அன்று புத்தாண்டு, அலுவலகத்தில் ஆரவாரக் கொண்டாட்டம். புத்தாடைகள், கனிகள், பலகாரம் என கோலாகலமாக இருந்தது அந்த காலைப் பொழுது.

பரிமாற்றங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர் உங்களது இப்புதுவருட குறிக்கோள் என்னவென்று. அப்போது பெரிதாக அல்லது உறுதியாக எதையும் கூறிய ஞாபகம் இல்லை அவர்களுக்கு.

மதிய உணவு இடைவெளிக்கு பின்பு அலுவலகம் அடைக்கப்பட்டது. அந்த இளம் காதலர்கள், சிறு மோதலுக்கு பின் முடிவெடுத்தனர் இருசக்கர வாகனத்தில் ஒரு சிறு தூர பயணம் செல்ல.

பயணத்தில் மகிழ்ச்சி, புதிதாக செல்லும் பாதையென்பதால் சாலை ஒர காட்சியில் ஓர் ஈர்ப்பு, அலுவலுக வேலை பதற்றமின்றி  இருவருக்குமாக  கிடைத்த அந்த இனிய மாலைப்பொழுது  என்பதால்  ஒரு களிப்பு.

ஆங்காங்கே நிறுத்தி தேனீர் அருந்தினர்.

அவனது ஆர்வம் தனது ஸ்ப்ளெண்டர்  வாகனத்தை அவள் இயக்க வேண்டும் என்று. ஏற்கனவே இருந்த பயிற்சியின் நம்பிக்கையில் அவள் வாகனத்தை இயக்க கம்பீரமாக அவன் பின் சீட்டில்.

சீண்டலாக சொன்னான், பின் சீட்டில் அமர்ந்து பிரயாணம் செய்வதும் ஒரு சுகம்தான் என்று. காடு வெளியில் இருசக்கர வாகனம் சிறிது வேகம் குறைவாகவே சென்றது.

அந்த இளங்காற்றின் ஒரசல், கிராமத்து காட்டுப் பாதை, சுற்றிலும் அழகான காட்சி, விரிந்த காடுகள், மெதுவாக மேற்கு நோக்கி நகரும் சூரியன், மீண்டும் தனது கிராமங்களில் பயணிப்பது போலான ஒரு உணர்வு என அனைத்தும் அவர்களுக்கு அதிகப்படியான உற்சாகத்தை ஊட்டியது.

அது ஒரு அழகான புது அனுபவம் அவர்களுக்கு.

சிறிது நேர பயணத்திற்கு பின்பு சென்று அடைந்தனர் சின்ன திருப்பதி என்றழைக்கும் வெங்கடேஸ்வரா கோவிலுக்கு. அது பெங்களூரின் புறநகர்ப் பகுதி, மாலூர் தாலூக்காவிற்கு உட்பட்ட இடம்.

அங்கு பிராத்தனையை முடித்து கொண்டு மீண்டும் கிளம்பினர்.

அப்போதும் உணரவில்லை மாலை பொழுது கடந்து கொண்டிருக்கிறது, செல்லும் தூரமும் அதிகமென்று.

ஆம் காதலுக்கு கண்ணில்லை என்பார்களே.

ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷமும் , ஆர்வமும் மீண்டும் வண்டியை இயக்கி சென்றனர். முழுவதும் காட்டுப்பாதை என்பதால் தங்களையே மறந்து ரசனையில் ஆழ்ந்திருந்தது அவர்களது பயணம்.

அது  அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட நேரம் என்பதால் பேச மிச்சம் இருந்த பலதையும் உரையாடிக் கொண்டு சென்றனர். ஒரு நீண்ட பயணத்திற்கு பின்பு கோடிலிங்கேஸ்வரர் கோவிலை அடைந்தனர். அதுவே அவர்களது பயணத்தின் இலக்காக இருந்தது.

அதன் அழகும் பிரமிப்பும் அவர்களை மெய்மறக்கச் செய்தது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது  கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில்.

