அறிமுகம்

பாரி 1932-இல் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காப்பியங்களை ஆராய்ந்த பாரிக்கு அவற்றில் காணப்படும் சில அமைப்புகள் வாய்மொழி மரபுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஐயம்.

இந்த ஐயத்தைத் தீர்க்கும் முகமாக அமைந்ததே வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடாகும். இந்த ஐயத்தினைத் தெளிவுப்படுத்தும் முகமாக, பாரி யூக்கோஸ்லோவிய நாட்டில் களப்பணிச் செய்து வாய்மொழிக் காப்பிய பாடல்களைச் சேகரிக்கிறார்.

அவரது மாணக்கர் லார்டு தொடர்ந்து களப்பணிச் செய்து ஆய்வை முடிக்கின்றார். இவ்விருவரும் உருவாக்கிய ‘கோட்பாடு’ என்ற அடிப்படையில் ‘பாரி–லார்டு கோட்பாடு’ என்ற பெயரும் ஏற்பட்டது. இந்தக் கோட்பாட்டில் வாய்பாடு என்பது மையமாக அமைகிறது. இது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

வாய்பாடுகள் (The Formula)

வாய்பாடு என்பதற்குப் பாரி ‘இன்றியமையாத கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரே விதமான யாப்பு அமைப்பினைக் கொண்டு மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படும் சில சொற்களின் கூட்டம்’ என்கிறார் (Formula is Group or words which is regularly employed ender the same metrical conditions to express a given essential idea Parry 1960: 30).

‘சி.எம். பௌரா வாய்பாடு’ என்பது எவ்வித மாற்றமுமின்றி ஒரு குறிப்பிட்ட சூழலில் தேவைப்படும் போதெல்லாம் உறுதுணையாக வந்து அமைகின்றன எனவும், இவை பெயர், பெயரடைகளின் சேர்க்கைகளாக ஓர் ஆள் (அ) பொருளுடன் தொடர்புபடுத்தப் படுவதும், அவை அடுத்தடுத்த தொடர்கள் (fixed Epithet) எனவும் மீண்டும் வரக்கூடிய தொடர்களை வாய்பாட்டுத் தன்மைபெற்று வரியின் முன் அரையடி, பின் அரையடி, முழுவரி (அ) தொகுதி தொடர் வாய்பாடாக வெளிப்படுவதாக விளக்கம் அளிக்கிறார்.

தமிழகச் சூழலில் கைலாசபதி ஒப்பியல் முறையப்படி முதன்முதலில் சங்க இலக்கியத்தின் மீது வாய்பாடுகளைப் பொருத்தி விரிவான ஆய்வை மேற்கொண்டவர். இவற்றிலிருந்து வாய்பாடு என்பது ஒரு காப்பியத்தில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய யாப்பில் கட்டமைப்பு என்பதை அறியலாம். இந்த வாய்பாட்டில் அடைமொழிகளே மிகுதியாகப் பங்காற்றுகின்றன.

அடைமொழிகள் (Epithets)

அடைமொழிகளாவது தனிநபரின் பண்பினை விளக்குவதாகவும், உண்மைநிலையை அறிவதற்கும், கதையோட்டத்தில் கதை கருவினை அடையாளப்படுத்துவதற்கும், வீரத்திரச் செயல்களை அறிவதற்கும், தலைவர்களின் தனிப்பட்ட சிறப்பினைத் தெரிந்துகொள்வதற்கும் பயன்படுகின்றன.

இத்தகைய அடைமொழியே வாய்பாட்டுக் கூறுகளுள் பெரும்பகுதியாகச் செயல்படுகின்றன. அதனாலேயே அடைமொழி ஆளுமையையே பாரி தனது ஆய்வின் பிரதானமாக விளக்கிச் செல்கிறார்.

ஹோமரின் அடைமொழியை நிலையான (அ) அணிநய அடைமொழிகள் (Fixed Epithets or ornamental Epithets) குறிப்பார்ந்த அடைமொழிகள் (Particularized Epithets) என இருவகையாகப் பாரி பிரித்துக் கூறுகிறார்.

நிலையான அடைமொழிகளைப் தனித்தன்மையான அடைமொழிகள், (Distrinctive Epithets) பொதுமைநிலை அடைமொழிகள் (Generic Epithets) என அடைமொழிகள் குறித்த இவ்விளக்கத்தோடு பெயரடை மொழிகளைக் குறித்து கம்பராமாயணத்தில் கீழ்வருமாறு காண்போம்.

