பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பிரிவு: உழைக்கும் மக்கள் தமிழகம் - ஜூலை 2011

 

உண்ணும் உணவுக்கும்
உடுக்கும் உடைக்குமே
எண்ணி எண்ணியே
ஏங்கிய நெஞ்சொடும்
கடுத்த வயிறொடும்
காந்திய கண்ணொடும்
படுத்துக் கிடந்து
பகற்கனாக் காணும்
பாட்டாளி உலகம்
பலகோடி இருக்கையில்
ஆட்டமும் பாட்டமும்
ஆரவாரங்களும்
கொண்ட கலைகளும்
கூத்தும் தேவையா?
மண்டும் இந்நிலைதான்
பாரத மாண்பா?
எடுத்த எடுப்பில்
உலகம் என்கிறாய்!
உடுத்த உடையிலும்
ஊர்மெச்சும் பேச்சிலும்
மக்களை ஏய்க்கும்
மதவிழாக் களிலும்
ஒக்க பாரத
ஒற்றுமை என்கிறாய்!
கலகம் என்கிறாய்,
கருத்துகள் சொன்னால்!
உலகை ஏமாற்ற
ஒருமைப் பாடென்கிறாய்!
பாரதப் பெருமையே
பகற் கொள்ளை என்றால்
ஊரதிரும் புரட்சி
ஒன்று தேவையே!