திராவிடர் இயக்கக் கொள்கைப் பிரகடன நூற் றாண்டு நிறைவை ஒரு மாபெரும் மாநாடாகக் கொண் டாடிக் கொண்டிருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம்!

இந்த நேரத்தில் தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியப் பார்வை எத்தகையது என்பதை நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று உலகம் முழுவதும் மொழிவழித் தேசிய உணர்வு கூர்மைப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது!

ஒரு தேசிய இனத்தை வேரறுக்க அதன் எதிரி முதலில் அழிக்க முனைவது அந்த இனத்தின் மொழி யைத்தான். இதை வரலாறு தெளிவாக்கிக் கொண்டி ருக்கிறது.

எனவே தான், “ஒரு சமூகத்தின் தாய்மொழியே, அந்தச் சமூகத்தின் தற்காப்புப் படை” என்று ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் கூறுகிறார்கள். எதிரி நம்மிடமிருந்து பிடுங்க முயலும் நம் அடித்தளம் நமது மொழியே என்றும் அவர்கள் எடுத்தியம்புகிறார்கள்.

மொழியை இழக்கும்போது நாம் நிலத்தை இழக்கிறோம்! நிலத்தை இழக்கும் போது இயற்கை வளத்தை இழக்கிறோம்! இடையறாத நம் பண்பாட்டு வேரை இழக்கிறோம்! நம் மண்ணின் மீதான நமது வருங்கால வாழ்வுரிமையை இழக்கிறோம்!

எனவே, மொழி என்பது வெறும் மொழி மட்டுமே இல்லை என்பது தெளிவாகிறது.

மத வழிபாட்டு முறைகள் வேறுபடலாம்; வாழும் நிலங்கள் வேறுபடலாம். இந்த வேறுபாடுகளைத் தாண்டி, ஒரு மாபெரும் மனித சமூகத்தை ஒன்றிணைத்து வைப்பது மொழிதான், மனித சமூகங்களின் அடை யாளம் பெரும்பாலும் மொழிவழிப்பட்டதாகத் தான் இருந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆங்கிலராட்சி முடிவுக்குவரத் தொடங்கிய போதே, இந்தியக் கண்டத்துத் தேசிய இனங்களிடையே மொழிவழித் தேசிய உணர்வு முகிழ்க்கவும் செழிக்க வும் தொடங்கியது. மராத்தியர், பஞ்சாபியர், வங்காளியர் போன்ற இனத்தவர்கள் மொழிவழிப் பார்வையில் முனைந்து நின்றவர்கள்.

தமிழ்நாடு பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகப் பிரிந்து கிடந்தாலும், மக்கள் இதனை ஒரு நிலமாகத்தான் கருதிவந்தனர். “கடந்தடு தானை மூவ ரும் கூடி” ஒரே தமிழ்நிலத்தைக் காப்பதாக மக்கள் எண்ணினர்.

“சேரன் ஒருவன்... சோழன் ஒருவன்... பாரமா முடியன் பாண்டியன் ஒருவன்... மூவருங் காத்திட...” என்று மங்கல வாழ்த்துப் பாடும் மரபு இன்றும் நாட்டுப் புறத் திருமணங்களில் காணமுடிகிறது.

எனவே, தமிழ்த்தேசியச் சிந்தனை என்பது தமிழ் மக்களின் இயல்பான உள்ளத்து ஊற்றாகவே இருந்து வந்துள்ளது.

ஆங்கிலேயரால், அவர்களின் ஆளுகை வசதிக்காகக் கட்டப்பட்டது, ‘இந்தியா’ என்கின்ற கட்டுமானம். இந்த இந்தியா என்பது ஒரு தேசியம் இல்லை. இது 22க்கும் மேலும் அதற்கும் மேற்பட்ட தேசியங்களின் தொகுப்பு. ஒவ்வொரு தேசியத்திற்குமான தனித்தன்மைக்கும், அதன் தன்னாட்சி உரிமைக்கும் எந்த அளவு மதிப்பு அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குத்தான் இந்தியக் கூட்டமைப்பின் உறுதிப்பாடு நீடிக்க முடியும்.

