ஓட்டுப் பொறுக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கொலைகாரக் கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை மீண்டுமொருமுறை சபரிமலை பிரச்சினையில் நிரூபித்து இருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் வென்று, பார்ப்பன இந்துமதவெறி சாம்ராஜ்ஜியத்தை கட்டமைக்க அவர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களை நெருங்கவிடாமல் வீழ்த்தும் பகுதிகளாக கேரளமும், தமிழ்நாடும் இருக்கின்றன. அதனால் மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலங்களில் இன்னும் கூடுதலான அளவில் தங்கள் கவனத்தை சங்பரிவாரம் குவித்து வேலை செய்து வருகின்றது.

sabarimala agitationமக்களிடம் தங்களை நிரூபித்துக்கொள்ள வேறு எந்த நியாயமான காரணங்களும் எப்போதுமே சங்கிகளிடம் இருப்பதில்லை. சாதி, மதம், கடவுள் இந்த மூன்றை மட்டுமே அவர்கள் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு மாநிலமாக பயணப்படுகின்றார்கள். அவர்கள் விரித்த வலையில் பெரும்பாலான மாநிலங்கள் வீழ்ந்த பின்னாலும் கேரளமும், தமிழ்நாடும் மட்டுமே அதைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளியுள்ளன. போதாத குறைக்கு பாராளுமன்றத் தேர்தல் வேறு நெருங்கி வருவதால் இஞ்சி தின்ற குரங்கைப் போல சங்கிகள் மாறி இருக்கின்றார்கள். மோடி பதவியேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளாக மோடி + அமித்ஷா என்ற கிரிமினல் கூட்டணியின் அத்தனை நரித்தனமான திட்டங்களும் இந்த மாநிலங்களில் தவிடுபொடியான சூழ்நிலையில்தான் தனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பாக சபரிமலைப் பிரச்சினையை கையில் எடுத்திருக்கின்றது இந்த சதிகாரக் கும்பல்.

இத்தனைக்கும் 2006 ஆண்டு அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கலாம் என்று வழக்கு தொடர்ந்ததே ஆர்.எஸ்.எஸ் தான். இந்த மானங்கெட்ட கும்பல் கூட்டியும் கொடுக்கும், காட்டியும் கொடுக்கும் என்பதற்கு இதுவே சாட்சி. இது ஓட்டுப் பொறுக்கிகளுக்கே உண்டான விபச்சார குணம். உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்த பின்னாலும் அதை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என வன்முறையில் ஈடுபடும் இந்தக் கும்பல்தான் மற்றவர்களைப் பார்த்து தேசவிரோதிகள் என்றும், இந்தியா என்ற கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடுங்கள் என்றும் மிரட்டுகின்றது. இன்று இந்த நாட்டிற்கும், அதன் சட்டத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்தக் காவிக்கும்பல் மாறியிருக்கின்றது. அவர்கள் முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் தலையிட்டு முத்தாலக்கை தடை செய்து முஸ்லிம் பெண்களின் உரிமையைக் காப்பதாக நாடகம் ஆடுவார்கள். ஆனால் தங்கள் மதத்தைச் சேர்ந்த பெண்கள் உரிமையைக் கேட்டால் அவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். ஒரு சிறுபான்மை பார்ப்பனக் கும்பல் பெரும்பான்மையான மக்களை பார்ப்பன சதியில் வீழ்த்தி, அவர்கள் மூலம் செய்யும் அப்பட்டமான அத்துமீறல் இது. இந்த நாட்டின் அனைத்து அதிகார உறுப்புகளும் இந்தக் கும்பலின் கேடுகெட்ட கீழ்த்தரமான செயலை அடக்க வழியற்று அதற்குப் பணிந்துபோய் கிடக்கின்றது.

