ்வொரு சோஷியலிச வாதியும் அண்டவியல், பரிணாம வளர்ச்சி மற்றும் வரலாற்றை நன்கு அறிந்திருத்தல் அவசியம் என்பதை நம்புபவர். நான் எப் பொழுதுமே, நாம் அனைவரும் முனைப்புடன் செயல்படும் பங்கேற்பாளராக திகழும் வரலாற்றையும் பொருள்கள் எவ்வாறாக அமைந்துள்ளது என்பதை கண்டடையும் அறிவியலையும் பிரித்துப் பார்த்ததே இல்லை. எனது குடும்பம், நிறுவனமயப்பட்ட மதத்தி னுடனான தொடர்புகளை ஐந்து தலைமுறை களுக்கு முன்பே முறித்திருந்தனர். ஆனாலும் என் தந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் நடக்கும் ‘பைபிள் வாசிப்பு’ கூட்டத்திற்கு அழைத்துச் செல்வார். ஏனெனில், நாங்கள் வாழ்ந்த சுற்றுப்புற கலாச்சாரத்திலும் சரி, அங்கு வாழ்ந்த நிறைய மனிதர்களின் வாழ்க்கையிலும் சரி, பைபிள் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அது மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப கருத்துகள் எவ்வாறு வளர்ச்சி கொள்கின்றன என்பதன் அற்புத தொகுப்பு. மேலும் ஓவ்வொரு நாத்திகனும் ஆத்திகர்கள் அளவிற்கு அதன் கருத்துகளில் புலமை பெற்றிருப்பது அவசியம்.

என் ஆரம்பப் பள்ளியின் முதல்நாளில், என்னுடைய பாட்டி, “அவர்கள் (ஆசிரியர்கள்) கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் கற்றுக் கொள். ஆனால் அனைத்தையும் அப்படியே நம்பி விடாதே” என்று அறிவுரை கூறினார். அவள் 1930களின் ஜெர்மெனியில் பிரபலமடைந் திருந்த இனவெறியை ஆதரிக்கும் அறிவியலையும் அது இனத்தூய்மைவாதத்திற்கு கொடுக்கும் நியாயத்தையும் எங்கள் மண்ணிலே மிக பிரபல மான ஆணாதிக்க சிந்தனை பற்றியெல்லாம் நன்கு அறிந்திருந்தாள். அவளது இந்த அணுகு முறை அறிவியலை அதிகாரத்திற்காகவும் இலாபத்திற்காகவும் எவ்வாறு பயன்படுத்து கிறார்கள் என்ற புரிதலில் இருந்தும் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே பொதுவாக நிலவும் ஆளும் வர்க்கத்தின் மேல் எழும் அவ நம்பிக்கையாலும் ஏற்பட்டிருந்தது. அவளது இந்த அறிவுரையை எனது கல்விசார் வாழ்வின் நிலைப் பாடாக முழு உணர்வோடு பல்கலைக்கழகத்தில் (முழு உணர்வுடைய பல்கலைக்கழகத்தில் அல்ல) உருவாக்கிக் கொண்டேன். நான் வளர்ந்தது ப்ருக்கீலினின் இடதுசாரி சிந்தனையை கொண்ட வர்கள் வசித்த ஒரு குடியிருப்புப் பகுதியில். மே தினம் என்றாலே பள்ளிகள் வெறிச்சோடி காணப் படும். என்னுடைய 12ஆம் வயதில்தான் இடது சாரியல்லாத (குடியரசுக் கட்சியை ஆதரிக்கும்) ஒரு நபரை நான் முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. அறிவியல், அரசியல் மற்றும் கலாச்சார பிரிச்ச னைகள் பற்றிய கடுமையான விவாதங்கள் நிரந்தர குழுக்களாக ப்ரைட்டன் கடற்கரையோர நடை பாதைகளில் நடந்தேறியது. இந்த உரையாடல் களே எங்கள் உணவு இடைவேளைகளுக்கும் தீனியாய் அமைந்தது. அரசியல் அர்ப்பணிப்பு என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் அந்த அர்ப்பணிப்பின் மீது எவ்வாறு செயல்படுவது என்பது கடுமை யான விவாதத்துக்குட்படுத்தப் பட்டது.

எனது பதின்ம வயதில் சோவியத் விஞ்ஞானி லிஸென்கோவின் ((Lysenko)) ஆய்வுகளால் ஈர்க்கப் பட்டு, மரபியலில் ((Genetics) ஆர்வமுற்றேன். ஆனால் அவருடைய கருத்துகள் மிக மோசமான அளவிற்கு தவறானவைகள் என பிற்காலத்தில் தெரியவந்தது, குறிப்பாகத் தத்துவார்த்த கொள்கை களிலிருந்து உயிரியல் முடிவுகளை அடைய அவர் செய்த முயற்சிகள். ஆனாலும் அவரின் சமகாலத் தில் நடந்த மரபியல் ஆய்வுகளின் மீது அவர் வைத்த விமர்சனங்கள் என்னை வாடிங்டன் மற்றும் ஷ்மால்ஹசென் (Waddington and Schmal hausen) மற்றும் பலரின் ஆய்வுகளை நோக்கித் திருப்பியது. ‘சோவியத் விஞ்ஞானிகள் செய்வது அறிவியலே கிடையாது என அவர்களை பொருட் படுத்தாமல் இருப்பது’ அன்றைய பனிப்போர் பாணி. ஆனால் இவர்கள் அனைவரும் லிஸென் கோ வைத்த விமர்சனங்களுக்கு, உயிரினத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நடக்கும் பரஸ்பரச் செயல்பாடுகளின் மீதான ஆழமான பார்வைகளை உருவாக்கி பதிலளித்திருந்தனர்.

என் மனைவி, ரோசாரியோ மொராலஸ் (Rosario Morales) எனக்கு ப்யூர்டோ ரீக்கோ தீவை (Puerto Rico) 1951இல் அறிமுகம் செய்தார். நான் அங்கு வாழ்ந்த அந்த பதினொரு ஆண்டுகள் எனது அரசியலுக்கு லத்தின் அமெரிக்க கண்ணோட்டத்தை அளித்தது. தென் அமெரிக்காவில் இடது சாரிகள் வென்றெடுத்த வெவ்வேறு வெற்றிகள் அன்றைய இறுக்கமான காலகட்டத்தில் நன்னம் பிக்கை கொள்ளச் செய்தது. ப்யூர்டோ ரீக்கோவில் எஃப்.பி.ஐ (FBI)- இன் கண்காணிப்பு நடவடிக் கைகள் எனக்கு அங்கு வேலை கிடைக்கப் பெறாமல் தடுத்தது. இறுதியில் வாழ்வாதாரத் திற்காக அத்தீவின் மேற்கு மலைத்தொடர்களின் காய்கறி பண்ணை ஒன்றில் சேர்ந்தேன்.

