திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க, தகர்க்க, கொச்சைப்படுத்த இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்கு அவதூறுகளை, திரிபுவாதங்களை, பொய்களைத் தொடர்ந்து ஊடகங்கள் வழி பரப்பி வருகின்றனர்.

ayothithasar 300இதனால் நம்மின இளைஞர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட சில அய்யப்பாடுகள், குழப்பங்கள், கசப்புணர்வு, வெறுப்பு ஏற்படுகின்றன.

அப்படி எதிரிகள் பரப்பும் பொய்களில் ஒன்றுதான் மேற்கண்ட கேள்வி! எனவே, இதுசார்ந்த சில உண்மைகளை விளக்கமாக நான் தொகுத்துத் தந்துள்ளேன். படித்து தெளிவடைய வேண்டுகிறேன்.

1. அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் கொள்கைகளை, சாதனைகளை, வரலாற்றை எல்லோரும் அறியும்படி நான் எழுதிய நூல் (மறைக்கப்பட்ட மாமனிர்கள்) திராவிடர் கழகத்தில் வெளியிடப்பட்டு தொடர்ந்து நாடு முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.

2. இவர்களைப் பற்றி நான் பேசிய உரை பெரியார் வலைதளம் மூலம் உலகம் முழுவதும் பரப்பப்படுகிறது.

3. கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், "மயிலாடன்" என்ற பெயரில், விடுதலையில் "ஒற்றைப்பத்தி” என்ற பகுதியில் நிறைய எழுதியுள்ளார். அவையும் தொகுக்கப்பட்டு நூலாக திராவிடர் கழகத்தால் விற்கப்படுகிறது.

4. இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவிடம் பராமரிப்பின்றி பாழாகிக் கிடந்ததை படம் எடுத்து "உண்மையில்" எழுதி, அரசு அதை சீர் செய்ய ஏற்பாடு செய்தது திராவிடர் கழகம்தான்.

5. உண்மை, விடுதலையில் இவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் செய்திகள் வெளியிட்டு அவர்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.

6. பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் இவர்கள் இருவருக்கும் விழாக்கள் எடுத்து அந்த விழாக்கள் சிறப்புப் பேச்சாளர்கள் மூலம் அவர்களது கொள்கைகளும் பெருமைகளும் பரப்பப்படுகின்றன.

ஒரு நிகழ்வில் அய்யா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பேத்தியையே அழைத்து வந்து சிறப்பு செய்தது திராவிடர் கழகம்.

அதேபோல் தாழ்த்தப்பட்டோருக்கு ஏராளமான பணிகளை திராவிடர் கழகம் செய்து வருகிறது. அவை உண்மை, விடுதலையில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. விரைவில் அது சார்ந்து நூலும் வெளிவரவுள்ளது.

பெரியார் அவர்கள் சொன்னதுபோல, திராவிடர் கழகம் பள்ளன், பறையன் கட்சி என்பதில் யாருக்கும் அய்யம் வேண்டாம். திராவிடர் கழகம் என்றைக்கும் அவர்களின் பாதுகாவலன்!

- மஞ்சை வசந்தன்