jallikattu bulls

இந்தக் கட்டுரையானது ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காகவோ அல்லது நடைபெறக் கூடாது என்பதற்காகவோ எழுதப்படவில்லை. மாறாக, ஜல்லிக்கட்டு ஆதரவு என்ற பெயரில் தொடர்ந்து பரப்பப்படும் 'போலி விஞ்ஞான' (pseudo science) கருத்துக்களை அம்பலப்படுத்தும் நோக்கில் எழுதப்படுகிறது.

பரப்பப்படும் கருத்துக்களின்படி பாலி்ல் இரண்டு வகை உள்ளது. அது முறையே A1 மற்றும் A2 என்ற வகையாகும். இதில் A1 என்ற பாலை ஜெர்சி மாடுகள் தருவதாகவும், அது மனிதனுக்கு கெடுதல் எனவும், A2 எனும் பால் வகையை தமிழக மாடுகள் தருவதாகவும், அது மனிதனுக்கு நல்லது எனவும் தொடர்ந்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது.

இந்தப் பிரச்சினையின் ஆதியை ஆய்வு செய்யும்போது நாம் பல உண்மைகளை தெரிந்து கொள்ள முடிகிறது. முதன் முதலில் நியூசிலாந்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்று (A2 Milk company) தங்களது பாலில் உள்ள பீட்டா கேசின் எனும் புரதம் A2 வகையைச் சார்ந்தது எனவும், அதனை அருந்தினால் நோய்கள் வராது என்றும் அறிவித்தது. மேலும் A1 வகை பாலை அருந்துவதால் மனிதனுக்கு சக்கரை நோய் உள்ளிட்ட சில நோய்கள் வரும் எனவும் விளம்பரம் செய்தது.

இதனைத் தொடர்ந்து உள்ளூர் பால் வியாபாரிகளுக்கும், அந்த நிறுவனத்துக்கும் மோதல் போக்கு உருவாகின்றது. இதன் உச்சமாக A2 பால் நிறுவனம் எனும் அந்த நிறுவனம் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் A1 பாலை அருந்துவதால் ஏற்படும் தீமைகளை பால் பொருட்களின் மேல் உள்ள அட்டையில் அச்சிட வேண்டுமென வழக்கு தொடுக்கிறது. வழக்கின் முடிவில் A1 பாலினால் நோய்கள் ஏற்படும் என்று யாராலும் நிரூபிக்க இயலவில்லை. வழக்கில் அந்த நிறுவனம் தோற்கிறது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடந்த பல்வேறு ஆய்வு முடிவுகள் A1 பாலினால் நோய் ஏற்படுகின்றது என்பதற்கு 'எந்த ஆதாரமும் இல்லை' என்பதையும், அது பாதுகாப்பானது என்பதையும் உறுதிப்படுத்தியது. இன்று வரை உலகில் எந்தப் பகுதியிலும் A1 பாலுக்குத் தடை விதிக்கப்படவில்லை. A2 பால் நிறுவனம் தொடங்கப்பட்ட நியூசிலாந்தில் கூட A1 பாலுக்கு எந்தத் தடையும் இல்லை.

இந்தப் பிரச்சினையை காரல் மார்க்சின் கண்ணாடி அணிந்து நோக்கினால், 'ஒரு பால் நிறுவனம்' அவர்களின் பாலை விற்பதற்கு (A2) கிளப்பிவிட்ட புரளிதான் இது என்று தெளிவாகத் தெரிகிறது. இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமாக A2 பால் என்று நடத்திவரும் அந்த நிறுவனத்தின் 2016 ஆண்டு வருமானம் மட்டும் 337 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

தற்போது தமிழகத்து பிரச்சினைக்கு வருவோமேயானால், ஜல்லிக்கட்டு் வேண்டும் என்று தீவிரமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் விரும்புவோர் அதற்காக எந்தக் கருத்தையும் பரப்பவும், நம்பவும் தயாராக உள்ளனர். அவர்கள் தங்களது பகுத்தறிவைப் பயன்படுத்தத் தயாராக இல்லை. மேலே குறிப்பிட்டவாறு A1 பாலினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது விஞ்ஞான முடிவாக இருக்கும்போது, இவர்கள் போலியான தரவுகளைத் தொடர்ந்து பரப்பி் மக்களை பீதியாக்குகின்றனர்.

