வெறுமையாலும் வெயிலாலும்
நிரம்பியிருக்கிறது வீதி.
தொற்றின் பயமின்றி
நாசி, வாய் திறந்திருக்க
வாழைத்தண்டு, பசலைக்கீரை விற்கும்
முத்தம்மாளின் முதுகுரல்.
செவிகள் பழகி விட்டிருந்த
ஆம்புலன்ஸின் சைரன் சத்தம்.
எப்போதாவது கேட்கும்
இரு சக்கர வாகன இரைச்சல்.
தவிட்டுக்குருவிகளின்
கலவைக்கீச்சொலிகள்.
அச்சமூட்டும் அமைதியைக்கிழித்து
ஆசுவாசமளிக்கும் சத்தங்கள்.
தொடர் ஆழியலைகளாய்
மனக்கரையில் வந்து மோதும்
மரணச்செய்திகள்.
இதுவும் கடந்து போகும்.
கடக்க முடியாப்பேராறாய்
கணக்கற்ற மனரணங்கள்

- பா.சேதுமாதவன்