அந்த நாளில் ஐம்பத்தாறு தேசங்களாக அறியப்பட் டிருந்த இந்த இந்தியத் துணைக் கண்டத்தை - இன்று இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட தேசிய இனங்களாக அறியப்படுகின்ற இந்த இந்தியத் துணைக் கண்டத் தை, நாசப்படுத்துவதற்காக இங்கே ஊடுருவிய ஒரு நாசவினை ‘வைரஸ்’தான் ஆரிய சனாதன அதர்மம்.

இது மனித சமத்துவத்தை அழித்தது; மனிதரில் ஒரு பகுதியினரை அடிமைகளாக்கியது. உடைமை மறுக்கப்பட்டவராக்கியது; ஊருக்குள் வாழும் உரிமை இல்லாதவராக ஒதுக்கியது; சிலரைக் காணத் தகாதவ ராக்கியது; சிலரைத் தீண்டத்தகாதவராக்கியது. அவர் களை ஊர்களுக்கு வெளியே குடிசைகளில் மட்டுமே வாழச் சொல்லியது; நல்ல உடை உடுக்கவும், நல்ல உணவு உண்ணவும் தடைவிதித்தது; குழந்தைகளுக்கு அவர்கள் நல்ல பெயர்களைச் சூட்டிக்கொள்ளவும் அனுமதி மறுத்தது; அவர்களிடமிருந்து உழைப்பைப் பெற்று அவர்களுக்கு ஊதியம்தர மறுத்தது; ஏழைகளை வன்முறையால் கட்டிவைத்திருந்தது; நால்வருணத் தையும், அதன் புறனடையாகப் பஞ்சம வருணத்தை யும், இவற்றுக்குள் பல உள் சாதிகளையும் உருவாக்கி, பூசல்களை ஏற்படுத்தி மனித குலத்தைச் சிதைத்துக் கூறுபோட்டது; ஒரு சிறிய வகுப்பாரிடம் அதிகாரத்தைக் கொடுத்தது. அனைத்துக்கும் மேலான தெய்வ மேலாண் மையாக ஆரிய சனாதனம் குந்திக்கொண்டது. மன்னர் களையும், வணிகர்களையும் குடிகளையும் இது ஆட்டிப் படைத்தது; பெண்களை இழிவுபடுத்தியது; குழந்தைத் திருமணங்களை நடைமுறைப்படுத்தியது; கைம்பெண் களை இழிவுபடுத்தி அலங்கோலமாக்கியது.

இந்த அநீதிகளை எதிர்த்தவர்கள் அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் இகழப்பட்டனர். இந்த அநீதிகளை எதிர்த்தவர்கள் நாத்திகர் என்றும் உலகாயதர் என்றும் பட்டங்கட்டி ஒதுக்கப்பட்டனர். சமண நெறியும், புத்த நெறியும், வள்ளுவ நெறியும், சித்தர்கள் நெறியும் இந்த ஆரிய சனாதன எதிர்ப்பு நெறிகள்தாம்.

ஆரிய சனாதன அதர்ம எதிர்ப்பு காலந்தோறும் புதுப்புது வடிவங்களில் முகிழ்த்துக் கொண்டே இருப் பதை வரலாறு காட்டுகிறது.

உடன்கட்டை ஏற்றும் கொடிய வழக்கத்தை ஒழிக்க உழைத்த இராஜாராம்மோகன்ராய், பெண்ணுரிமைக் கும், மனித சமத்துவத்திற்கும், கல்வி வளர்ச்சிக்கும் உழைத்த மகாத்மா ஜோதிபா புலே, தீண்டாமை அணு காமைக்கு எதிராகப் போராடிய அய்யன்காளி, சாதியக் கொடுங்கோன்மையைச் சமய நெறியில் எதிர்த்து நின்ற அய்யா வைகுண்டர், தீண்டப்படாதார் எழுச்சிக்குப் பாடுபட்ட நாராயணகுரு முதலானவர்களெல்லாம் ஆரிய சனாதன அதர்மத்தை எதிர்த்துப் போராடியவர்களே.

ஆரிய சனாதன அதர்மம்தான் நந்தனைக் கொன்றது; காந்தியைக் கொன்றது; கல்புர்க்கியைக் கொன்றது; தபோல்கரைக் கொன்றது; பன்சாரேவைக் கொன்றது; இந்தியா முழுவதிலும் எண்ணற்ற படுகொலைகளை நடத்திக் குதூகலித்தது.

