மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான எஸ்.கே.பிஸ்வாஸ் அவர்கள் ‘பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய மிகச்சிறப்பான மார்க்சிய ஆய்வுநூல் ஒன்று தலித்முரசு இதழில் தமிழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த ஆய்வாளர் கூறுகிறார்,

“இந்து மதம், ஒரு சமத்துவமற்ற மதம். வெறுப்பு, பயங்கரவாதம், சுரண்டல், கொள்ளை ஆகியவற்றின் ஆதரவோடு ஒடுக்குமுறையின் முன்னோடியாக திகழும் இந்து மதம், தனது ஆற்றல் மிக்க எதிரிகள் அனைத்தையும் கடத்தி ஆரியமயமாக்குவதன் மூலமே பல்லாண்டு காலமாக நிலைத்து வருகிறது. இந்தத் திட்டமே உள்வாங்குதல் என்று அழைக்கப்படுகிறது. ஆரிய படையெடுப்பினை எதிர்த்து தனது தாய் நாட்டை காக்கப் போரிட்டபோது வேத படையெடுப்பாளரான போர்த்தலைவன் இந்திரனால் கொல்லப்பட்ட பூர்வகுடி நாயகனான கிருஷ்ணனை பார்ப்பனியம் ஆரியமயமாக்கியது. நாட்டுப்பற்றுமிக்க கிருஷ்ணா, வெளிநாட்டு ஊடுருவாளரான இந்திரனை எதிர்த்து பத்தாயிரம் போர் வீரர்களுடன் போரிட்டார். இறுதியில் எரித்துக் கொல்லப்பட்டார். கர்ப்பமாக இருந்த அவரது மனைவிகள் ஆரிய போர்த் தலைவனான இந்திரனால் கொல்லப்பட்டனர். பிற்காலத்தில் இந்த புகழ் பெற்ற மண்ணின் தலைவனின் பெயரால், சதுர்வர்ண தத்துவம் கீதையில் போதிக்கப்பட்டது. ரிக் வேத காலத்தின் தொடக்கத்தில், பெரும்பான்மை மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த பூர்வகுடித் தலைவனான மனு ஒரு கிராம தலைவராக இருந்தார். அவரது ஆளுமை கடத்தப்பட்டது. பிருகு என்ற பார்ப்பனன் அளித்த சட்டங்கள், மனுவின் பெயரில் எழுதப்பட்டு, மனு ஸ்மிரிதியில் சட்டமாக்கப்பட்டு, இந்தியாவின் பூர்வகுடி மக்களை சுரண்டி அடிமைப்படுத்தப் பிரச்சாரம் செய்யப்பட்டன. மண்ணின் போர்ப்படையை வீழ்த்தவும், இந்திய உழவர்களிடையே பார்ப்பனியத்தை பிரச்சாரம் செய்யவும் நடைமுறைப்படுத்தவும் அவர் ஆரியமயமாக்கப்பட்டார். புரட்சியாளரான அசுர மன்னன் பாலாவின் மகனான அக்னியை, இந்திரனின் முகாமில் சேர்ந்து, நாட்டிற்கு துரோகியாக நடிக்க காரணமாக இருந்தது மனுவாகும். ஆரிய காலத்திற்கு முந்தைய சிந்து-ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதிகளில் நிலவிய, மண்ணின் மதமான பௌத்தத்தை பிரச்சாரம் செய்த, பழமையான சிரமண பண்பாட்டை ஏற்றுக் கொண்ட சாக்கிய பழங்குடியைச் சேர்ந்த கவுதமரையும் உள்வாங்கியது. புத்தர் இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் 9-ஆவது அவதாரமாக ஆக்கப்பட்டுள்ளார். பார்ப்பனியம் முகமது மற்றும் இஸ்லாத்தையும் கூட கடத்த முயற்சித்தது (அலோபனிஷத், பவிஷ்ய பூரண் ஆகியவற்றை பார்க்கவும்) சூத்திரரான சிவாஜி சிவசேனை உருவாக்கியதன் மூலம் மிக செறிவாக இந்துமயமாக்கப்பட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கரை இந்துமயமாக்கி 'ஒரு உண்மையான ஆரியன்” எனவும், விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் (கல்கி) எனவும் வழங்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

இப்படிப்பட்ட ஆரியப் படையெடுப்பிற்கும், பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கும் தமிழர் வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஏராளமான ஆதாரங்களில் சிலவற்றை ஏற்கனவே பார்த்தோம். பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிடர் என்ற சொல்லும் இப்படித்தான் ஆரியர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

periyar_403திராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். அந்த நூலின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் கி.மு.வில் இராஜதரங்கினி காலத்துக்கு முன்பாக சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட மனுதரும சாஸ்திரத்தில் திராவிடர் என்றால் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்த அந்த மனு சாஸ்திரத்தை 1919 இல் திருவைந்திரபுரம், கோமாண்டூர் இராமாநுஜாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்து ‘அசல் மனுதரும சாஸ்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த நூலில் திராவிடர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

துவிஜாதிகளுக்கு தன்ஜாதி ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயந முதலிய சம்ஸ்காரம் இல்லாமற்போனால் காயத்திரியில்லாதவரான விராத்திய ஜாதிகளாகச் சொல்லப் படுகிறார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 20)

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத்தன்மையையடைந்தார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பௌண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்கனைவரும் மேற்சொன்னபடி சூத்திரர்களாய்விட்டார்கள். (அத்தியாயம் 10; ஸ்லோகம் 44)

மேற்கண்ட ஸ்லோகங்களின்படி க்ஷத்திரிய ஜாதிகளுக்கு என விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தவறியவர்களும் - க்ஷத்திரிய ஜாதிகென்ற வரையறைகளை மீறியவர்களும் சூத்திரர்கள் ஆகி விடுகிறார்கள். அந்த சூத்திரர்கள் திராவிடர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஆண்ட தேசங்களில் ஒன்று திராவிடம் என்றுதான் மனுதருமம் கூறியுள்ளது.

மனு தர்மத்தையோ, ஸ்லோகங்களையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. புராணங்களையும் சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து, ஆய்ந்தறிந்து, “புராணங்களில் வரலாற்று உண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன” என்று கண்டுபிடித்த வரலாற்றுப் பேராசிரியருக்கு மேற்கண்ட அசல் மனுதருமத்தில் இருக்கும் வரலாற்று உண்மை தெரியாதது எப்படி?