இங்கு உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் என்னும் வகையில், 108 அடி உயரத்தில் பிரமாண்ட சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. இதைத் தவிர்த்து, கோவில் முழுவதும் பல்வேறு அளவுகளில் சிறியதும், பெரியதுமாக, ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமாக சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இங்கு தான் 108அடி உயரமான உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் இருக்கிறது. இதன் காரணமாக ஆலயத்திற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

அவர்கள் சுற்றி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் ஆங்காங்கே மின்விளக்குகள் ஏற்றப்படுவதை  உணர்ந்தார்கள். அந்த கணத்தில்தான் மனதில் ஒரு திடுக்கிடும் பயம் வந்தது 

ஆம்!

அதுவரை மறந்து போன காலம், தூரம், பாதுகாப்பு என அனைத்தும் அக்கணம் பூதாகரமாக காட்சி கொண்டது. அந்த கிராமம் பெங்களூரில் இருந்து சுமார்  70 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் இருக்கும்.

அப்பொழுது மணி இரவு 7. எப்படியும் திரும்பி சென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார்கள். வேறுவழியும் தென்படவில்லை. அதுவரை இருந்த அந்த ரசனை உணர்வு அடையாளமின்றி சிதறிப் போனது  அவர்களிடம்.

ஒரு சிறு அதிர்ஷடம், அன்று பௌர்ணமியாக இருந்தது. வேகமாக வண்டியை இயக்கத் தொடங்கினார்கள்.

அழகாகத் தெரிந்த அந்த இயற்கை அழகு இப்பொழுது ஒரு அடர்ந்த பயம்கொள்ளும் காடாகத் தென்பட்டது அவர்களுக்கு. அவர்கள் வந்த பாதை பங்காரபட், லாக்கூர், சிக்கு திருப்பதி என்ற முழுநீள காட்டுப்பாதையாகும்.

அவர்களுக்கு இருந்த குழப்பநிலையில் தேசிய நெடுஞ்சாலை பாதையான கோலார் வழி மிகவும் நீண்டதும்  பாதுகாப்பு அற்றதும் என்ற உணர்வுதான் எழுந்தது.

ஆகவே வந்த வழியே சென்றுவிடலாம் என்று தீர்மானம்கொண்டு பயணத்தை  துவக்கினார்கள். வரும் வேளையில், காதலிலும் ரசனையிலும் மறைந்துபோன தூரம் இப்போது எதோ ஒரு இனம் தெரியாத உருவம் அவர்களை துரத்துவது போல் பயமூட்டியது.

நிலவின் வெளிச்சத்தைத் தவிர எந்த ஒரு மின்விளக்கின் வெளிச்சமும்  கண்ணெட்டும் தூரம் வரை தென்படவில்லை,வழி நெடுவிலும் மரங்களும்  அந்த காதலர்களும் தவிர எந்த ஒரு மனிதரின் நடமாட்டமும் இல்லை.

எப்படியோ பாதி தூரத்தை வந்தடைந்தனர். ஆனால் வண்டி நின்றது நான்கு ரோட்டின் நடுவில், அப்பொழுதுதான் அச்சம் உச்சமடைந்தது.

ஆம், அந்த நான்கு வழியில் எந்த வழி பெங்களூர் செல்லும் என்று தெறியவில்லை அவர்களுக்கு, வழி கேட்கவும் ஆளில்லை. 

அன்று கூகுல் மேப்பும்  வழக்கத்திற்கு வராத காலம். ஆம் வருடம் 2010.

சுற்றிலும் மிகப்பெரிய மரங்கள், போகும் வழியின் பாதை புலப்படவில்லை, சரியாக பகுதி தூரத்தை அடைந்த நிலை, திரும்பி போகவும் மனமில்லை.

அதுவரை இருந்த தைரியத்தில் ஒரு சிறு நடுக்கம். கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டு ஒரு பாதையை தேர்வு கொண்டனர்,சிறிது தூரம் வந்த பொழுது, எதேர்சையாக ஒரு இருசக்கர வாகனம் அவர்கள் எதிரே வந்தது.