கார்னல் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பள்ளியில் ஒரு இளங்கலை பட்டதாரியாக எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதெல்லாம் அமெரிக்க விவசாயத்தின் முதன்மை பிரச்சனை விவசாய உபரியைக் களைவது எவ்வாறு என்பதே. ஆனால் ப்யூர்டோ ரீக்கோவின் ஏழை விவசாயியாக விவசாயம் என்பது மக்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியப் பங்காற்றுகிறது என்பதை உணர்ந்தேன். அந்த அனுபவம் எனக்கு வறுமையின் யதார்த்தத்தை அறிமுகம் செய்தது. வறுமை எவ்வாறு ஆரோக்கியத்தை சீர்குலைக் கிறது; ஆயுட்காலத்தை குறைக்கிறது; எல்லாவித வாய்ப்புகளையும் அடைத்துவிடுகிறது; தனிநபர் வளர்ச்சி என்பதையே வீணாக்குகிறது மற்றும் கிராமப்புற ஏழைகளினிடையே ஒரு குறிப்பிட்ட வகையான பாலின வேறுபாட்டை வளர்க்கிறது என்பதையெல்லாம் உணர நேர்ந்தது. காபி தோட்டத்தின் நேரடி தொழிலாளர் ஒருங்கிணைப்புக் கூட்டங்களோடு வாசிப்புக் கூட்டங்களும் இணைந்தது. ரோசாரியோவும் நானும் இணைந்து ப்யூர்டோ ரீக்கோ கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயத்திற்கான செயற்திட்டத்தை உருவாக்கி னோம். அதில் நாங்கள், சூழலிய உற்பத்தி முறை, பன்முகத்தன்மை, பாதுகாத்தல் மற்றும் கூட்டுறவுகள் பற்றி நேரடியாக சேகரித்த சில நுண்ணறிவைக் கொண்டு கற்றுக்குட்டித் தனமான பொருளாதார சமூக ஆய்வை அதில் மேற்கொண்டோம்.

நான் முதன்முதலில் 1964ஆம் ஆண்டு, கியூபா தனது இனத்தொகை மரபியலை (population genetics) வளர்த்தெடுக்க உதவுவதற்காக அங்கு சென்றேன். கியூப புரட்சியையும் காண நேர்ந்தது. அதன் பிறகான ஆண்டுகளில் சூழலிய விவசாயத் திற்காகவும் நேரிய, சமத்துவ மற்றும் நிலைத் திருக்கக் கூடிய ஒரு பொருளாதார முன்னேற்றத் திற்கான சூழலிய பாதையை கண்டடைய நடந்து கொண்டிருந்த கியூபப் போரட்டத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். சோஷலிச மரபில் மிகவும் சக்திவாய்ந்தது முன்னேற்றப் போக்கு கொள்கைச் சிந்தனை (progressivism). அது வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அவைகள் நவீனமயமாக்கல் என்ற ஒற்றை வழிப்பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. உயர் தொழில் நுட்பப் பாதையில் வளரும் தொழிற்துறை சார்ந்த விவசாயத்தை விமர்சிப்பவர்களை, கருத்து முதல் வாதிகள் (idealists)எனவும் எப்போதுமே நிலவியிருக்காத ஒரு கற்பனாவாத நாட்டுப்புறப் பொற்காலத்திற்காக உணர்ச்சிப் பாங்கோடு ஏக்கம் கொள்ளும் நகர்ப்புறத்தார் எனவும் புறந் தள்ளுகிறது. ஆனால் ஒவ்வொரு சமூகமும் தாங்கள் எவ்வாறு தங்களை இயற்கையோடு தொடர்பு படுத்திக் கொள்ளவேண்டும், தங்கள் நிலங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் என்ன, தங்கள் சமூகத்திற்கான இயக்குதிறனின் (efficiency) அடிப்படை என்ன என்பதையெல்லாம் தாமே உருவாக்கிக்கொள்ளும் எனும் இன்னொரு கண்ணோட்டமும் நிலவியது. 1970களின் கியூபாவில் இவ்விவாதங்கள் மேலோங்கி யிருந்தது. 1980களில் சூழலிய மாதிரி வெற்றி பெற்றது. இருப்பினும் அதை செயல்படுத்துவது என்பது ஒரு நீண்ட நிகழ்முறையாக காணப் பெற்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு உயர் தொழில்நுட்ப சாதனங்கள் கிடைக்கப் பெறாமல் கியூபா பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த அந்த விசேஷ கால கட்டம், சூழலிய மாதிரியின் மேல் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களால், காலத்தின் கட்டாயத்தால் சூழலியலாளர்களாக ஆனவர் களையும் அதை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடிந்தது. இந்த நெருக்கடி காலத்திற்கு முன்பே சூழலியலாளர்கள் தங்களுக்கான பாதையை தயார்படுத்தி வைத்திருந்ததால் மட்டுமே அவர் களால் அந்த வரலாற்றுத் தருணத்தை பயன் படுத்திக் கொள்ள முடிந்தது.

நான் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை (Dialectical Materialism) என்னுடைய இளம் பருவத்தில் முதலில் பிரித்தானிய மார்க்ஸிய விஞ்ஞானிகளான ஜே.பி.ஸ்.ஹல்தேன் (J.B.S Haldane),, ஜே,டி, பெர்னால் (J.D.Bernal), ஜோசப் நீதாம் (Joseph Needham) போன்றவர்களின் எழுத்துக்கள் மூலமாகவும் பிறகு நேரடியாக மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் மூலமாகவும் சந்தித் தேன். என்னை அது அறிவார்த்தமான முறையிலும் அழகியல்முறையாலும் உடனேயே கவர்ந்தது. அன்றிலிருந்து இயற்கை மற்றும் சமூகத்தின் இயங்கியல் நோக்கு என்பது என்னுடைய ஆய்வின் முக்கிய கருப்பொருளாக விளங்குகிறது. முழுமை, தொடர்பு மற்றும் சூழல், மாற்றம், வரலாற்றின் உண்மைத்தன்மை, முரண்பாடு, காலஒழுங்கின்மை, சமச்சீரின்மை, நிகழ்ச்சிப் போக்குகளின் பல மட்டங்கள் ஆகியவைகளின் மீது இயங்கியல் தரும் தனி முக்கியத்துவத்தின் ஆனந்தத்தில் திளைத்திருக்கிறேன். அப்பொழுதும் இப்பொழுதும் எங்கும் நிறைந்து காணப்படும் சுருக்கவாதத்திற்கு (reductionism) புத்துணர்ச்சி யூட்டும் எதிர்பலமாக இயங்கியல் திகழ்கிறது.

