சுயமரியாதை உணர்ச்சி கொண்ட வாலிபத் தோழர்களே! இன்று நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உப சாரப் பத்திரத்திற்கு நான் உண்மையாகவே மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இந்த உபசாரப் பத்திரம் உங்களுக்குள் தோன்றித் ததும்பும் சுயமரியாதை உணர்ச்சியை முன்னிட்டே (நீங்கள் இதை) வாசித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று உங்கள் உபசாரப் பத்திர வாக்கியங்களில் இருந்தே உணருகிறேன்.

தோழர்களே! உங்கள் உபசாரப் பத்திரத்தின் தலைப்பில்  “புரட்சி வாழ்க! பொதுவுடைமை ஓங்குக!” என்று குறிப்பிட்டிருக்கும் வார்த்தையைக் கண்ட அநேகர் எருதுக்கு முன்னால் சிகப்புத் துணியை விசிறினால் மிரண்டு மிரண்டு துள்ளுவது போல் பயப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் இவ்வளவு பயப்படத் தகுந்த காரணக் காரியங்கள் எதுவும் அவ்வார்த்தையில் அடங்கியிருப்ப தாய் நான் கருதவில்லை.

ஆனால், அவ்வார்த்தையானது, பயப்படத்தக்க முறையில் கற்பிக்கப்பட்டுவிட்டது. எது போலென்றால் பூச்சாண்டி என்றால் அதற்கு அர்த்தம் இன்னதுதான் என்று தெரியாமலேயே குழந்தைகளைப் பயப்படுத்தி வைத்திருப்பதைப் போல், உங்களில் அநேகரைப் புரட்சி என்றால் அதன் அர்த்தம் என்ன? பயன் என்ன? என் கின்ற விஷயம் உணராமல் பயப்படும்படிச் செய்யப் பட்டாய்விட்டது.

புரட்சி

புரட்சி என்றால் என்ன? அது பயப்பட வேண்டிய விஷயமா? என்பதைப் பற்றிச் சற்று யோசித்துப் பார்ப் போம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்குப் போவதற்குத் தரையில் ஒரு மணிக்கு 3 மைல் வீதம் நடந்து கொண்டிருந்த நிலைமை மாறி, ஒரு மணிக்கு 400 மைல்கள் ஆகாயத்தில் பறக்கும் படியான நிலையை அடைய யோசிப்பானேயானால், நடக்கும் விஷயத்தில் அது ஒரு பெரிய பிரம்மாண்டமான புரட்சியேயாகும். இந்தப்படியான புரட்சியில் வெற்றி பெற்ற ஒருவன் ஆகாயத்தில் ஒரு மணிக்கு 400 மைல் பறக்கும் போது 3 மைல் வீதம் நடையிலேயே இருக்கிற ஒருவன் அதிசயப்பட வேண்டியதுதான்.

ஆனால் பயப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. இதனால்யாருக்கும் எவ்விதக் கெடுதியும் இல்லை. எந்த ஒரு காரியத்தையும் மனிதன் அவனுடைய வெகுநாளைய பழக்கம், வழக்கம், நம்பிக்கை ஆகிய வைகளுக்கு விரோதமாக ஆக்க முயற்சித்தால் அதைப் புரட்சி என்று தான் சொல்லுவார்கள். ஆனால், அதனால் அனுகூலம் அடைக்கின்றவர்கள் நல்ல காரியம் என்று சொல்லிப் புகழவும், அதனால் தீமையடைகின்றவர்கள் அதைக் கெட்ட காரியம் என்று சொல்லி இகழவும், சரியான முறையில் எதிர்க்கச் சக்தி இல்லாதவர்கள் தப்பர்த்தம் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அதன்மூலம் எதிர்ப்பு ஏற்படச் செய்வார்கள்.

ஆனால், மனித சமூகத் தில் புரட்சி என்பதுமிகச் சாதாரணமாய் இருந்து காரியத் தில் நடைபெற்றுத்தான் வருகின்றது. மனிதனுக்கு முற் போக்கு அறிவும் அக்கறையும் ஏற்பட, ஏற்பட புதிய, புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாகிக் கொண்டேதான் இருக்கும்.

புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்கவழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும், அதிலும் அது அடியோடு தலைகீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப்படு வதாகும். அந்தப்படி இப்போது நம் கண்முன்னா லேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம்; கண்ணால் பார்த்துவிட்டோம். ஒவ்வொரு புரட்சியிலும் எந்தெந்த தேசம் பூமிக்குள் போய்விட்டது? எந்தச் சமூகம் பூண்டற்றுப் போய்விட்டது? மாறுதலேற் படும் போது சற்றுத் தடபுடலாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பதும் சகஜம்தானே.

சாதாரணமாக அரசியல் துறையில் ஏற்பட்ட புரட்சி யை எடுத்துக்கொள்ளுங்கள். நமது நாட்டில் அரசர் களெல்லாம் கடவுள் அவதாரங்களல்லவா? கடவுள் அம்சங்களல்லவா? கடவுள் அருள் பெற்றவர்களல்லவா? கடவுள் கடாட்சம் பெற்றவர்களல்லவா? இதுதானே அரசனைப் பற்றிய நமது சாஸ்திரங்கள் என்பவைகளி லும், புராணங்கள் என்பவைகளிலும் சொல்லப்பட்ட சத்தியவாக்கு? சமீபகாலம் வரை நாம் அரசரை விஷ்ணு அம்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கவில்லையா? அரசன் கடவுள் அவதார அம்சம் என்பதாகக் கூறிக் கொண்டும் புராணங்கள் படித்துக் கொண்டும் இருக்க வில்லையா? இன்றும் பலர் அம்மாதிரி படித்துக் கொண்டி ருக்கிறார்களா? இல்லையா?

ஆனால் நாம் இப்போது என்ன சொல்லுகிறோம்? மனித சமூகத்திற்கு அரசன் எதற்கு? என்று கேட்கும் நிலைமைக்கு வந்துவிடவில்லையா? எங்களுக்கு ஒரு சக்கரவர்த்தியோ, அரசனோ இருப்பது எங்கள் சுயமரி யாதைக்குக் குறைவு என்று சொல்ல வந்துவிட்டோமா? இல்லையா? ராஜபக்தி, ராஜ வாழ்த்து அடிமைத் தனம் என்று சொல்ல வந்துவிட்டோமா? இல்லையா? அந்தப் படியே பல தேசங்களில் அரசர்கள் ஒழிந்தும் விட்டார் களா? இல்லையா? ஆகவே, அரசியல் துறையில் இது ஒரு பெரிய புரட்சியா? இல்லையா? என்று உங்களைக் கேட்கின்றேன்.

இந்தப் புரட்சியில் என்ன ஆபத்து வந்து விட்டது? எந்தத் தேசம் மண்ணில் புதைந்துவிட்டது? யார் வாய்வெந்து போய்விட்டது? யார் தலைபோய் விட்டது? அரசர்கள் ஒழிக்கப்பட்ட தேசம் நெருப்புப் பற்றி எரிந்துவிட்டதா? அல்லது பாலைவனமாகி விட்டதா? சுமார் 40, 50 வருஷங்களுக்குமுன், அரசாங்கத்தைக் குறைகூறவோ மாற்றவோ நம் நாட்டில் யாராவது கருதியிருப்பார்களா என்று யோசித்துப் பாருங்கள். எந்தப் புராணத்திலாவது, சாஸ்த்திரத்திலாவது அரசன் வேண்டாம் என்று சொன்னதாகப் பார்த்திருக்கிறோமா? இன்று எப்படி தைரியமாய்ச் சொல்ல வந்துவிட்டோம்? இது ஒரு பெரிய புரட்சியா அல்லவா என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே, மக்களில் ஒரு சாராரை பூதேவர்கள் (இந்த உலகக் கடவுள்கள்) என்றும், மற்றொரு சாரா ரைக் கண்ணினாலும் பார்க்க முடியாதவர்கள் என்றும், சண்டாளர்கள் என்றும் கருதியிருந்தோமா - இல்லையா? இதற்கு வேத சாஸ்த்திர புராண ஆதாரங்கள் கடவுள் வாக்குகள் இருக்கின்றது என்று சொல்லி, பூதேவர்கள் காலில் விழுந்து கும்பிட்டும், சண்டாளர்களைத் தெரு வில் நடக்கவிடாமல் துரத்தி அடித்தும் வந்தோமா இல்லையா? ஆனால் இன்று அவர்களைத் தெருவில் மாத்திரம் அல்லாமல் கோவிலுக்குள் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று சொல்லுகின்றோமா? இல்லையா? இப்படிச் சொல்லுகின்றவர்கள் மகாத்மா என்று அழைக்கப்படுகிறார்களா இல்லையா?