சாஸ்திரத்தில் திராவிடர் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிப்பதைப் பார்த்தோம். வரலாற்றிலும் அப்படி ஒரு சான்று உள்ளது. சமணமதம் தமிழ்நாட்டுக்குள் வந்து, வளர்ந்து, இந்து மதத்தில் தேய்ந்து, மறைந்த வரலாற்றை மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் ‘சமணமும் தமிழும்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். கிறிஸ்து பிறப்புக்கு முன்பே தமிழ்நாட்டுக்குள் சமணம் வந்துவிட்டது. ஆரம்ப காலங்களில் இந்து மதத்துக்கு எதிராகவே சமணம் இருந்தது. பார்ப்பனர்களுக்கு எதிரான - கடவுளுக்கு எதிரான மதமாகவே சமணம் இருந்தது. சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். எனவே கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சமண மதத்தில் நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என நான்கு பிரிவுகள் உண்டாயின. அந்தப் பிரிவுகளில் ஒன்றான நந்திகணத்திலிருந்து திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் உருவானது என்று மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது. (EC.Vol.V.Hassan Taluk, 131, Arsikera Tq, IEC. Vol IV. Gundlupet Tq.27)

மேலும் கி.பி. 470 ஆண்டு சமண சமயத்தவரான வச்சிரநந்தி என்பவர் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார். சமண மதத்தின் இந்த திராவிட சங்கம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது என்றும், கி.பி 900 வரை அந்த திராவிட சங்கத்தைச் சேர்ந்ததுறவிகள் வாழ்ந்தனர் என்றும் வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரம் காட்டி மயிலை சீனி.வேங்கடசாமி எழுதியுள்ளார். ஆக 5ம் நூற்றாண்டின் இறுதிவரைகூட திராவிடர் என்ற சொல் ஆரியர்களுக்கு - பார்ப்பனர்களுக்கு - இந்து மதத்துக்கு எதிரான சொல்லாகவே இருந்திருக்கிறது. பேராசிரியர் ஜெயராமன் குறிப்பிடும் காஷ்மீரத்து இராஜதரங்கினி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்திருக்கும் என நம்பப்படும் நூலாகும்.

தமிழ்நாட்டு வரலாற்றை ஓரளவு மேலோட்டமாகப் படித்தாலே 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது களப்பிரர்கள் காலத்தில் அடங்கியிருந்த பார்ப்பனர்கள் அதன் பிறகு முழுவீச்சில் செயல்பட்டு வெகு வேகமாக தன் பழைய அடிமைகளாகிய தமிழ்மன்னர்களையும், தமிழ்ச்சமுதாயத்தையும் முழுமையாக ஆரியமயமாக்கினர். இக்கால கட்டத்தில்தான் ஆதிசங்கரர் என்ற நம்பூதிரிப் பார்ப்பான் தோன்றி இந்துமத மறுமலர்ச்சிக் காலம் உருவானது. வாழ்ந்தால் பார்ப்பன அடிமையாக - இந்துவாக வாழ வேண்டும். அல்லது அழிய வேண்டும் என்ற நெருக்கடியை பார்ப்பனர்கள் உருவாக்கினர். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் அனைவரும் பார்ப்பனதாசர்களாக பார்ப்பனர்களின் தளபதிகளாகச் செயல்பட்டு ஆரியத்துக்கு எதிரான அனைத்தையும் அழித்தனர். ஆரியத்துக்கு எதிரான சமண, புத்த மதங்கள் அழிக்கப்பட்டன. சமணர்களும் பௌத்தர்களும் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். கழுவேற்றப்பட்டனர். புத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக்கப்பட்டன. அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ஆரியத்துக்கு எதிரானவர்களின் அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. அவை ஆரியர்களின் அடையாளங்களாக மாற்றப்பட்டன.

தற்காலத்தில் ஆரியர்களின் பாசறையாக இயங்குவது ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கரமடம். அந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் சின்னம் ஸ்வஸ்திக். நான் ஆரிய இனத்தைச் சேர்ந்தவன் என இறுமாப்புடன் பெருமையாகப்பேசி வாழ்ந்த கொடுங்கோலன் ஹிட்லரின் சின்னம் ஸ்வஸ்திக். அந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் சிறு மாற்றத்தைச் செய்து தமிழ்நாட்டில் இந்துமுன்னணி இராமகோபலனும் தனது அமைப்பின் அடையாளமாக வைத்திருப்பது ஸ்வஸ்திக். இந்துமத்தின் அடையாளமாகவும், ஆரியக்கொடுங்கோலனின் அடையாளமாகவும் இந்துப்பாசிச, காவி பயங்கரவாதத்தின் அடையாளமாகவும் பல நூற்றாண்டுகளாக நாம் அறிந்திருக்கும் இந்த ஸ்வஸ்திக் சின்னம் உண்மையில் இந்து மதத்திற்கு எதிரான சமணமதத்தின் சின்னமாகும். ஸ்வஸ்திகம் என்றும் பிறவிச்சக்கரம் என்றும் தமிழ் இலக்கியங்களில் இந்த சமணச் சின்னத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மதுரையில் ஆனைமலைப் பகுதிகளில் உள்ள சமணர்களின் பாறைச் சிற்பங்கள் மற்றும் பிராமிக் கல்வெட்டுக்களிலும் இச்சின்னம் காணப்படுகிறது.

இதேபோல ‘சங்கம்’ என்ற சொல் ‘புத்தர்களின் குழு’ அல்லது ‘புத்த துறவிகளின் கூட்டம்’ என்ற பொருளில்தான் வழங்கிவந்தது. ஆனால் ஆனால் இந்து சமய மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு நம் காலத்தில் சங்கம் என்ற சொல் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தான் குறிக்கிறது. ‘ராஷ்ட்ரியம் ஸ்வயம் சேவக் சங்,’ ‘சங் பரிவார்’ என புத்தர்களின் ‘சங்கம்’ பார்ப்பன ஆதிக்கத்திற்காக உழைக்கும் ‘சங்’ ஆகிவிட்டது.

புத்தருக்கு ‘சாஸ்தா’ என்ற ஒரு பெயரும் உண்டு. அமரகோசம், நாமலிங்கானசாசனம் போன்ற வடமொழி நிகண்டுகளில் இதற்கான ஆதாரம் உண்டு. அந்த ‘சாஸ்த்தா’ என்ற சொல்லின் திரிபு ‘சாத்தன்’ எனப்படும். தமிழில் சங்க இலக்கியங்களில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சாத்தனார் என்றே அழைக்கப்பட்டுள்ளனர். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரைப் போல பல புத்த சமய இலக்கியவாதிகள் சாத்தன் என்ற பெயரில் வாழ்ந்திருக்கின்றனர். இன்றும் நம் தமிழ்நாட்டு கிராமங்களில் சாத்தப்பன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இன்று பல தலைமுறைகளாக நமக்கு ‘சாஸ்தா’ என்றால் ஹரி ஹர புத்திரன் ஐயப்பனைத் தானே தெரியும்.