ஒரு எடுத்துக் காட்டு : பழப்பூச்சியை (Drosophila) அதன் இயற்கைச்சூழலில் (வெறும் ஆய்வுக்கூட பாட்டில்களில் மட்டுமல்ல) கண்காணிக்க ரோசாரியோ கொடுத்த ஆலோசனையை ஏற்று பழப்பூச்சியின் ஆய்வை ப்யூர்டோ ரீக்கோவில் என் வீட்டருகிலேயே தொடங்கினேன். என்னுடைய ஆய்வு முன் வைக்கும் கேள்வி : பழப்பூச்சி இனங்கள் தங்களுடைய சுற்றுச் சூழலின் மாறுதல்களை (காலத்தைப் பொறுத்தும் (temporal gradients) இடத்தைப் பொறுத்தும் (spatial gradients) எவ்வாறு எதிர் கொள்கின்றன? வெவ்வேறு பழப்பூச்சி இனங்கள் ஒரே மாதிரி யான சுற்றுச்சூழல் சவால்களுக்கு பல எதிர் வினைகளை ஆராய்வதிலிருந்து தொடங்கினேன். ஒரே நாளில் க்வானிகா (Guanica) என்ற பாலை வனத்திலிருந்தும் எங்களது பண்ணை அமைந்துள்ள மலைத்தொடரின் முகட்டில் உள்ள மழைக் காட்டிலும் பழப்பூச்சிகளை சேகரித்தேன். சில இனங்களால் உயர் வெப்பநிலைகளுக்கு இரண்டு-மூன்று நாட்களிலேயே தம்மை உடலியக்கவியல்ரீதியாக (physiological) தகவமைத்துக்கொள்ள முடிந்தது. மேலும் 3000 அடி (சுமார் 20 மைல்) உயரநிலை மாறுபாட்டால் இவைகளின் வெப்பச் சகிப்புத்தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் வெகு சிறிய அளவிலேயே மரபணு மாற்றங்களாய் வெளிப்பட்டது. வேறு சில இனங்கள் தங்களின் வெவ்வேறு வாழ் விடங்களை பொறுத்து தனித்துவ மரபணுக்கள் கொண்ட துணை – இனக்குழுமங்களாக (subpopulation) திகழ்ந்தது. வேறு சில இனங்களோ கிடைக்கப்பெறும் சுற்றுச்சூழல் வரம்பில் ஒரு பகுதிக்கு மட்டுமே தங்களை தகவமைத்து அதை வாழ்விடங்களாக மாற்றிக்கொண்டது. பாலை வனத்து இனங்களில் ஒன்று, மழைக்காட்டின் பழப்பூச்சி வெப்பத்திற்கு காட்டும் சகிப்புத் தன்மையைவிட அவ்வளவு மேம்பட்டதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது மழைக் காட்டின் இனங்களைக் காட்டிலும் குளிரான, ஈரமான மைக்ரோ தளங்களாக (சுற்றுச் சூழலின் ஒரு சிறிய பகுதி: அதன் உடனடி சுற்றுப் புறத்திலிருந்து மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உள்ளடக்கிய பகுதி) தேர்வு செய்து, காலை 8 மணிக்கு மேல் சென்று மறைந்து கொள்வ தால் மேம்பட்டதாகத் திகழ்ந்தது. இக்கண்டு பிடிப்புகள் என்னை, “துணைச்சாய்வு வீதத்தேர்வு (cogradient selection)” மற்றும் “எதிர் சாய்வு வீதத் தேர்வு (countergradient selection)” என்ற இரண்டு கருத்தாக்கங்களுக்கு இட்டுச் சென்றது. துணைச் சாய்வு வீதத்தேர்வில் சுற்றுச் சூழல் மாற்றங்களின் நேரடி தாக்கம் இனத்திற்குள் மரபணு மாற்றங் களை அதிகரிக்கும். எதிர்சாய்வு வீதத்தேர்வில் மரபணு வேறுபாடுகளே, சுற்றுச் சூழலின் நேரடித் தாக்கங்களை ஈடு செய்துவிடும். நான் வாழும் அதிக வெப்பநிலை கொண்ட பூமிப் பகுதியானது ஒரு வறண்ட பிரதேசம் என்பதால், இயற்கைத் தேர்வு (Natural Selection க்வானிகாவின் (Guanica) பழப்பூச்சிகளின் அளவை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டது. ஆனால் அவைகளின் வளர்ச்சியில் வெப்ப நிலை செலுத்தும் விளைவோ அவற்றின் அளவை குறைப்பதாக இருந்தது. இதன் பயனாய் கடல்மட்ட பாலைவனத்திலிருக்கும் பூச்சியும் மலைமுகட்டில் அமைந்துள்ள மழைக் காட்டிலிருக்கும் பூச்சியும் அதனதன் இயற்கை வாழ்விடங்களில் வளரும்போது இரண்டும் ஒரே அளவில் தான் உள்ளது. ஆனால், க்வானிகாவின் (Guanica) பூச்சிகளோ மழைக்காட்டின் பூச்சிகள் வளரும் அதே வெப்பநிலையில் வளரும்போது அளவில் பெரியதாக வளருகிறது.

இந்த ஆய்வில் நிகழ்வுகள் பல்வேறு நிலை களில் நடந்தேறுவதையும் அவை ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய விதிகள் உள்ளதையும் ஆனால் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதையும் வலியுறுத்தி உயிரியியல் துறையில் நிலவும் சுருக்கவாதச் சார்பை கேள்விக்குட் படுத்தியுள்ளேன். என்னுடையது இயங்கியல் சார்பு : உடலியக்கவியல், நடத்தையியல் மற்றும் மரபணு நிலைகளின் தழுவல்களுக்கிடையே யான தொடர்புகள். நிகழ்முறை (process), மாறுந் தன்மை (Variability) மற்றும் மாற்றம் (change) ஆகியவற்றின் மீது நான் தரும் முன்னுரிமையே என்னுடைய ஆய்வுரையின் நிகழ்ச்சி நிரலை முடிவு செய்கிறது.