ஆனால், ஆரிய சனாதனத்தால் அண்ட முடியாத ஒரு பேராற்றலாக விளங்கியவர் தந்தை பெரியார். ஆரிய சனாதன அதர்மத்தை எதிர்த்து இடைவிடாமல் முழங்கிய ஒரு பெரும் தகரி (பீரங்கி) தந்தை பெரியார். இந்தத் தகரியிலிருந்து பாய்ந்த குண்டுமழையால் தான் ஆரியச் சுவர்கள் ஆட்டம் கண்டன. எனவே தான், பெரியார் ஆரியத்திற்கு எந்நாளும் அரிமாவைக் கண்ட கனவாக (சிம்ம சொப்பனமாக) விளங்கிக் கொண்டிருக்கிறார்.

1970களின் தொடக்கத்தில், “பல்கலைக்கழகங்களே பெரியாரைப் பாராட்டுங்கள்” என்ற தலைப்பில் பாவ லரேறு பெருஞ்சித்திரனார் தென்மொழியில் மிகச்சிறப் பான ஆசிரிய உரை ஒன்றை எழுதியிருந்தார். அந்த ஆசிரிய உரை இப்படித் தொடங்குகிறது : “பெரியார் ஒரு கட்சியின் தலைவர் அல்லர். ஒரு காலத்தின் தலைவர்! ஓர் இனத்தின் தலைவர்! ஒரு வரலாற்றின் நாயகர்!”

ஆம், ஆரிய சாதி வருணாசிரமத்தைத் தகர்த்து, மனித சமத்துவத்தை எடுத்து நிறுத்திய வரலாற்றின் நாயகர் பெரியார்! எனவேதான் பாவலரேறு அவர் களின் மதிப்பீடு இப்படி அமைந்தது : “இந்த மூவாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் தமிழ் இனத்திற்கு வாய்த்த உண்மைத் தலைவர்கள் இரண்டே இரண்டு பேர். ஒருவர் திருவள்ளுவர்! மற்றொருவர் பெரியார்!”

தமிழ்த் தேசியத்தின் மாபெரும் பாவலரான பெருஞ் சித்திரனாரின் இந்தக் கணிப்பு எவராலும் ஒதுக்க முடியாதது.

இம்மியும் தன்னலமின்றி வாழ்ந்த சமூகப் போராளி பெரியார். அவருடைய சிந்தனைகளின் அடி நாதமாக விளங்குவது “தன்மானம்!” இது தனி மனிதனின் தன்மானம், சமூகத்தின் தன்மானம், இனத்தின் தன்மானம், பண்பாட்டின் தன்மானம், மொழியின் தன்மானம் என விரியும்.

அனைத்தையும் அகப்படுத்திய தன்மான இயக்கம் அவருடையது. சுயமரியாதைச் சிந்தனைக்கு இயக்கம் கண்டவர் உலக வரலாற்றில் பெரியார் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.

அதிகாரக் கும்பலும் ஆன்மிகக் கும்பலும் மக்களிட மிருந்து முதலில் பறித்துக்கொண்டது அவர்களின் தன்மானத்தைத்தான்! இந்தத் தன்மான இழப்பில் தான் இந்த மண்ணின் பாட்டாளி மக்களின் அடிமை வாழ்க்கை தொடக்கம் பெற்றது.

ஆரிய சனாதனத்தின் தலைமையிலான அதிகாரக் கும்பலால் இங்கே பறிக்கப்பட்டவை தனிமனிதனின் தன்மானம், சமூகத்தின் தன்மானம், இனத்தின் தன் மானம், மொழியின் தன்மானம், பண்பாட்டின் தன் மானம்! எனவே அனைத்து நிலைகளிலும் தன்மான உணர்வை மீட்டெடுக்கும் விடுதலைப் போரைப் பெரியார் தொடங்கினார்.

இதற்காக அவர் பல நம்பிக்கைக் கட்டுமானங் களைத் தகர்த்தெறியத் தொடங்கினார். சாதியத் தகர்ப் பும், பெண்ணடிமைத் தகர்ப்பும், மூடநம்பிக்கைகள் மூடச்சடங்குகள் தகர்ப்பும், மக்களை மடமையில் ஆழ்த்தும் புராணங்கள் இதிகாசங்களின் தகர்ப்பும் பெரியாரால் மேற்கொள்ளப்பட்டன.