அதில் இரு ஆண்கள், பார்வையில் கிராமத்தைச்  சேர்ந்தாற் போல் தென்பட்டனர்.

ஒருநிமிடம் வண்டியின் விளக்கை அணைத்துவிட்டு ஒதுங்கி நிற்கலாமா, இல்லை அவர்களை வேகமாக கடந்து சென்று விடலாமா, இல்லை நம்பிக்கையோடு நின்று வழிகேட்போமா என்று மனதில் திணறலும் நடுக்கமும்.

ஆம் ஆளில்லாத அந்த நடுக்காட்டில், இரவுவேளை காதலியோடு நின்று , அடையாளம் தெரியாதவர்களிடம் வழிகேட்க யாருக்கும் வரும் பயம்தானே. 

ஆனால் செல்லும் வழி சரிதான் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு  இல்லை.

குருட்டு தைரியம் என்று சொல்வது போல், அந்த ஆண்களை நிறுத்தி  அவர்களது பாதை சரிதானா என்று உறுதி கொண்டனர்.

நேரம் இரவு 8 யை கடந்து விட்டது. மீண்டும் சோதனை, மறுபடியும் ஒரு முச்சந்தியில் வந்து சேர்ந்தனர். இப்பொழுது அந்த ஆளில்லாத காட்டில் ஒரு ஆட்டோ மட்டும் நின்று கொண்டிருந்தது.

பீதியின்  உச்சத்திற்கு சென்ற அவர்கள் வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டுனரிடம் வழி கேட்டனர், அவன் பிதற்றிக் கொண்டே வழி சொன்னான். புரிந்து கொண்டார்கள் அவன் குடி போதையில் இருப்பதை, அங்கு அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவர்களும் சுற்றும் முற்றி பார்த்தனர். யாருமில்லாத இந்த இடத்தில எதற்காக இந்த ஆட்டோ யார் வந்திருப்பார்கள், எங்கே அவர்கள் என்று மனதில் அச்சம் பெருகியது.

இருமனத்தோடும் குழப்பத்தோடும் அவன் கூறிய பாதையில் சென்றார்கள்  

அது பிரதான சாலையில் இருந்து உள்ளே செல்லும் ஒரு  ஒற்றை சாலையாக இருந்தது.

செல்வதா வேண்டாமா என்ற தடுமாற்றம், ஆனால் நேரம் கடந்து கொண்டே இருக்கிறது, மீண்டும் ஒரு தைரியத்தில் அந்த ஒற்றைச் சாலையில் பயணித்தனர்.

அப்போது அங்கு தென்பட்டது ஒரு காட்சி... நீர்நிறைந்த பெரிய அகலமான குளம், அதன் அக்கறை முழுவதும் உயர்ந்த மரங்கள் அடர்த்தியாக நிற்கிறது, பௌர்ணமி நிலவின் வெளிச்சம் நீரின் மீது படர்ந்து கிடந்தது.

சலனமின்றி வெள்ளி தட்டுபோல் நிலவின் பிம்பம் நீரில். அதற்கு மீண்டும் அழகு சேர்ப்பது போல் அந்த மௌனமான இரவு வேளை.

கண்கொள்ளா அந்த அழகும் கரைபுரண்டு ஓடும் பீதியும்

ஒரே காட்சியில்! ஒரே கணத்தில்! ஒரே சூழலில்!

ஆம் அவர்கள் மாலையில் செல்லும்போது, வழியில் எந்த ஒரு குளமும் இருக்கவில்லை, ஸ்தம்பித்து போனார்கள் ஒருநிமிடம்.

அந்த பௌர்ணமி வெளிச்சம் அவர்களுக்கு மட்டும் இருளாக இருந்தது,

மனது மிகவேகமாக துடிக்க தொடங்கியது.

எதற்கு அந்த குடி போதையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர் இந்த ஒற்றை சாலையை கைகாட்டினான். அது அவன் நமக்கு போட்ட சதியோ? 