இரவு நேரங்களில் 'மாற்று மருத்துவம்' என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பாகின்றன. இதனை அனைவரும் கண்டிருப்பீர்கள். அதில் பேசும் அமானுசிய வைத்தியர்கள் தங்களால் குணப்படுத்த இயலும் என்று ஒரு லிஸ்டை வாசிப்பார்கள். அது சோரியாசிசிலிருந்து ஆண்மைக் குறைவு வரை நீளும். இந்தப் பட்டியலை கூர்ந்து கவனித்தால் அவை அனைத்தும் நவீன விஞ்ஞான மருத்துவம் இதுவரை தீர்வு காணாத நோய்கள் என்று தெரியும்.

விஞ்ஞான மருத்துவத்தில் ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்ட மலேரியா, தொழுநோய் போன்றவற்றை அவர்கள் யாரும் குணப்படுத்துவதாகக் கூறுவதில்லை. மாறாக தீர்வு காணப்படாத நோய்களை மரபு முறையில் குணப்படுத்த இயலும் என்று மக்களை ஏமாற்றும் வகையில் சொல்கின்றனர், வியாபாரம் செய்கின்றனர்.

இதே தந்திரத்தைத்தான் இந்த A1 பாலுக்கு எதிராகப் பேசுபவர்களும் கையாளுகின்றனர். அவர்கள் விஞ்ஞான மருத்துவத்தில் தொடர்ந்து ஆய்வில் இருக்கும் நோய்களை A1 பால் கொண்டுவரும் என்று மிரட்டுகின்றனர். இங்கே கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், அவர்கள் யாரும் A1 பால் காச நோயைக் கொண்டு வரும் என்றோ அல்லது ஆஸ்துமாவைக் கொண்டு வருமென்றோ சொல்வதில்லை. ஏனெனில் அவ்வாறு சொன்னால் அவர்கள் சொல்வது பொய் என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்து விடும்.

அதனால் A1 பால் புற்று நோயைக் கொண்டுவரும் , ஆட்டிசத்தை உருவாக்கும் என்று தந்திரமாக சொல்கின்றனர். ஆனால் உண்மையில் பல்வேறு புற்றுநோய்க்கான காரணங்கள் (pathology) ஏற்கனவே கண்டறியப்பட்டுவிட்டது என்பது சினிமாவில் இதுவரை சொல்லப்படாததால் அவர்களுக்குத் தெரியவில்லை.

இவ்வாறு நிரூபிக்கப்படாத போலியான தரவுகளை வைத்துகொண்டு் இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதிடுகின்றனர். ஆய்விலிருக்கும் ஆட்டிசம் போன்ற நோய்களைக் காட்டி கட்டுக்கதை எழுதுகின்றனர். வாட்ஸ் அப் வீடியோக்கள் வெளியிடுகின்றனர்.

நியூசிலாந்தைச் சார்ந்த அந்த பால் நிறுவனம் சாதாரண பாலை விட 'அவர்கள் விற்கும்' A2 பாலை இரண்டு மடங்கு விலை உயர்த்தி விற்கின்றது. அந்த பன்னாட்டு் நிறுவனம் பணம் ஈட்ட அந்தப் புரளியைத் தொடர்ந்து பரப்புகின்றது. மாறாக, நம் ஊரின் இனவாதிகள் & தூய்மைவாதிகள் தங்களது இனவாதத்தை உறுதிபடுத்தி்க்கொள்ள அதே A1, A2 கட்டுக்கதையை துணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

a2 milk

மேலும் மரபியலின் சாதாரண அடிப்படை தெரிந்த யாருக்கும் புரோட்டின்கள் தொடர்ந்து மாறக்கூடியது அல்லது மேம்படக்கூடியது அல்லது உருவம் மாறக்கூடியது என்பது தெரிந்து இருக்கும்.