மற்றும் இம்மாதிரி சண்டாளர்கள் கண்ணுக்கே தென்படக்கூடாது, கிட்டவே வரக்கூடாது என்று இருந்த தெல்லாம் போய், இப்போது அவர்கள் பக்கத்தில் உட்கார ஆள் மேல் ஆள்கள் போட்டிப் போட்டு அய்யங்கார், சாஸ்திரிகள், ராவ்ஜீக்கள், பண்டார சன்னதிகள், பட்டக்காரர்கள் ஆளுக்கு 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் கள் (தேர்தல்களில்) செலவு செய்து அந்த ஸ்தானங்களை அடைய முயற்சிக்கிறார்களா இல்லையா? சமூக வழக்கங்களில் 10 வயதுப் பெண்ணைக் கட்டிக் கொடுக் காவிட்டால் பெற்றோர்கள் நரகத்துக்குப் போய்விடுவார்கள்.

பெண்ணும் விபச்சார தோஷத்திற்கு ஆளாய்விடும் என்று கூறிய வேத சாஸ்திரங்களையும் ரிஷிகள் வாக்கியங்களையும் பழக்கவழக்கங்களையும் குப்பையில் தள்ளிவிட்டு, 14 வயதான பிறகு-பெண் ருதுவான பிறகுதான் கல்யாணம் செய்ய வேண்டும்; இல்லா விட்டால் தண்டனை அடையவேண்டும் என்று சொல்லிச் சட்டம் செய்துவிட்டோமா இல்லையா?

எனவே, இவைகள் எல்லாம் சமூகப் புரட்சியே யாகும். இதனால் யாருக்கு என்ன ஆபத்து வந்துவிட்டது? யார் என்ன கஷ்டப்படுகிறார்கள்?

ஆகவே, அரசியல் துறையிலும் சமூகத் துறையிலும் எவ்வளவு புரட்சிகள் செய்ய முன்வந்துவிட்டோம்; செய்துவிட்டோம். இவைகள் எவ்வளவு சர்வ சாதாரண மான விஷயமாகவும் மிகவும் ஞாயமானதாகவும் அறிவுடைமையாகவும் மக்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் கருதப்படுகின்றது என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

மற்றும் உலகத்தையே படைத்துக் காக்கும் கடவுள் விஷயம் இன்று உலகில், நம் நாட்டில் என்ன பாடுபடு கின்றது? அக்கடவுளை அடையும் மார்க்கமாகிய மத விஷயம் இன்று என்ன பாடுபடுகின்றது? இவைகள் கடவுள் புரட்சி, மதப் புரட்சியல்லவா? இதனால் மக் களுக்கு என்ன ஆபத்து வந்துவிட்டது? ஆகவே இவ் விஷயங்களில் ஆபத்து, ஆபத்து என்று சொல்லப்படு வதெல்லாம் நன்றாய் யோசித்துப் பார்த்தால் யார், யார் நன்மை அடைந்து வந்தார்களோ, அவர்களுக்குத் தான் சிறிது ஆபத்தாய்க் காணப்படுகின்றதே அல்லாமல், வேறு என்ன? இவர்கள் யார்? இவர்கள் மக்கள் சமூ கத்தில் 100-க்கு எத்தனை பேர்கள்? என்று பார்த்தால் இலட்சியம் செய்யக்கூடிய அளவா என்பது விளங்கும்.