சாதியம், மூடநம்பிக்கை, மூடச் சடங்குகள், பெண்ணடிமைத்தனம் எல்லாம் கடவுள் கருத்தாக்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்ததால், கடவுள் என்ற கருத்தாக் கத்தையே அடித்து நொறுக்கினார், பெரியார்.

பெரியார் கொடுத்த அடியில் கடவுள்களெல்லாம் கலகலத்து உடைந்து வீழத் தொடங்கினார்கள்.

வரலாற்றைக் கூர்ந்து கவனித்த பெரியார், வட மொழியும், அது சுமந்து வந்த ஆரிய சனாதன அதர்ம மும், தமிழ் முதலான மொழிகளையும், சமத்துவத் தோடு கூடிய இயற்கை நெறிசார்ந்த உயர்ந்த பண் பாட்டு விழுமியங்களையும் சிதைத்துச் சின்னாபின் னப்படுத்தியிருப்பதைக் கண்ணுற்றார்.

எனவே, சாதி, மத, கடவுள் எதிர்ப்புடன், வடமொழி எதிர்ப்பு, வடமொழியின் பெருநூல்கள் கூறும் நால் வருண சாதியப் பண்பாட்டு எதிர்ப்பு என்பனவற்றை முன்னிலைப்படுத்தினார். ஒப்பும் இணக்கமும் இல்லாமல் இவற்றுக்கு எதிராக வாழ்நாள் முழுதும் போராடினார்.

வேதங்கள், மனுதருமம், கீதை, அருத்தசாத்திரம், பாரதம், இராமாயணம் இவற்றை ஒதுக்கிப் புறந் தள்ளச் சொன்ன பெரியார், திருக்குறளை நன்னெறி காட்டும் நூலாக மக்களுக்கு அறிமுகம் செய்தார். வட மொழிக்கு மாற்றாகத் தமிழை அறிவுநெறியுடன் வாழ் வியலில் கையாள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பெரியாருடைய கடவுள் மறுப்பு, வெறும் கடவுள் மறுப்பாக இருக்கவில்லை. அது வடமொழி வருணா சிரம மறுப்பையும், வடமொழி நூல்கள் கூறும் சடங்குகளின் மறுப்பையும் உட்கொண்டிருந்தது.

வடமொழி மேலாண்மையை எதிர்த்தவர்கள், வருணாசிரமத்தை எதிர்த்தவர்கள், சாதிகளை மூடச் சடங்குகளை எதிர்த்தவர்கள், சமத்துவத்தை ஏற்றவர் கள் கடவுள் நம்பிக்கையாளராகயிருந்தாலும், சமய ஈடுபாட்டாளராயிருந்தாலும், அவர்களை நட்பு ஆற்ற லாக / நேச சக்தியாக ஏற்றுக்கொண்டார் பெரியார். திரு.வி.க., ஞானியாரடிகள், மறைமலையடிகள், குன்றக் குடி அடிகளார் போன்றாரோடு பெரியார் பூண்டிருந்த நட்பு இத்தகையதே.

எனவே, மனித சமத்துவமும், தன்மான வாழ்வுமே பெரி யாரியத்தின் உயிர்நாடியாக விளங்கியவை ஆகும்.

பெரியார் கண்ட திராவிட இயக்கம் மூன்று சிந்த னைக் களங்களை உள்ளடக்கியது.

மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம், சிங்காரவேலர் பெரியார் முதலானோரால் உருவான தன்மான ஒப்புரவு (சுயமரியாதை சமதர்ம) இயக்கம், நீதிக்கட்சியால் உருவான சமூகநீதி இயக்கம். இந்த மூன்று இயங்குதளங்களின் ஒருங்கிணைந்த ஆற்றலாக எழுச்சியும் வளர்ச்சியும் உற்றது திராவிட இயக்கம்.

திராவிட இயக்கத்தின் எழுச்சியாலும் வளர்ச்சியா லுமே தூய தமிழுணர்வு காவிரியின் புதுப்புனல் போல் தமிழகத்தில் பெருக்கெடுத்தது.

