subrabharathi manian novel murivuசுப்ரபாரதிமணியனின் நாவல்களில் பெண்ணிய அம்சங்களை நுணுக்கமாகக் காணலாம். இதிலும் முத்துலட்சுமி என்ற பெண் தொழிலாளி மூலம் அந்த அம்சங்கள் வெளிப்படுகின்றன. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம் போன்றவற்றில் சலுகைகள் என்ற பெயரில் திட்டமிட்ட சுரண்டல் எப்படி நிகழ்கின்றன என்பது சொல்லப்பட்டிருக்கிறது. நிலவுக்கு ஓரமாய் ஒற்றைப்பனையன்று சூட்டுக்கோலாய் நின்று கொண்டிருந்தது என்ற உவமை போல் அந்தப் பெண் நாவலில் விளங்குகிறாள். வறுத்த விதைகள் முளைக்குமா. நாம் வறுத்த விதைகள் என்று அவர்களே நொந்து கொள் கிறார்கள்.

சுமங்கலித்திட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல இளம் பெண்கள் பற்றி மேரியின் டைரிக்குறிப்பு என்ற வகையில் இந்நாவலில் சொல்லப்பட்டிருக் கின்றன. அதே சமயம் முத்துலட்சுமி என்ற இளம் பெண்ணின் கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயர்ந்து வந்து வாழும் வாழ்க்கை விரிவாகப் பதிவாக்கியுள்ளது. அவர் அதிகப்படியான வேலை, சோர்வு, மனஅழுத்தத்தால் கை ஒன்று இயந்திரத்தில் சிக்கி வெட்டுப்பட்ட பின் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். அதன் பின் அவளின் அலைக்கழிப்பும் இறுதியில் நம்பிக்கையாய் இருப்பது பற்றியும் நாவல் சொல்கிறது. சுமங்கலித்திட்டம், கல்யாணத்திட்டம், கண்மணித் திட்டம், தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்களின் பெயரில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை வேலைக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பது போன்று ஐந்து வருடத்திற்கு மேல் வேலை வாங்குகிறார்கள். தாலிக்குத் தங்கம் தருகிறோம். திருமணத்திற்கு பணம் தருகிறோம் என்று பெரும்பாலும் மோசடிகளாக இருக்கிறது. அப்படி அந்தக் குறிப்பிட்ட காலம் முடிவதற்குள் தப்பித்து காலோடிந்து கை ஒடிந்து நோயாளிகள் ஆகிறவர்கள் பலர்.

இரண்டு அரை லட்சம் பெண்கள் இந்நிலையில் தமிழகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண்தான் இந் நாவலின் கதாநாயகி. டைரிக் குறிப்பில் உள்ள பெண்கள் தவிர மனதை பாதிப்பது பெனாசீர் என்ற பெண். பழகும் பெண்கள் மில் புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்குகிறாள். பழகும் ஆண்கள் வேறு வகை புரோக்கர்களாக இருப்பார்களோ என்ற பயத்தில் நடுங்குகிறாள். கை வெட்டுப்பட்டதில் அவளது வாழ்க்கை ஆதாரமே பாதிக்கப்படுவதாக எண்ணுகிறாள். வெட்டுப்பட்ட கையை மொண்ணை என்றே நாவலில் குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது. அதை முடம் அல்லது ஊனம் என்று சொல்லியிருக்கலாம். ஊனமுற்ற பெண் என்று குறிப்பிட்டிருக்கலாம். வேம்பு என்று இன்னொரு பெண்ணின் பெயர் சொல்லப் பட்டிருப்பதை பெண்களின் கசப்பு வாழ்க்கை சார்ந்த குறியீடாகவே சொல்லலாம். கசப்பில்தான் இந்நாவலும் மிதக்கிறது. வட்டார மொழிக்கு இடம் இல்லாமல் இயல்பாகக் கதை எழுதும் எழுத்தாளுமை வேறுபாடு இதில் தெரிகிறது.

இந்த நாவலில் அழுக்கு என்ற வார்த்தை பல இடங்களில் அதிகமாய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அழுக்கடைந்த குடோனில் சிலந்தி வகைகள் சடை சடையாய் தொங்குவது போல் பறவைகளின் எச்சங்களும் கூடுகளும் இருப்பது போல் அழுக்கு நாவலில் அப்பி யிருக்கிறது. பெண் தொழிலாளர்கள் பற்றிய முக்கிய பதிவு இந்நாவல். இது பஞ்சாலைப் பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டாலும் பல பிரிவுகள், பல தொழிற் சாலைகளில் வேலை செய்யும் பெண்களின் நிலையைத் தான் சொல்கிறது என்று சொல்லலாம். சுப்ரபாரதி மணியனின் கூரிய பார்வையாலும் வாழ்க்கை பற்றிய கருத்துக்களாலும் சாதாரண உழைக்கும் பெண்கள் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் முக்கியமானதாக இது விளங்குகிறது.

பெரும்பாலும் இதில் உள்ள பல பெண்கள் குழந்தை உழைப்பாளிகள் என்ற வகையில் 18 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பதால் குழந்தைத் தொழிலாளர்களின் வாழ்க்கைகளைப் பற்றியே இந்நாவல் பேசுகிறது என்றும் சொல்லலாம். அதே சமயம் பெண்ணியம் பேசும் நாவல் என்றும் சொல்லலாம்.

முறிவு

சுப்ரபாரதிமணியன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,

சென்னை

விலை:ரூ.90.00