தமிழில் பல அறிவியல் புனைகதைகள் வெளிவந்திருந்தாலும், அவை பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவே எழுதப்பட்டவை. ஆனால் பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமல்லாமல் எதிர்காலம் குறித்த சமூக பொறுப்புணர்வு மிக்க கற்பனைகளையும் கலந்து அறிவியல் புனைகதைகளை படைத்து வருபவர் அமெரிக்க எழுத்தாளான நான்சி க்ரெஸ். மனித மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்குவதன் ஆபத்துகள் குறித்து 2002ம் ஆண்டில் அவர் எழுதி கிஷிமிவிளிக்ஷி’ஷி இதழில் வெளிவந்த கதை இது. PATENT INFRINGEMENT என்ற இந்த கதையின் பாத்திரங்கள் நேரில் பேசாமல், கடிதங்கள் மூலம் பேசிக்கொள்வது மற்றும் பத்திரிகை செய்திகள் மூலமே இந்தக் கதை கூறப்பட்டுள்ளது. இன்றைக்கும் பொருந்தக்கூடிய அமெரிக்க சூழலில் அமைந்த மூலக்கதை, இந்திய சூழலுக்கேற்ப சற்றே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

நியூடெல்லி போஸ்ட்

மர்ம விஷக்காய்ச்சலுக்குப் புதிய மருந்து கண்டுபிடிப்பு !

தீவிரவாதிகளுக்கு போட்டியாக நாட்டை அச்சுறுத்தி வரும் ஷாமிநாத் விஷக்காய்ச்சலுக்கு “ஹாலிடெக்ஸ்” என்ற புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிலையபிள் பார்மா நிறுவனத்தினர் இந்த புதிய மரபணு மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் சுமார் 3 கோடிப்பேர் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் மூலம் பரவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், உடல்வலியுடன் பயங்கரமான காய்ச்சலும் ஏற்படும். இந்த நோய் ஒரு முறை வந்து சென்ற பின்னரும், அந்த வைரஸ் உடலில் தங்கி மீண்டும், மீண்டும் விஷக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் பிரபல மரபணு நிபுணரான டாக்டர் ஷாமிநாத் இந்த நோயை உருவாக்கும் வைரஸை கண்டுபிடித்துள்ளார்.

ஷாமிநாத் வைரஸின் பாதிப்பால் நாடு முழுவதும் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  ஹாலிடெக்ஸ் மருந்து, நோயாளிகளின் உடலில் இந்த வைரஸை செயலிழக்க செய்வதுடன், மாற்று மரபணுக்கள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது. மீண்டும் காய்ச்சல் வராமலும் பாதுகாக்கிறது. ரிலையபிள் பார்மா நிறுவனம், இரண்டு வருட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது. நாடு முழுவதும் ஹாலிடெக்ஸ் பரவலான வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கருப்பசாமி, 538, மகிழ்ச்சி தெரு, திருவண்ணாமலை, தமிழ்நாடு

அன்புள்ள ரிலையபிள் பார்மா நிர்வாக இயக்குனர் அவர்களுக்கு,

உங்கள் நிறுவனம் ஷாமிநாத் விஷக் காய்ச்சலுக்கு ஹாலிடெக்ஸ் என்ற மரபணு சிகிச்சை மருந்தை அறிமுகப் படுத்தியிருப்பதாக டெலிவிஷன் மூலம் அறிந்தேன். இந்த மருந்தில் நீங்கள் உபயோகித்திருக்கும் மரபணுக்கள் என்னுடையவை என்று நம்புகிறேன்.

இரண்டு வருடம் முன்பு - மே 5ம் தேதி - என்னுடைய குடும்ப டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்த போது என்னைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் ஷாமிநாத் காய்ச்சல் பரவியிருக்கிறது என்று தெரிவித்தேன். (எங்கள் அலுவலகத்தின் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் முழுவதும் காய்ச்சல். என் மனைவி, குழந்தைகள், மாமியார், மைத்துனி எல்லோரும் படுத்து விட்டார்கள். எங்கள் வீட்டு நாய்க்குக் கூட இந்த வைரஸ் தாக்கியிருப்பதாக சந்தேகம் - ஆனால் கால்நடை டாக்டர்தான் ஒத்துக் கொள்ளவில்லை.)

