சென்னைப் பெருநகர் தொடர்வண்டிப் பாதை கட்டத் தொடங்கியதில் இருந்து பல விபத்துகள் நேர்ந்து உள்ளன. அவற்றில் மனித உயிர்களைக் காவு வாங்கிய விபத்துகளும் பல.

பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் 8.8.2012 அன்று பளுதூக்கி (Crane) பழுது அடைந்ததால் அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த 30 வயது தொழி லாளி கொல்லப்பட்டார். மேலும் ஆறு தொழிலாளிகள் கடுமையாகக் காயமுற்றனர்.

பெருநகர்த் தொடர் வண்டித் தடத்தின் பரங்கிமலை நிலையத்திற்கு அருகில் 10.1.2013 அன்று ஒரு பெரு உத்தரம் (Girder) மோதி, ஒரு 22 வயது தொழிலாளி கொல்லப்பட்டார். மேலும் மூன்று தொழிலாளிகள் கடுமையாகக் காயம் அடைந்தனர்.

அண்ணாசாலையில் 17.1.2013 அன்று ஒரு பளுதூக்கி வண்டியின் மீது மோதியதில் அதில் இருந்த 36 வயது மென்பொருள் பொறியாளர் கொல்லப் பட்டார்.

11.1.2014 அன்று ஊர்ந்து செல்லும் பளுதூக்கி (Crawling Crane) கவிழ்ந்து விழுந்ததில் 20 வயது இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி மரணம் அடைந்தார்.

மீனம்பாக்கம் அருகில் 17.6.2015 அன்று கிரிதரன் என்ற 30 வயது மென்பொருள் பொறியாளர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது அவர் தலையில் இரும்புப் பெரு உத்தரம் (Iron Girder) விழுந்து, தலை நசுங்கி அவ்விடத்திலேயே மரணம் அடைந்தார். இத்தனைக்கும் அவர் தலைக் கவசம் அணிந்து இருந்தார்.

இங்கு கோரமான, உயிர்க்காவு வாங்கிய விபத்து கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. உயிர்க்காவு வாங்காத, ஆனால் தொழிலாளிகளின் வாழ்க்கை யைக் காவு வாங்கிய விபத்துகள் பல உள்ளன. இவை ஏன் ஏற்படுகின்றன? விபத்துகள் நிகழ்வதில்லை; அவை ஏற்படுவதற்குக் காரணங்கள் உள்ளன (Accidents do not happen; They are caused) என்ற சொலவடை தொழில் உளவியலில் (Industrial Psychology) உண்டு. அப்படிப்பட்ட காரணங்களில் எச்சரிக் கை இன்மை என்பது ஒன்று.

ஆனால் சென்னைப் பெருநகர்த் தொடர்வண்டிப் பாதைக் கட்டுமானத்தில் நடந்து இருக்கும் விபத்து களைக் காணுகையில் எச்சரிக்கை இன்மை உணர் வுக் குறைவினால் அவை நிகழ்ந்து இருப்பதாகக் கொள்ள முடியவில்லை. சாதாரணமான ஒரு விபத்து நடந்தாலே, அதுபோன்ற இன்னொரு விபத்து நடந்து விடக்கூடாது என்று அனைத்து இடங்களிலும் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் உயிர்க்காவு வாங்கிய விபத்துகள் நேர்ந்த பிறகும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

பெருநகர்த் தொடர்வண்டித் துறைக்கோ அல்லது கட்டுமான ஒப்பந்தக்காரர்களுக்கோ உயிரிழந்தவர்கள் மேல் முன் விரோதம் உண்டா? அப்படி யார் மீதும் யாருக்கும் முன்விரோதம் இருப்பதற்கான சிறிய அறிகுறி கூடத் தெரியவில்லை.

அப்படி என்றால் இத்தொடர் விபத்துகளுக்குக் காரணம் தான் என்ன? அதைத் தனிப்பட்ட மனிதர்களிடம் தேடினால் கிடைக்காது. இவ் விபத்துகள் அனைத்திற்கும் காரணம் முதலாளித்துவ சமூக அமைப்பே.

இந்தப் பெருநகர்த் தொடர் வண்டிப் பாதைக் கட்டுமானப் பணியை அரசே ஏற்றுச்செய்ய முடியும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. ஏனெனில் அரசு ஏற்று நடத்தும் போது, அதில் வேலை செய்யும் பணி யாளர்கள் அரசு ஊழியர்கள் விதிகளுக்கு உட்பட்ட வர்கள் ஆவார்கள். அவர்களுக்குத் தரவேண்டிய விடுமுறைகள், ஓய்வூதியம் உட்படப் பல உரிமை களை அளிக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால் கட்டுமானப் பணிக்கான செலவு மிகவும் அதிகமாக இருக்கும்.

அதேவேலையைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், அவர் குறைந்த கூலிக்கு நிறைய வேலைகளைத் தொழிலாளர்களிடம் இருந்து பிழிந்து எடுத்து விடுவார். அரசுப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் பல உரிமைகளை மறுக்க முடியும். அப்படிச் செய்வதால் கட்டுமானச் செலவு குறையும். தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் எல்லாம் ஒப்பந்தக்காரரின் கைகளில் இலாபமாகக் குவியும். முதலாளித்துவ அரசைப் பொறுத்தமட்டில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அரசின் எசமானர்களான முதலாளிகள் இலாபம் அடைவது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால், குறைந்த செலவில் ஒரு திட்டத்தை முடித்துவிட்டோம் என்று மக்களிடம் மார் தட்டிக் கொள்வதில் அரசுக்கு இன்னொருபுறம் மகிழ்ச்சி.

வேலையை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தக்காரருக்கு, வேலை எப்படி நடக்கிறது? அதன் தரம் (quality) எப்படி இருக்கிறது? யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படு கிறது? என எந்தவிதமான பிரச்சனையை விடவும் அதிக இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

குறிப்பிட்ட இந்த இரயில்பாலக் கட்டுமானப் பணி யில், விபத்துகள் நேராவண்ணம் பாதுகாப்பு நடவடிக் கைளை எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்? அப்படிச் செலவழித்தால் இலாப விகிதம் எவ்வளவு? பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் இவ்வாறு விபத்துகள் நேரும் பொழுது கொடுக்க வேண்டிய இழப்பீட்டிற்காக எவ்வளவு செலவாகும்? அப்படிச் செலவழித்தால் இலாப விகிதம் எவ்வளவு? என்றெல்லாம் அந்த முதலாளி கணக்குப் போட்டுப் பார்க்கிறார். இந்தியா போன்ற இளித்தவாயர்கள் நிறைந்த நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதைவிட, மக்களை மடியவிட்டு இழப்பீடு கொடுப்பதுதான் இலாப விகிதம் அதிகமாவ தற்கு உரிய வழியாக இருக்கிறது. ஆகவே அந்த முதலாளி இவ்வளவு விபத்துகள் தொடர்ச்சியாக நிகழ்ந் தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் அசட்டை யாக இருக்கிறார்.

நாம் இளித்தவாயர்களாக இருப்பதால்தான் இப்படி நடக்கிறதா? விவரம் அறிந்த, விட்டுக் கொடுக்காத மனிதர்களாக மாறினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?

முதற்கட்டமாக அரசு மக்களை ஒடுக்கி வைக்கப் பார்க்கும். மக்கள் ஒடுங்கிவிட்டால் பழைய பாதை யிலேயே செல்வார்கள். மக்கள் ஒடுங்க மறுத்தால் இங்கு முதலீடு செய்தால் போதிய இலாபம் கிடைப்பது இல்லை என்று கூறி, மூலதனத்தை வேறு இடங் களுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள். மக்கள் இப்படி முரண்டு பிடிப்பதால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கட்டமைப்பு வசதிகள் கிடைக்காமல் போகின்றன என்றும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடிவதில்லை என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் கரித்துக் கொட்டுவார்கள். மேலும் ஒரு பெரிய திட்டத் தைச் செயல்படுத்தும் பொழுது, இதுபோன்ற சிறிய சிறிய இழப்புகள் இருக்கத்தான் செய்யும் என்றும், தனிப்பட்ட சில மனிதர்களின் இழப்புகளுக்காக, மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருந்துவிடமுடியாது என்றும் தத்துவம் பேசுவார்கள்.

மொத்தத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும், யார் எக்கேடு கெட்டுப் போனாலும் அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதை மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். அதாவது இந்த முதலாளித்துவ முறை தொடரும் வரையிலும், மக்களுடைய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க இயலவே இயலாது. இது இந்தக் கட்டுமானத் தொழிலில் என்று மட்டும் இல்லை; அனைத்துத் தொழில்களிலும் இதே நிலைமை தான் கண்கூடான உண்மை.

அப்படி என்றால் மக்கள் தங்கள் நலன்கள் காவு கொடுக்கப்படக்கூடாது என்றால் என்னதான் செய்ய வேண்டும்?

இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் முதலாளித்துவ சமூக அமைப்பை ஒழித்துவிட்டு, மக்களுக்குத் தேவைப்படும் பொருட் களை இலாப நோக்கம் இன்றி உற்பத்தி செய் யும் சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதே ஆகும். அங்கு இலாபம், அதிக இலாபம் என்ற எண்ணம் இருக்காது என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு எதிரான சிந்தனைகள் இருக்காது. ஆகவே மக்களின் நலன் களுக்கு முன்னுரிமை அளிப்பதில் எவ்விதத் தடங்கலும் இருக்காது.

முதலாளித்துவ அமைப்பிலேயே தீர்வைத் தேடிக் கொண்டு இருந்தால், நாம் கானல் நீரைத் தேடி ஓடுபவர்களாகவே இருப்போம். அதைவிட்டு சோசலிச சமூகம் அமைக்க முயல் வதே உண்மையான தீர்வுக்கான ஒரே வழியாகும்.