சுற்றுச்சூழல் என்பது எப்போதுமே நிலை யில்லாத ஒன்றாக விளங்கும்போது எவ்வாறு பழப்பூச்சி இனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன என்பதே ஆய்வின் விசாரணை. என்னுடைய ஆய்வுரையை தொடங்கியபோது இந்த பின்வரும் எளிய அனு மானம் ஒன்று என்னை திகைப்படையச் செய்தது: அதாவது சுற்றுச்சூழல் சில நேரங்களில் சிறிய அளவிலான பழப்பூச்சிகள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்றும் மீதி நேரங்களில் பெரிய அளவி லான பழப்பூச்சிகளுக்கு ஆதரவளிக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இவ்வாறு இருவேறு அதீத எதிர்நிலையை ஒரு உயிரினம் எதிர்கொள்ளும் போது அது இந்த அதீத நிலைகளுக்கு இடைப் பட்ட ஒரு நிலையை தேர்ந்தெடுத்து சமரசம் செய்து கொள்ளும் என்பதே அந்த அனுமானம். ஆனால் இது இருவேறு எதிர் கருத்தாக்கங்கள் நிலவும்போது உண்மை இவை இரண்டிற்கும் இடை நிலையில்தான் (அதன் சராசரியாகத்தான்) இருக்கும் என்ற நைந்து போன தாராளவாத வாதத்தின் சிந்தனையற்ற பிரயோகத்தின் வெளிப்பாடு ஆகும். எனது ஆய்வுக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தொகுதிகளின் பொருந்தும் தன்மை பற்றிய ஆய்வில் (study of fitness sets), இடை நிலைத் தேர்வு எப்போது உகந்த நிலையாக (optimum) கருதப்படுகிறது என்பதையும் எப்போது அது மிக மோசமான விருப்பத் தெரிவாகக் கருதப் படுகிறது என்பதையும் கூர்ந்தாராய்ந்திருந்தேன். ஆய்வின் சுருக்கமான முடிவு: மாற்றுகள் (alternatives) மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டிரா விட்டால், இடைநிலையையே (சராசரியையே) உகந்த நிலையாகக் கொள்ளலாம். ஆனால் மாற்றுகள் (tolerance range) அப்பழப்பூச்சி இனங் களின் சகிப்புத்தன்மையின் வீச்சைக் காட்டிலும் அதிக வேறுபாடுகளை கொண் டிருக்குமானால், அப்போது ஏதேனும் ஒரு அதீத நிலை (extreme) மட்டும் அல்லது சில சமயங் களில் அதீதங்களின் கலவைகளும் கூட கோரத் தக்கவைகளாக அமையலாம்.

மக்கட்தொகை மரபியலில் (population genetics) இயற்கைத் தேர்வுப் பற்றிய ஆய்வுகள் அனைத்தும் எப்போதுமே சுற்றுச்சூழல் நிலை யானது என்ற அனுமானத்தை கொண்டதாகவே இருக்கும். ஆனால் நான் அதன் நிலையற்ற தன்மையின் மீது விருப்பம் உள்ளவனாக இருந்தேன். நான் இரண்டு விடயங்களை முன் மொழிந்தேன் : ஒன்று, சுற்றுச்சூழல் மாற்றம் என்பது பரிணாம சூழலியலின் பல கேள்வி களுக்கான விடையாக இருக்க முடியும். இரண்டு, உயிரினங்கள் வெறும் அதிக வெப்பநிலை, களர் நிலம் போன்ற சுற்றுச்சூழலின் குறிப்பிட்ட சில அம்சங்களுக்காக மட்டும் தங்களை தகவமைத்துக் கொள்வதில்லை. மாறாக அது சுற்றுச்சூழலின் படிவங்களையும் (pattern) அதன் மாறுந்தன்மை, அதன் நிலையின்மை, நாம் கவனிப்பாய்வு மேற் கொள்ளும் அச்சிறுநிலத்தின் அளவை மற்றும் சுற்றுசூழலின் வெவ்வேறு அம்சங்களுக்கிடை யேயான ஒப்புமைத் தொடர்பு (correlations) -போன்றவைகளையும் பொறுத்துதான் அமையும். மேலும், சுற்றுச்சூழலின் இந்த அமைவு முறை என்பது உயிரினங்களுக்கு புறத்தேயான, அப்படியே இயற்கையால் வழங்கப்படுகிற ஒரு விடயம் அல்ல. உயிரினங்கள் தங்களது சுற்றுச் சூழலை தாங்களே தேர்ந்தெடுத்து, உருமாற்றி அதை வரையறையும் செய்கிறது.

நான் ஆய்விற்குட்படுத்தும் விடயங்கள் என்னவாக இருந்தாலும் (பரிணாம சூழலியல், விவசாயம் அல்லது சமீப காலமாக பொது சுகாதாரம்) என்னுடைய அடிப்படையான விருப்பம் என்பது பல்வேறு கூறுகளைக் கொண்ட நுட்பமான கூட்டு அமைப்புகளது சிக்கலான அமைப்புகளின் இயங்குநிலையினை (dynamics of complex systems) புரிந்துகொள்ள முயற்சிப்பது. மேலும் நான் ஏற்றுக்கொண்ட அரசியல் கடப்பாடானது எனது ஆய்வின் பொருத்தப்பாட்டை நானே கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. பெர் டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) அவரின் கவிதைகள் ஒன்றில் இவ்வாறு கூறுவார், “நாம் உண்மையாகவே நடுக்கமூட்டுகிற ஒரு காலத்தில் வாழ்கிறோம். மரங்களைப் பற்றிய உரையாடல் என்பது பெரும்பாலும் ஒரு குற்றச் செயலாக மாறியிருக்கும் காலங்களில்... ஏனெனில் அவ்வாறு பேசுவதன் மூலம் நம்மிடையே நடக்கும் பெரும் அநீதிகளை காணாதவர்கள் போல் அமைதியாக இருக்க முடிகிறதே”. ஐயத்திற்கிடமின்றி பிரெக்ட்-இன் மரங்கள் பற்றிய குறிப்பு தவறானது: இன்று நாம் மரங்களை பற்றி பேசும்பொழுது நாம் அநீதிகளை புறக்கணிப்பதில்லை. ஆனால் மனிதகுல வேதனைகளை உதாசீனப்படுத்தும் கல்வி புலமையோ பாண்டித்தியமோ நெறியற்ற செயல்பாடு எனும் அவரின் கருத்து முற்றிலும் சரியானது.

வறுமையும் ஒடுக்குமுறையும் நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் இழக்கச் செய்கின்றன; மனித எல்லைகளை, சாத்தியங் களை சுருங்கச் செய்கின்றன; ஆற்றல்மிக்க திறமை களை எல்லாம் செழுமையடைவதற்கு முன்பே மட்டுப்படச் செய்கின்றன. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு ஆதர வளிக்கும் எனது நிலைப்பாட்டாலும் மாறுந் தன்மை (Variability) மேல் இருந்த எனது ஈடுபாட் டாலும் மக்களின் உடலியக்கவியல் ரீதியான மற்றும் சமூகப் பாதிப்புகள் பற்றிய விஷயங்களில் எனது கவனத்தை செலுத்தத் தொடங்கினேன்.

