tamil letter oldதாய்மொழியின் உயர்வைப் பற்றி உலகச் சிந்தனையாளர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னால் என்ன? செவிடன் காதில் ஊதிய சங்காகிக் கொண்டிருக்கிறது. இது பற்றி தமிழறிஞர்களும் கவலைப்படுவதில்லை; அம்மொழிகளைப் பேசும் மக்களும் கவலைப்படுவதில்லை,

உலக அளவில் கல்வி மற்றும் உளவியல் வல்லுநர்கள் தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளனர். இங்கே மகாத்மா காந்தி மற்றும் கவி தாகூர் போன்றவர்கள் கூறியும் யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் மக்கள் பேச்சு வழக்கிலிருந்து காணாமல் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம் வதோதராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘பாஷா’ என்கிற ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனம், கடந்த 2011 முதல் ஆய்வு நடத்தி வருகிறது, இந்த ஆய்வின் முடிவு என்ன தெரியுமா?

இந்தியாவில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த மொழிகளில் 20 விழுக்காடு அழிந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் மொத்த 780 மொழிகள் மட்டுமே கண்டறிய முடிந்தது என்றும். கண்டறிய முடியாமல் விடுபட்ட மொழிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தியாவில் இப்போது 880 மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றும் ஆய்வின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ்தேவ் கூறியுள்ளார்,

உலக அமைப்பான ஐ.நா.வின் யுனெஸ்கோ மையம் ‘தாய்மொழி நாள்’ கொண்டாட அறிவுறுத்துவதன் நோக்கமும் இதுதான். உலக அளவில் மறைந்து கொண்டிருக்கும் மொழிகளை மீட்டெடுப்பதற்கு இது பயன்படும், இவ்வாறு அழிந்து கொண்டிருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது என்று கவலைப்படுகின்றனர்.

இன்று தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லை. 1957இல் ஆட்சிமொழிச் சட்டம் வந்தும் அரசின் அலுவலகங்களில் இன்னும் நிர்வாக மொழியாக தமிழ் கொண்டு வரப்படவில்லை; கோயில்களில் வழிபாட்டு மொழியாகவும் இல்லை; இசையரங்குகளில் பாட்டு மொழியாகவும் இல்லை; கல்வி நிலையங்களில் பயிற்சி மொழியாகவும் இல்லை; இதுவரை இருந்து வந்த அரசுப் பள்ளிகளிலும் இவ்வாண்டு முதல் ஆங்கிலம் வந்து அமர்ந்து கொண்டது. எங்குமே இல்லாத தமிழை எப்படிக் காப்பாற்றுவது?

தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்கவும் எண்ணற்ற தடைகள், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் நூல்களிலும். வினாத்தாள்கள்களிலும் தவறுகள் மிகுதி. எடுத்துக்காட்டினாலும் திருத்தம் செய்வது இல்லை.

இப்போது தமிழ்ப்பாட நூல்களில், தமிழ் எண்களை ‘அரபு எண்கள்’ என்றே வெளியிட்டு வருகின்றனர்; இதில் வினாக்களையும் கேட்டு மாணவர்களுக்குத் தவறாக வழிகாட்டுகின்றனர். தமிழ்ப் பாடநூல் குழுவினருக்குத் தமிழறிவு வேண்டாமா?

தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அரசாங்கம் வெளியிட்டுள்ள தமிழ்ப்பாட நூல்களில் பயிற்சி வினாக்களாக ‘பொருத்துக’ என்ற தலைப்பில் ‘அரபு எண்கள் - தமிழ் எண்கள்’ எனக் குறிப்பிடப்பட்டு வருகின்றன, இப்போது உலகம் எங்கும் வழக்கில் இருக்கும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய எண்கள் அரபு எண்கள் என்றும். க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, க0 ஆகிய எண்கள் தமிழ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன, இது பிழையான பாடமாகும்.

