பொடியாய் உதிரும்
தவிட்டுத் தூறலைக்
கைகளில் ஏந்தித்
தேடிப் பார்ப்பேன்
பொறுக்கு மண் கரைய
வழுக்கும் குளக்கரையில்
மசமசக்கும் தூறலில்
தூண்டிலுடன் நிற்பேன்
சிட்டாய்ப் பறந்தும்
வீடு சேரவிடாமல்
வழிமறித்துக் கொள்ளும்
கனத்த மழையைப்
பதுங்கி நின்று
பார்த்துக் கொண்டிருப்பேன்
வீதியேறி மீன்களை
விளையாடித் துள்ளவைக்கும்
குளத்தை நிறைக்கும்
அடை மழை என்றால்
அப்படியொரு பிரியம்
சட்டென இருட்டி
அடித்துப் பொழியும்
நல்ல மழையில்
நனைந்து கிடப்பேன்
நடுக் குளத்துத்
தாமரைப்பூக்களில்
நானும் ஒன்றாக
இரவில் பெய்யும்
பெருமழை என்றால்
கிளைகளை உலுக்கி
காலையில் நனைவேன்
அடுப்பிற்குப்
பனைமட்டை பொறுக்க
ஆட்டுக்குத் தழை ஒடிக்க
கடுகுக்கும் எண்ணெய்க்கும்
கடைக்கு ஓட என
மழை என்றாலே
பாதி நனைந்த பாவாடையுடன்
திரிந்தலைந்த
அது வேறு மழைக்காலம்