வெளிச்சம் எனக்கு
அந்நியமானது
என் கண்கள்
கட்டப்பட்டிருக்கலாம்....!
அல்லது,
சூரியனை ஆக்கிரமித்தவன்
சுடர்களைத்
தடுத்திருக்கலாம்.
இது
பருவகாலமாய்
இருக்கக் கூடும்.
நிஷப்த இரவுகளை
ஆக்கிரமித்த
இரைச்சல்கள்
பறைகின்றன
அருவருப்பான
சில ராகங்களில்
எனக்கான
வசிய பாடலை
விட்டில்களும் தவளைகளும்
இசைக்கின்றன
அந்த
வசியப் பாடலின் ஊடே
என் ரசிப்பை
அடக்கி
ஓலமிடுகிறது ஆந்தை
தன்
வட்ட விழிகளை
எனக்குக் காட்டி
சூரியனும் சந்திரனும்
இதுதான் என்கிறது
சில மின்மினிகள்
இருளுக்குள் ஒழிகின்றன
அவைகளுக்கு
வெளிச்சத்தையும் தெரியும்
ஆந்தையையும் தெரியும்
முதல் வெளிச்சத்தை
ஆந்தையை
எனக்குக் காட்டியதால்
ஆந்தையின்
கால்களில்தான்
இப்போது இருக்கிறேன்.
- சுந்தர் நிதர்சன்