ஊட்டச்சத்தின்மை, மாசுப்பட்டுப்போன சூழல், சமூகப் பாதுகாப்பின்மை, பற்றாக்குறை யான சுகாதார பராமரிப்பு போன்ற பல காரணங் களால் ஏற்படும் அழுத்தங்களை (stress) உடலே சரிசெய்து கொள்ளும் திறனைப்பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். தொடர்ச்சியான அழுத்தங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உடல்களில் உள்ள (உடலை) நிலைப்படுத்தும் இயக்க அமைப்பு களின் அடிப்படைகளைத் தகர்த்து, அம்மக்களை மேலும் தங்களது சுற்றுச்சூழலில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்களுக்கும் பாதிக்கப்படக் கூடியவர்களாக மாற்றுகிறது. இவைகள் இரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் (body mass index), ஆயுள் எதிர்பார்ப்பு (life expectancy போன்றவைகளின் அதிகரிக்கும் மாறுந் தன்மையில் (Variability) (சொகுசுடன் வாழும் மக்கள் கூட்டத்தில் இது சீரானதாக) வெளிப் படுகிறது. வறுமையின் பாதிப்புகளை ஆராயும் பொழுது வெவ்வேறு மக்கள் குழுமங்களுக் கிடையே நிலவும் தனித்தனி நோய்களை ஆராய்ந் தால் மட்டும் போதாது. ஒரு குறிப்பிட்ட கிருமியோ, மாசுபடுத்திகளோ ((pollutants)) குறிப்பிட்ட பெயரால் அறியும் நோய்களை தோற்றுவித்தாலும் சமூக நிலைமைகள் மருத்துவரீதியாக தொடர்பே இல்லாத நோய்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி மேலும் பாதிப்புகளை அதிகமாக பரவ வழிவகை செய்கிறது. எடுத்துக் காட்டாக: ஊட்டச்சத்தின்மை, தொற்று அல்லது மாசானது குடலின் பாதுகாப்பு அரண்களை உடைக்க வல்லவை. ஆனால் இதில் ஏதேனும் ஒரு காரணத் திற்காக ஒருமுறை உடைந்துவிட்டால் அவை மாசிபடுத்திகள், கிருமிகள் மற்றும் ஒவ்வாமை ஊக்கிகள் (allergens) படையெடுக்கும் உறைவிட மாக மாறிவிடும். ஆகையால் ஊட்டச்சத்து குறை பாடுகள், தொற்றுநோய்கள், அழுத்தம் மற்றும் நச்சுத்தன்மைகள் இவை அனைத்தும் தொடர்பே இல்லாத பல வகையான வியாதிகளை ஏற்படுத்த வல்லவைகள்.

தொற்றுநோய்கள் பற்றி 1960களில் இருந்து நிலவும் கருத்து என்பது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் இவ்வியாதிகள் மறைந்துவிடும் என்பதாகும். 1990களில் நான் இந்தக் கருத்தாக்கங் களை நிராகரிக்க “புது மற்றும் மீள் எழுச்சி பெற்ற நோய்களைப் பற்றி ஆராயும் ஹார்வார்டு குழுமம்” ஒன்றை தொடங்க உதவி புரிந்தேன். எங்கள் வாதத்தின் ஒரு பகுதி சூழலியலை அடிப் படையாகக் கொண்டது: தனது மாறிவரும் சூழலுக் கேற்ப (காடழிப்பினாலும் பாசனத் திட்டங்களி னாலும் போர் மற்றும் பஞ்சம் காரணமாகவும் மக்களின் இடப் பெயர்வு) நோய் பரப்பும் உயிரினங்களின் வேகமான தகவமைவு பற்றியது அது. மேலும் அதே வேகத்தில் பூச்சிக்கொல்லி களுக்கும் உயிர்க்கொல்லிகளுக்கும் தங்களை தகவமைத்துக் கொள்ளும் நோய்க்கிருமிகளிடத் திலும் கவனத்தைச் செலுத்தினோம். அதுமட்டு மல்லாமல், பயிர் நோயியல் (plant pathology) மற்றும் கால்நடை ஆய்வுகளிடத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியின் பௌதிக, நிறுவன மற்றும் அறிவு சார்ந்த விலக்கலை விமர்சித்தோம். இந்த தனிமைப் படுதல் நடந்திராவிட்டால், இன்று நாம் மலேரியா, காலரா மற்றும் எய்ட்ஸ் போன்றவைகளின் எழுச்சிகள் மட்டுமல்ல, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (swine fever), பூனை லுகேமியா (feline leukemia), சிட்ரஸின் டிரிஸ்டேசா நோய் (tristeza disease) மற்றும் பீன் கோல்டன் மொசைக் வைரஸ் ஆகியவை பொங்கியெழுதலில் புதைந்துள்ள ஒரு விசாலமான மாதிரியுருவை விரைவிலேயே கண்டறிந்திருக்கலாம். வளர்ந்து வரும் பொருளா தார ஏற்றத்தாழ்வு, நிலப் பயன்பாடுகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, மனித குடியேற்றங்கள், குடித்தொகை மாற்றங்கள் (demography) போன்ற வைகளால் நோய்தொற்று யியலிலும் மாற்றங்கள் நிகழும் என்பதை நாம் உணரவேண்டும். தகவமைவு பரிணாம வளர்ச்சி (Adaptive evolution) தரும் வெளிச்சத்திலிருந்து பார்க்கும்போது பயிர், விலங்கு மற்றும் மனித நோய்க்கிருமிகளை உயிர்க்கொல்லிகள், தடுப் பூசிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கொண்டு சமாளித்துவிடலாம் என நம்புவது மடமையிலும் மடமை. பொருளாதார வளர்ச்சியானது உலகத்தை செழுமையை நோக்கி கொண்டு செல்லும்; தொற்று நோய்களை ஒழித்துக்கட்டிவிடும் எனும் வளர்ச்சி யாளர்களின் எதிர்பார்ப்பு பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றது.

தொற்றுநோய்களின் மீளெழுச்சியென்பது சூழலிய-சமூக அவலமெனும் பொது நெருக் கடியின் கூட்டறி குறியின் (eco-social distress syndrome) ஒருவகை வெளிப்பாடு மட்டுமே. பல நிலைகளில் எங்கும் நிரம்பியிருக்கும் இந்த நெருக்கடி உணர்த்துவதெல்லாம் நம் மனித இனத் தினிடையேயும் மனித இனத்திற்கும் இயற்கைக்கு மிடையேயும் நிலவுகின்ற உறவுகளின் செயல் பிறழ்ச்சி (dysfunction) யேயாகும். இச்செயல் பிறழ்ச்சியென்பது நோய்களின் வினை மற்றும் எதிர்வினை அமைவுமுறை கொண்ட கூட்டமைப்பு, உற்பத்தி மற்றும் பாலின உறவுகள், குடித்தொகை மாற்றங்கள், நமது இயற்கை வளங்களின் சிதைவு மற்றும் அடாவடியான அழித்தல், மாறிவரும் நிலப்பயன்பாடு மற்றும் குடியேற்றங்கள், பூகோளத்தின் பருவநிலை மாற்றங்கள் என எல்லா வற்றையும் உள்ளடக்கியது. இது இதற்கு முன்பு சந்தித்த நெருக்கடிகளில் மிகவும் ஆழமானது - உயரே இருக்கும் வளி மண்டலத்திலிருந்து பூமியின் அடியாழம் வரை, இன்னும் பரந்து விரியும் வெளி களில், நீண்டகாலத்திற்கு நிலைக்கக் கூடியதாகவும் நமது வாழ்வின் இன்னும் அதிகமான மூலை முடுக்குகளில் ஊடுருவுவதாகவும் திகழ்கின்றது. இந்த நெருக்கடி என்பது மனித இனத்திற்கு பொது வானதாகவும் உலக முதலாளித்துவத்திற்கு தனித்துவமானதாகவும் என இரண்டுமாகவும் உள்ளது. ஆகையால் இதுவே எனது அறிவிய லுக்கும் எனது அரசியலுக்கும் முதன்மை அக்கறையாக உள்ளது.