இந்த நாட்டின் உயரிய அமைப்பான உச்சநீதி மன்றத்தின் ஆணை பெரியதா? இல்லை பார்ப்பானின் பூணூல் பெரியாதா? என்ற குழப்பம் இன்று ஏற்பட்டிருக்கின்றது. இடது ஜனநாயக முன்னணி இந்தப் பிரச்சினையில் உச்சநீதி மன்றத் தீர்ப்பை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த முயன்றாலும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் இதை வைத்து ஆட்சிக்கும் கட்சிக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கில் மென்மையான போக்கை கடைபிடிப்பது போலத்தான் தெரிகின்றது. சபரிமலைக்கு ஐயப்பனைக் காணவந்த இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பியது முற்போக்குவாதிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு சிறு புல்லுருவிக் கூட்டத்திற்கு அஞ்சி அவர்களை திருப்பி அனுப்பி இருக்க வேண்டிய அவசியமில்லை.

1965-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கேரளா இந்துக் கோயில்கள் நுழைவு அங்கீகாரம் நடைமுறைச் சட்டத்தின்படி விதி எண் 3 (பி) சபரிமலைக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று சொல்கிறது. இதன்படி 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைவது குற்றமென அறிவிக்கப்பட்டது (நன்றி:விகடன்). இந்த சட்டம் உருவாவதற்கு முன்பும் பின்பும் கூட சபரிமலைக்கு பெண்கள் சென்று வழிபட்டுதான் வந்திருக்கின்றார்கள். கன்னட நடிகை ஜெயமாலா தான் 1987-ம் ஆண்டு படப்பிடிப்புக்கு சபரிமலை சென்றதாகவும், கோயில் தந்திரிகள் உதவியுடன் ஐயப்பனைத் தொட்டு வணங்கியதாகவும் கூறி இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் 1990 வரையிலும் கூட குழந்தைகளுக்கு சோறூட்டும் சடங்கிற்காக 10-50 வயதுள்ள பெண்கள் கோயிலுக்கு வந்துகொண்டுதான் இருந்திருக்கின்றார்கள். 1939-இல் திருவிதாங்கூர் ராணி ஆலயத்திற்கு வந்திருக்கின்றார். புனிதம், தீட்டு வெங்காயம் எல்லாம் காசு இல்லாத சாமானிய மக்களுக்குத்தான், காசு இருந்தால் பெண்கள் ஐயப்பனைத் தொட்டு வணங்கலாம்; ஏன், செல்பி கூட எடுத்துக்கொள்ளலாம். ஐயப்பன் ஒன்றும் ஆட்சேபிக்க மாட்டார்.

ஐயப்பனைத் தரிசிக்க 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் வரக்கூடாது என குதிக்கும் பார்ப்பனக் கும்பல் அதற்கு மாதவிடாயை மட்டுமே காரணம் காட்டுகின்றது. ஆனால் ஐயப்பனின் பிறப்பைப் பற்றி, சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் ஹோமோ செக்ஸில் பிறந்தான் என்ற கதையைத் தவிர, பந்தள அரச குடும்பத்துடன் நேரடியாக சம்மந்தப்பட்ட கதை ஒன்றும் கூறப்படுகின்றது.அதில் ஐயப்பன் பந்தள மன்னர்களின் ராஜ வம்சத்தில் பிறந்தவர் என்றும், அவர் பந்தளம் அரண்மனையில் வாழ்ந்ததாகவும் கூறுகின்றார்கள். ஐயப்பன் ராஜ வாழ்க்கை பிடிக்காமல் சபரி மலையில் போய் இருந்துகொண்டார் என்றும், அவரின் தந்தையின் விருப்பத்திற்காக வருடத்திற்கு ஒருமுறை மட்டும் இளவரசன் போன்று கோலம் பூண ஒப்புக் கொண்டதகாவும், அதற்காகவே ஐயப்பனின் தந்தை ராஜசேகரன் தங்கத்தால் ஆன ஆபரணங்களை செய்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தன்னை சந்திக்க வர வேண்டும் என்றும், அடிக்கடி வந்தால் தன்னுடைய தவக்கோலம் கலைந்துவிடும் என்று ஐயப்பன் கேட்டுக் கொண்டதாகவும் கதை இருக்கின்றது. இந்தக் கதையில் இருந்து ஐயப்பன் என்பவன் மற்ற சாதாரண மனிதர்களைப் போலத்தான் பிறந்திருக்கின்றான் என்பது தெரிய வருகின்றது. அது மட்டும் அல்லாமல் அவன் எந்த இடத்திலும் பெண்கள் குறிப்பாக மாதவிடாய் ஆன பெண்கள் தன்னைப் பார்க்க வரவேண்டாம் என்று சொல்லவில்லை என்பதும் கதைப்படியே தெரிய வருகின்றது.