பாலில் A1, A2 மட்டுமல்ல அதில் A3, A4, A5 என்று பலவகைகள் இருக்கக்கூடும். ஆராய்ந்தால் ஆயிரக்கணக்கான வகைகள் நிச்சயம் அதில் இருக்கும். A1ம், A2வும் இணைந்து A1.5 எனும் வகை கூட விரைவில் உருவாகிவிடும். இது மரபியலில் சாதாரண நிகழ்வு. உயிரித் தோற்றத்தில் எதுவும் நிலையாக (static) இருந்ததில்லை. மனிதர்கள் 600 கோடி பேர் வேறு வேறு மாதிரி இருப்பதே இதற்கு சாட்சி.

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின் நடந்து உலகின் பல பகுதியை அடைந்த உண்மையைப் போல விலங்குகளும் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இப்போது கிளம்பியுள்ள இனவாதிகள் கூறுவதுபோல, தமிழ்நாட்டு மாடுகளுக்கு என்று எந்த தனிச்சிறப்பும் இல்லை. எந்த வெளிநாட்டு மாடுக்கும் கூட அவ்வாறு சிறப்பு ஏதும் இருக்காது.

மரபியல் விஞ்ஞானத்தின்படி எந்த இனம் அதிக கலப்புக்கு உட்படுகிறதோ அதுவே சிறப்பான உயிரினமாக இருக்க முடியும். இந்தியர்கள் அதிக நோய்வாய்படுவதற்கும், அவர்களின் தோள்கள் வலிமையாக இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இந்தியாவின் அகமண திருமண முறையாகும். பல்வேறு சாதிகள், அதனுள் பல்வேறு உட்சாதிகள். அந்த உட்சாதிகளுக்குள் மட்டுமே கடந்த 3000 வருடங்களாக திருமணம் நடந்து வந்துள்ளது. இது இயற்கைக்கு விரோதமானதாகும். இந்தியர்களின் உடல் வலிமை மற்றும் நோய்தாங்கும் திறன் ஆகியவை மற்ற நாட்டவரை விட குறைவாக இருக்க இதுவே காரணம்.

மேற்கண்டவற்றைப் பொருத்திப் பார்க்கும் போது 'நாட்டு மாடுகளை கலப்பு இல்லாமல் காப்பாற்றுவோம்' என்பது வேடிக்கையானது ஆகும். மேலும் ஒரு உண்மையைச் சொன்னால் விஞ்ஞானத்தின்படி இப்போது நாட்டு மாடு என்று அறியப்படும் மாடுகள் கூட ஒரு வகையில் கலப்பு மாடுகளே! அவற்றின் ஜீன்களை ஆய்வுக்கு உட்படுத்தினால், 100% அது பல வெளிநாட்டு் மாடுகளுடன் ஒத்துப் போகும் வாய்ப்பு உள்ளது. அவை கலப்பு இல்லாமல் இருந்தால் அவை வேறு வேறு நிறத்தில் வேறு வேறு உயரத்தில் இருக்க வாய்ப்பில்லை.

இங்கே தமிழ்நாட்டு் மாடு என்று பெருமையாகக் கூறப்படும் மாடுகளின் மூதாதையர்கள் உண்மையில் சிங்களத்தில் இருந்து வந்ததாகக் கூட இருக்கலாம்.!!

மேலும் ஜெர்சி மாடுகளைப் பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. டென்மார்க்கிலிருந்து ஜெர்சி் மாடுகள் சென்னைக்கு வந்துள்ளதாகவும், அந்த நிகழ்வு ஜல்லிக்கட்டுக்குத் தொடர்புடையது எனவும் வாட்ஸ் அப்பில் செய்தி பரப்பப்படுகிறது. சென்னைக்கு மாடுகள் வந்துள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் டென்மார்க் நாட்டைப் பற்றி் ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாடு மிக மிக வளர்ந்த நாடாகும். மனித வளர்ச்சி்க் குறியீட்டில் நான்காவது இடத்தில் டென்மார்க் உள்ளது. அந்த நாட்டு் மக்களின் சராசரி ஆயுட்காலம் 80 ஆகும்.