ஆகவே அரசியல், சமூகஇயல், அறிவியல் ஆகிய வற்றில் பெருத்த புரட்சிகள் ஏற்பட்டு, அவை சாதாரண மாய் நடந்து வருகின்றதை நீங்கள் பார்க்கிறீர்கள். எனவே, மேற்கண்ட புரட்சிகள் போல் அதாவது அரசன் ஏன்? உயர்ந்த சாதி ஏன்? தாழ்ந்த சாதி ஏன்? கடவுள் ஏன்? மதம் ஏன்? என்று சொல்லுவது போலவே, இப்போது பணக்காரன் ஏன்? பிரபு ஏன்? முதலாளி ஏன்? ஏழை ஏன்? அடிமை ஏன்? என்று கேட்கிறோம். இந்தப்படி ஏன் கேட்கின்றோம்? முதன்முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலையடையத் துணிந்துவிட் டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு காவல் ஆகிய வைகளை அலட்சியம் செய்துவிட்டோம். அதே தைரிய மும், அதே அறிவும், அதே அவசியமும், அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தானாகவே கொண்டு போகின்றது.

பட்டாளம், பீரங்கி, ஆகாயக் கப்பல், வெடிகுண்டு, 20 மைல் பீரங்கி விஷப்புகை, வெடி முதலிய பலமும் கடவுள் அவதாரமும் உள்ள அரசனே, நீ வேண்டாம் மூட்டை கட்டிக்கொள், என்று சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டு, அது நியாயமும் அவசியமும் என்று தோன்றிப் பல அரசர்கள் ஒழிக்கப்பட்டும் போன பிறகு, அதை விடக் கஷ்டமானதும் நினைக்க முடியாததுமான காரியமா இந்தப் பணக்காரன் ஏன்? ஏழை ஏன்? என்று கேட்கும் விஷயம் என்றுதான் கேட்கிறேன். முன்னதைவிட இதற்கு என்ன அதிக தைரியம் வேண்டும்? என்ன அதிக பலம் வேண்டும்? அல்லது இது என்ன ஒரு பெரிய பாவமான காரியமாகும்? அரசன், சாதி, கடவுள், மதம், பழக்கவழக்கம் ஆகியவையெல்லாம் பணக்கார னையும், பார்ப்பானையும் காப்பாற்ற ஏற்பாடு செய்து கற்பித்து வைத்த சாதனங்களேயொழிய இவர்கள் இயற் கையா? காற்றைப் போன்று இன்றியமையாததா? எப்பொழுது அவைகளுக்கே ஆபத்து வந்துவிட்டதோ, அப்பொழுதே பணக்காரர்கள் நிலை-காவலில்லாச் சொத்து காணாமல் போவது போல், மறைவுபட வேண்டி யதுதானே? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? உண் மையான நடுநிலைமையும் அறிவும் இருக்கிறவன் இதை எப்படிக் குற்றம் என்று சொல்ல முடியும்? இது சாதாரணமாய் அறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள எவனுக்கும் தோன்றக் கூடிய காரியம்தானே? இதை வெளியில் சொல்லுவது தப்பு, சட்டவிரோதம் என்று மிரட்டினால் சிலர் வேண்டுமானால் வாயில் சொல்ல பயப்படுவார்கள். ஆனால் இது அவர்கள் மனதில் உதிக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? ஒரு சமயம், சிலர், இது சாத்தியப்படுமா? என்று கேட்கலாம். இப்படிக் கேட்பது வேறு விஷயம். ஒரு விஷயம் சரியா, தப்பா என்று கவனித்த பிறகு தான் அது சாத்தியப்படுமா என்கின்றதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

சாத்தியப்படுமா?