இப்போது வழக்கில் இருக்கும் 1. 2. 3 என்னும் எண்கள் இந்திய எண்கள் என்பதும். அதிலும் தமிழ் எண்கள் என்பதும் தமிழ் வரலாறும், கல்வெட்டுகளும் கற்றவர்கள் நன்கு அறிவர். ஆயினும் இது தமிழ் மக்களிடையேயும் எடுத்துக் கூறப்படவில்லை. தொடர்ந்து இந்த வரலாற்றுப் பிழை நிகழ்ந்து வருகிறது.

1961ஆம் ஆண்டு புது தில்லியில் மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகக் கல்வியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவில் கல்வி தொடர்பாக உலகத்தில் வழங்கி வரும் அராபிய எண்களையே பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து பாரதிதாசன் தம் ‘குயில்’ ஏட்டில் 24-01-1961 அன்று. ‘அராபிய எண்கள் தமிழ் எண்களே’ என்று எழுதியுள்ளார்.

‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித் துறையின் சுவடியில் காண்க. கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகியவை தமிழ் எழுத்துக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்...’ என வழங்குவதன் காரணத்தையும் விவரித்துள்ளார்.

‘இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர். அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக் கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர். அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம். ஆனால், தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்திற்கு உள்ளாயிற்று. இது இயற்கைதான்...’ என்றும் எழுதியுள்ளார்.

இந்த உண்மை உலகத்துக்குத் தெரியாமல் போனது ஏன்? தெரிய வைக்க வேண்டிய தமிழறிஞர்கள் இதுவரை என்ன செய்து கொண்டு இருந்தனர்? தொடர்ந்து தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதன் சிறப்புகள் மூடி மறைக்கப்பட்டதில் வியப்பென்ன இருக்கிறது? தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களும் இதுபற்றி அக்கறை செலுத்தாதபோது, தமிழ் மக்களைக் குறை கூறி என்ன பயன்?

டாக்டர் மு.வரதராசனார் தமது ‘மொழி வரலாறு’ என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற இந்த எண்கள் தமிழ் என்பதைக் கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார்:

‘1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அரபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் அந்த எண்கண் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்...’ (ஆதாரம்: ‘மொழி வரலாறு’ (பக். 158. 159)

இவ்வாறு இந்த எண்கள் தமிழ் எண்களே என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் அரபு மொழிக்கென தனி எண் வடிவங்கள் உள்ளன. அம்மொழி வல்லாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை.

தமிழ்மொழியின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் இவ்வாறு கூறப்படுகின்றன. உண்மையை எத்தனை காலம்தான் மறைக்க முடியும்?

தமிழக அரசும், கல்வித் துறையும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். பாடநூல் குழுவில் தேர்ந்த அறிஞர்களை நியமித்துக் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் மனதில் தவறாக கருத்துகளை விதைக்கக்கூடாது. அது ஆயிரம் காலத்துப் பயிர்.

உலகச் செம்மொழிகளில் ஒன்றாகவும். மக்கள் வழக்கில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழிகளில் தமிழும், சீனமும் மட்டுமே! மற்றைய செம்மொழிகளான கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சமஸ்கிருதம் ஆகியவை வழக்கிழந்து போய்விட்டன.

காரணம் என்ன? மக்களின் பயன்பாடு இல்லாமல் போனதுதானே! அந்நிலை தமிழுக்கும் வந்துவிடக்கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள் கவலைப்படுவதில் பொருள் இல்லாமல் இல்லை.

‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று யாரோ ஒரு பேதை உரைத்தற்கே ஆத்திரம் கொண்டவர் பாரதி. அவர் வழியில் வந்த தமிழ் மறவர்கள் அதற்கு இடம் கொடார் என்று நம்புவோம்.

‘காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்பது போல அவரவர் தாய்மொழி அவரவர்க்கு உயர்வானதே! அதனை அடுத்தவர் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதிகாரத்தையும், பெரும்பான்மையையும் காட்டி அடிமைப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. இதுவே உலகத் தாய்மொழி நாள் உணர்த்தும் உண்மை.

- உதயை மு.வீரையன்