ஐயப்பன் சிறுவனாக இருந்த போதே சபரி மலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுவதால் ஐயப்பனின் தாய்க்கு நிச்சயம் மாதவிடாய் நின்றிருக்க வாய்ப்பில்லை. வருடத்திற்கு ஒருமுறை நிச்சயம் அவனின் தாயும்தான் சென்று பார்த்து வந்திருக்க வேண்டும். அதனால் மாதவிடாய் ஆன பெண்களால் ஐயப்பன் தீட்டாகி விடுவான் என்ற கருத்தியல் அடிபட்டுப் போகின்றது.

மேலும் உலக வாழ்க்கையைத் துறந்து தவக்கோலம் பூண்டவர்கள் அனைத்துப் பற்றுகளில் இருந்தும் தங்களை அறுத்துக் கொண்டவர்கள் என்றுதான் நாம் படித்திருக்கின்றோம். (விதிவிலக்காக புராணங்களில் சில புலன் அடக்க துப்பில்லாத பொறுக்கி சாமியார்கள் இருந்தாலும்) ஐயப்பன் ஒரு யோக்கியமான கடவுள் என அவருக்கு 48 நாட்கள் விரதம் இருந்து அவரை வணங்கப் போகும் பக்த கோடிகள் கருதுவார்களேயானால், நிச்சயம் அவர்கள் பெண்களை கோயிலுக்குள் செல்வதைத் தடுக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் பந்தள குடும்பத்துடன் சம்மந்தப்பட்ட ஐயப்பனின் கதையை நம்புவதைவிட, ஐயப்பன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஹோமோ செக்ஸில் பிறந்தான் என்ற கதையைத்தான் அதிகம் நம்புவதாகத் தெரிகின்றது. அதனால்தான் பெண்களை அனுமதிக்க மறுக்கின்றார்கள்.

இப்போது பிரச்சினை பெண்கள் என்ற நிலையில் இருந்து மாறி ஐயப்பனின் யோக்கியதை சம்மந்தமாகவே மாறியிருக்கின்றது. ஆணாதிக்கவாதிகள் அனைவரும் சேர்ந்து ஐயப்பன் பெண்களுக்கு மிக ஆபத்தான பேர்வழி என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டார்கள். ஆளுநர் மாளிகையைப் போலவே ஐயப்பன் கோயிலுக்குப் போன பெண்களும் ‘நல்லபடியாக’ திரும்பிவர முடியாது என்ற உண்மையைத் தங்களை அறியாமலேயே பெண்களுக்கு புரிய வைத்திருக்கின்றார்கள்.

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இந்தப் பிரச்சினையில் இன்னும் கொஞ்சம் தீவிரமாக செயலாற்றி இருக்கலாம் என்பதுவே முற்போக்குவாதிகளின் விருப்பமாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட பந்தள அரச குடும்பமும், மணியாட்டி பிச்சை எடுத்து திங்கும் கும்பலும் ஒன்றும் பெரியதல்ல. ஐயப்ப பக்தர்கள் என்ற போர்வையில் பொறுக்கிகளை களத்தில் இறக்கிவிட்டு கலவரம் செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு சரியான பாடத்தை கற்பித்திருக்க வேண்டும். நிச்சயமாக அப்படி ஒன்று நடந்தால் கேரள மக்கள் அதை மிக மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். காரணம் தமிழ்நாட்டைப் போலவே கேரள மக்களில் பலர் ஆன்மீகவாதிகளாக இருந்தாலும், உள்ளூர சங்கிகளை வெறுப்பவர்களாகவே உள்ளார்கள். அதனால் தோழர் பினராயி விஜயன் இந்தப் பிரச்சினையில் இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

- செ.கார்கி