cpi ml chennai

நவம்பர் 7 – இரசிய புரட்சி நாளில் சாதிவெறி அரசியல் எதிர்ப்பு – சாதி ஒழிப்பு மாநாட்டை கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு சார்பில் சென்னை-மாதவரத்தில் நடைபெற்றது.

ஆய்வரங்கம், அரசியல் அரங்கம் என இரு அரங்கங்களாக நடைபெற்ற மாநாட்டுக் கருத்தரங்கில் ஆய்வறிஞர்களும், எழுத்தாளர்களும், முற்போக்கு அரசியல் இயக்கத் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

மாலை 3 மணி அளவில் “சாதி ஒழிப்பிற்கான வழி என்ன?” என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இவ்வாய்வரங்கத்தை சாதி ஒழிப்பு முன்னணி அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர்.சிவராமன் வரவேற்புரையாற்றி தொடங்கிவைக்க, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலையின் தலைவர் தோழர்.ஜெ.சிதம்பரநாதன் தலைமை தாங்கி நடத்தினார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராஜேந்திரன், ஆய்வறிஞர்கள் தோழர்.சுப குணராஜன், தோழர். காமராஜ், எழுத்தாளர் வ.கீதா ஆகியோர் தங்கள் ஆய்வு கருத்துக்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து காஞ்சி மக்கள் மன்றத்தின் சாதி ஒழிப்பு பாடல்களும், பறை இசை நிகழ்ச்சியும் நிகழ்த்தப்பட்டது.

மாலை 7 மணி அளவில் ”சாதிவெறி அரசியலை முறியடிப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரசியல் அரங்கத்தை சாதி ஒழிப்பு முன்னணி அமைப்பின் தலைவர் தோழர்.நடராஜன் வரவேற்புரையாற்றி தொடங்கிவைக்க, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலையின் பொதுச் செயலாளர் தோழர்.பாலன் தலைமை தாங்கி நடத்தினார். இவ்வரசியல் அரங்கத்தில் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கோவை.இராமகிருட்டினன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் தோழர்.மீ.த.பாண்டியன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் தோழர்.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தோழர்.வீரபாண்டியன், தியாகி இம்மானுவேல் பேரவை தலைவர் தோழர்.சந்திரபோஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரிஃப், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் நாகராசன், காஞ்சி மக்கள் மன்றம் தோழர்.மகேஷ், சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்.குணசேகரன், தோழர்.இரமணி, தோழர்.விடுதலைக் குமரன், இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.செந்தில் ஆகியோர் சாதிவெறி அரசியலை எதிர்த்து உரையாற்றினார்கள்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடைசெய்யும் 2013 ஆம் ஆண்டு 2013 ஆம் ஆண்டின் துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தில் சட்டத்தை உறுதியாக அமல்படுத்துமாறு இம்மாநாட்டின் வாயிலாக தமிழக அரசைக் கோருகிறோம்.

2. மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துபவர்களை உடனடியாக கைது செய்வதற்கு ஏற்ற வகையில் 2013 ஆம் ஆண்டின் துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருமாறு மத்திய அரசைக் கோருகிறோம்.

3. மாட்டு இறைச்சி உண்பதற்கு எதிராக இந்துத்துவ அடிப்படைவாதிகளால் நாடெங்கும் கட்டவழித்துவிடப்பட்டுள்ள வெறுப்புப் பிரச்சாரத்தையும், ஆங்காங்கே நடைபெற்றுவரும் கொலைவெறித் தாக்குதல்களையும், தாத்ரியில் நடந்த படுகொலையையும் இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. அடித்தட்டு மக்களின் உணவு உரிமையை மறுக்கும் காவிப்பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம் என அறைகூவல் விடுக்கிறோம்.

4. பேச்சுரிமை, எழுத்துரிமை, பிரச்சாரம் செய்யும் உரிமை என்று அனைத்து வகையிலும் கருத்துரிமையின் கழுத்தை நெறித்துவரும் மத்திய மாநில அரசுகளையும் இந்துத்துவ, சாதி ஆதிக்கக் கும்பல்களையும் வன்மையாக கண்டிப்பதோடு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சனநாயக முகாமை கட்டியெழுப்ப அனைத்து சனநாயக ஆற்றல்களையும் இம்மாநாட்டின் வாயிலாக அறைகூவி அழைக்கிறோம்.

5. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளும் கொலைகளும் அதிகரித்து வரும் நிலையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கறாராக அமல்படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை இம்மாநாட்டின் மூலம் கோருகிறோம்.

6. ‘கௌரவம்’ எனும் பெயரில் நடத்தப்படும் சாதிவெறிக்கொலைகளை தடுக்க சிறப்புச்சட்டத்தை இயற்றுவதோடு அக்கொலைகளை வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் இணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாட்டின் வாயிலாக கோருகிறோம்.

7. சாதிய வன்முறையைத் தூண்டும் அரசியல் கட்சி தலைவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு இம்மாநாட்டின் வாயிலாக தமிழக அரசைக் கோருகிறோம்.

8. காதல் திருமணங்களைத் தடுப்பது, காதலர்களைக் கொலை செய்வது, இணையர்களை மிரட்டுவது, பிரிப்பது, அவர்களை கொலை செய்வது ஆகிய குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதக் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாட்டின் வாயிலாக தமிழக அரசைக் கோருகிறோம்.

9. சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு இட ஒதுக்கீடு, குடியிருப்பு, அரசு வேலை உள்ளிட்ட ஊக்கங்களை வழங்குமாறு தமிழக அரசைக் கோருகிறோம்.

10. கோவில், மடங்கள், பண்ணை நிலங்களைப் பறிமுதல் செய்து நிலமற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்குமாறு தமிழக அரசை இம்மாநாட்டின் வாயிலாக கோருகிறோம்.

11. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடம் இருந்து மீட்டு அதை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே உரித்தாக்குமாறு இம்மாநாட்டின் வாயிலாக தமிழக அரசைக் கோருகிறோம்.

12. அரசு துறைகளில் இருப்பது போல் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி அதை அமல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாட்டின் வாயிலாக கோருகிறோம்.

13. தாழ்த்தப்பட்டவர்களுக்கான சிறப்பு உட்கூறுத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை வேறு மடைமாற்றும் போக்கை கைவிட்டு அதை முறையாக தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்கே பயன்படுத்துமாறு இம்மாநாட்டின் வாயிலாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

14.அரசுப் பணி உயர்வுகளில் முறையாக இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

15. சிறு, குறு சேவை சாதிகள் மீதான ஒடுக்குமுறையை செலுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவதோடு அவ்வொடுக்குமுறைகளை எதிர்த்து போராட உறுதியேற்கிறோம்.

16. மலைவாழ் ஆதிப்பழங்குடி மக்களின் வன உரிமையை பாதுகாத்திட துணை நிற்போமென இம்மாநாடின் வாயிலாக உறுதியேற்கிறோம்.

17. சட்டப்படி பெண்களுக்கு இருக்கும் சொத்துரிமையை நடைமுறைப்படுத்துமாறு தமிழக அரசை இம்மாநாட்டின் வாயிலாக கோருகிறோம்.

18. திருமலைகிரி, சேச சமுத்திரம், வழுவூர் போன்று நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கும் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

19. சாதிய அரச இயந்திரத்தால் கொல்லப்பட்ட டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு தமிழக அரசை இம்மாநாட்டின் வாயிலாக கோருகிறோம்.

20. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடும் உரிமையை மறுப்பதன் மூலம் சாதிரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு உயர்நீதி மன்றத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றது. எனவே, சமூக நீதி என்ற அடிப்படையில் தமிழில் வாதாடும் உரிமையை அங்கீகரித்து அதை நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

21. இலவச சமச்சீரி, அருகமை, பொதுக் கல்வியை உறுதி செய்வதும் மற்றும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழ்வழியில் கொடுப்பதன் மூலமே கல்வியுரிமையைப் பெறுவதில் இன்று நிலவிவரும் சாதிரீதியான ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முடியும். எனவே இக்கோரிக்கையை வென்றெடுப்பதற்கு அணி திரளுமாறு தமிழக மக்களை இம்மாநாட்டின் வாயிலாக அறை கூவி அழைக்கிறோம்.

22. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநாடின் வாயிலாக கோருகிறோம்.

23. பெண்கள் மீது ஏவப்படும் சாதிவெறி ஆணாதிக்க ஒடுக்குமுறையினை முறியடிக்க சாதி ஒழிப்புக் களத்தில் பெண்களை அணிதிரட்ட இம்மாநாட்டின் வாயிலாக உறுதியேற்கிறோம்.

24. தமிழகம் முழுவதும் நடைபெறும் சாதிய வன்முறைகள், படுகொலைகளுக்கு எதிராக தலித் மக்களோடு களத்தில் நிற்கும் போராளிகள், இயக்கத் தோழர்கள் மீது தமிழக அரசால் சுமத்தப்படும் பொய் வழக்குகளைத் திரும்பப் பெறும்வரை போராடுவதோடு தமிழக அரசின் சாதி ஆதிக்க சார்பை அம்பலப்படுத்துவோம் என இம்மாநாட்டின் வாயிலாக உறுதியேற்கிறோம்.

25. சாதியக் கலவரத்தைத் தூண்டிவிட்டு உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தும் சாதிவெறி கும்பலைத் தனிமைப்படுத்த, தலித் அல்லாதோர் கூட்டணியை அம்பலப்படுத்தி இடதுசாரி, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு களம் காண்போமென இம்மாநாட்டில் வாயிலாக உறுதிபூண்கிறோம்.

26. மத்திய மாநில அரசின் தவறான கொள்கைகளால் பெருகிவரும் இயற்கை வளக் கொள்ளை, விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களிடம் நிலவிவரும் வாழ்க்கை உத்தரவாதமின்மையால் எழும் கோவத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக திசை திருப்பி வன்முறையைத் தூண்டிவிட்டு சாதிவெறி அரசியல் செய்வதன் மூலம் அச்சாதிகளை சேர்ந்த ஒரு சிறு கும்பல் தனது மூலதனத்தையும் நில அதிகாரத்தை பாதுகாக்க முயல்கிறார்களே ஒழிய அவர்களின் அரசியலால் உழைக்கும் மக்களின் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டு உழைக்கும் தமிழ் மக்களாய் அணிதிரளுமாறு இம்மாநாட்டின் வாயிலாக அறைகூவல் விடுகிறோம்.