அரசன் வேண்டாம் என்கின்ற விஷயத்தை நாம் அசாத்திய விஷயம் என்றா கருதுகின்றோம்? அரசனுக்கு உள்ள படை, பட்டாளம், வெடிகுண்டு பீரங்கிகளையெல்லாம்விட, இந்தப் பணக்காரனுக் கும், முதலாளிக்கும் என்ன அவ்வளவு பலமான காவல் இருக்கின்றது? அரசனைவிடப் பணக்கார னுக்கு என்ன அவ்வளவு அதிகமான வேத, சாஸ்திர, புராணப் பாதுகாப்புகள் இருக்கிறது? அவர்கள் நிலைமையே இப்போது காற்றாய்ப் பறக்கின்றது. பணக்காரர்கள் நிலைமைக்கு பவுசு இருக்கிறது? வரிசைக்கிரமத்தில் இவர்கள் நிலைமையும் மாற்ற மடைய வேண்டியதுதானே? சும்மா சமய சந்தர்ப் பம் இல்லாமல் அரசனையும், பார்ப்பானையும் திட்டி, ஊரார் மெச்சும்படிப் பேசி, கடவுளையும் மதத் தையும் பரிகாசம் பண்ணிக் கொண்டு இருப்பது தான் சுயமரியாதைக் கடசியின் இலட்சியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகின்றதோ, அவை களையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்கு பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப் பதும், பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒருநாளும் சுயமரியாதை யாகாது. இவையெல்லாம் சுயநல மரியாதையே யாகும்.

அன்றியும் அரசன் வேண்டாம் என்றாலும், பார்ப்பான் வேண்டாம் என்றாலும், பணக்காரன் வேண்டாம் என்றாலும், இதனால் கஷ்டப்படும் மக்கள் 100க்கு 10 பேர்கள்கூட இருக்கமாட்டார்கள். இவை ஒழிந்தால் சுகப்படும் மக்கள் 100க்கு 90 பேருக்கு மேல் இருப்பார்கள். ஆகவே யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப்பட வேண்டியது அறிவாளியின் கடமை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உண்மையான ஜீவகாருண்யம் உள்ள வர்கள் வெறும் கோழியைத் தலைகீழாகக் கொண்டு போகப்படுவதையும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறுபுண் இருப்பதையும், ஜீவகாருண்யம் என்று எண்ணமாட்டார்கள். பெரும்பான்மையான மக்கள் வெகு சிறுபான்மையோரின் சுயநலத்தால் எவ் வளவு கஷ்டப்படுகின்றார்கள் என்பதைத் தான் கவனிப்பார்கள்.

அய்யோ இந்தப் புரட்சியால் பணக்காரர்களின் மனம் பதறுமே என்று ஒரு அறிவாளியும் கருதமாட்டான். எப்படியெனில் ஒரு திருடனுக்காகப் பயந்து 100 பேர்கள் தங்கள் வீட்டுக் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டால், திருடன் பாடு பட்டினிதான். அதனால் திருடன் மனம் பதறுமே - ஏமாற்றமடைய நேரிடுமே - அவன் பிள்ளைக் குட்டிகள் பதறுவார்களே என்று சொல்லி எல்லோரும் கதவைத் திறந்து போட்டே படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் இதை ஜீவகாருண்யமென்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? பெரிய மாறுதல்கள் உண்டாக்கப்பட வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டால் குறுகிய நோக்கக்காரர்களும் சுயநல நோக்கக்காரர்களும் சில சமயங்களில் மனம் கஷ்டப்படத்தான் நேரும். அதற்கு யார் என்ன செய்ய முடியும்? எலியும், பூனையும், பாம்பும், தேளும் போகின்ற கோவிலுக்குள் மனிதர்கள் போவதனால் எத்தனை சங்கராச்சாரிகள் மனம் பதறுகிறது? இதில் ஏதாவது நாணயமோ, உண்மையோ இருக்க முடியுமா? இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்துதான் ஆகவேண்டும் என்பது நமது கருத்தல்ல.