புத்தருக்கு ‘விநாயகன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் விநாயகர் கோவிலோ விநாயகர் வழிபாடோ கிடையாது என்று மறைமலைஅடிகளும் கருத்துத் தெரிவித்துள்ளார். வடமொழி நிகண்டுகளில் ‘விநாயகன்’ என்ற பெயரில் புத்தர் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. அதுபோல போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம் வந்தது என்பதால் புத்த மதத்தினர் போதி மரத்தையும் முக்கியமானதாகக் கருதினர். போதிமரம் என்றால் வேறொன்றுமில்லை. அரச மரம். சங்க இலக்கியங்களில் இளம்போதியர் என்ற பெயரில் ஒரு புலவர் வாழ்ந்திருக்கிறார். புத்த மதத்தினரைக் குறிக்க சில சங்க இலக்கிய வரிகளில் ‘போதியர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் போதி மரத்தை அதாவது அரச மரத்தை சுற்றிவரும் வழக்கமுள்ளவர் என்று ஒரு காரணத்தைச் சொல்லி புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அரச மரத்தை வலம் வரும் வழக்கத்தைக் கடைபிடித்துவந்தனர். ஆனால் இன்று ‘விநாயகன்’ என்ற சொல் புத்த மதத்துக்கு நேர் எதிரான இந்து மதத்தின் காவிக் கூட்டத்தின் காலிக்கூட்டத்தின் அடையாளமாகவும், அரசமரத்தைச் சுற்றிவரும் வழக்கம் இந்துமத மூடநம்பிக்கையின் சின்னமாகவும் மாறிவிட்டது.

இந்துமதத்திற்கு மாற்றாக இருந்த கிறிஸ்தவ மதமும், இஸ்லாம் மார்க்கமும் தமிழ்நாட்டில் கி.மு. காலத்திலிருந்து இயங்கிவந்த ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற மதங்களைப் போல முற்றாக அழிந்து விடாமல் ஓரளவு தாக்குப்பிடித்து இயங்கிவருகின்றன. ஆனால் இந்து மதத்தின் முதுகெலும்பான - அடிநாதமான வர்ணாஸ்ரமத்தை - ஜாதிப் பிரிவினைகளை ஏற்றுக்கொண்டு, தத்தம் மதங்களிலும் பார்ப்பன ஆதிக்கத்தை அனுமதித்து, ஆரியச் சுரண்டலுக்கு தத்தம் மதங்களையும் பலியாக்கிவிட்டுத்தான் இந்தியாவில் நீடித்து உயிர் வாழ்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட ஆரிய ஆட்டம் இன்னும் அடங்கவில்லை. மார்க்சின் பொதுவுடைமைத் தத்துவம்கூட பார்ப்பன மண்ணில் செரிக்கப்பட்டுவிட்டது என்பதைத்தான் அறிஞர் எஸ்.கே.பிஸ்வாஸ் தனது நூலில் நுணுக்கமாக ஆய்ந்துள்ளார்.

பல நூற்றாண்டாக நடந்துவரும் இந்து சமய வெறியாட்டத்தில் அதை எதிர்த்த அனைத்தும் அழிக்கப்பட்டன; உள்வாங்கப்பட்டன. அந்த வரிசையில்தான் ‘திராவிடர்’ என்ற சொல்லும் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பார்ப்பனர்களால் அவர்களது அடையாளமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றி பெறாமல் போய்விட்டது. ஏதோ ஒரு வரலாற்று நூலிலும் பார்ப்பனர்கள் இயற்றிய ஓரிரு நூல்களிலும், ஆதி சங்கரன் போன்றோரின் வரிகளிலும் அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர்கள் முயன்று, தோற்றுவிட்ட ஒரு செயலை மாயவரத்துக் குணாவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ரகஸ்ய கார்யவாஹ்களும் தற்போது மீண்டும் தேடிப்பிடித்து பார்ப்பான் காலடியில் வெற்றிக்கனிகளைக் கொட்டிட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

அந்த முயற்சிகளில் நேர்மை இல்லை என்பதை அவர்களது ‘மனு என்பவன் திராவிட அரசன்’ என்ற ஆய்விலேயே பார்த்தோம். அந்த ஆய்வின் பித்தலாட்டத்தை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று கிடைத்துள்ளது. “நம் தமிழ் மன்னர்களான சோழர்கள் மனுவின் வாரிசுகளே,” “ சோழர்களின் மூத்தவர், முன்னோர் மனு ஆவான்” என்பதற்கு ஒரு சான்று கிடைத்துள்ளது. ஆதாரமாக, சங்க இலக்கிய வரிகளை இதில் மேற்கோள் காட்டவில்லை. லீடன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்களிலேயே இதற்கான சான்று உள்ளது. பிற்காலச் சோழர்களையோ அல்லது தெலுங்குச் சோழர்களையோ அல்லது மனுநீதிச் சோழனையோ சொல்லவில்லை. காவிரிக்குக் கரை கட்டிய கரிகால் பெருவளத்தான் என்ற பண்டைச்சோழனே, முற்காலச்சோழனே மனுவின் வாரிசுதான் என ஆனைமங்கல பெரிய செப்பேடு தெரிவிக்கிறது. மயிலை சீனி.வேங்கடசாமி தனது ‘பௌத்தமும் தமிழும்’ என்ற நூலில் அந்த லீடன் சாசனமான ‘ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்களை அப்படியே பதிவு செய்துள்ளார்.

சங்க இலக்கியங்களைப் போல வரலாற்றுச் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் ஆரியம் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இந்த ஆனைமங்கலச் செப்பேட்டைச் சான்றாகக் கொண்டு மனு தர்மம் என்பது சோழர்களின் தத்துவம், தமிழர்களின் தத்துவம், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் அனைவரும் பார்ப்பனர்களே என்றெல்லாம்கூட வரலாறு எழுதலாம். மனு தர்மத்திலேயே ‘திராவிடன்’ என்றால் சத்திரியன், சூத்திரன் என்று சொல்லிவிட்டான். எனவே நாங்கள் ‘திராவிடர்கள்’ எனவும் எழுதலாம். பெங்களுர் குணாவின் புதிய அடிமைகளைப் போல நம்மாலும் மயிர்பிளக்கும் சொல் ஆராய்ச்சிகளிலும், பார்ப்பனத்தனமான வரலாற்று ஆராய்ச்சிகளிலும் ஈடுபடமுடியும் என்பதற்கு ஒரு சுருக்கமான முன்னுரை தான் (Synopsis) மேற்கண்ட பத்திகள்.