இத்தனைக்கு நடுவிலும் எனக்கு மட்டும் ஜுரம் வரவில்லை. என்னுடைய மரபணுக்களில் ஏதோ தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக என் டாக்டர் சந்தேகித்தார். இந்த காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உங்கள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த எனது டாக்டர், என்னை உடனே உங்கள் ஆராய்ச்சி நிலையத்துக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார். அங்கே என் ரத்தம், திசு மாதிரிகள் எடுக்கப்பட்டன. என்னுடைய மரபணுக்களை எதற்காவது பயன்படுத்தினால் தகவல் சொல்வதாக உங்கள் விஞ்ஞானிகள் கூறினார்கள். ஆனால் இன்றுவரை ஒரு தகவலும் வரவில்லை. இதற்கிடையில் இந்த டெலிவிஷன் செய்தியைப் பார்த்தேன்.

ஆகவே உங்கள் புதிய மருந்தை கண்டுபிடிப்பதில் என்னுடைய மரபணுக்கள் எப்படிப் பயன் பட்டிருக்கின்றன என்பதை உங்கள் அலுவலக ஆவணங்களை சரிபார்க்குமாறும், இந்த மருந்து மூலம் கிடைக்கும் லாபத்தில் எனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்கு எவ்வளவு என்பதையும் தயவு செய்து தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.

தங்கள் உண்மையுள்ள,

கருப்பசாமி

ரிலையபிள் பார்மா கம்பெனி

அனுப்புநர்: சுனில் வம்பானி, மேலாண்மை இயக்குனர்

பெறுநர் : ராமானுஜம், தலைமை சட்ட ஆலோசகர், சட்டப்பிரிவு

பொருள் : கடிதம் (இணைப்பு)

ராமானுஜ்,

யார் இவன், கிறுக்கனா ? இதில் ஏதும் பிரச்சினை வருமா ?

- சுனில்

ரிலையபிள் பார்மா கம்பெனி

அனுப்புநர்: ராமானுஜம், சட்டப்பிரிவு

பெறுநர் : சுனில் வம்பானி, மேலாண்மை இயக்குனர்

பொருள் : மரபணு உரிமை - கருப்பசாமி கடிதம்

சுனில்,

ஆராய்ச்சிப் பிரிவில் விசாரித்து விட்டேன்; துரதிர்ஷ்டவசமாக, இந்த கருப்பசாமி மரபணுக்களையும், ரத்தத்தையும் நமது ஆய்வகத்திற்கு கொடுத்துத் தொலைத்திருக்கிறான். நாமும் அவற்றை வைத்துத்தான் ஹாலிடெக்ஸ் மருந்தை தயாரித்திருக்கிறோம். அதற்கு எல்லா ஆதாரமும் இருக்கிறது. அதைவிட சிக்கல் என்னவென்றால், மரபணு மாதிரி தருபவர்களின் உரிமைகளை மறுக்கும் சட்டம் வரும் முன்பே அவன் மரபணு தானம் செய்திருக்கிறான்.

எப்படியிருந்தாலும்,  இந்த ஆளுக்கு நமது லாபத்தில் சட்டப்படி எந்த உரிமையும் கிடையாது என்பதுதான் என் கருத்து. மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் மரபணுக்களின் காப்புரிமை எல்லாம் கம்பெனிக்கே சொந்தம் என்பதற்கு பல முன்மாதிரி தீர்ப்புகள் வந்திருக்கின்றன. இந்தக் கடிதத்தை வைத்துப் பார்த்தால் கருப்பசாமி அப்படி ஒன்றும் விவரமான ஆளாகவும் தெரியவில்லை. அவன் இன்னும் வக்கீல் யாரையும் பார்க்கவில்லை என்பதும் நிச்சயம்.

ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் சில்லறையை வீசியெறிந்து அவனை வாயை மூடிக் கொண்டிருக்கச் சொல்லலாம். ஆனால் இந்த மாதிரி பேராசைக்காரர்களுக்கெல்லாம் காசு தருவதே தப்பு. என்னைக் கேட்டால் இவன் வீட்டிற்கு ஒரு ஆட்டோவை அனுப்பி மிரட்டினாலே போதும். பயத்தில் டவுசரை கழட்டாமலேயை ஒன் பாத்ரூம் போய்விட்டு, அத்துடன் அடங்கிவிடுவான்.

என்ன சொல்கிறீர்கள் ?

- ராமானுஜ்

ரிலையபிள் பார்மா கம்பெனி

அனுப்புநர்: சுனில் வம்பானி, மேலாண்மை இயக்குனர்

பெறுநர் : ராமானுஜம், சட்டப்பிரிவு

பொருள் : கருப்பசாமி விவகாரம்.

வெரிகுட். சீக்கிரம் அதைச் செய்யுங்கள்!