இம்முழு உலகின் எளிதற்ற, பல்வேறு கூறு களைக் கொண்ட நுட்பமான தன்மையை அப்படியே புரிந்துகொள்ள முயல்பவர்கள் பல நேரங்களில் திணறிப்போகக்கூடும். அதற்காக சிக்கலை தவிர்க்கிறேன் எனும் பெயரில், ஒரு அமைப்பை (அதன் சூழமைவிலிருந்து விலக்கி) அதன் கூறுகளாய் தனித்தனியே பிரித்து ஒரு தருணத்தில் ஒரு கூறின் பிரச்சனையை மட்டும் தான் தீர்க்க முயலுவேன் எனும் அணுகுமுறை பெருங்கேட்டைதான் விளைவிக்கும். அறிவியல் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய தோல்விகள் அனைத்தும் இவ்வாறு பிரச்சனைகளை மிகவும் குறுகிய கண்ணோட்டத்தோடு முன்வைத்ததா லேயே நிகழ்ந்துள்ளது. பசுமை புரட்சியை முன் மொழிந்த விவசாய விஞ்ஞானிகள் பூச்சிகளின் பரிணாம வளர்ச்சியை பற்றியோ அல்லது பூச்சி களின் சூழலியலைப் பற்றியோ கருத்தில் கொள் ளாததால் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை கட்டுப் படுத்தும் என எதிர்பார்த்தனர். ஆனால் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் பூச்சிகளின் பிரச்சனைகள் அதிகரித்தபோது அவர்கள் எதிர்பாரா அதிர்ச்சியில் மூழ்கினர். அதேபோல இவர்களுடைய உயிர்கொல்லிகள் புது வகை யான கிருமிகளை உருவாக்குகிறது, பொருளா தார முன்னேற்றம் வறுமையை உருவாக்குகிறது; வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் வெள்ளத்தை அதிகரிக்கவே செய்கின்றது; பிரச்சனைகளை அதன் செறிவான பல கூறுகள் கொண்ட தன்மைகளிலிருந்து மட்டுமே தீர்க்க வேண்டும். இந்த பல கூறுகளைக் கொண்ட அமைப்புகளை புரிந்துகொள்வது எப்படி என்பதே நம்முன் நிற்கும் இன்றைய நடைமுறை மற்றும் கோட்பாட்டுரீதியிலான அவசரப் பிரச்சனை.

இந்த அக்கறையே என்னுடைய அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கிறது; இடதுசாரி இயக்கங்களுக்குள் எனது பணி என்பது இயற்கையுடனான நமது உறவை மனிதகுல விடுதலைக்காக நடக்கும் உலகளாவிய போ ராட்டங்களிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது என வாதிடுவது. சூழலியல் இயக்கங்களுக்குள் எனது பணி என்பது “இயற்கையின் ஒத்திசைவு (Harmony of Nature)” எனும் முற்காலத்திய சூழலிய வாதிகளின் கருத்தியலை எதிர்ப்பது மற்றும் இன்றைய செயல்பிறழ்ச்சிக்கான காரணங்களை சமூக உறவுகளில் (Social relations) கண்டடைய வலியுறுத்துவது ஆகும். அதே வேளையில் என்னுடைய அரசியலே என்னுடைய அறிவியல் நெறிமுறைகளை (scientific ethics) தீர்மானிக்கிறது. சமூக அநீதியை சகித்துக் கொள்கிற, சரியென நிறுவுகிற, உயர்த்திப் பேசுகிற அத்தனை கோட் பாடுகளும் தவறானவையே என்பதை நம்புகிறேன்.

 அறிவுசார் வாழ்க்கையின் கட்டமைப்பை பற்றிய இடதுசாரிகளின் விமர்சனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி அறக் கட்டளை களின் கலாச்சாரத்திற்கு எதிர்பலமாகத் திகழ் கின்றன. 1960 - 1970களில் அன்றைய (வியட்னாம்) யுத்த எதிர்ப்பு அமைப்புகள், ஆளும் வர்க்கத்தின் ஒரு உறுப்பாய் இருந்து செயல்படும் பல்கலைக்கழகங்களது இயல்பை ஒரு பிரச்சனை யாக கையிலெடுத்தது. இதன் மூலம் அறிவுசார் சமூகத்தையே (கோட்பாட்டு மற்றும் நடைமுறை ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த) ஒரு ஆய்வுபொருளாக மாற்றினர். எம்.ஐ.டி பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் இராணுவ ஆராய்ச்சிகளை கண்டித்து 1967இல் நடந்த ஆய்வாளர்களின் வேலை நிறுத்தத் திலிருந்து தொடங்கிய “மக்களுக்காக அறிவியல்” எனும் இயக்கத்தில் நான் இணைந்து கொண்டேன். அதன் உறுப்பினராக பசுமை புரட்சியையும் மரபணு தீர்மானவியலையும் (Genetic Deter minism) எதிர்க்க உதவினேன். யுத்த எதிர்ப்பு செயல் பாடு என்பது என்னை போர் குற்றங்களை (முக்கிய மாகப் போரின்போது மரங்கள் மற்றும் செடிகளின் இலைகள் உதிர்வதற்காக பயன்படுத்திய பயிர் கொல்லிகளின் (defoliants) பயன்பாட்டை பற்றி) விசாரிப்பதற்காக வியட்நாம் கொண்டு சென்றது. அங்கிருந்து “வியட்நாமிற்காக அறிவியல்” எனும் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் செயல் பாட்டிற்கு நகர்த்தியது. வியட்னாம் காடுகளில் பயன்படுத்தப்பட்ட ஏஜெண்ட் ஆரெஞ்சு (Agent orange) எனும் பயிர்க் கொல்லி அங்கு வாழும் வியட்னாமிய விவசாய சமூகங்களில் பிறப்பு குறைபாடுகளை (Birth Defects ஏற்படுத்தியதைக் கண்டு போரில் அதன் பயன்பாட்டை வன்மையாக கண்டித்தோம். போரின்போது பயன்படுத்திய இரசாயன பயிர்க் கொல்லிகளிலேயே ஏஜெண்ட் ஆரெஞ்சுதான் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.