ஆனால், பலாத்காரத்துக்குப் பலவந்தமாய் வருபவர்களிடமிருந்து எப்படி மீள வேண்டுமோ அதற்குத் தயாராய்த்தான் இருக்க வேண் டும். இதற்காக எந்தப் பணக்காரரும் கஷ்டப்பட வேண்டி யிருக்காது; யாரும் பட்டினி கிடக்க நேராது. நல்லுணர்வு ஏற்பட்டு விட்டால் இது ஒரு நொடியில் முடியக் கூடிய காரியமேயாகும்.

உலகில் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள், தொழிலாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் - பணக் காரர்களும் முதலாளிகளும் மாத்திரம் சுகப்படுகிறார் கள்; சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லிவிட முடி யுமா? ஒவ்வொரு கருத்துள்ள பணக்காரனுக்கும் இருக் கின்ற கவலை உங்களுக்குத் தெரியாததா? அவன் அதைச் சம்பாதிக்கும் வழியில் கஷ்டப்படுவதைவிட, கவலைப்படுவதைவிட அதிகமாகவே, அதைக் காப்பாற்று வதிலும் கவலைப்படுகிறான். இலாப - நஷ்டம் வரும் காலையிலும், அதிகமாக இலாபம் வரவில்லையே என் றும், நஷ்டம் வந்துவிட்டதே என்றும் தான் கவலைப்படுகிறான்.

எவ்வளவு இருந்தபோதிலும் இன்னும் பொருள்சேர வேண்டுமென்றே ஆசைப்படுகிறான். கவலையும் பொறாமையும் அவனுக்குச் சமமாகத்தான் இருந்து வருகின்றது. எவ்வளவோ கஷ்டங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டும் பெருங்க வலைக்கு ஆளாய்க் கொண்டும் தான் தன்னைப் பணக் காரன் என்று பிறர் மதிக்க வேண்டுமென்று கருதுகிறான். இதனால், உண்மையில் இலாபம் ஒன்றுமில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பழக்கவழக்கம், பெருமையின் முறை ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டே பணக்கார னாக ஆசைப்படுகிறான். ஆகவே பணக்காரத் தன்மை என்பது போய்விடுவதால் மனித சமூகத்துக்கு ஒரு கஷ்டமும் வந்துவிடாது. பணக்காரத் தன்மை போய் விட்டால் எல்லா மக்களின் நன்மையைப் பொறுத்த காரியங்களையெல்லாம் கவனிக்க வேண்டிய சம தர்மக் கொள்கை கொண்ட ஆட்சிதான் நடைபெறும்.

மனித சமூகத்தின் கஷ்ட நிலைமைக்கும், இழிதன்மைக்கும், ஒப்பற்ற தன்மைக்கும், சதா கவலைக்கும் காரணமாயிருப்பதே இந்த பணக் காரத் தன்மையும் ஏழ்மைத் தன்மையுமேயாகும்.

மனிதப் பிறவி உயர்ந்ததென்றும், அருமை யானதென்றும், மற்ற ஜீவராசிகளைவிட மேம் பட்ட அறிவின் பயனை அனுபவிப்பதென்றும் சொல்லுகிறார்கள். நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. இன்றைய மனித சமூகத் திட்டம் சரியென்று ஒப்புக்கொள்வதனால், அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்பது சோம்பேறி கள், பகுத்தறிவற்றவர்கள் ஆகியவர்களின் ஞானம் என்று சொல்ல வேண்டியிருப்பதோடு, நான் இழிவு, இழிவு மனிதராய் பிறத்தல் இழிவு என்றுதான் சொல்லுவேன். மனிதப் பிறப்பின் இழிவுக்கும், கஷ்டத்திற்கும் அவனது இன்றைய வாழ்க்கைத் திட்டமே காரணமாய் இருக்கிறது. மனிதனைவிட மற்ற ஜீவப் பிராணிகளில் தன் இனத்தை அடிமை கொண்டு வருத்தி வதைத்து வாழ்கின்ற ஜீவன் மிக அபூர்வமேயாகும்.