- சுனில்

அரங்க. ராமானுஜம், தலைமை சட்ட ஆலோசகர், ரிலையபிள் பார்மா கம்பெனி

அன்புள்ள திரு கருப்பசாமி,

எங்கள் கம்பெனியால் காப்புரிமை பெறப்பட்டுள்ள ஹாலிடெக்ஸ் மருந்தைப் பற்றிய உங்கள் கடிதம், என் பார்வைக்குக் கொண்டுவரப் பட்டது. ஹாலிடெக்ஸின்மீது உங்களுக்குச் சட்டபூர்வமான எந்த உரிமையும் இல்லை என்பதை இதன்மூலம் அறியவும். (தங்கள் தகவலுக்காக, சில சட்ட முன்னுதாரணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.) இக்கடிதம் பெற்ற பிறகும் தங்கள் புகார்களை உடனே விலக்கிக் கொள்ளவும். இல்லையென்றால், தாங்கள் என் கட்சிக்காரருக்கு மன உளைச்சல் தருவதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியவும்.

உண்மையுள்ள,

அரங்க. ராமானுஜம்

கருப்பசாமி, 538, மகிழ்ச்சி தெரு, திருவண்ணாமலை, தமிழ்நாடு

அன்புள்ள திரு ராமானுஜம்,

இது கொஞ்சம் கூட நியாயமல்ல. அத்தனையும் என்னுடைய மரபணுக்கள்!! நான் ஒரு வக்கீலிடம் போகப் போகிறேன். விரைவில் அவர் உங்களிடம் பேசுவார்.

- கருப்பசாமி

மல்லிகா வாசுதேவன், வழக்கறிஞர்

அன்புள்ள திரு ராமானுஜம்,

என் கட்சிக்காரர் திரு. கருப்பசாமி அவர்களின் சார்பில் நான் இதை எழுதுகிறேன். அவருடைய மரபணுக்களை அடிப்படையாக வைத்து நீங்கள் ஹாலிடெக்ஸ் என்ற மருந்தைத் தயாரித்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்கள் கம்பெனிக்கு கோடிக் கணக்கான  ரூபாய்களைப் பெற்றுத் தரக்கூடிய இந்த மருந்தில் என் கட்சிக்காரரின் கணிசமான பங்களிப்பை ஒப்புக் கொண்டு, அவருக்குச் சேரவேண்டிய தொகையை தருவதே முறையாக இருக்கும் என்று நம்புகிறோம். இதைப் பற்றி விரிவாக நேரில் பேசுவதற்கு விரைவில் ஒரு நேரம் ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையுள்ள,

மல்லிகா வாசுதேவன்

அனுப்புநர்: சுனில் வம்பானி

பெறுநர் : ராமானுஜன், சட்டப்பிரிவு

பொருள் : கருப்பசாமி விவகாரம்

ராமானுஜ்,

நாசமாய்ப் போச்சு! இந்த மாதிரி ஐந்தாம் படை வேலை செய்யும் மட்டிப் பயல்களைக் கண்டாலே எனக்கு அடிமடியில் எரிகிறது. ஞாயிற்றுக் கிழமையன்று கோல்ப் விளையாடும் போது பத்ரி ஒரு விஷயம் சொன்னான். (பத்ரியைத் தெரியுமல்லவா உனக்கு ? நம் போட்டிக் கம்பெனிகளைப் பற்றித் தகவல் கசியவிடுவானே, அவன்தான்). லோட்டஸ் பிராண்ட் கம்பெனிக்காரர்கள்தான் நம்மை ஒழித்துக் கட்டுவதற்காக இந்த வக்கீல் நோட்டீஸ் அயோக்கியனைத் தூண்டிவிடுவதாக பத்ரி நினைக்கிறான்.

அந்த அப்பன் பேர் தெரியாத ராஸ்கல் - லோட்டஸ்காரனும் இதே வைரஸ§க்கு மருந்து தயாரிக்கப் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். நாம் முந்திக்கொண்டுவிட்டோமே என்று அவனுக்கு வயிற்றெரிச்சல்! நிச்சயம் அவன்தான் இதெல்லாம் செய்கிறான்.

இதில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவன் தாராளமாகக் கேஸ் போடட்டும். கோர்ட்டுக்கு வரட்டும். பார்த்துவிடலாம் ஒரு கை!

