துக்கப் படுவதும் துயரப் படுவதும் தான்
எனது நாட்கள்
கவலைப்படுவதும் கசிந்துருகுவதும் தான்
எனது வேலை
நாளைக்கான தீர்மானத்தை
செய்தபடியே இருக்க
குடம் குடமாய் கண்ணீர் குடிப்பது தான்
எனது இதயம்
நேற்றைய வாழ்வு அழுந்த அழுந்த
குருதியில் நிறைவது தான்
எனது எழுதுகோல்
நிம்மதியின்மையில் கண்டடையும்
கானல் புறாக்களை
பின் தொடர்வதில் கிடைப்பதுதான்
எனது ஆக்கங்கள்
தூங்கா இரவுகளின் வழியே
நட்சத்திரம் பறிக்க கிடைத்த வாய்ப்புதான்
இந்த என் அரூபம்...!

- கவிஜி