தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம் தேதி பிறந்தார். தந்தையார் சிவந்தி ஆதித்தன். தாயார் கனகம் அம்மையார். ‘ஆதித்தனார்’ என்பது அவரது குடும்பப் பெயர். ஆதித்தனாரின் இயற்பெயர் ‘ சிவந்தி பாலசுப்ரமணியன் ஆதித்தன் '.

    Si Pa Adithanarதந்தையார் வழக்கறிஞர். சி.பா. ஆதித்தனார் தமது பள்ளிப் படிப்பை திருவைகுண்டத்தில் பயின்றார். திருச்சிராப்பள்ளியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்ட மேல் படிப்பை முடித்தார்.

    கல்லூரியில் படிக்கும்போதே ‘ தொழில் வெளியீட்டகம்’ என்னும் பதிப்பகத்தை தொடங்கி, மெழுகுவர்த்தி செய்வது எப்படி ? தீப்பெட்டி தயார் செய்வது எப்படி? ஊதுபத்தி தயார் செய்வது எப்படி ? சோப்பு தயார் செய்வது எப்படி? பேனா மை தயாரிப்பது எப்படி ? என்பன போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டார். இதற்காக ஒரு அச்சகத்தை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் சுய தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வம் வெளிப்படுவதுடன், தமிழக இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையையும் அறிய முடிகிறது.

    சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரத்திற்குச் சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார். லண்டனில் படிக்கும் போதே நிருபராக பணியாற்றி படிப்புச் செலவிற்கு பணம் சம்பாதித்தார். சுதேசமித்திரன் இதழ், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் லண்டனிலிருந்து வெளி வந்த ஸ்பெக்டேட்டர் வார இதழ் முதலிய இதழ்களுக்கு செய்திக் கட்டுரைகள் எழுதி அனுப்பினார். இந்திய இதழ்களுக்கு லண்டனில் செய்தியாளராக இருந்த முதல் தமிழர் இவரே. லண்டனில் படிக்கும்போதே இதழ்கள் நடத்திட வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்தை உள்ளத்தில் ஏற்றார்.

    லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பியவுடன், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை மேற்கொண்டார். சிங்கப்பூர் நாட்டில் பெரும் தொழில் அதிபராக விளங்கிய ஓ. ராமசாமி நாடார் என்பவரின் மகள் ஆச்சியம்மாள் என்ற கோவிந்தம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

    சிங்கப்பூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்த பொழுது, நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால், சி. பா. ஆதித்தனாரின் சிந்தனையெல்லாம் இதழ் நடத்த வேண்டும் என்பதையே சுற்றிச் சுற்றி வந்தது. அவரது மாமனாரோ அதிக வருமானம் வரும் வழக்கறிஞர் தொழிலை விட்டு விட்டு இதழ் நடத்தினால் பணம் சம்பாதிக்க முடியாது என்றார்.  “ அரிசி விற்றால் சாக்காவது மிச்சப்படும், பருப்பு உடைத்தால் உமி, குருணையாவது மிச்சப்படும், இதழ் நடத்தினால் என்ன மிஞ்சும் ? இருப்பதும் போய்விடும் ” எனக் கூறி இதழ் நடத்துவதை தடுத்தார். ஆனாலும், இதழ் நடத்தியே தீருவது என்பதில் ஆதித்தனார் உறுதியாக இருந்தார். வேறு வழியில்லாமல் அவரது மாமனாரும் ஒத்துக் கொண்டார்.

    முதன் முதலில் 'மதுரை முரசு' என்னும் வாரம் இருமுறை வெளிவரும் இதழைத் தொடங்கினார். பின்பு, 'தமிழன்' என்னும் வார இதழைத் தொடங்கினார். தமிழன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தது தமிழின் மீது அவர் கொண்ட காதல் தான்
.
    மதுரையில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் , கலவரம் ஏற்பட்டு காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள். ஆதித்தனார் "மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார்.

    அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி 'மதுரை முரசு' இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

    1942 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி 'தினத்தந்தி' நாளிதழை வெளியிட்டார். தலையங்கத்தில் நாட்டின் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளை மக்களுக்குப் புரியும் விதத்தில் எளிய தமிழ் நடையில் விளக்கினார். "ஒரு படம் ஆயிரம் சொல்லுக்குச் சமம்" என்னும் சீன பழமொழிக்கேற்ப, தமது தினத்தந்தி நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியிட்டார்.

    பாமர மக்களும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்கள், சிறிய வாக்கியங்கள், கவர்ச்சி மிகுந்த தலைப்புகள், கருத்துப் படங்கள் இவற்றைக் கையாண்டார். அரசியல் , பொருளாதாரம், வர்த்தகம், திரைப்படம், விளையாட்டுச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டு தமிழக மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உதவினார்.

     தமிழகத்தில் இன்று 'தினத்தந்தி' நாளிதழ் 12 நகரங்களிலிருந்தும், புதுச்சேரி, மும்பை , பெங்களுர் முதலிய பெருநகரங்களிலிருந்தும் வெளி வருகிறது. பட்டித்தொட்டியெங்கும், ஊர்தோறும் தினத்தந்தி நாளிதழ் பரவி பல லட்சக்கணக்கான வாசகர்கள் படிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது. மேலும், தினத்தந்தி குழுமத்திலிருந்து தினத்தந்தி, மாலை முரசு, ராணி, ராணி முத்து, ராணி காமிக்ஸ் போன்ற வார, மாத இதழ்களும் வெளியிடப்படுகிறது.

    சி.பா. ஆதித்தனார் 1942 முதல் 1953 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகச் செயல்பட்டார். 'தமிழ்ப்பேரரசு' என்னும் நூல் மூலம் தமிழின முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டியவைகளை வலியுறுத்தினார்.

    1942 ஆம் ஆண்டு 'தமிழரசுக் கட்சி'யைத் தொடங்கி நடத்தினார். பின்பு. 1958 ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' இயக்கத்தையும் தொடங்கி செயல்படுத்தினார்.

    1960 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு சிறை சென்றார். அதே போன்று 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பேரறிஞர் அண்ணா அழைத்ததால் தி. மு. க.வில் இணைந்தார். 1957 முதல் 1962 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் சபாநாயகராகப் பொறுப்பேற்றது முதல் சட்ட மன்றத்தில் சபை ஆரம்பிக்கும் முன்பு தினம் ஒரு திருக்குறள் கூறி அவையைத் தொடங்கினார். தமிழக அமைச்சரவையில் கூட்டுறவு, விவசாய அமைச்சராக பணியாற்றினார்.

    திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி ஏற்படுத்தப்பட்டு அக்கல்லூரியில் இதழியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சி.பா. ஆதித்தனார் 'இதழாளர் கையேடு' என்னும் நூலை வெளியிட்டார். அந்த நூல் இதழாளர்களுக்கு மிகவும் பயனுடையதாக இன்றும் விளங்குகிறது.

    'உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு' என்னும் முழக்கத்தின் மூலம் தமிழர்களை தட்டியெழுப்பினார். தமிழர்கள் தங்கள் கையொப்பத்தின் தலைப்பெழுத்தையும், கையெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

    தாய் நாட்டுப் பற்றும், தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தார். பாமரனையும் படிக்க வைக்க வேண்டும், தமிழ் மொழி, தமிழினம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக தமது உயிர் மூச்சு உள்ளவரை வாழ்ந்தார் சி.பா. ஆதித்தனார்! 1981 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் காலமானர். அவரது புகழ் இதழியல் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

Pin It