12 ஆம் நூற்றாண்டில் பார்ப்பனர்கள் தம்மை எப்படி அடையாளப்படுத்தினார்கள் என ஆராயத் தெரிந்தவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனர்கள் தம்மை தமிழர்களாக, அந்தணர்களாக அடையாளப்படுத்தப்படுத்துவதைப் பார்க்கமுடியவில்லை. அமிதாப் பச்சனுக்கும் தங்கர்பச்சனுக்கும் பொதுவாக பச்சன் என்ற சொல் வருவதால் இருவரும் ஒரே இனத்தவர் என்பது போன்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, தற்போது ஆரியன் என்பதற்கும், அந்தணன் என்பதற்கும் யார் உரிமை கோருகிறார்கள் எனப் பாருங்கள். இன்றைய காலகட்டத்தின் அந்த ஆரியத்தை எதிர்த்துப் போரிடும் தத்துவம் எது எனப் பாருங்கள். “அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்” என்று காஞ்சி சங்கராச்சாரி நூல் வெளியிடுகிறான். தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்து நாட்டைக் கெடுத்த அனைத்துப் பார்ப்பனர்களைப் பற்றியும் பெருமையாக அதில் பட்டியலிடுகிறான். இப்போதும் இந்த வாரமும் ஆனந்தவிகடன் இதழில் ஸ்ரீரங்கப் பார்ப்பான் வாலி “நினைவு நாடாக்கள்” என்ற பெயரில் ஒரு தொடர் எழுதுகிறான். அதில் “நான் ஒரு அந்தணன்” எனப் பெருமையுடன் பதிவு செய்துள்ளான். செத்துப்போன சங்கராச்சாரி இந்து தர்மங்கள் என்ற தனது நூலில் திராவிடர் என்ற சொல்லைக் கண்டு அலறுவதைப் பாருங்கள்,

“மேனாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ஆரியர் என்ற சொல்லால் இந்தியாவிலுள்ள பிராமணர்களைக் குறிக்கிறார்கள். திராவிடர் என்ற சொல்லால் பிராமணரல்லாதவரைக் குறிக்கிறார்கள் இப்படி ஆரியர் - திராவிடர் என்ற பேதத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பிராமணர் - பிராமணரல்லாதார் என்ற வேற்றுமையை வளர்த்து அதன்மூலம் இந்து மதத்தினுடைய ஒற்றுமைக்கே உலை வைக்க முயற்சி செய்கிறார்கள்.” (வானதி பதிப்பகம் இந்து தர்மங்கள் 6-ஆம்பதிப்பு பக்கம் 94)

இந்து மத ஒற்றுமைக்காக சங்கராச்சாரி துடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பேராசிரியர் ஜெயராமனும் பெ.மணியரசனும் துடிப்பது என்? தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டத்தின் இணையாசிரியர் வெங்கட்ராமன் ஒரு பார்ப்பனர் என்பதால் ஒரு இனத்தின் வரலாற்றையே மாற்ற முனைவது ஏன்? அந்தணர் என்றும் ஆரியர் என்றும் நம் கண்முன்னே அடையாளப்படுத்திக்கொள்ளும் பார்ப்பனர்களை எதிர்த்து - அவர்களின் ஆயுதமான மனுதர்மம், சாதி, இந்துமதம், கடவுள்கள், இராமாயணம், மகாபாரதம், சமஸ்கிருதம், இந்தி, இந்தியா ஆகியவற்றை எதிர்த்து தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் தொடுத்த போர்கள் யாவை? அந்தப் போர்களில் எந்த விதத்தில் வீரியம் குறைந்த தன்மையில் திராவிடர் என்ற கருத்தியல் போராடியது? அந்தப் பட்டியலைப் போடுங்கள். எந்தக் கருத்தியல் தமிழனை அடிமைத் தளையிலிருந்து மீட்குமோ அதையே நம் போர்க்கருவியாக்கலாம்.

திராவிடர் என்ற கருத்தாக்கம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், பௌத்தர் போன்ற ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை ஒன்றிணைத்து மேற்கண்ட அனைத்து சமுதாயத்திற்கும் ஒட்டுமொத்த எதிரிகளான பார்ப்பனர்களை அடக்கிவைத்து, அவர்களது ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி திராவிடர் சமுதாயத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது என்பதற்கும், திராவிடர் என்ற சொல்லை பெரியார் எதற்காகப் பயன்படுத்தினார் என்பதற்கும் பக்கம்பக்கமாக பல்வேறு தோழர்கள் பல கட்டுரைகளிலும், நூல்களிலும் விளக்கங்களைக் கொடுத்துவிட்டார்கள். ‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகளுக்கு மறுப்பு’, ‘திராவிடம் - தமிழ்தேசியம் ஒரு விளக்கம்’ ஆகிய பெரியார் தி.க.வின் நூல்களுக்கு இன்றுவரை நேர்மையான எந்த பதிலும் வரவில்லை. மாயவரத்து குணாகூட தனது இனவியல் கட்டுரையின் தொடக்கத்தில் திராவிடர் என்ற கருத்தாக்கம் சமூகத்தளத்தில் உரிமைகளைப் பெற்றுத்தந்தது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். பெரியாருக்குப்பின் பெரியார் என்ற மணியரசனின் கட்டுரையில்,

“பெரியாரின் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக் கருத்துகள் மதிப்பு மிக்கவை. சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவற்றில் அவருடைய கருத்துகள் சாரத்தில் முற்போக்கானவை. தமிழ்நாடு விடுதலை குறித்து அவர் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துகள் தமிழ்த் தேச விடுதலைக் கருத்துகளுக்குத் துணை செய்பவை. அவரது கடவுள் மறுப்புப் பரப்புரைகளும் மூட நம்பிக்கை எதிர்ப்புப் போராட்டங்களும் தமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பெருந்திரளான மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டு சேர்த்தன. கணிசமான மக்கள் சக்தியைத் திரட்டியிருந்த அவர், அரசுப் பதவிக்கு ஆசைப்படாமல் சமூக-அரசியல் பணியாற்றியது அரிய செயல்.”

என்று கூறியுள்ளார். சமூகத்தளத்திற்குத்தானே திராவிடர் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டது. அந்த சமூகத்தளத்தில் சரியாகத்தானே திராவிடம் இயங்கியுள்ளது. அதை மணியரசன் கும்பலே ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு என்ன மயிர் பிளக்கும் ஆராய்ச்சி? சொல்லாராய்ச்சிகளின் யோக்கியதையைப் பார்த்துவிட்டோம். அடுத்த கட்ட ஆராய்ச்சிகளை இனி பார்ப்போம்.

 “பெரியாரிடம் கோட்பாட்டுக் குறைபாடுகளும் உத்திகளில் போதாமைகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.”

“இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை.”

இந்தக் கோட்பாட்டுக் கோமான்கள், சமூக அறிவியல் விஞ்ஞானத்தாலும் தமது திறமையான உத்திகளாலும் இந்த தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒரு குண்டூசி அளவாவது, ஒரு குண்டுமணி அளவாவது இன்றுவரை பயன்பட்டிருக்கிறார்களா? அதற்கான பட்டியல், மன்னிக்கவும் ஒரு சிறு குறிப்பாவது இருக்கிறதா? தேசிய இன விடுதலை நோக்கிலான புள்ளிவிபரங்கள் சேகரிப்பு, ஆவணங்கள் உருவாக்கம் எதாவது நடந்திருக்கிறதா? எதைச் சொல்லிப் பிழைக்கிறோமோ அந்த தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான ஒரு சிறு நகர்வாவது நடந்துள்ளதா? எதுவுமே இல்லாமல், களப்பணியில் இறங்காமல் காகிதப்பணியில்கூட தேவையானவற்றைச் செய்யாமல், தமிழர் சமுதாயத்தின் வரலாற்றில் மறுக்கமுடியாத முற்போக்கான மாற்றங்களைச் செய்த திராவிடர் என்ற கருத்தியலைக் கொச்சைப்படுத்துவதிலேயே காலத்தை வீணடிப்பது ஏன்?