மனிதனைவிட மற்ற ஜீவப் பிராணிகளில் நாளைக்கு என் கதி என்ன? என் பிள்ளைக் குட்டி பேத்தி பிதிர் ஆகிய வர்களுக்கு என்ன கதி? உலகம் உள்ள நாள் வரை நானும் என் சந்ததியும் உலகிலுள்ளவர்களுக்கெல் லாம் மேலாய் வாழ்வதற்கு என்ன மார்க்கம் என்று கருதி, தன் சமூகத்தையே சகலவித அயோக்கியத் தனங்களாலும் வதைத்து நலம் பெரும் ஜீவன்கள் மிக மிக அருமையாகவே இருக்கும். மனித சமூகத்தாலேயே எதை எதை இழிவான கொடுமையான குணம் என்று கருதுகின்றோமோ அவையெல்லாம் உலகிலுள்ள எந்த இழிவான ஜீவன் என்று சொல்லப்படுவதைவிட மனிதனிடத்திலேயே அதிகமாய் இருக்கின்றது. கழுதை மேல் கழுதை சவாரி செய்கின்றதா? புலிமேல் புலி சவாரி செய்கின்றதா? பாம்பு, தேள் ஆகியவை மேல் பாம்பு, தேள் சவாரி செய்கின்றதா? ஆனால் மனிதன் மேல் மனிதன் செய்கின்றானா? இல்லையா? ஆகவே, மனிதனிடம் என்ன உயர்வான குணங்கள் இருக்கக் காண்கின்றோம்?

அரசன், சாதி, மதம், கடவுள், பணக்காரன் ஆகிய தன்மைகள் எல்லாம் மேலே கண்ட இழிதன்மைக்கும் அக்கிரமத் தன்மைக்கும் மனித ஜீவகாருண்யமற்ற தன்மைக்கும் அனுகூலமாய் இருக்கிறதா? இல்லையா?

மனிதன் தனது சமூகத்தை வஞ்சித்துப் பொருள் சேர்த்துப் பகுத்தறிவுள்ள தனது பெண்டு பிள்ளைக்குப் பணம் சேர்த்து வைக்க வேண்டுமென்று சொல்லுகிறான். ஆனால் மிருகம், பட்சி ஆகியவைகள் பகுத்தறிவு இல்லாத தனது பெண்டு பிள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்கக் கருதுவதில்லை. தனது குட்டிகளையும் குஞ்சு களையும் அவை தானாக ஓடியாடும் பருவம் வந்தவுடன், தனித்து வாழ்ந்து கொள்ளும்படி கடித்தும் கொத்தியும் துரத்திவிடுகின்றது. அவற்றைப் பற்றிய கவலையோ ஞாபகமோ கூட அவைகளுக்குக் கிடையாது.

மனிதனின் பிறப்பு கடவுளால் என்கிறோம். இறப்பு கடவுளால் என்கின்றோம். இவ்விரண்டுக்கும் காரண மாய்க் காணப்படுவது மனிதன் நடப்பாய் இருப்பதால் அந்த நடப்பும் கடவுளால்தான் என்று சொல்ல வேண்டியதாகின்றது.

ஆகவே, மனிதனின் நடப்பையும் கடவுளால்தான் நடைபெறுகின்றது என்று சொல்லுகிறார்கள். மனிதனு டைய நடப்போ பெரிதும் நான் மேலே சொல்லியது போலவே தான் கவலையும் கொடுமையும் நிறைந்த தாய் இருந்து வருகின்றது. இப்படிப்பட்ட நடப்புக்குக் கடவுளைக் காரணமாக்குகின்றவர்கள், இதன் பய னாகிய பிறப்பு இறப்புக்குக் கடவுளைக் காரணமாக்கு கின்றவர்கள், கடவுளை மேன்மைப்படுத்தினவர்களா? அல்லது கீழ்மைப்படுத்தினவர்களா? என்ற யோசித்துப் பாருங்கள்.

செல்வவான் (சோம்பேறியாயிருந்து வாழ உரிமையுடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால், கடவுளுக்கும் மதத் திற்கும் சாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.

- ஈ.வெ.ரா. சொற்பொழிவு, குடிஅரசு” 18.12.1932