இரட்டைக் குழந்தைகளுக்கு ‘இராமன்-இலட்சு மணன்’ என்று பெயர் வைத்த மக்கள், திராவிட வரவால், “செங்குட்டுவன்-இளங்கோ” என்று பெயர் வைத்தார்கள்.

திராவிட இயக்க வரவால், பாலகிருஷ்ணன் இளங் கண்ணன் ஆனான்; பாலசுப்பிரமணியன் இளமுருகன் ஆனான். சாதி அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுவந்த பழைய நடைமுறை உதிர்ந்து, பழந்தமிழ் இலக்கியப் பெயர்கள் குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன. பெயரில் என்ன இருக்கிறது என நினைத்துவிட வேண்டாம். பெயரில்தான் எல்லாமே இருக்கிறது.

முத்தன், காளி, நொண்டி, குப்பன், நண்டன், வேலன் இப்படி வைக்கப்பட்ட பெயர்கள் சமூகத்தின் கீழான படிநிலையைக் காட்டும். இராமசாமி, வேலுச் சாமி, முத்தய்யா. காளியண்ணன் என்று இப்படி வைக்கப்பட்ட பெயர்கள் சமூகத்தின் அடுத்த இடை நிலைப் படிநிலையைக் காட்டும். இராமமூர்த்தி, கிருஷ்ண மூர்த்தி, அனந்தகிருஷ்ணன் என இப்படி வைக்கப்பட்ட பெயர்கள் அடுத்த மேல்நிலைப் படிநிலையைக் காட்டும்.

திராவிட இயக்க வரவால் மலர்ந்த தனித்தமிழ்ப் பெயர்கள், நெடுஞ்செழியன், செழியன், இளம்வழுதி, இளங்கோ, கரிகாலன், இளஞ்செழியன், பூவண்ணன், பூங்கொடி, புகழ்வடிவு, முல்லை, அல்லி, மலர்விழி, தமிழ்க்கொடி என இத்தகைய பெயர்கள், தமிழ் மக்களிடையே பெயரில் ஒரு ஒப்புரவை கொண்டு வந்தன. நாம் தமிழ்மக்கள், நமது மண் தமிழ்மண், நமக்கென ஒரு வரலாறு உண்டு. இழந்த நலன்களை நாம் மீட்க வேண்டும். நம் மீது சுமத்தப்பட்ட இழிவு களைத் துடைக்க வேண்டும் என்னும் உணர்வை இப்பெயர்கள் தமிழர் உள்ளங்களில் விதைத்தன.

சமயத் துறையில், சைவர்கள், தமிழில் வழிபாடு, தமிழில் குடமுழுக்கு, தமிழ்ப் பாசுரங்கள் ஓதித் திருமணங்கள் நடத்துதல்; பார்ப்பனரையும் வடமொழி யையும் ஒதுக்குதல் என முன்வந்ததற்கும் திராவிட இயக்கத்தின் சிந்தனைத் தாக்கமே காரணமாகும்.

“இந்தியா என்பது யாருடைய நாடு?

இங்கே வாழ்ந்தவர்கள் யார்?

இங்கே வந்து புகுந்து வளைத்துக்                                                          கொண்டவர்கள் யார்?”

இந்த வினாக்களுக்கு விடையாகத் திராவிட இயக்கம் உண்மை வரலாற்றை மக்களுக்குச் சொன்னது.

இந்தியா முழுதும் அன்று தமிழரின் தேசம்தான். இங்கே வந்து நுழைந்தவர்களால் தமிழ் திரிபுக்கும் கலப்புக்கும் உள்ளானது. வடமொழிக் கலப்பால் தமிழிய மொழிகள் பலவாறாகத் திரிபடைந்து பல மொழிகளாக உருமாறின. ‘மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு’ என்னும் நூலில் அறிஞர் அம்பேத்கர் இதை ஆழமாக எடுத்தியம்பியுள்ளார்.

இந்தியாவில் சொந்த மொழியை இழக்காதவர்கள் தமிழர்கள்தாம்! வடமொழிக் கலப்பால் சொந்த மொழி திரிபடைய நேர்ந்தவர்கள் பிற திராவிட மக்கள்! சொந்த மொழியைப் பெரும்பாலும் இழந்தவர்கள் வடபுலத்தின் உழைக்கும் குடிகள்!