ப்யூர்டோ ரிக்கோவின் விடுதலை இயக்கம் எனக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை ஊட்டியது. அது “கட்டமைப்பு சீர்திருத்தம்” போன்ற பல சொற்சிலம்புகளால் பேரரசின் நலன் காக்கத் துடித்து செயல்படும் எனது பல்கலைக்கழகத் தினுள் எனது செயல்பாடுகள் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கு பேருதவியாய் அமைந்தது. என் மனைவியின் கூர்மையான உழைக்கும் வர்க்க பெண்ணியப் பார்வையானது அங்கே முற்றும் முழுமையாக வியாபித்திருந்த மேட்டிமைத்தனம் (elitism), பாலின அடிப்படையிலான பாகுபாடு (Sexism) ஆகியவை பற்றிய தொடர்ச்சியான விமர்சனத்தின் மூலாதாரமாக விளங்கியது. போட்டி மனப்பான்மை கொண்ட, தனிநபரின் நலனை மட்டுமே பேணும், ஒரு சுரண்டல் சமூகத்திற்கு, மாற்று உள்ளது என்பதை கியூபாவுடனான தொடர் செயல் பாடுகள் தெள்ளத்தெளிவாக எனக்குப் படம் பிடித்துக் காட்டியது.

பொதுவாக கல்விசார் சமூகம் அசட்டை செய்யும் பிரச்சனைகளை சமூக இயக்கங்களும் (குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே இயங்கு பவர்கள்) மற்றும் பெண்கள் நலன் சார்ந்த இயக்கங் களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன : மாசசூ செட்ஸின் வூபர்ன் நகர தாய்மார்கள் தங்கள் சுற்றத் திலிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் அதிக அளவில் இரத்தப் புற்று நோய் தாக்குவதைக் கண்டறிந்தது, கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க மக்கள் வாழும் பகுதிகளில் மட்டும் அதிக அளவில் நச்சுக் கழிவுகள் குவிக்கப்படுவதை எதிர்த்து நூற்றுக் கணக்கான சுற்றுப்புறச் சூழலியக்கங்கள் நீதிக் காகப் போராடுவது, புற்று நோய் மற்றும் பலவித மான வியாதிகளுக்கான சூழலியல் காரணிகளின் பங்கு பற்றி பேசிவரும் “பெண்கள் சமுதாயத்தின் புற்றுநோய்க்கான திட்டம்” என்ற இயக்கம், என பல்வேறு இயக்கங்கள் பல விடயங்களை தொ டர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நமது பல் கலைக்கழகங்களோ புற்றுநோய் விளைவித்து குற்றமிழைத்த மரபணுக்களை தேடும் படலத் திலேயே தேங்கிக் கிடக்கின்றன. இச்சமூக இயக் கங்களின் செயற்பாடுகளும் முன்னெடுப்புகளுமே எனது கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த ஆய்வுகளுக்கு ஒரு மாற்று நிகழ்ச்சிநிரலை பேணுவதற்கு உதவி புரிகின்றது.

பல்கலைக்கழகத்தினுள் எனது சகாக்களிடமும் கல்வி நிறுவனத்திடமும் ஒரு முரண் பாடுடைய உறவுமுறையே நிலவுகிறது - ஒத்துழைப்பு மற்றும் மோதல் என இரண்டிற்கு மான கலவை. உடலாரோக்கியம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகள், தொடரும் ஏழ்மை போன்றவைகளை பற்றிய அக்கறைகளை நாங்கள் பகிர்ந்து கொள் வோம். ஆனால் காப்புரிமை பெறும் வகையிலான மூலக்கூறுகளை கண்டடையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிக்கும் போக்கை பற்றியும் தனது பேரரசின் நலனுக்காக பாடுபடும் ஏ.ஐ.டி. (சர்வதேச வளர்ச்சிக்கான இயக்கம்) போன்ற அரசாங்க முகமைகளைப் (government agencies) பற்றியும் எப்போதுமே மோதிக்கொள்வோம்.

கல்விச் சமூகத்தில் வழக்கமாக எது ‘வெற்றி கரமான பணி வாழ்க்கை’ என கருதப்படுகிறதோ அதற்காக நான் எப்போதுமே ஆசை கொண்டது கிடையாது. அறிவியற்சமூகம் சிறந்த அறிவிய லாளர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க கட்டமைத்து வைத்திருக்கும் முறையான அமைப்புகளினுள் எனக்கான அங்கீகாரத்தை நான் தேடியதில்லை. அதுபோலவே எனது தொழிற்சார் சமூகத்தின ரிடையே நிலவும் பொதுவான கற்பிதங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் செயல்பட முயற்சிக்கிறேன். இது எனது (ஆய்வு மற்றும் செயல்பாடுகள் சார்ந்த) விருப்பத்தெரிவுக்கு பரந்த ஒரு சுதந்திரத்தை கொடுக்கின்றது. ஆகவே தேசிய அறிவியல் அகாடெமியில் (National Science Academy நான் இணைய மறுப்புத்தெரிவித்த போது இக்கடினமான முடிவை எடுத்ததற்கு ஆறுதல் கூறியும் எனது தைரியத்தை பாரட்டியும் பல கடிதங்கள் வந்தன. ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இம்முடிவு கடினமான ஒன்றாக இருக்கவில்லை. ஏனெனில் இது நான் சார்ந்த சிகாகோவின் “மக்களுக்காக அறிவியல்” இயக்கத்தினுள் விவாதித்து எடுக்கப்பெற்ற ஒரு கூட்டு அரசியல் நிலைப்பாடு. வியட்னாம்-அமெரிக்க போர்களில் அகாடெமி அளிக்கும் உதவியை, ஒத்துழைப்பிற்கு எதிராக ஒரு பொது நிலைப்பாடு எடுப்பது, அவர்களிடம் இணைந்து செயலாற்றி அவர்களின் முடிவுகளில் உள்ளிருந்து செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதைக் காட்டிலும் பயனுள்ளதாக அமையும் என நாங்கள் தீர்மானித்தோம். டிக் லேவாண்டின் (Dick Lewontin) இதை முன்பே செய்ய முயன்று தோல்வி யுற்று பூருஸ் வேலாஸ§டன் ((Bruce Wallace) வெளியேறியிருந்தார்.