எப்படி பார்த்தாலும், மீண்டும் அவர்கள் அந்த ஒற்றை பாதையில்தான் திரும்பி வரவேண்டும்.

வரும் நேரம் அவன் அவனது கூட்டாளிகளோடு காத்திருப்பானோ?

இல்லை அவர்கள் நம்மை பின் தொடர்ந்து வந்திருப்பார்களோ?

அங்கேயே நிற்கவும் மனமில்லை மீண்டும் அந்த பாதையில் வெளியேறவும் நடுக்கம்.

மெதுவாக வண்டியை இயக்கி ஒருவழியாக பிரதான சாலையை அடைந்தனர்.

வேறு வழியில்லை அதே ஆட்டோ ஓட்டுனரை கடந்தே அடுத்த பாதையை அடையவேண்டும், இருக்க பிடித்து கொண்டு வேகமாக அந்த முச்சந்தியை கடந்து சரியான பாதையில் வந்து சேர்ந்தனர். 

இன்னும் தூரமும் பயமும் துரத்திக் கொண்டே வந்தது அவர்களை, எப்படியோ இரவு 9 மணியளவில் மீண்டும் வந்து அடைந்தனர் சின்ன திருப்பதியை.

அப்போதுதான்  மூச்சு காற்றில் சிறிது சூடு தளர்ந்தது. மீண்டும் தைரியத்தையும் நம்பிக்கையும் வளர்த்துக் கொண்டு சிறிது வேகமாக வண்டியை ஓட்டி வந்தனர்.

ஒரு வழியாக பெங்களூர் தெரு விளக்குகளின் வெளிச்சம் கண்ணில் தென்பட்டது, மீண்டும் விடுமா என்றார் போல்... அந்த நொடியில் , என்ன கோபமோ வண்டிக்கு, என்ஜின் சீஸ் ஆகி நின்று போனது.

ஆனாலும் ஒரு நிம்மதி பெங்களூர் சர்ஜாபுர மெயின் ரோட்டை அடைந்திருந்தனர், அங்கிருந்து வந்து சேரவேண்டும் ராகி குட கோவிலுக்கு (ஜெயநகர் பகுதி).

அவர்களது விடுதி அங்குதான் இருந்தது. கடவுளே வந்தார் போல் மீண்டும் ஒரு ஆட்டோ, நேரமும் சிரமும் புரிந்து, சிறுது தொகையை அதிகமாக வாங்கியபோதும், பொறுமையாக அழைத்து வந்து சேர்த்தார் அந்த ஆட்டோ  ஓட்டுநர். 

ஆம், ஆட்டோவில் அவள் அமர்ந்து கொள்ள, ஆட்டோவின் உந்துதலில் அவன்  வண்டியை தள்ளி வந்து சேர்ந்தனர். அன்றைய பகலில் கேலியாகவும் விளையாட்டாகவும் கேட்டுக் கொண்டிருந்த போது வராத  புது வருட குறிக்கோள் அப்போது வந்தது மிக உறுதியாக அவர்களுக்கு.

அது அன்றே வேரூன்றி நின்றது அவர்களது மனதிலும்.

ஆம்! இனி ஒரு பொழுதும் நேரம் காலம் கணக்கிடாமல் பயணம் மேற்கொள்ள கூடாது, பாதுகாப்பற்ற சாலைகளை தேர்ந்து எடுக்கக் கூடாது, ஒருபொழுதும் இப்படி ஒரு தவறான பிரயாண முடிவுகளும் எடுத்திடக் கூடாது என்று.

கடவுளுக்கு நன்றி சொல்லி வீடு சென்றனர். அன்று கடவுளின் ஆசிர்வாதமும் பரிவும் இல்லையென்றால் நினைத்துக் கூட பார்க்க முடியாத வேதனைகளுக்கு உள்ளாகியிருப்பர்.

வாழ்வில் மறக்கமுடியாத அனுபவங்கள் கற்றுக் கொடுக்கும் பாடம் அழிவில்லா ஞானம்!!!

- கிருஷ்ண பிரியா ம