இன்று வடபுலம் 100க்கு 90 ஆரியமொழி மயப் பட்டுவிட்டது. தெலுங்கு நாடு, கன்னட நாடு, கேரளம் எனும் மலையாள நாடு 100க்கு 50க்கு 50 தமிழும் வடமொழியும் கலந்து கிடக்கிறது.

பெரியார் திராவிட மொழிகளைப் பற்றிக் கூறிய கருத்து இங்கு கவனிக்கத் தக்கது. பெரியார் கூறுகிறார் : “தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தனித் தனி மொழிகள் அல்ல. தமிழைத்தான் ஆந்திராவில் ஒருவிதமாகவும், கருநாடகத்தில் ஒருவிதமாகவும், கேரளத்தில் ஒருவிதமாகவும் பேசுகிறார்கள். நான் என்பதை நானு, நேனு, ஞான் என்றால் இவை வேறுமொழிகளாகிவிடுமா? வீட்டை இல்லு என்றால் தெலுங்கு என்கிறார்கள்; மனை என்றால் கன்னடம் என்கிறார்கள்; வீடு என்றால் மலையாளம் என்கிறார் கள். நாம் இவை எல்லாமே தமிழ்தான் என்கிறோம். எனவே தமிழ் இல்லாமல் இம்மொழிகள் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.” பெரியாரின் பார்வையில் அடிப்படைத் தெளிவு இருக்கிறது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான திராவிட மொழிகளின் கட்டமைப்பு முழுமையும் தமிழ மைப்பாக இருக்கிறது. பண்பாடு, வாழ்நிலைக் கூறுகள், தமிழ்மண்ணுடன் மிகவும் ஒத்திருக்கின்றன. எனவே, இங்கே தமிழ் அடையாளங்களை மீட்க வேண்டும் என்றும், இம்மொழியினரையும் ஆரியப் பிடிப்பிலி ருந்து விடுவிக்க வேண்டும் என்றும் திட்டமிட்டது திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் “திராவிடத் தேசியம்” என ஒன்றை முன்வைத்ததாகக் கூறுகிறார்கள். உண்மை அல்லாத செய்தி இது. திராவிட இயக்கம் தமிழ்த் தேசியம், தெலுங்குத் தேசியம், கன்னடத் தேசியம், மலையாளத் தேசியம் என்னும் இந்நான்கு தேசியங்களும் தமக்கான தனித்தனிக் குடியரசுகளை அமைத்துக்கொண்டு, இந்நான்கு கூட்டாட்சிக் குடியரசு களின் ஒன்றியமாகத் “திராவிடக் குடியரசுகளின் ஒன்றியம்” (Union of Dravidian Republics) செயல் படும் எனத் தெளிவுபடுத்தியது. இந்த முயற்சி புவியியல் நலம், பண்டப் பரிமாற்ற வணிக நலன்கள், மொழி கலை பண்பாட்டு நலன்கள் ஆகியவற்றுக்கு உகந்த தாக இருந்ததைப் பொருளியல் வல்லுநர்களும், வர லாற்று வல்லுநர்களும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

திராவிடக் கூட்டாட்சிக் குடியரசுகளின் ஒன்றியம் மலருவதற்கான முயற்சிகள் சரியான முறையில் திட்ட மிடப்படாததாலும், இலக்கை நோக்கிய செயற்பாடுகள் முறையாக வகுக்கப்படாததனாலும் இது கைகூடாமல் போய்விட்டது. ஆனால், இந்த நோக்கத்தை, இந்த இலக்கைத் தவறானதென்று எப்படிக் கூறமுடியும்?

மொழிவழி மாநிலங்கள் உருப்பெற்ற பின்பு, பிற திராவிட மாநிலங்கள் வடபுலத்தோடும், தில்லியோடும் தம் பிணைப்பை இறுக்கிக்கொண்டன, மொழி பண் பாட்டுக் கூறுகளில் சமற்கிருதத்தை நோக்கியே அவர் கள் நெருக்கமாகச் சென்றார்கள். எனவே இந்த நிலை யில் பெரியார், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்கின்ற இலக்கை நோக்கித் திரும்பினார். இது அரசியல் அறி வியல் கோட்பாட்டின்படி மிகப் பொருத்தமானதே ஆகும்.