பெயரடைமொழி வாய்பாடுகள்

1928-இல் வெளியிட்ட “ஹோமரின் மரபார்ந்த அடைமொழிகள்” (The traditional Epithet in Homer) என்ற ஆய்வுக்கட்டுரையில் விவரித்துள்ளார். அதில் அவர் பொதுமை அடைமொழிகள் தனிப்பெயர்களுடன் சேர்ந்து வருவதைப் பின்வரும் நான்கு நிலையில் கூறுகின்றார். அவை வருமாறு:

1. கடவுள் மற்றும் வீரத்தலைவர்களுக்கான முதன்மை நிலையில் வரக்கூடிய பெயரடை அடைமொழிகள்.
2. கடவுள் மற்றும் வீரத்தலைவர்களுக்கான குறைந்த நிலையில் வரக்கூடிய பெயரடை மொழிகள்.
3. வீரத்தலைவிகளுக்கான பெயரடைமொழிகள்
4. மக்களுக்கான பெயரடை மொழிகள்

என வகைப்படுத்தியுள்ளார். தனிப்பெயரடையானது ஒன்று (அ) இரண்டு அடைமொழிகள் கொண்டு ஒரு வரியின் தொடக்கத்தில் இறுதியிலும் எழுவாய் மற்றும் உடைமை குறித்த வேற்றுமைநிலையில் வருவதாகப் பாரி கூறுகின்றார்.

பெயரடைமொழிகள் குறித்து இவ்விளக்கத்தோடு கம்பராமாயண யுத்தகாண்டத்தில் காணப்படும் தனித்தன்மையான அடைமொழிகள் (Distrinictive Epithets) மற்றும் தனிக்குறிப்பார்ந்த அடைமொழிகளை (Particularised Epithets) இராமன், இராவணன் என்ற இரு பாத்திரங்களுக்கு வரக்கூடிய அடைமொழிகளைக் கொண்டு காணலாம்.

தனித்தன்மையான அடைமொழிகள் (Distrinctive Epithets)

காப்பியத்தில் ஒரு நபருக்கு ஒரே வகையான யாப்பமைப்பில் பயன்படுத்தப் - படக்கூடிய அடைமொழிகளே தனிநிலை அடைமொழிகள் ஆகும். இது மற்ற பாத்திரங்கள் எவருக்கும் வராது எனப் பாரி சுட்டிக்காட்டுகிறார் (1986: 193). ஹோமரின் இலியட், ஒடிசியில் ஒடிசியஸ் மற்றும் அக்கிலேஸ்யைக் குறிக்கும்போது அவனுக்கே உரிய தனித்தன்மையான அடைமொழிகளைக் காணமுடிகிறது. அவை வருமாறு (www.epthitesinhomer.com):

ODYSSEUS
The old solider
The Raider of Cities
The Master of mind of war
The resourceful man
The clory of the Command

ACHILLES
Swift-Footed,
Godlike,
Shepherd of the People

கம்பராமாயண யுத்தகாண்டத்தில் இராமன், இராவணனைச் சுட்டுவதற்குப் பல்வேறு அடைமொழிகள் கவிஞனால் கையாளப்பட்டுள்ளன. இராமனின் சிறப்பு, வீரம், பண்பு போன்ற தன்மைகளைக் புகழ்ந்து கூறும் முகமாக பல்வேறு அடைகள் காணப்படுகின்றன. இவை ஒரடியின் தொடக்கத்திலும், நடுவிலும் வந்து வாய்பாட்டுத் தன்மைப் பெற்றுள்ளன.

அவை வருமாறு:

பாரம் நீங்கிய சிலையினன் (6727)
வீல்தொழில் வீரன் இராமன் (8998)
சித்தரத் தன்மை உற்ற சேவகன் (9032)
கோசலநாடுடை வள்ளல் (7398)
புண்டரீகக் கண்வென்றிப் புரவலன் (10256)

இதேபோல் இராவணனின் சிறப்பு மற்றும் கொடுந்தன்மை, வீரம் போன்றவற்றை எடுத்துக்கூறும் போது புலவன் காப்பியத்தில் பல்வேறு தனித்தன்மையான அடைகளைக் கையாளுகின்றான். இவை ஒரடியின் தொடக்கத்திலும் நடுவிலும் வந்து வாய்பாட்டுத் தன்மைப் பெற்றுள்ளன. அவை வருமாறு:

