நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. நமது வாழ்க்கையிலும் அனுபவப்பூர்வமாக இதை உணர்ந்திருப்போம். காவல்நிலையம், நீதிமன்றம் போன்ற இடங்களில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நடைமுறையில் உள்ள சாதாரண சொற்களைப் பயன்படுத்தினால்கூட, அது சட்டத்தின்முன் குற்றச்செயலாக கருதப்படும் நிலை வந்து கொண்டிருக்கிறது.

Law logoஉதாரணமாக, சர்க்கரை இல்லாத என்பதை 'சுகர்-ப்ரீ' (SUGAR FREE) என்று நாம் கூறுவண்டு. 'சுகர்-ப்ரீ'யாக ஒரு காப்பி கொண்டு வா! என்று இனி நீங்கள் இதுபோல் 'ப்ரீ'யாக பேசமுடியாது. ஏனெனில் நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான பால்பொருள் நிறுவனமான 'அமுல்' தயாரிக்கும் ஐஸ்கிரீமிற்கு, 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' (PROLIFE SUGAR FREE) என்ற பெயரில் உள்ள 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை பயன்படுத்துவதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது என்ன கலாட்டா? என்று ஆச்சரியப்படாதீர்கள்! புதிதாக அமல்படுத்தப்படும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின்படிதான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கான செயற்கை இனிப்பான்கள தயாரிக்கும் ஜைடஸ் காடிலா (ZYDUS CADILA) என்ற நிறுவனம், அதன் தயாரிப்புகளை 'சுகர்-ப்ரீ' என்ற பெயரில் விற்பன செய்து வருகிறது. மக்கள் சாதாரணமாக உபயோகிக்கும் சொற்களை வணிகப்பெயராக பயன்படுத்தி வந்த அந்த நிறுவனம், கடந்த 1988ம் ஆண்டு முதல் அந்த சொல்லை தான் பயன்படுத்தி வருவதாகவும், எனவே 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை தமது டிரேட் மார்க்-ஆக பதிவு செய்து தரவேண்டும் என்று மனு செய்துள்ளது. இந்த மனு பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' ஐஸ்கிரீம் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி சந்தைக்கு வந்தது. இதையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவில், 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை தாம் கடந்த 1988ம் ஆண்டு முதல் வணிகப்பெயராக பயன்படுத்தி வருவதாகவும், அந்த சொற்களுக்கு டிரேட் மார்க் பதிவு கோரி மனு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் அமுல் நிறுவனத்தின் புதிய தயாரிப்புக்கு 'ப்ரோலைஃப் சுகர்-ப்ரீ' என்று பெயர் வைப்பதால், தமது பொருளின் நற்பெயருக்கு இழப்பு ஏற்படுவதாகவும் இதனை ஈடு செய்ய, அமுல் நிறுவனம் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் அமுல் நிறுவனம், 'சுகர்-ப்ரீ' என்ற பெயரில் எந்த பொருட்களையும் விற்பனை செய்ய நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிஸ்டானி, அமுல் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜர் ஆகாத நிலையிலேயே வழக்கை விசாரித்து, இந்த மனுவில் கேட்கப்பட்டுள்ளதைப்போல தடை வழங்காவிட்டால் ஜைடஸ் காடிலா நிறுவனத்திற்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்ற வாதத்தில் தாம் திருப்தி அடைவதாகக் கூறி, அமுல் நிறுவனம் மே 3ம் தேதிவரை 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

காப்பிரைட் சட்டம் உட்பட, காப்புரிமை சட்டங்களில் மக்கள் பொதுவாக பயன்படுத்தும் சொற்களையோ, ஒரு பொருளின் இயல்பைக் குறிக்கும் சொற்களையோ பதிவு செய்யமுடியாது. அப்படிப் பார்த்தால் 'சுகர்-ப்ரீ' என்ற சொல்லும் உலகம் முழுவதும் சாதாரணமாகப் பயன்படுத்தும் சொல்தான். இந்தச் சொல்லை அமுல் நிறுவனம் பயன்படுத்தியதால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ள ஜைடஸ் காடிலா நிறுவனம், பல ஆண்டுகாலமாக மக்கள் மிகச்சாதாரணமாகப் பயன்படுத்தி வரும் 'சுகர்-ப்ரீ' என்ற சொற்களை யார், யாருக்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்து உரிமையாக்கி கொண்டது என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

இந்த வழக்கின் முடிவு எப்படி வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் மாறிவரும் சட்டங்களின் நிலைக்கு இது ஒரு எளிமையான எடுத்துக்காட்டு. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாம் வாழ்வின் பல முனைகளிலும் பாதிக்கப்படுவோம். குறிப்பாக உணவு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அடிப்பட தேவைகளை ஈடு செய்வது மிகக்கடினம் ஆகிவிடும்.

உதாரணமாக, கனடா நாட்டின் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் என்பவரின் அனுபவத்தை பார்க்கலாம். இயற்கை விவசாயியான அவரது நிலத்தில் உள்நாட்டு பயிர்வகைகளை பயிரிட்டிருந்தார். அருகே உள்ள மற்றொரு விவசாயியோ மான் சான்டோ என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகளைப் பயிரிட்டிருந்தார். அந்த நிலத்தில் விளைந்திருந்த பயிர்களில் இருந்த மகரந்த தூள்கள் காற்றின் மூலமாகவும், பூச்சிகளின் மூலமாகவும் பெர்சி ஷ்மேய்சரின் நிலத்தில் பயிரிட்டிருந்த பயிர்களிலும் ஊடுருவி இருந்தது. இயற்கை வேளாண்மை செய்து வரும் தனது நிலத்தில் மரபணு மாற்றக்கூறுகள் என்ற மாசு படிவது குறித்து கவலை கொண்ட பெர்சி ஷ்மேய்சர், இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆலோசித்து கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு மான் சான்டோ நிறுவனத்தில் இருந்து, அந்த நிறுவனம் காப்புரிமை பதிவு செய்திருந்த மரபணுமாற்றக் கூறுகளை உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி சட்டரீதியான நோட்டிஸ் வந்தது.

தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், மான்சான்டோ நிறுவனம்தான் தன் நிலத்தில் அத்துமீறி, மாற்றப்பட்ட மரபணு கூறுகளை பரப்பி மாசுபடுத்தி விட்டதாக பெர்சி ஷ்மேய்சர் பதில் அளித்தார். ஆனால் அவரது வாதம் மறுக்கப்பட்டு, அறிவுசார் சொத்துரிமை சட்டங்களின் கீழ் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் குற்றவாளி என்றும், மான்சான்டோ நிறுவனத்திற்கு அவர் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்நாட்டு உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் விவசாயி பெர்சி ஷ்மேய்சர் தவறிழைத்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும் விவரங்களுக்கு: http://www.percyschmeiser.com/

Copyright logoபெர்சி ஷ்மேய்சர் மனித குலமேம்பாட்டிற்காக சிறந்த முறையில் செயல்பட்டதற்காக கடந்த 2000ம் ஆண்டில் மகாத்மா காந்தி விருது வாங்கியவர் என்பது கூடுதல் செய்தி...!

உலகமயமாக்கல் காரணமாக, அறிவுசார் சொத்துரிமை சட்டங்கள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்த சட்டங்கள் முழுமையாக அமல் செய்யப்படும்போது, இந்திய விவசாயிகளுக்கும் 'திருட்டுப்பட்டம்' கிடைக்கும். அதை சட்டமும் அங்கீகரிக்கும். இது விவசாயிகள் மட்டும் சார்ந்த பிரசினை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதேபோல மருத்துவத்துறையிலும், அறிவு சார் சொத்துரிமை சட்டங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உதாரணத்திற்கு தமிழகத்தில் நடைபெற்றுவரும் வழக்கு ஒன்றையே பார்க்கலாம்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த 'நோவார்டிஸ்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் ரத்தப்புற்று நோய்க்கான மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. 'இமாடினிப் மெஸிலேட்' என்ற பெயருடய மருந்துப்பொருளை 'க்ளிவெக்' என்ற வணிகப்பெயரில் தயாரித்து அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அதே மருந்தை வேறு பெயர்களில், வேறு பல நிறுவனங்களும் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில் 'க்ளிவெக்' என்ற பெயரில் விற்கப்படும் மருந்துப் பொருளுக்கு காப்புரிமை கேட்டு 'நோவார்டிஸ்' நிறுவனம் மத்திய அரசிடம் மனு செய்தது. அவ்வாறு காப்புரிமை அளிக்கப்பட்டால், 'இமாடினிப் மெஸிலேட்' என்ற மருந்தை வேறு யாரும் எந்த பெயரிலும் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது. எனவே அம்மருந்திற்கு அதைத் தயாரிக்கும் உரிமை பெற்ற நிறுவனம் வைத்ததுதான் விலை.

ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு நாளுக்கு 4 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தின் தற்போதைய விலை சுமார் 50 ரூபாய். காப்புரிமை பதிவு செய்யப்பட்ட நாடுகளில் இம்மருந்தின் விலை சுமார் 1000 ரூபாய். எனவே இந்தியாவில் இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால், ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மருந்துக்கு செலவழிக்க வேண்டும்.

இதுவரை இந்த மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை வழங்கப்படவில்லை. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாது. இந்த மருந்துக்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அனைத்து மருந்து தயாரிப்பாளர்களும், தங்கள் தயாரிப்புகளுக்கு காப்புரிமை கோருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அனைத்து மருந்துகளுக்கும் காப்புரிமை கொடுக்கப்பட்டால் மருத்துவம் என்பதே பெரும்பாலான மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும்.

இவை அனைத்தும் சட்டத்தின் பெயரால் நடபெறுகின்றன! உலகையே குலுக்கிய சுனாமி பேரலை இந்தியாவின் பெரும்பகுதியை சூறையாடிய டிசம்பர் 26, 2004 அன்று ஒட்டு மொத்த இந்தியாவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால் சோகமயமான அன்றைய தினத்தில் காப்புரிமை சட்டதிருத்த மசோதாவில் குடியரசுத்தலைவர் சத்தமின்றி கையொப்பம் இட்டார். அந்த திருத்தம் அனைத்தும் மக்களுக்கு எதிரானதாகவும், பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாகவுமே இருந்தது என்பதை கூறத்தேவையில்லை.

சமூக அநீதிகளிலிருந்து சட்டத்தின் துணை கொண்டு மக்களை காப்பது வழக்கறிஞர்களின் முதன்மை பணி என்பதே பொதுக்கருத்து. ஆனால், உலகமயமாக்கல் மற்றும் அறிவுசார் சொத்துரிமை போன்ற பெயர்களில் அமலுக்கு வரும் இதுபோன்ற மக்கள் விரோத சட்டங்களிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதே மக்கள் சார்ந்த வழக்கறிஞர்களின் கவலையாக உள்ளது.

- சுந்தரராஜன்