நீராம்பல் மொட்டு வெடிக்கும்
நன்னீர் குளத்தில்
கோலப் பூச்சிகள்
நம் பெயரை
இணைத்துக் கோலமிடுகின்றன.

நீ சூடிய
மல்லிகை வாசனை பருகி
நெஞ்சைத் தழுவித் தளும்புது
கார்காலப் பகல்.

அயிரை, கெண்டைகளைக்
கிள்ளிப் போகும்
மழைக்கால வெயிலுக்கு
உன் விழியின் சாயல்,
அல்லித் தண்டுகளைப்
பற்றிக் கிடக்கும் தவளைகளாய்
உன்னைப் பற்றிக்
குளிரிலாடுது மேகங்கள்.
காதிலாடும் ஜிமிக்கை போல
காதலாடும் என் வானிலையை
ஆட்டம் காணச் செய்தது நீதான்.

- சதீஷ் குமரன்