கொடுங்கூற்றுவனை (6929)
பொடித்து இழிந்த விழியன் (7004)
தும்பை சூடிய இராவணன் (7374)
உலகு ஏழும் வென்றவன் (8454)
எட்டு ஆகிய திக்கையும் வென்றவன் (8134)

தனிக்குறிப்பார்ந்த அடைமொழிகள் (Particularzied Epithets)

காப்பியத்தில் ஒரு யாப்பில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே உருவாக்கப்படாமல் அவை மரபுசார்ந்தவையாக இருக்குமானால், அதை தனிக்குறிப்பார்ந்த அடைமொழி எனப் பாரி உரைக்கிறார் (Adam Parry 1987: 154). ஒரு குறிப்பிட்ட பொருளை நிலைநாட்டுவதற்கு வாக்கியத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

ஹோமரில் மாவீரனாக ஒடிசியஸ்சைக் குறிக்கும்போது “டிராயைத் தொடைத்து அழிப்பவன்” என்ற அடைமொழியைச் சுட்டுகின்றார். இதில் டிராயை அழித்தவன் ஒடிசியஸ் தவிர மற்ற வீரர்கள் அல்ல எனத் தனிக் குறிப்பார்ந்த பொருண்மையை வெளிப்படுத்துவதாக இவ்வடைமொழி வந்துள்ளது.

இதேபோல் கம்பராமாயணத்தில் இராவணனின் சிறப்பினைக் கூறும்போது அவனுக்கே உரிய தனிகுறிப்பார்ந்த அடைமொழி வெளிப்படுகிறது. அவை வருமாறு:

கொத்துஉறு தலையான் (6907)
தசமுகன் (7036)
தலைகள் பத்தொடும் தழுவிய (7354)

இது இராவணனுக்கு மட்டுமே குறிப்பார்ந்த அடைமொழியாய் வந்து அடியின் தொடக்கதில் முதல் சீராக வாய்பாட்டுத் தன்மைப்பெற்றுள்ளது.

இராவணனைக் கண்டு மற்ற வீரர்கள் அச்சம் கொள்ளவதாகவும், பாராட்டுவதாகப் புலவனால் கையாளப்பட்டுள்ளது. இதேபோல் இராமனைத் திருமாலின் அவதாரமாகச் சுட்டும்போது அவனுக்குரிய குறிப்பார்ந்த அடைமொழியைப் புலவன் அடிக்கடி கையாண்டுள்ளார். இவை இராமனை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. அவை வருமாறு:

ஆநிறக் கண்ணன் (6814)
கமலத்து அண்ணல் (6627)
ஆயிர நாமத்து ஆழி ஐயனுக்கு (7828)

‘வாய்பாடு’ என்பது கவிதையின் சிறிய அலகிலிருந்து பெரிய அலகுவரை நிலைத்த தன்மையுடன் மீண்டும் மீண்டும் வரக்கூடிய அடைமொழிகள், வரிகள், அவற்றின் மாற்றுவடிவங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒன்றாகும். வாய்பாடுகளே கவிதையின் வரிகளின் கட்டமைப்பினைத் தீர்மானிப்பதாக இருக்கின்றன.

அடைமொழிகள் என்பவை கதைப்பாத்திரத் தன்மைகளையும், அவற்றின் செயல்பாடுகளையும், அவற்றின் பண்பு நலன்களையும் அடையாளப்- படுத்துவதற்குக் கவிஞனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அடைமொழிகளே கவிதையைத் தீர்மானிக்கக் கூடியதாகக் காவியத்தில் அமைந்து காணப்படுகின்றன. பாரி–லார்டு கூறிய பெயரடை மொழிகள் கம்பராமாயணத்தில் பொருந்தி வருவதை இக்கட்டுரை நிறுவியுள்ளது.

துணைநின்ற நூல்கள்

தமிழ் நூல்கள்:-

கைலாசபதி, க. (2006). தமிழ் வீரநிலைக்கவிதை. சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.

கம்பராமாயணம். (2010). யுத்தகாண்டம். சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

ஆங்கில நூல்கள்:-

Adam Parry. (1897). The Making of Homeric verse the collected papers milmanparry.
Newyork: Oxford University Press.

Albert Bates Lord. (1960). The Singer of Tales. Cambridge, Massachusetts, London:
Harvard University Press,

Bowra, C.M. (1952). The Heoric Poetry. London: Macmillan & Co.Ltd.

- முனைவர் கோ.புஷ்பவள்ளி