19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தேசியம், தேசிய இனம் என்பவை போன்ற வரையறைகளே உலகில் இல்லை. அப்படிப்பட்ட வரையறைகளைக் கொடுத்த முதலாளித்துவ நாடுகளிலோ, பாட்டாளி வர்க்க சோசலிச நாடுகளிலோ உலகில் வேறெங்குமோ “உழைக்காமல் சுரண்டிப் பிழைப்பதற்கு பிறவி அடிப்படையிலேயே உரிமை பெற்ற ஒரு இனம் இருந்ததில்லை” உலகின் அனைத்து பாகங்களிலும் ஒடுக்கும் தேசிய இனம், ஒடுக்கப்படும் தேசிய இனம் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. தேசிய இனம் என்ற அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நடந்தால் அதை எதிர்த்து அடக்கும் தேசியஇனத்தை எதிர்கொண்டு போராடலாம். நிற அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நடந்தால், நிற அடிப்படையில்தான் ஒடுக்கப்படும் இனம் ஒன்றிணைய முடியும். நிற அடிப்படையில்தான் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு போராடமுடியும். பொருளாதார அடிப்படையில் ஒடுக்கப்பட்டால் பொருளாதார அடிப்படையில் வர்க்கப்புரட்சி நடக்கும். இதுபற்றி தமிழ்ச்சான்றோர் பேரவையின் செய்திமடலில் இளவேனில் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் குறிப்பில்,

“இனம் என்கிற கருதுகோளில் இருவித தன்மைகள் உண்டு. ஒன்று நிற இனம். மற்றொன்று தேசிய இனம். தேசிய இனம் என்கிற கொள்கை புதிதாக அரும்பும் முதலாளித்துவ எழுச்சியுடன் தொடர்புடையது. தேசிய இனக்கொள்கைக்கு முன்பும் இப்போதும் கூட ஆதிக்க சக்திகளின் வலிமைவாய்ந்த கொள்கையாய் விளங்குவது நிற இனக்கொள்கையே. காலனிய ஆதிக்கத்திலிருந்தும் முடியரசின் பிடியிலிருந்தும் விடுதலைபெற விரும்பும் தேசிய இனங்களின் போராட்டங்களைக் கூட நிறவெறிக் கொள்கை நசுக்கிவிடத் துடிக்கிறது. வெள்ளை நிறத்தவர் உயர்ந்த இனத்தவர். மஞ்சள் நிறத்தவரும், கருப்பு நிறத்தவரும் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து இன்று வரையிலும் முன்நிறுத்தப்படுகிறது.

மேற்குலகில் அய்ரோப்பிய ஆதிக்கச்சக்திகளுக்கு உதவும் இந்த நிற இனக்கொள்கை இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உதவுகிறது. வருணாசிரமதர்மம் என்று இன்றும் இங்கே அது போற்றப்படுகிறது. நீ என்ன சாதி என்று கேட்பதற்கு பதிலாக நீ என்ன வர்ணம் என்று பல கிராமங்களில் இப்போதும் கேட்கப்படுவது உண்டு.

பார்ப்பனர் அல்லாதார் யாவரும் தாழ்ந்தவர்களே என்பதுதான் வேதங்களும், கீதா உபதேசங்களும், மனுதர்மங்களும் வலியுறுத்தும் கோட்பாடாகும். உயர் வர்ணத்தவரான பார்ப்பனர்களே சாத்திரப்படியும், சமூக ஏற்பாட்டின்படியும் வணக்கத்திற்குரியவர்கள்: தெய்வீக உரிமைபெற்றவர்கள் என்கிற சனாதானக்கருத்தை அரசியல் சாசனத்தால் கூட மீற முடிவதில்லை.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறு ஆகும் என்றால் இந்தியாவில் அது பார்ப்பனர் - பார்பனரல்லாதார் போராட்டங்களாகவும் அமைந்திருக்கின்றன. பார்ப்பனியம் அல்லது மனுதர்மம் அல்லது நிற இனக்கொள்கை என்னும் வர்ணாச்சிரமதர்மத்திற்கு எதிராக பார்ப்பனர்களால் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் போராட்ட வடிவமாக எழுந்ததுதான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அல்லது திராவிடர் இயக்கம்.

திராவிடர் என்கிற நிலைப்பாடு ஒரு தேசிய இனத்தைக் குறிப்பதாக பெரியாரோ, திராவிட இயக்கமோ சொன்னதில்லை. நிறபேதக் கொள்கையின் எதிர்ப்பு நிலையில் பார்ப்பன ஆதிக்க சக்திகளையும் பார்ப்பனியச் சிந்தனைகளையும் மறுக்கும் எதிரணி- எதிரினம் என்கிற பொருளிளேயே திராவிட இனம் என்கிற கருதுகோள் முன்வைக்கப்படுகிறது. பார்ப்பனிய நிறவெறிக்கொள்கையின் அவலங்களையும், அபாயங்களையும் மூடிமறைக்க விரும்புவோர்க்கு திராவிட இனம் என்பது அறிவியல் அடிப்படை அற்றதாகவே தோன்றும்.”

என்று மிகத்தெளிவாக பார்ப்பன மனவியல் அறிவியல் அறிஞர்களை அம்பலப்படுத்துகிறார் இளவேனில். அந்த அறிவியலாளர்கள் சொல்லும் தேசம், தேசிய இனம், தேசியம் குறித்த அறிவியல் பார்வை பற்றியும் பார்ப்போம்.

தேசம் என்றால் என்ன?

வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, நிலையான வாழ்க்கையினைப் பெற்ற மக்கள்சமூகம், மக்கள் அனைவராலும் வழங்கப்படும் பொதுமொழி, பொருளாதாரப் பிணைப்பும் ஆட்சியும், பொதுவான நோக்கங்களும் உறவுகளும் ஏற்படுத்தித்தரும் மனஇயல்பு ஆகியவரை வரலாற்று அடிப்படையில் தொடர்நிலைகளாக இணைந்து உருவாவதே ‘தேசம்’ (Country Of State)

தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு பொது மொழி, பொதுபிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று ரீதியாக உருவாகிய மக்கள் சமூகமே தேசியஇனம்.
ஆதாரம்: ‘சோவியத் யூனியனின் தேசங்களும், தேசிய இனங்களும்’ நூல்

தேசியம் என்றால் என்ன? (Nationalism or Nationality)

 ஒருவனால் தனது நாட்டின்மீது மதச்சார்பற்ற நிலையில் உணர்வுப்பூர்வமாக வைக்கப்படும் பற்று.   
ஆதாரம் : என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா 1981

பார்ப்பன மனவியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டும் அறிவியல் பூர்வமான சமூக வரையறகள்தான் இவை. தேசிய இனம் என்பதற்கு பொதுமொழி, பொதுவான பொருளாதார வாழ்வு, பொது பிரதேசம் என்பவற்றோடு வரையறைகள் முடிந்துவிடவில்லை.

“பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று ரீதியாக உருவாகிய மக்கள் சமூகம்” என்ற வரிகள் முக்கியமாக உள்ளன. தமிழ்த்தேசியம் என்ற வரையறையில் பொதுவான பண்பாடோ, பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்போ எங்கே இருக்கிறது? ஒவ்வொரு சாதியும் இங்கே ஒவ்வொரு தேசிய இனம் என்ற அளவில் வேறுபட்டுத்தானே நிற்கிறது?

தேசிய இனங்களுக்கு இடையேகூட கொள்வினை, கொடுப்பினைகள் நடந்துவிடுகின்றன. சாதிகளுக்குள் திருமண உறவுகள் இயல்பாக இருக்கிறதா? விவேக் ஓபராய் குடும்பமும் தமிழ்நாட்டு மன்றாடியார்(கவுண்டர்) குடும்பமும் திருமண உறவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் மன்றாடியார் வீட்டுக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழையக்கூட முடியாது. பிறப்பு முதல் இறப்பு வரை, இன்னும் சொல்லப்போனால் கற்பனையான சொர்க்கம், நரகம் ஆகியவற்றிற்குச் சென்றடையும் வரைகூட ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனி பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வெவ்வேறுபட்ட அங்கீகாரங்கள் என தமிழ்ச் சமுதாயம் பல்வேறு தேசிய இனங்களாகப் பிரிந்துதானே உள்ளது. தில்லைவாழ் அந்தணர்களின் பண்பாடும், மனஇயல்பும் ஆறுமுகநாவலரின் சொந்தங்களின் பண்பாடும், மனஇயல்பும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்?

“நாங்கள் அந்தணர்கள்” இறுமாப்புப் பேசிக்கொண்டு ஆதிக்கத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சங்கராச்சாரிக்கும் - உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்ற பின்பும் தான் அமர வேண்டிய உள்ளாட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரே அடிப்படையில் மொழி அடிப்படையில் தேசிய இன விடுதலை கோருவதானால் அந்த தேசிய இன விடுதலை யாருக்கு இலாபமாக இருக்கும்? அப்படிப்பட்ட முயற்சி எப்படி அறிவுப்பூர்வமானதாக இருக்கும்?

பெரியார் தேசியம் குறித்தும் தேசம் குறித்தும் பேசிய மிக விரிவான உரை ஒன்று குடி அரசில் உள்ளது. 1932 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு கொழும்பு வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை போன்ற பல இடங்களில் பேசிய உரைகளின் தொகுப்பு இது.

தேசியம்

தேசியம், தேசியம் என்பதும் முற்கூறியவைகளை போன்ற ஒரு போலி உணர்ச்சிதான். ஏனெனில் தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும் அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவிகளால் கற்பிக்கப்பட்ட சூக்ஷியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தேசம் என்றால் எது?

தேசம் என்றால் எது? உலகப் பரப்பு ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன. இவைதவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும் மாகாணத்திலும் பல மாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்பிரிவுகளும், பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வக் கட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசிய கொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாது என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டும் என்றும் கருதிக் கொண்டிருப்பதாகும்.

இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய் பார்க்கின்றோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ் நிலை - மேல் நிலை, கஷ்டப் படுகின்றவன் - கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தை பிரித்துக் கொண்டு தங்களுக்கென தனித்த தேசம் தேசியம் என்ற ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவது என்பது எனக்கு புரியவில்லை. நமது தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதிலுள்ள மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த தேசம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது.

நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றார்களோ அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்து வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்த விதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கின்றோமே, அந்த விதமான துயரம் கொண்ட மக்கள் அன்னிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள். நம்முடைய தேசியம் என்பதிலேயே எந்த விதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும், செல்வவான்களாகவும் அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொது ஜனங்களை பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி பட்டினி போட்டு வதைத்து தாங்கள் பெருஞ் செல்வம் சேர்த்து வாழ்ந்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ அது போலத்தான் அன்னிய தேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டு பெரும்பான்மையான மக்களை கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கையைக் கொண்டு எந்த லட்சியத்தைக் கொண்டு உலகப் பரப்பில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன்.

துருக்கி தேசத்துக்கும், இந்தியா தேசத்திற்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? ஹைதராபாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால் ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே தேசம் தேசாபிமானம் என்கின்ற வார்த்தைகளும் கடவுள் மதம் என்பது போன்றே ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்கு ஏற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்ல வேண்டியிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு தங்கள் தங்கள் முதலை பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை - பாமர மக்களை பலி கொடுப்பதற்காக கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

உதாரணமாக இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா நியூயார்க் தேச முதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்று தங்கள் செல்வத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டால் அல்லது நியூயார்க் முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேசத்துக்கு முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப் பதாயிருந்தால் இங்கிலாந்து தேசத்து முதலாளிகள் இங்கிலாந்து தேசத்து ஏழைமக்களையும் பாமர மக்களையும் பார்த்து “ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே, தேசாபிமானிகளே தேசத்துக்கு நெருக்கடி வந்து விட்டது. இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்” என்று கூப்பாடு போடுவார்கள். கூலிகளை அமர்த்தியும் வயிற்றுப் பிழைப்பு பத்திரிகைகாரர்களுக்கு எலும்பு போட்டும் பிரசாரம் செய்விப்பார்கள்.

இது போலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடி நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமர மக்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்பதாகவும், கூவிக் கொண்டு கூலி கொடுத்து பிரசாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழை மக்களும் மற்றும் சாப்பாட்டிற்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொல்வார்கள் சிறைப்பிடிப்பதின் மூலம் இரு தேச சிறையையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால் இரு கக்ஷியிலும் பத்து லக்ஷக்கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் ராஜியாகப் போயோ அல்லது யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.

ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும், அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்கு சுடுகாடும் அவர்கள் பெண் ஜாதிகளுக்கு சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசித்துப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நாடாவதற்கும் அன்னிய ஆக்ஷியைத் துரத்துவதற்கும் அமெரிக்க ஏழைமக்கள் தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்பதை அமெரிக்கா விடுதலைச் சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்கும் குறைந்ததல்ல.

தோழர்களே! அமெரிக்கா தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்கா அன்னிய ஆக்ஷியை ஒழித்தாலும் ஒரு அரசனையே விரட்டி விட்டு “குடிகளின் ஆக்ஷி” ஏற்படுத்திக் கொண்டதாலும் ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்பதை மற்றொரு தரம் யோசித்துப் பாருங்கள்.

இந்த லங்கையில் இருந்து கொண்டு இந்திய தேசாபிமானம் பேசும் தேசிய வீரர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேருக்கும் 100க்கு 90 பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தை சுரண்டிக் கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளாய் இருப்பவர்களும் ஆகும்.