இந்தியாவை எந்த வகையிலும் டென்மார்க்கோடு ஒப்பிட இயலாது. இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 66.2 மற்றும் இந்தியா, மனித வளர்ச்சி குறியீட்டில் 130வது இடத்தில் உள்ளது. ஆகையால் டென்மார்க்கில் பிரபலமாக உள்ள அதிக பால் தரும் A1 ஜெர்சி பசுக்கள் மோசமானது என்றும், தமிழக A2 பால் தரும் பசுக்கள் நல்லவை என்றும் சொல்வது தர்க்கத்திற்கு எதிரானது.

நியாயமாக தமிழகத்தில் தற்போது A2 பாலுக்கு ஆதரவாக வாதிடுபவர்களின் கருத்துப்படி இந்தியாவில்தான் சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் சராசரி ஆயுட்காலம் குறைவாகவும், இவர்கள் குற்றம்சாட்டும் வெளிநாட்டு மாட்டின் பாலை அருந்துவோரின் ஆயுட்காலம் அதிகமாகவும் உள்ளது என்பது சிந்திக்க வேண்டியது. இது கௌதம புத்தர் 'உண்மை சூரியன் போன்றது' என்று கூற்றை நினைவூட்டுகிறது. மேலும் இந்த திடீர் விஞ்ஞானிகள் பசுவைப் பற்றியே கவலைபடுகின்றனரே ஒழிய எருமைகளைப் பற்றி ஏதும் கவலைப்படுவதில்லை.

எருமையின் பால் A1-ஆ அல்லது A2-வா என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இந்தியாவில் 60% க்கு மேல் எருமைப் பால் தான் புழக்கத்தில் உள்ளது. ஆனால் இது குறித்து யாரும் வாய் திறக்காதது 'பசு புனிதமானது' எனும் பார்ப்பனிய கருத்துக்கு அவர்கள் பலியாகிவிட்டதையே உணர்த்துகின்றது.

ஆகையால் போராடும் மாணவர்களே, தன் இனம் பெரியது, தன் மாடு் உயர்ந்தது, கலப்பு எங்கும் ஏற்படக் கூடாது என்பது போன்ற தூய்மைவாத கருத்துக்களுக்குப் பலியாகாமல், மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பது பற்றியும், மாநிலக் கலாச்சாரங்களை அழித்துவிட்டு இந்துப் பண்பாட்டை நிறுவும் காவி அரசியலைப் பற்றியும், ஜல்லிக்கட்டினால் தலித் மக்களின் மேல் தாக்குதல்கள் அதிகமாகிறது என்ற அரசின் ஆய்வறிக்கையையும், ஜல்லிக்கட்டில் உள்ள தீண்டாமையையும், உலகமயமாக்கல் பற்றியும், சமூகநீதி பற்றியும் நீங்கள் அறிய வேண்டும்.

மேலும் போராடும் மாணவர்கள் தமிழகத்தின் கிராமப்புற மக்கள் மற்றும் ஏழை எளியோர் கல்வி கற்பதையே தடுக்கும் மத்திய அரசின் ஏகாதிபத்திய 'நீட்' (NEET) தேர்வையும் சேர்த்து எதிர்த்து, மத்தியில் ஆளும் பார்ப்பனிய அரசுக்கு எதிராக தங்கள் போராட்டத்தை சரியான வழியில் திருப்ப வேண்டும் என்பது வெகுசன மக்களின் கோரிக்கையாகும்.

தற்போது ஆர்கானிக் என்ற பெயரில் மூன்று மடங்கு விலையில் காய்கறிகள், தானியங்கள் விற்கப்படுவதைப் போல மக்களை ஏமாற்ற 'A2 பால்' என்று பெருநகரங்களில் கடைகள் தோன்றி, விரைவில் மூன்று மடங்கு விலையில் சாதாரண பாலை விற்கும் என்பது சான்றோர்களின் அவதானிப்பு.

சான்றுகள்:

http://www.nutraingredients-asia.com/Markets-and-Trends/New-Zealand-backs-A1-milk-safety

http://www.foodnavigator.com/Science/EFSA-reveals-milk-protein-safety-conclusions

- டாக்டர்.சட்வா