- சுனில்

அனுப்புநர்: ராமானுஜம்

பெறுநர் : சுனில் வம்பானி

பொருள் : மரபணு உரிமை - கருப்பசாமி

சுனில்,

அதை விட நல்ல ஐடியா : நாமே முந்திக்கொண்டு கருப்பசாமி மீது கேஸ் போட்டால் என்ன ?.. வைரஸ் தடுப்பு மரபணுக்களுக்கான பேடண்ட் நம்மிடம் இருக்கும்போது அவன் எப்படி அந்த மரபணுக்களைச் சுமந்துகொண்டு திரியலாம் ? ஹாலிடெக்ஸை வாங்கிச் சாப்பிட்ட நம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் இந்த மரபணுக்கள் இருக்கலாம். எனவே அவன் நம்முடைய மருந்தைப் போலவே வேறு எதையோ கள்ளச்சந்தையில் வாங்கித் தின்றிருக்கிறான் என்று வாதாட முடியும்.

இதனால் பல விதத்தில் லாபம் : கருப்பசாமியின் வக்கீல் நோட்டீசுக்குப் பதிலடி தருகிற மாதிரியும் இருக்கும்; போட்டி கம்பெனிகளின் காற்றைப் பிடுங்கிவிட்ட மாதிரியும் இருக்கும். நம் ஹாலிடெக்ஸ§க்கு இன்னும் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும் (பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்றாலும்). நம்மைப் பார்த்துக் காப்பியடித்துத் திருட்டு மருந்து தயாரிக்க நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையும்.

அப்புறம் இன்னொரு விஷயம் : நம் ஆராய்ச்சிப் பிரிவில் மறுபடியும் நன்றாக விசாரித்தேன். கருப்பசாமி என்று யாரும் நம்மிடம் வந்ததாகவோ, மரபணு சாம்பிள் கொடுத்ததாகவோ எந்த ரெக்கார்டும் கிடையாது.

- ராமானுஜ்

அனுப்புநர்: சுனில் வம்பானி

பெறுநர் : ராமானுஜ், சட்டப்பிரிவு

பொருள் : கருப்பசாமி

ராமானுஜ்,

என்ன மூளைய்யா உனக்கு!.. செய், ராஜா!.

ஆமாம், கேஸை விசாரிக்க யாராவது நல்ல ஜட்ஜ் வருகிறமாதிரி ஏற்பாடு பண்ண முடியுமா ? நம்மைப்போன்ற பிஸினஸ்மேன்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட ஒரு நீதிபதி கிடைத்தால் நன்றாக இருக்கும்.

- சுனில்

நியூடெல்லி டைம்ஸ்

ஹாலிடெக்ஸ் கள்ளச் சந்தை வழக்கு இன்று ஆரம்பம்

சட்ட விரோதமாக மரபணு மருந்துகள் சாப்பிட்டதாகக் கூறி கருப்பசாமி மீது தொடுக்கப்பட்ட வழக்கு இன்று மும்பை கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மருந்து தயாரிப்பாளர்களான ரிலையபிள் பார்மா கம்பெனியினர் தொடுத்துள்ள இந்த வழக்கு சில மாதங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப் பட்ட கருப்பசாமி, ரிலையபிள் பார்மா கம்பெனியின் தயாரிப்பான ஹாலிடெக்ஸ் மருந்தை அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரிடம் வாங்காமல், கள்ளச்சந்தையில் வாங்கி பயன்படுத்தியுள்ளார். இதனால் தமது காப்புரிமை மீறப்பட்டு்ள்ளதாக ரிலையபிள் பார்மா நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது மரபணு காப்புரிமை, உயிரியல் பொருள்களின் மீதான உரிமை போன்றவற்றின் சட்ட நுணுக்கங்களைப் பற்றிய மிக முக்கியமான தீர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மரபணு பேடண்ட்டுகளை ரத்து செய்யக் கோரும் சில தன்னார்வ அமைப்புகள் இந்த வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்று கூறி போராடி வருகின்றன.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர் கமலதாசன், கடந்த காலத்தில் பெரிய மருந்துக் கம்பெனிகளுக்கு சாதகமான பல தீர்ப்புக்களை வழங்கியவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மல்லிகா வாசுதேவன், வழக்கறிஞர்

அன்புள்ள திரு ராமானுஜ்

என் கட்சிக்காரர் திரு.கருப்பசாமி தற்போதும் தங்கள் கம்பெனியுடன் சமாதான உடன்படிக்கை காணத் தயாராக உள்ளார் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

உண்மையுள்ள,

மல்லிகா வாசுதேவன்

அரங்க. ராமானுஜம், தலைமை சட்ட ஆலோசகர், ரிலையபிள் பார்மா கம்பெனி

மகளே மல்லிகா,

நீ எந்தக் காலேஜில் சட்டம் படித்தாய் ? எப்படியும் நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோம். எனவே, தோற்கிற கட்சியிடம் பேச்சுவார்த்தைக்கு என்ன இருக்கிறது ? இதுகூடவா உனக்கு சட்டக்கல்லூரியில் சொல்லித்தரவில்லை. அருமைப் பெண்ணே!  அடுத்த கேஸாவது உருப்படியாக அமைய வாழ்த்துக்கள்!!

ஆசியுடன்,

அரங்க. ராமானுஜம்

நியூடெல்லி டைம்ஸ்

கருப்பசாமிக்கு சிறை! மரபணு திருட்டு வழக்கில் தீர்ப்பு!

ரிலையபிள் பார்மா கம்பெனி உரிமம் பெற்றுள்ள மரபணுக்களைத் திருடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் கருப்பசாமி குற்றவாளிதான் என்று நீதிபதி கமலதாசன் இன்று தீர்ப்பளித்தார். ஹாலிடெக்ஸ் மருந்துக்கு காப்புரிமை பெற்றுள்ள ரிலையபிள் பார்மா கம்பெனியிடம் உரிய அனுமதி பெறாமல் ஷாமிநாத் விஷக்காய்ச்சல் நோயை எதிர்க்கும் மரபணுக்களை உடலில் சுமந்துகொண்டு அலைந்த குற்றத்திற்காக கருப்பசாமிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்த நீதியரசர் கமலதாசன், நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இதுபோன்ற குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

அனுப்புநர்: சுனில் வம்பானி

பெறுநர் : ராமானுஜ், சட்டப்பிரிவு

ராமானுஜ்,

நான்தான் அப்போதே சொன்னேனே, உனக்கு உடம்பெல்லாம் மூளை! என்ன மாதிரி விளம்பரம் கிடைத்திருக்கிறது நமக்கு, பைசா செலவில்லாமல்... நீ ஒரு மாமேதை !

உனக்காகவே ஒரு சின்ன வெற்றி விழா ஏற்பாடு செய்திருக்கிறேன் : பெண்டாட்டியை அழைத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ட்ரிப் மாலத் தீவுக்குப் போய்விட்டு வாயேன்; கம்பெனி செலவில்.

- சுனில்

அனுப்புநர்: சுனில் வம்பானி

பெறுநர் : ராமானுஜம், சட்டப்பிரிவு

ராமானுஜ்,

அந்தப்பரதேசிப் பயல் ஜெயிலுக்குப் போனதுடன் நமக்கு எல்லா பப்ளிஸிடியும் அடங்கிவிட்டது. எனக்கு ஒரு புது ஐடியா தோன்றியது - சரிவருமா பார் : என் பெண்தான் சொல்லிக் கொண்டிருந்தாள் - ஏதோ பத்திரிகையில் படித்தாளாம், அந்த புரொபசர் ஷாமிநாத் இருக்கிறார் இல்லையா ? அவர் சில மரபணுக்களை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து கடைசியில் வைரஸைக் கண்டுபிடித்தார். அதே வைரஸ் மரபணுக்களைத்தான் நாம் கருப்பசாமியிடமிருந்து எடுத்த மரபணுக்களுடன் சேர்த்து மருந்து தயாரித்தோம்.

எனக்கு இந்த விஞ்ஞான இழவெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை - ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது - நாம் பேடண்ட் வாங்கியிருக்கிற ஜீன்கள்தான் ஷாமிநாத் விஷக்காய்ச்சலை சரியாக்குகிறது. எனவே நமக்கு சொந்தமான மரபணுக்களை வைத்துத்தான் அந்த மனிதர் ஆராய்ச்சி  செய்தார். கடைசியில் அந்த நோய்க்கு அவர் பெயரை வைக்குமளவுக்கு ஆகிவிட்டது. நம்மைவிட அவருக்கு அதிகமான புகழ் போய்விட்டது.

ஆகவே நாம் புரொபசர் ஷாமிநாத் மீதும் ஒரு கேஸ் போட்டால் என்ன ? . . . அதன்மூலம் பரபரப்பான விளம்பரமும் கிடைக்கும். இந்த மருந்து மீதான நமது பேடன்ட் உரிமையை உறுதி செய்தது போலவும் ஆகும்.

-வழக்கறிஞர் சுந்தரராஜன்

(ஆங்கில மூலம்: நான்சி க்ரெஸ்)

Pin It