லேவாதேவிகாரர்கள் பெரிதும் மாதம் 100க்கு 12 வரை வட்டி வாங்கி ஏழை மக்களையும் இலங்கைவாசிகளையும் பாப்பராக்கி கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கை பூமிகளை ஏராளமாய் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்து பொருள் சேர்த்து கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கை செல்வத்தை கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆக்ஷியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டு பணம் சுரண்டிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம் பிடித்த வன்னெஞ்ச பார்ப்பனர்களுமாகக் கூடிக் கொண்டு இந்திய தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.

வெள்ளைக்காரனான அன்னியன் 100 -க்கு வருஷம் 6 வட்டிக்கு கொடுத்தால் கருப்பனான அன்னியன் 100க்கு ¯மாதம் 6 வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால் கருப்பன் ஏழைகளிடம், கூலிகளிடம் வட்டி வாங்கி கொடுமைப் படுத்துகிறான்.

இந்தப் படி மக்களை சதித்து கொள்ளை அடிப்பவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம் மதாபிமானம் தேச அபிமானம் பேசுகிறார்கள்.

ஆகவே இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம், என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்து விடுங்கள். அவை ஒரு நாளும் கஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்காது, உலகில் ஏழை பணக்காரன் என்று இரண்டு வகுப்புக்கள் இருக்கவும் ஏழைகளைத் தொழிலாளிகளை, பணக்காரரும் சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும் தான் பயன்படும்.

- குடி அரசு- 20.11.32

தேசியம், தேசம் என்பவைகளின் யோக்கியதையை ஆழமாக, தன் அனுபவ அறிவின் மூலமாக அறிவுப்பூர்வமாக விளக்கிவிட்டார் பெரியார். இந்த உரை மட்டுமல்ல, குடி அரசில் தேசியம் குறித்து பல்வேறு கட்டுரைகளையும் எழுதி தேசிய இன விடுதலை என்பதில் உள்ள பித்தலாட்டத்தை நாம் எளிதில் புரிந்துகொள்ள வைக்கிறார் பெரியார்.

முதலாளித்துவ சுரண்டல் தத்துவமாகவே இருந்தாலும், தேசிய இன விடுதலை பேசும் ஐரோப்பிய, உலக நாடுகளில் ஒடுக்கும் தேசிய இனத்துக்கென்று ஒரு பொது மொழி இருக்கும், பொதுப் பண்பாடு இருக்கும். பொதுவான நிலப்பரப்பும் இருக்கும். ஆனால் இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களுக்குள்ளும் மோதலை உருவாக்கி, தேசிய இனங்களுக்கிடையே போரை உருவாக்கி அந்த மோதலில், அந்தத் வெப்பத்தில் கதகதப்பாகச் சுரண்டலை நடத்திவரும் பார்ப்பனர்கள் ஒரு தனித்த தேசிய இனமும் கிடையாது. எந்த தேசிய இன வரையறைகளும் அவர்களுக்குப் பொருந்தவும் பொருந்தாது. இந்தியா முழுமைக்கும் அவர்களை இணைப்பது, இந்தியாவையும் இணைப்பது அவர்களது சுரண்டல் ஆயுதமான சமஸ்கிருதம், வர்ணாஸ்ரமம், மனுதர்மம், இந்துமதம், இராமாயண, பாரத புராணங்கள், இந்துக் கடவுள்கள் ஆகியவைகளே. அனைத்து தேசிய இனங்களுக்கும் எதிரியான ஆரிய இனத்தையும் அவர்தம் அடையாளங்களையும் அழிக்க திராவிடர் என்ற தத்துவமே தேவையானது. அறிவியல் பூர்வமாக நிருபிக்கவும்பட்டது.

இந்தியா முழுவதிலும் கிளைகளைப் பரப்பி அனைத்து மாநிலங்களையும் சுரண்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு அந்தணனான டி.வி.எஸ் அய்யங்கார்களுக்கும், ஸ்ரீராம் குழும பார்ப்பனர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் ஸையும், பார்ப்பனர்களையும் தோள்மீது தாங்கிக்கொண்டு அவர்களுக்குச் சேவகம் செய்துகொண்டு அதன் பயனாக கர்நாடகாவிலும் பல்வேறு வடமாநிலங்களிலும் பல்லாயிரங்கோடி முதலீடுகளில் தொழில்களை நடத்திவரும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பார்ப்பன அடிமைகளுக்கும் இந்தத் தேசிய இனவிடுதலை பயனாக இருக்கலாம். அதே பொள்ளாச்சி பகுதியில் டீக்கடையில்கூட தனி இடத்தில் மறைவாக உட்கார வைக்கப்பட்டு சிரட்டையில் டீ குடிக்க வைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு தேசிய இன விடுதலையால் என்ன பயன்? உணவகங்களில் தரையில் உட்கார வைக்கப்பட்டு சிற்றுண்டி உண்ண வைக்கப்படும் சமுதாயத்துக்கு என்ன பயன்? கவுண்டர் டீஸ்டால் உங்கள் தேசிய இனப் புரட்சியால் கவுண்டர் தேநீரகம் என்று வேண்டுமானால் மாறலாம். கவுண்டர் என்ற இழிவோ, அந்தக் கவுண்டரால் நடைமுறைப்படுத்தப்படும் இழிவோ மாறுமா?

தேசிய இனம் என்ற கருத்தியலால் இதுவரை அப்படி ஒரு மாறுதல் நடந்தது என்ற சிறு குறிப்பாவது, ஒரு செய்தியாவது உள்ளதா? சாணிப்பாலையும், சவுக்கடிகளையும் ஒழித்தது எந்த தேசிய இனப்புரட்சி? கள்ளுக்கடைகளில்கூட வைக்கப்பட்டிருந்த மூன்று சொம்புகளை உடைத்தெறிந்தது எந்த தேசிய இனப்புரட்சி? மனுதர்மத்தைக் கொளுத்தியது; இராமாயணத்தை எரித்தது; இராமனை எரித்தது; இந்திய அரசியல் சட்டத்தையே கொளுத்தியது இவையெல்லாம் எந்த தேசிய இனப்புரட்சி? அந்த வகையாக புரட்சிதான் தமிழனுக்குத் இன்றும் தேவை. அதைச் செய்து காட்டியதும், இறுதி முடிவு கட்டப் போவதும் திராவிடர் என்னும் கருத்தியலே. அந்தச் சொல் தமிழா? அதை யார் யார், எதற்காகப் பயன்படுத்தினார்கள், அந்தச் சொல் உங்கள் வரையறைக்குள் வருமா என்பதெல்லாம் அந்தக் கருத்தியலால் பயன்பெறும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையற்ற ஆராய்ச்சி. எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்படாத இலக்கியம் திராவிடம்.