கணிதம் மேற்கொள்வது என்பது எப்போதுமே எனக்கு மகிழ்வு தரும் ஒரு செயல்பாடு. தெளி வற்ற விடயங்களை தெளிவுள்ளதாக்குவது அதன் பணிகளில் முக்கியமான ஒன்றாகக் கருது கிறேன். நான் எப்போதுமே இடைநிலைப்பட்ட சில கணிதங்களை (mid-level maths) முறைசாரா வழிகளில் பயன்படுத்தி ஒரு நிகழ்வின் புரிதலை ஊக்குவிக்க முயலுவேனே தவிர இதுதான் நடக்கும் என ஜோசியம் கூற பயன்படுத்த மாட்டேன். இன்று கணித ஒப்புருவாக்கம் (Mathematical Modelling) என்பதன் நோக்கம் துல்லியமான சமன்பாடுகளை (precise equations) கொண்டு துல்லியமான கணிப்புகளை (precise predictions) கண்டறிதல் ஆகும். இது பொறியியலில் சரி. அதுபோல உலகத்தின் முழுக்கட்டுப்பாடும் தங்கள் கைகளில்தான் உள்ளது என நம்பி தங்கள் எஜமானர்களின் முயற்சிகளுக்கும் முதலீடு களுக்கும் பங்கம் ஏற்படாதவாறு ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்க பல திட்டங்கள் தீட்டும் ஆளும் வர்க்கத்தினரின் ஆலோசகர்களுக்கு இக்கணித ஒப்புருவாக்க முறை சரிப்படும். ஆனால் இவர்களை எதிர்ப்பவர்களுக்கு அதுபோன்ற எந்த மாயையும் இல்லை. இந்த முறையைக் கொண்டு நாம் செய்ய உகந்த காரியம் என்பது இந்த சமூக கட்டமைப்பின் வரையறைகளை எங்கே நீட்டிக்கலாம் என முடிவுசெய்வது. இதற்கு பண்புசார் கணிதமே (Qualitative Mathematics) மிகவும் பயன்படும். என்னுடைய ஆய்வில் பயன்படுத்திய மடக்கு பகுப்பாய்வு (loop analysis) இந்த வகையைச் சாரும். பண்புசார் மற்றும் அளவுசார் பகுப்பாய்வுகள் (Qualitative and Quantitative Mathematics) எதிரெதிரானவைகள், அளவுசார் கணிதம் பண்புசார் கணிதத்தைக் காட்டிலும் சிறந்தது போன்ற கூற்றுகளை நிராகரித்து, எந்தக் கணித கருவிகள் பல்வேறுக் கூறுகளை கொண்ட ஒரு கூட்டும நிகழ்வை ((complex phenomena)) புரிந்து கொள்ள, கருத்துருவாக்க முயல உதவுகிறதோ அதை நான் பயன்படுத்தி வந்திருக்கிறேன்.

அரசியல் செயல்பாடு என்பது நிச்சயமாக அடக்குமுறைகளை கட்டவிழ்க்கும் எந்திரங் களின் கவனத்தை நம் மேல் ஈர்க்கத்தான் செய்யும். நான் இவ்விடயத்தில் ஒரு அதிர்ஷ்டசாலி. மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சில அடக்கு முறைகளுக்கு மட்டுமே உள்ளாகியுள்ளேன். பலர் தங்களது வேலையிழந்து, பல ஆண்டுகள் சிறைவாசப்பட்டு வன்முறைகளுக்குள்ளாகி தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் துன்புறத்தல்களுக்குள்ளாகி நாடுகடத்தப்பட்டு என பலவகை இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ப்யூர்டோ ரிகாடர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், பூர்வகுடி செவ்விந் தியர்கள் போன்றவர்களின் விடுதலை இயக்கத் தவர்களாக இருந்தனர், அதில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் அரசியல் கைதிகளாக இருக்கும் ஐந்து கியூப தீவிரவாத எதிர்ப்பாளர்களும் அடங்குவர்.

சுரண்டல் என்பது மக்களை துன்புறுத்திக் கொல்கிறது. இனவாதமும் பாலின வேறுபாடும் உடல்நலனை அழித்து உயிரைக் குலைக்கிறது. இன்றைய முதலாளித்துவத்தின் பேராசை, மிருகத்தனம் மற்றும் அதன் ஆரவாரத்தன்மை எனக்கு துன்பத்தை தருவதாகவும் ஆத்திரமூட்டுவ தாகவும் உள்ளது. சில நேரங்களில் என்னை ஆசு வாசப்படுத்திக்கொள்ள ஜோனதன் ஸ்விஃப்டின் “நிதானமிழந்த மோசமான தருணத்தில் ஒரு நாட்டுப்பாடல்” -லிருந்து அதன் கடைசி வரிகளைப் பாடுவேன் :

“தேம்ஸ் நதியின் படகோட்டியை போல

துடுப்பு போடுகிறேன் நான்

அவர்களை வசைபாடுகிறேன்

எப்போதுமே சிரிக்கும் துறவியை போல

எனது வெஞ்சினத்தை

கேலிப் பேச்சுக்களால் கழிக்கின்றேன்

ஆனால் இதை உணர்ந்தே ஆகவேண்டும்

சமயம் வாய்த்தால் - நான்

தூக்கிலேற்றிடுவேன் அவர்களை”                 

எனது கல்வி சார் செயல்பாடுகளும் அரசியல் செயல்பாடுகளும் எனக்கு நான் விரும்பும் மனிதர்களுடன் என்னை அறிவார்ந்த முறையில் உற்சாகப்படுத்தும் ஆய்வுகளை சமூகத்திற்கு பயனுள்ள செயல்களை செய்த மகிழ்ச்சியான மற்றும் வெகுமதியான ஒரு வாழ்க்கையையே பெரும்பகுதிக்கு அளித்துள்ளது.

குறிப்பு : ஜான் மோண்ட்கோமேரி பிரவுன், மிசாவ்ரி சினாடின் லுதேரன் எபிஸ்கோபல் ஆயராக இருந்து பின்பு மார்க்ஸியராக மாறியதால் திருச்சபையிலிருந்து வெளியேற்றப் பட்டார். 1930களில் “மதத்திற்கு எதிரான கொள்கை” என்ற காலாண்டு இதழை பதிப்பித்தார்.

ஏ.ஐ.டி. (AID - Aid for International Develop ment) தங்களது மூலவுத்தி நலன்களுக்காக (Strategic Interests) தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் உலகநாடுகளில் சுகாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான திட்டப் பணிகளை மேற் கொள்ளுகிறது. அதன் தனிப்பட்ட சில திட்டப் பணிகள் சில நேரங்களில் உதவியாகவும் அதில் பங்குபெறுபவர்கள் மனிதாபிமான அக்கறையின் பேரிலேயே உதவிபுரிபவராக அமைவர். ஆனால் அந்த அமைப்பு வெனிசுவேலாவின், ஹைதியின் மற்றும் கியூபாவின் புரட்சிகளுக்கு எதிராகச் செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவாக செயல்படும் ஒரு தீவிர வாத அமைப்பும் கூட. ஒரு கட்டத்தில் உருகுவே மற்றும் பிரேசிலின் காவலதிகாரிகளுக்கு LEAP (சட்டத்தை அமல்படுத்த உதவும் திட்டம்) என்ற பெயரில் கைதிகளை எவ்வாறு சித்தரவதை செய்வது என்பதை கற்றுக் கொடுத்தனர்.

தமிழில் - பிரதீப் குமார்

நன்றி - மன்த்லி ரிவ்யூ, நியூயார்க், ஜன, 2008