பெரியார் ஒருபோதும் தெலுங்கருக்கோ, கன்னட ருக்கோ, மலையாளிகளுக்கோ ஆதரவாகப் பேசிய தில்லை; செயல்பட்டதில்லை. தமிழர் நலத்திற்கு எதிராக ஒருபோதும் அவர் சிந்தித்ததில்லை.

பெரியார் காணவிரும்பிய தமிழ்ச்சமூகம் சாதிகள் அற்றது; சேரிகளற்றது; சமத்துவம்-ஒப்புரவு நிறைந்தது; மூடநம்பிக்கைகளும் பொருளற்ற வாழ்வியல் சடங்கு களும் இல்லாதது.

“என்னரும் தமிழ்நாட் டின்கண்

                எல்லோரும் கல்வி கற்றுப்

பன்னரும் கலைஞா னத்தால்

                பராக்கிரம மத்தால் அன்பால்

உன்னத இமயம் போல

                ஓங்கிடும் கீர்த்தி எய்தி

இன்புற்றார் என்று மற்றோர்

                இயம்பக்கேட் டிடல்எந் நாளோ!”

என்று புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறாரே, இதுதான் பெரியார் காணவிரும்பிய தமிழ்ச் சமூகம்.

வடமொழி மேலாண்மை, வருணாசிரம மேலாண்மை இல்லாத, அயலாரின் பொருளியல் சுரண்டல் இல்லாத, வருண சாதிகள் - புராண சாதிகள் உதிர்ந்து மறைந்த, அறிவியல் சிந்தனை மேலோங்கிய ஒரு தமிழ்ச் சமூகத்தை மலரச் செய்வதே பெரியாரின் நோக்கமாக இருந்திருக்கிறது.

பாரதி பாடியது போல்,

“பறையருக்கும் இங்குத் தீயர்

                புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவ ருக்கும்

                மறவ ருக்கும் விடுதலை”

என்பது பெரியாரியத்தின் இலக்கு. அதாவது, “Liberation for those from below”. கீழ்த்தட்டு மக்கள் - விளிம்பு நிலை மக்கள் விடுதலையிலிருந்துதான் சமூகத்தின் விடுதலையை, தேசிய இனத்தின் விடுதலையைத் தொடங்க வேண்டும். அடிமை நிலையிலுள்ள மக்களை விடுவிக்காமல் எப்படித் தமிழ்ச் சமூகம் விடுதலை பெற முடியும்? பெண்ணுக்கு விடுதலை இல்லாமல் எப்படி மனிதகுலம் விடுதலை எய்த முடியும்?

எனவே, தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள், பாட்டாளி மக்கள், பெண்பாலார் விடுதலையை உள்ளடக்கியதாகவே பெரியாரின் தமிழ்ச் சமூக விடுதலை நெறி அமைந்திருக்கிறது.

இன்று, தமிழ்த் தேசியத்தின் தலைவர்களில் முதன்மையானவர் என்று உயர்த்திப் பிடிக்கப்படும் ஒருவரை நாம் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அவர் சிறந்த தமிழறிஞர்; சிறந்த நாநலம் வாய்ந்தவர்; மிகச் சிறந்த இலக்கிய ஆய்வறிஞர்; தமிழக எல்லை மீட்புப் போராட்டங்களில் முன்நின்றவர். அவரை மதிக்கிறோம், போற்றுகிறோம்.

ஆனால், அவர் இந்தியைத் தாங்கிப் பிடித்தார்; வடமொழியைத் தாங்கிப் பிடித்தார். சாதி வருணா சிரமக் கருத்தியல்களுக்கு எதிராக அவரது நாவோ எழுதுகோலோ ஒருபோதும் அசைந்ததில்லை. இந்த உண்மைகளையும் நாம் நெஞ்சில் நிறுத்துகிறோம்.

ஈழ விடுதலைப் போர் உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தபோது, அவர் போராளிகளைப் பற்றி அவதூறு பேசினார். இந்திய அரசின் தொலைக் காட்சிகளில் தோன்றி, அமைதிப் படையின் அட்டூழியங் களை ஆதரித்துக் கருத்துரைத்து வந்தார். தமிழர் போராட்டத்தைத் தரக்குறைவாகப் பேசினார். இவை நம் நெஞ்சத்தை என்றும் அழுத்திக் கொண்டுதான் இருக்கும்.