ஒரு தேவை கருதி, சூழல் கருதி, நோய் கருதி பெரியாரால் கையாளப்பட்ட மருத்துவமே திராவிடர் கருத்தியல். அந்த நோயின் அழிவுதான் அதற்கான அறிவியல்பூர்வமான நிருபணம். அந்த நோயின் அழிவிற்குப் பிறகு தான் அந்த மருத்துவத்தின் தேவை அற்றுப்போகும். உலகெங்கிலும் இப்படிப்பட்ட தேவை கருதியே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் சொன்னதற்காகவோ, ஐரோப்பாக்காரன் சொன்னதற்காகவோ அவர்கள் சொன்னபடி இம்மி அளவுகூட மாறாமல் எந்த நாட்டிலும் தேசிய இனப்புரட்சி நடந்ததில்லை. அது குறித்து தோழர் சுபவீ அவர்கள் தமது “பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

“தேசிய இனங்கள் தங்களின் சுயநிர்ணய உரிமை அல்லது தன்னுரிமைக்காக நடத்தும் போராட்டங்களையே நாம் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் என்று அழைக்கிறோம். தங்கள் தேசிய இனத்தின் சமூக, அரசியல், பொருளாராரச் சிக்கல்களுக்கான தீர்வை தாமே எடுக்கும் உரிமைதான் தன்னுரிமை. இத்தகைய போராட்டங்கள் அடிப்படையில் இரு குணங்களைக் கொண்டவை. அடையாளம், ஜனநாயக உரிமை என்னும் இரு அடிப்படைகளில்தாம் தேசிய இனப்போராட்டங்கள் வலிமை பெறுகின்றன. அடையாளம் என்பது என்ன, மொழியா, மதமா, மரபினமா, புவியியல் தன்மையா என்னும் கேள்விக்குப் பல்வேறு விடைகள் உள்ளன. மொழிவழி தேசியம், மதவழித்தேசியம், நிலவழித்தேசியம் என்று எல்லா வகை அடையாளங்களும் உலக நாடுகளில் காணப்படுகின்றன. ‘அயர்ஷ் மொழி பேசும் நாங்கள் தனித் தேசிய இனம், எங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும்’ என்றுதான் அயர்லாந்துப்போராட்டம் எழுந்தது, அது மொழிவழி தேசியம்.

‘இஸ்லாமியர்களாகிய எங்களுக்குத் தனிநாடு வேண்டும்’ என்பது தான் இந்திய முஸ்லீம் லீக்கின் கோரிக்கை அப்படித் தான் பாகிஸ்தான் பிரிந்துபோனது. அது மதவழி தேசியம். பஞ்சாபியர்கள் என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள், இந்துக்கள், இசுலாமியர்கள் என்று மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் இந்தியாவோடும், மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடும் இணைக்கப்பட்டது. இனவழி தேசியத்தை மதவழி தேசியம் அங்கு வென்றது....

...அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கரையோரமாகக் கொண்டுள்ள மொரோக்கோ தொடக்கம், பாரசீக வளைகுடா வரை, 8 கோடி மக்களுக்கு மேலாக, சாராம்சத்தில் ஒரே மொழியைப் பேசுகின்றனர். ஒரே மதத்தைப் பின்பற்றுகின்றனர்... ஒரு காலத்தில், ஒரே அய்ரோப்பிய ஏகாதிபத்தியத்தினால் அனைவரும் ஒடுக்கப்பட்டனர். இத்தனை ஒற்றுமைகள் இருந்தும் அவர்கள் ஒரு நாட்டினராக இல்லாமல், இன்று பல்வேறு நாட்டினராகப் பிரிந்தே உள்ளனர். இந்த மக்களில் எவரையேனும் பார்த்து, நீங்கள் எந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டால் ஒருவர் கூட தான் அராபியர் என்று விடையளிக்கமாட்டார். மாறாக, மொரோக்கன் என்றோ, எகிப்தியன் என்றோ, ரோமனியன் என்றோதான் விடையளிப்பர்”....

..எனவே அடிப்படையில் தேசிய இனங்களுக்கான நாடுகளை அமைப்பது என்ற கேள்வி இப்போது எழுகின்றது. நில அடிப்படையில் தேசங்களும், நாடுகளும், அமைப்புகளும், கண்டங்களின் அடிப்படையில் ஏழு அரசுகள்தான் உலகில் இருக்க முடியும். மத அடிப்படையில் அமைந்தாலும் ஏழு, எட்டு அரசுகளுக்குள் அதிகம் போனால் பத்து அரசுகளுக்குள் உலகைப் பிரித்து விடமுடியும். மொழிக்கு ஒரு நாடென்றால், உலகில் பல்லாயிரம் நாடுகள் தோன்றி விடும். ஒரே மொழிக்காரர்கள் பல நாடுகளாகப் பிரிந்துள்ளனர். ஒரே நாட்டில் பல மொழிகள் பேசப்படுவதும் உண்டு. இனம், மதம் ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். ..

..காஷ்மீரில் மொழி, இனம், மதம் எனப் பல்வேறு அடிப்படையில் போராட்டம் நிகழ்கிறது. நாகலாந்து விடுதலைப் போராட்டம் வேறு மாதிரியானது. அங்கு ‘ஒரு பொது மொழி’ என்னும் கோட்பாடு பொருந்தவில்லை. ஒன்பது மொழிகளைக் கொண்ட நாகா இனக்குழுவினர் ஒருங்கிணைந்து, நாகாலாந்தின் விடுதலை கோரி இனவழித் தேசியப் போரில் ஈடுபட்டு உள்ளனர். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் வேளையில், தேசிய இனப் போராட்டத்தில், பலவிடங்களில் மொழி முதன்மைப் பாத்திரம் வகிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், மொழியின் அடிப்படையில் மட்டுமோ அல்லது வேறு எந்த ஒன்றின் அடிப்படையில் மட்டுமோ தேசிய இனப் போராட்டம் எழும் என்று கூற முடியவில்லை.

தங்களின் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதென்பதே தேசிய இனப் போராட்டத்தின் முதல் அடிப்படையாக உள்ளது. தங்களின் முதன்மையான அடையாளம் எது என்பதில் இடம், சூழலுக்கு ஏற்ப வேறுபாடுகள் ஏற்படுகின்றன...”

தோழர் பெரியார், தோழர் சுபவீ ஆகியோரது கருத்துக்களுக்குப் பிறகு, பேராசிரியர் ஜெயராமன், மணியரசன் கும்பல்களின் ஆராய்ச்சிகளை மீண்டும் படித்துப்பாருங்கள்.

“பெரியாரிடம் கோட்பாட்டுக் குறைபாடுகளும் உத்திகளில் போதாமைகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை,” “இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை.”

யாரிடம் கோட்பாட்டுப் பஞ்சம் என்பதும், யாரிடம் சமூக அறிவியல் வரையறைகள் இல்லை என்பதும் பார்ப்பனத்தனமான இந்தக் குற்றச்சாட்டுகளின் யோக்கியதை என்ன என்பதும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

(தொடரும் )

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)