யாரையும் நாம் முரண்பாடுகளோடுதான் விளங்கிக் கொள்ள வேண்டும். முரண்பாடுகளோடுதான் எடை யிடவும் மதிக்கவும் வேண்டும்.

பெரியாரின் சொல்லில், செயலில் தவறே இருந்த தில்லை என்று நாம் வழக்காட விரும்பவில்லை. பெரியாரும் மனிதர்தாம். மனிதர் எவரின் சொல்லிலும் செயலிலும் தவறு நேர வாய்ப்பு அமையவே செய்யும்.

ஆனால், பெரியாரைத் ‘துரோகி’ என்று சிலர் சொல் வதை நாம் ஒருபோதும் ஒப்ப முடியாது. பெரியார் தமிழினத்திற்குத் துரோகம் செய்தார் என்று பேசு பவர்களின் நெஞ்சம் கரவு நிறைந்தது; வஞ்சகம் குடிகொண்டது; அறியாமை நிறைந்தது. எங்கிருந்தோ எதையோ அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

‘திராவிடம்’ என்பதைத் தமிழ் என்பதற்கு முரணான சொல்லாகக் காட்ட அவர்கள் முயல்கிறார்கள். தமிழ் என்னும் மொழியைக் குறித்த சொல்தான் திராவிடம் என்பது. ஒரு காலத்தில் வடநூலாரால் இச்சொல் பயன் படுத்தப்பட்டது. இன்று, தமிழ் இன மொழிகளைக் குறிக்கவும், தமிழ்வழிக் கலைகள், தமிழ்வழிப் பண் பாடு, தமிழ்வழி மருத்துவம் போன்றவற்றைக் குறிக்க வும் ஒரு குறியீட்டுச் சொல்லாக உலகளாவிய அறிஞர் கள் சிந்தனையாளர்கள் இதனைக் கையாளுகிறார் கள். எனவே, தூய தமிழ் சார்ந்த ஒருநிலையைக் குறிப்பிடுவதற்கே அறிவுலகம் ‘திராவிடம்’ என்னும் சொல்லைக் கையாளுகிறது என்பது தெளிந்த உண்மை.

சாதியும் ஏற்றத்தாழ்வும் அற்ற ஒப்புரவு தேங்கிய தமிழ்த் தேசியத்தை நோக்கிய நமது பயணத்தில், பெரியார் என்கிற பேரொளி நமது பாதையை ஒளிமய மாக்குகிறது.

தமிழ்த் தேசியத்தின் மாபெரும் போராளியாக வாழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியாரைப் பற்றி எழுதிய பாடல் வரிகள் தமிழ்த் தேசியச் சிந்தனை யாளர்களின் உள்ளத்தில் ஊன்றப்பட வேண்டியவை.

“பெரும்பணியைச் சுமந்த உடல்

பெரும்புகழைச் சுமந்த உயிர்

பெரியார் என்னும்

அரும்பெயரைச் சுமந்த நரை

அழற்கதிரைச் சுமந்த மதி

அறியாமைமேல்

இரும்பு உலக்கை மொத்துதல்போல்

எடுக்காமல் அடித்த அடி

எரிபோல்பேச்சு

பெரும்புதுமை அடடாஇப்

பெரியாரைத் தமிழ்நாடும்

பெற்ற தம்மா.

எப்பொழுதும் எவ்விடத்தும்

எந்நேரமும் தொண்டோடு

இணைந்த பேச்சு!

முப்பொழுதும் நடந்த நடை

முழு இரவும் விழித்த விழி

முழங்குகின்ற

அப்பழுக்கி லாத உரை

அரிமாவை அடக்குகின்ற

அடங்காச் சீற்றம்!

பெரியாரைப் பேசுகின்றோம்

பெரியாரை வாழ்த்துகின்றோம்

அவருரைத்த பலவற்றுள்

ஒன்றையேனும்

சரியாகக் கடைப்பிடித்தால்

அடடா இத் தமிழ்நாடும்

சரியா தம்மா!”

(தந்தை பெரியார் திராவிடர் கழகம், கோவை மாநகரில் 2016 டிசம்பர் 24, 25 நாள்களில் நடத்திய திராவிடர் இயக்கக் கொள்கைப் பிரகடன நூற்றாண்டு நிறைவு விழாவில், “தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரை).